Tuesday, September 30, 2008

காதலில் விழுந்தேன் - விமர்சனம்


நடிப்பு: நகுலன், சுனேனா, சம்பத்
இசை: விஜய் ஆண்டனி
இயக்கம்: பி.வி.பிரசாத்
தயாரிப்பு: சன் பிக்சர்ஸ்

நீங்கள் 13 வயதிற்குட்பட்டவர் அல்லது 19 வயதிற்கு மேற்பட்டவர் எனில், சாலையில் வாகனம் மோதி இறந்து கிடக்கும் நாய், பூனை மற்றும் மனிதர்களையும், கசாப்புக் கடையில் கழுத்தறுபட்டுக் கொண்டிருக்கும் ஆட்டுக்குட்டியையும் ஒருபோதும் காணச் சகியாதவர் எனில், பிப்ரவரி 14ம் தேதியை 'மற்றுமோர் நாளாக' மட்டுமே பாவிக்கும் யதார்த்தவாதி எனில், 'காதலில் விழுந்தேன்' உங்களுக்குரிய படமல்ல.

அதிலும் சித்தப்பாக்கள், சித்திகள், குழந்தைகள், மாமா, அத்தை, பாட்டி, தம்பி, தங்கை என குடும்ப சகிதமாய் சென்று பார்ப்பவர்களுக்கு நிச்சயம் உகந்த படமல்ல. நேற்று முன்தினம் மாலை சொந்தங்கள் சந்தித்துக் கொண்ட அபூர்வ நாளை கொண்டாடுவதென முடிவெடுத்து இந்த திரைக்காவியத்தைப் பார்க்கப் போய் பாரபட்சமின்றி எல்லோரும் ஒருசேர துயரத்தில் விழுந்தோம். பட்ட காலிலே படும் என்பார்கள். எனக்கு பட்ட தியேட்டரிலேயே படுகிறது.

கடந்த 11 வருடங்களுக்கும் மேலாய் திரையரங்கு பக்கம் வந்திராத எங்கள் தாத்தி (பாட்டி) படத்தின் நடுவே என்னை அழைத்து 'என்னைக் கூட்டிட்டு வர வேற நல்ல படமே கிடைக்கலயா உங்களுக்கு?' என்றார்கள் பரிதாபமாய். என் 3 வயது குட்டித் தங்கை திரையில் ரத்தத்தைப் பார்த்ததும் வீறிட்டு அழத் தொடங்கியவள்... நிறுத்தி நிறுத்தி படம் முழுக்க அழுது கொண்டேயிருந்தாள். இரவுக் காட்சி என்பதால் பாதுகாப்பின் அவசியமுணர்ந்து, எழுந்துபோக வழியின்றி சித்தப்பாக்கள் சங்கடமாய் நெளிந்து கொண்டிருந்தார்கள். என்னைப் பற்றிச் சொல்ல வேண்டுமா என்ன?

சரி கதைக்கு வருவோம்.. யாரோ 4, 5 பலவான்கள் துரத்தி வர அவர்களிடமிருந்து காதலியை காப்பாற்றி புகைவண்டியிலேறி காதலர்கள் உடன்போக்கு செல்லும் காட்சியில் தொடங்குகிறது படம். கதைகளில், திரைப்படங்களில் வரும் காதலுக்கு எப்போதும் நாமெல்லோருமே முழு ஆதரவாளர்கள் தான் என்பதால் 'அப்பாடா தப்பியாச்சு' என்ற ஆசுவாசமும் 'அவனுங்க ஃபாலோ பண்ணாமஇருக்கனுமே' என்ற பதற்றமும் ஒருமித்து எழுகிறது. காதலியை படுக்க வைத்துவிட்டு டிக்கெட் பரிசோதகர் லிவிங்ஸ்டனிடம் தங்கள் கதையை சொல்லவாரம்பிக்கிறார் நாயகன். (வீரத்தளபதி ஜே.கே.ரித்தீஷ் அல்ல)

ஏழை நாயகன் நகுலன், செல்வந்த நாயகி சுனேனா. ஓர் நாள் சுனேனாவின் துப்பட்டா மிக அழகாய் காற்றில் பறந்து சென்று நகுலனின் முகத்தை மூட, தமிழ் சினிமா நியதிப்படி காதல் வந்திருக்க வேண்டிய காட்சியில் எதிர்பாராத விதமாய் விபத்து வந்துவிடுகிறது. (இரண்டும் ஒன்றுதான் என்கிறீர்களா!) தன்னால் தான் விபத்து நேர்ந்தது என்ற குற்ற உணர்வின் நீட்சியில் நகுலனை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்து பணிவிடைகளும் செய்கிறார் சுனேனா. விபத்து நட்பாகி, நட்பு காதலாகிறது. திடீரென விளையாட்டுப் போட்டிக்காக வெளியூர் சென்று திரும்பும் நகுலனிடம் சுனேனா இறந்து விட்டதாக சொல்கிறார்கள் நண்பர்கள். அதை நம்ப மறுக்கும் நகுலன் மார்ச்சுவரிலிருந்து காதலியின் பிரேதத்தைத் தூக்கிக் கொண்டு போகிறார். முதல் காட்சியில் ரயிலில் அவர் படுக்க வைத்ததும் அதைத்தான் என்பது தெரிய வரும்போது 'ஏப்ரல் ஃபூல்' ஆனது போல் முகத்தில் அசடு தட்டுகிறது நமக்கு. சுனேனாவைக் கொன்றது நகுலன் தான் என்று காவல்துறை தீவிரமாக தேடிக்கொண்டிருக்க, கொன்றது யாராயிருக்குமென நம்மையும் தீவிரமாய் யோசிக்க வைத்து 'அட..இது கூடவா தெரில? சொத்துக்காக அவங்க சித்தப்பா தான் கொன்னுட்டார்' என்று பாரம்பரியமிக்க புராதன முடிவையே சொல்லி அசத்தியிருக்கிறார்கள்!

காதலர்கள் பைக்கில் சுற்றுதல், ஹோட்டலில் சந்தித்தல், மேசையினடியில் காலுரசிக் கொள்ளுதல், பூக்கள் சிதறிக்கிடக்கும் சாலையில் கைகோர்த்து நடத்தல், தனியறையில் அரைகுறை ஆடையில் நடனமாடுதல், இதழோடு இதழ் பொருத்தி முத்தமிட்டுக் கொள்ளுதல் உள்ளிட்ட வழமையான தமிழ்த்திரையம்சங்கள் எதற்கும் குறைவின்றி, காட்சிக்குக் காட்சி ஏதோவோர் படத்தை நினைவூட்டியபடி நகர்கிறது முற்பாதி.

முற்பாதி தான் இப்படி நிறைய படங்களை ஞாபகப்படுத்துகிறதே தவிர பிற்பாதி படம் அப்படியில்லை. அது சந்தேகத்திற்கிடமில்லாமல் முழுமையாய் கமல்ஹாசனின் 'குணா'வை மட்டுமே நினைவில் நிறுத்துகிறது! படம் ஆரம்பித்ததிலிருந்தே இறந்து போன காதலியின் உடலைத்தான் நகுலன் தூக்கிக் கொண்டு அலைகிறார், 'எங்களை வாழ விடுங்கள்' என்று எல்லோரையும் கெஞ்சிக் கொண்டு திரிகிறார் என்பதை இடைவேளை முடிந்ததுமே இயக்குனர் சொல்லி விடுவதால், படம் முடிந்துவிட்ட திருப்தியோடு பார்வையாளர்கள் அப்போதே கிளம்பி விட ஏதுவாயிருக்கிறது! இதன் மூலம் படம் பார்ப்பவர்களுக்கு நேரம் வெகுவாய் மிச்சமாகிறது!!

நாயகி சுனேனா அழகாக இருக்கிறார். பிரேதம் போலவே மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்! ஆனால் எப்போது சாவார், எப்போது பிழைத்தெழுந்து நடனமாடுவார் என்பது இயக்குனருக்கே புரியாத புதிராயிருந்திருக்க வேண்டும். தோழிக்கு காதல் கடிதம் கொடுத்த நண்பனுக்கு "இது படிக்கற வயசு.. நீ எவ்ளோ கஷ்டப்பட்டு ஃபீஸ் கட்றன்னு எனக்கு தெரியும். படிப்பை கவனிடா" என்று அட்வைசிக் கொண்டிருந்த நாயகி, வீட்டை விட்டு துரத்தப்பட்டு தன்னிடமே அடைக்கலமாகியிருக்கும் நகுலன் தன்னைக் காதலிப்பது தெரிந்ததும், தன் கல்லூரியிலிருந்து விலகி அவர் வகுப்பிலேயே சேர்ந்து பயில்கிறார். காதலித்தாலும் கல்லூரி மாறியாவது கல்வியைத் தொடர வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள் போலிருக்கிறது. காதல் புகினும் கற்கை நன்றே!

படம் முழுக்க கையில் கிடைப்பவர்களை எல்லாம் கொன்று தீர்க்கிறார் நகுலன். இறுதிக்காட்சி கொடூரம்.

சரி... ஒட்டுமொத்தமாய் குறை மட்டும் சொல்வானேன்?

1. நகுலனின் நடிப்பை நிச்சயம் பாராட்டியாக வேண்டும். பாய்ஸில் பார்த்த நகுலனில் கால்வாசி நகுலன் தான் இருக்கிறார் இப்போது! நடனத்திலும் சண்டைக் காட்சிகளிலும் மின்னல் வேகம். கோபமும் குழந்தைத்தனமும் மாறி மாறி பிரதிபலிக்கிறது முகத்தில்.

2. படத்தின் மற்றுமோர் நாயகன் 'நாக்க முக்க' பாடல். அரங்கம் அதிருகிறது. படத்தில் 2 முறை இடம் பெற்றிருந்தபோதும் ஒவ்வொரு முறையும் ஒன்ஸ்மோர் கேட்டபடி குத்தாட்டம் போடுகிறார்கள் இளைஞர்கள்.

3. விஜய் ஆண்டனியின் இசையும் தாமரையின் வரிகளும் பாடல்கள் படமாக்கப்பட்டிருக்கும் விதமும் ஒன்றையொன்று விஞ்சத் துடிக்கின்றன.

4. மலைப்பிரதேசத்தில் தொலைவில் நடக்கும் சண்டைக்காட்சி அருமை.

5. படத்தில் குறிப்பிடத்தக்க மற்றுமோர் நபர் காவல்துறை அதிகாரியாய் வரும் சம்பத். சரோஜாவிலேயே கலக்கியிருந்தார் மனிதர். இதிலும் குறை வைக்கவில்லை.

தன்னால் இயன்றவரை திரைக்கதையை வைத்து சமாளிக்க முயன்றிருக்கிறார் இயக்குனர் பி.வி.பிரசாத். அத்தனை முயற்சிகளும் கதையிலிருக்கும் மாபெரும் ஓட்டையில் விழுந்து விடுவது தான் பரிதாபம்.

பி.கு: சரோஜா படம் ரொம்ப நல்லாருக்கு!

Monday, September 29, 2008

குறையொன்றுமில்லை..

பூக்களாலான பள்ளத்தாக்கினுள்
விழுந்து விட்டாற் போலிருக்கிறது.

கூறும் முன்பாய்க்
குறைகள் களையப்படுகின்றன.

உவகையில் கசியும் விழிநீர்
தரைவிழும் முன்னர்த்
தடுத்தாட் கொள்ளப்படுகிறது.

'போய பிழையும்
புகுதருவான் நின்றனவும்
உன் முன்னால்
தீயினில் தூசாகித்'
திசை கெட்டழிகின்றன.

இருபெரும் கரைகளுக்குள்
பெருகியோடும் நதியாய்

உன்னிரு கரங்களுக்குள்
வாழ்ந்துவிட தோன்றுகிறது...
ஒரு சில யுகங்களேனும்.

Wednesday, September 17, 2008

அக்மதோவாவும் அக்கரைப் பூக்களும்

முதல் வாசிப்பிலேயே எவரிடமாவது பரிந்துரைக்கத் தூண்டிய தொகுப்பு நூல் இது. என்ன காரணத்தாலோ விட்டுப் போனது. இன்றைய விடியலை மேலும் அடர்வு மிக்கதாய் மாற்றியதில் இத்தொகுப்பின் மீதான மீள்வாசிப்பிற்கும் பங்குண்டு என்பதால் இன்றே எழுதிவிடுவதென்ற தீர்மானத்தோடு துவங்கியிருக்கிறேன்.

இது ஒரு கவிதைத் தொகுப்பு. அக்மதோவா முதலாக 18 பிறமொழி கவிஞர்கள் எழுதிய, தேர்ந்தெடுக்கப்பட்ட 53 கவிதைகளின் மொழிபெயர்ப்பு. பெரும்பாலும் தமிழில் மொழிபெயர்ப்பு கவிதைகள், வரிவரியாய் மணலோடிய படுகையைச் சுட்டிக்காட்டி 'இதற்கு முன் இங்கு ஓர் நதியிருந்தது' எனச் சொல்வன போன்று அமைந்திருப்பதாகவே படுமெனக்கு. சற்றும் இளகலில்லாத ஒரு வறட்சி அதில் படிந்திருப்பது, கவிதைகளை கணக்குப் புத்தகங்கள் போலாக்கி விடுகிறது இல்லையா? ஆனால் வ.கீதாவும் எஸ்.வி.ராஜதுரையும் மொழிபெயர்த்திருக்கும் இக்கவிதைகள் மேற்படி குற்றச்சாட்டிலிருந்து பெருமளவு தப்பியிருக்கின்றன.

இந்நூலில் அன்னா அக்மதோவாவின் 13 கவிதைகளை பெயர்த்துத் தந்திருக்கிறார்கள். மேலதிகமாய் அவரைப் பற்றிய விரிவான முன்னுரை ஒன்றும் வழங்கப்பட்டிருக்கிறது.

"சோவியத் யூனியனின் தகர்வுக்கு 4 ஆண்டுகளுக்கு முன் மாஸ்கோவின் முன்னணி இலக்கிய ஏடான 'அக்டோபர்' "இரங்கற்பா" என்னும் தொடர்கவிதையை வெளியிட்டதன் மூலம் சென்ற நூற்றாண்டின் மாபெரும் கவிஞர் ஒருவருக்கு நீண்டகாலமாக இழைக்கப்பட்டு வந்திருந்த அநீதியை துடைத்தெறிந்தது. அப்படைப்பு உருவாக்கப்பட்டு 47 ஆண்டுகளுக்கும் அவற்றைப் படைத்தவர் மறைந்து 21 ஆண்டுகளுக்கும் பிறகு அது வெளியிடப்பட்டமை சோவியத் சமூக வாழ்வில் அறநெறிகள் புதுப்பிக்கப்படுவதன் அறிகுறியாகத் தெரிந்தது"

என்று தொடங்கும் முன்னுரை, அடுத்த 15 பக்கங்களில் அவரின் வாழ்க்கையை, ஆளுமையை, காதலை, பிரிவை, வலியை, தேசத்தின் மீதான வலுவான பிடிப்பை, எந்த நிர்ப்பந்தத்திற்கும் வளைந்து கொடுக்காத அவரது கவிதைகளை... தொடர்ச்சியாய் பேசிப்போகிறது.

அன்னா அக்மதோவா ஒரு ரஷ்யர். ரஷ்ய இலக்கிய உலகின் குறிப்பிடத்தக்க கவிஞர். அதைவிடவும் அவர் ஓர் பெண் கவிஞர். விசும்பென விரிந்து கிடக்கும் தமிழின் நீள்நெடும் இலக்கிய வரலாற்றிலும் கூட பெண் கவிஞர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் மட்டுமே காணக் கிடைப்பதால், அடக்குமுறைகளை எதிர்த்து உரத்து எழும், முதல் பெண் குரல் உலகின் எந்த மூலையிலிருந்து ஒலித்தாலும் அக்குரல் மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவே இருக்கிறது!

அக்மதோவா 1899 க்கும் 1966 க்கும் இடைப்பட்ட காலத்தில் ரஷ்யாவில் வாழ்ந்தவர். புகழ்பெற்ற கவிஞரான நிகோலாய் குமிலியோவை பள்ளிப்பருவத்திலேயே காதலித்து மணந்தவர். தவறான குற்றச்சாட்டின் பெயரால் குமிலியோவ் சுட்டுக் கொல்லப்பட்டபோதும் துயரத்திற்குத் துணையாய் தன் கவிதைகளை மட்டுமே அருகிருத்திக் கொண்டவர். பல்லாயிரக்கணக்கான கம்யூனிஸ்ட்டுகளும் பொதுமக்களும் கொடிய அடக்குமுறைகளுக்கும் மரணதண்டனைகளுக்கும் உள்ளாக்கப்பட்ட காலத்தில் அம்மக்களின் வேதனைகளுக்கு நிரந்தர சாட்சியமாய் 'இரங்கற்பா' என்னும் தொடர்கவிதையை எழுதினார். அவர் இறந்து 21 ஆண்டுகளுக்கு பிறகாய் அக்கவிதையை வெளியிட்டு பரிகாரம் தேடிக்கொண்டது 'அக்டோபர்' இலக்கிய இதழ். அடுத்து வந்த 1989 ம் ஆண்டை 'அக்மதோவா ஆண்டாக' அறிவித்து அவரின் புகழை உறுதிப்படுத்தியது யுனெஸ்கோ நிறுவனம். தனது சுயத்தின் வெளிப்பாடுகளை, ஆணின் அனுபவங்களையே சார்ந்து நிற்கும் மொழியின் மீதே சுமத்தி தனது தனிப்பட்ட அர்த்தங்களுக்கு அக்மதோவா புதுக்குரல் கொடுப்பதாகச் சொல்கிறார்கள் வ.கீதாவும் எஸ்.வி. ராஜதுரையும்.

இந்நூலில் கொடுக்கப்பட்டிருக்கும் அன்னாவின் 13 கவிதைகளில் என்னை மிகவும் அலைக்கழித்த கவிதை இது..

"ஆழ்கிணற்றின் அடியாழத்திலுள்ள ஒரு வெள்ளைக்கல் போல
என்னிடத்தில் ஒரே ஒரு நினைவு மட்டும்.
அதை நான் போக்க முடியாது, போக்க விரும்புவதுமில்லை
அது ஒரு உவகை, அது வேதனையும் கூட.
எனக்குத் தோன்றுகிறது என் கண்களை உற்றுப் பார்ப்பவருக்கு
அது தெளிவாகத் தெரியுமென்று.
சோகம் ததும்பும் கதையொன்றைக் கேட்பவரை விட
அவர் நெஞ்சம் மேலும் கனக்கும், துயருறும்.
எனக்குத் தெரியும் கடவுளர் மனிதரைக்
கல்லாக மாற்றியுள்ளனர்,
மனங்களை அப்படியே விட்டுவைத்து.
அந்த அற்புதமான சோகங்கள்
இன்னும் எஞ்சியிருக்க வேண்டுமென்று
என் நினைவாக மாற்றப்பட்டு விட்டாய் நீ."

நிஜம் தான்.. கல்லை மனமாய்க் கொண்டிருக்கும் மனிதர்களைப் பற்றி எவரும் அக்கறை கொள்ள வேண்டியதில்லை. ஆனால் மனம் மரிக்காமலிருக்கையிலேயே வெளியில் கல்லாய்ச் சமைந்த மனிதர்கள் பெரும் பரிதாபத்திற்குரியவர்கள். எல்லோருடைய மனங்களின் அடியாழத்திலும் சில அற்புதமான சோகங்கள், மறக்க விரும்பாத நினைவுகள் குளிர்ந்த கற்களாய் தேங்கிக் கிடப்பதை யாரேனும் மறுக்கக் கூடுமா என்ன?

மற்றுமோர் கவிதையில்..

"அன்பு இல்லாமலிருப்பது
என் நிம்மதியைக் கூட்டத்தான் செய்கிறது"

என்கிறார் அக்மதோவா. அன்பு ஒரு வகையில் மெல்லிய கண்ணாடிச் சிற்பம் போன்றது தான் இல்லையா? சிற்பத்தின் மீதான பிடி இறுகும்போதும் விலகும்போதும் மனங்கள் நொறுங்குவது தவிர்க்க முடியாததாகிறது. அன்பு இல்லாமலிருப்பதும் கூட சில நேரங்களில் ஆசுவாசமாய்த் தான் இருக்கும் போல!

நற்றிணையில் ஓர் பாடல் உண்டு. தலைவி தோழியரோடு விளையாடுகையில் என்றோ மண்ணில் புதைத்து வைத்த புங்க விதை முந்தைய மழையில் முளை விட்டிருக்கும். 'இம்மரம் உன்னை விடவும் சிறந்தது உனக்கு சகோதரி போன்றது' என்று தாய் சொல்ல.. பாலும் நெய்யும் ஊற்றி அந்த மரத்தை வளர்க்கிறாள் தலைவி. அம்மரத்தினடியில் தலைவன் அவளைச் சந்திக்க வருகையில் 'என் சகோதரியின் முன்பாக உங்களுடன் காதல்மொழி பேச நாணமாயிருக்கிறது' என்பாள். இயற்கையோடு இயைந்த வாழ்வை, எக்காலத்தும் மாறாமலிருக்கும் பெண்களின் மெல்லிய உணர்வுகளை நுட்பமாய் முன்வைக்கும் கவிதை அது. அக்மதோவாவிடம் இதே நுண்ணுணர்வை காண நேர்ந்தபோது மொழி, நாடு, இனம் என மனிதன் வகுத்துக்கொண்ட அற்ப எல்லைகள் அனைத்தும் சட்டென்று இல்லாமலாகின. இதயத்துடிப்பு போல எல்லா மனிதர்களுக்கும் உணர்வுகளும் ஒன்று தானோவெனும் ஐயம் மீண்டுமொருமுறை தோன்றி மறைந்தது.

அக்மதோவாவால் நேசிக்கப்பட்டிருந்த ஒரு வெண்ணிற வில்லோ மரம் வெட்டப்பட்டு விடுகிறது. அப்போது எழுதுகிறார்...

"நான் நேசித்தவை புற்களும் புதர்களும்.
எல்லாவற்றையும் விட ஒரு
வெண்ணிற வில்லோ மரத்தையே.
அதுவும் விசுவாசத்துடன்
வாழ்நாள் முழுவதும் என்னோடே இருந்தது
..............................................................
என்ன ஆச்சரியம்!
அதன் ஆயுளையும் விஞ்சிவிட்டேன் நான்.
குத்துக்கட்டை மாத்திரம் அங்கே நிற்கிறது:
..............................................................
நானோ மெளனத்தில்..
ஒரு சகோதரனை இழந்தவளைப் போல"

வேறு சில கவிதைகளில்,

"தெருவின் பனிப்போர்வையின் மீது
முந்தய நாள் நான் விட்டுச் சென்ற
என் பாதச்சுவடுகளைத் தேடி ஏமாறுவேன்"

எனத் தன் குழந்தைமையை பதிந்து செல்லும் அக்மதோவா,

"குழந்தைகள் இறைக்கும் சாலையோர பூக்கள்
யாரும் பொருட்படுத்தாக் காட்டு மலர்கள்..."

என அழகான அவதானிப்புகளையும் சுட்டிச் செல்கிறார்.

துயரத்தாலும் அவலச்சுவையாலும் சமூக அநீதிகளுக்கெதிரான கூக்குரல்களாலும் நிரப்பப்பட்டிருக்கும் அவரின் 'இரங்கற்பா' இப்படி தொடங்குகிறது...

"இத்தகைய துயரம் மலைகளுக்குக் கூனல் விழச் செய்துவிடும்
ஆறுகளின் போக்கைத் திருப்பி விடும்..."
................................................................................
இறந்தவர் மட்டுமே அன்று புன்னகைத்தனர்
அமைதியடைந்ததில் ஆனந்தம்."

அக்மதோவா தவிர ஷேக்ஸ்பியர், ஜான் கீட்ஸ், பெய் டாவோ, ப்ளாகா டிமிட்ரோவா, கரோல் சத்தியமூர்த்தி உள்பட 17 கவிஞர்களின் சிறந்த கவிதைகள் அக்கரைப் பூக்களாய்த் தொகுக்கப்பட்டிருக்கின்றன இதில்.

"கூழாங்கல்
ஒரு வடுவற்ற படைப்பு
அதற்கு நிகர் அது தான்
அதற்குத் தன் வரம்புகள் தெரியும்
அதில் நிரம்பியுள்ளது
ஒரு கூழாங்கல் அர்த்தம்"

எனத்தொடங்கும் ஜிபிக்னியூ ஹெர்பர்ட்டின் கூழாங்கல் கவிதை மிக அருமை.

ப்ளாகா டிமிட்ரோவாவின் 'சாலையில் தனியாய் ஒரு பெண்'

"இன்னும் ஆண்களுடையதாகவே இருக்கும்
இந்த உலகத்தில்
எங்கும் ஆபத்தும் தொல்லையும் தான்"

எனவாரம்பித்து எப்போதும் மாறாமலிருக்கும் பெண்ணின் பாதுகாப்பற்ற நிலையைவெளிச்சமிட்டுக் காட்டுகிறது.

இவை தவிர ஆசை, அந்த காதலை மீண்டும் என்னிடமிருந்து கேட்காதே, கை ரேகை பார்த்தல், காலதேவனின் அரிவாள், எனது மனைவியைப் பற்றிய எளிய பாடல், காதலும் சாதலும், உடைந்த நிலா ஆகிய கவிதைகள் இந்தத் தொகுப்பில் குறிப்பிடத்தகுந்தவையாய் இருக்கின்றன.


நூல்பெயர் : அக்மதோவா - அக்கரைப்பூக்கள்
தமிழாக்கம் : வ.கீதா - எஸ்.வி.ராஜதுரை
விலை : ரூ.65
பதிப்பு : அடையாளம் பதிப்பகம். (04332 - 273444)
admin@adaiyalam.com

Wednesday, September 10, 2008

மறுபடி ஒரு மொக்கைப் படம் பார்த்து தொலைச்சிட்டேன்...



நடிப்பு : விநய், பாவனா, லேகா வாஷிங்டன், கிஷோர்குமார், அதிசயா, விவேக், சந்தானம்
திரைக்கதை & இயக்கம் : ஆர்.கண்ணன்
இசை: வித்யாசாகர்
தயாரிப்பு : சத்யஜோதி ஃபிலிம்ஸ்

சனிக்கிழமை பொன்மாலைப் பொழுது! +2 படிக்கும் அருமை தங்கையிடமிருந்து போன். "அக்கா ட்யூஷனுக்கு மட்டம் போட்டுட்டேன்.. ஜெயம்கொண்டான் போலாமா?" விதி வலியது. ஆடு எப்பவும் கசாப்புக் கடைக்காரனைத் தான நம்பும்? அடிச்சி பிடிச்சி கிளம்பிப் போயாச்சு. உள்ள நுழையும்போது படம் போட்டு 10 நிமிஷமாகியிருந்துச்சு. அடடா! கொஞ்சம் முன்ன வந்திருக்கலாமேன்னு வருத்தப்பட்டுட்டே பாக்க ஆரம்பிச்சோம். இண்டர்வெல்ல "அடடா! ரொம்ப பின்ன வந்திருக்கலாமே" ன்னு மறுபடி ஒருமுறை வருத்தப்பட்டோம்!!

படம் முடிஞ்சு வீட்டுக்கு வந்ததும் 'படம் எப்படியிருந்துச்சு? என்ன கதை?'ன்னு கேட்டாங்க அம்மா. ஒரு ஆர்வக் கோளாறுல ரொம்பவும் சுருக்கமா கதை சொல்ல ஆரம்பிச்சேன். அதிரடியா ஆரம்பிச்சா நல்லா இருக்குமேன்னு இப்படி தொடங்கினேன்..

"வில்லன் ஹீரோவ பெரிய சுத்தியால அடிக்க வர்றான் மா.. ஹீரோ அதை தடுக்கறார். அப்ப என்னாகுதுன்னா... அந்த இரும்பு தவறிப் போய் வில்லனோட வைஃப் மண்டைல விழுந்து அவ செத்து போய்டறா... அதுல இருந்து வில்லனுக்கு வருது பாருங்க ஒரு வெறி..."

"அப்ப தான் வெறி வருதா? அப்ப ஏன் முன்னயே சுத்தில அடிக்க வந்தானாம்?"

"அது வேற ஒரு பிரச்சினைக்கு.. ஹீரோவோட தங்கச்சிக்கு வில்லன் சப்போர்ட்டா வர்றான். அதனால ஹீரோ அவனை அடிச்சிடறார்"

"ஹீரோ தங்கச்சிக்கு வில்லன் ஏன் சப்போர்ட் பண்றான்??!!"

"இது ஒரு நல்ல்ல கேள்வி! ஹீரோவோட வீட்டை அவனுக்கு தெரியாம அவன் தங்கச்சி விக்கறா. அதை தடுக்கும்போது தான் இப்டியாய்டுது"

"தங்கச்சி ஏன் அண்ணனுக்கு தெரியாம சொத்தை விக்கனும்?"

"அதுவந்து... அது இன்னொரு பிரச்சினை.. ஹீரோவோட அப்பாவுக்கு ரெண்டாந்தாரத்துப் பொண்ணு அது. சொத்துக்காக அடிச்சுக்கறாங்க.."

இப்டியே ஒவ்வொரு பிரச்சினையா விரிவா எடுத்து சொல்லி கதை ஆரம்பம் வரை போய் மறுபடி ரிவர்ஸ் கியர் எடுத்து க்ளைமாக்ஸ் வரை போய் சுருக்க்க்கமா நான் சொல்லி முடிச்சப்ப... அம்மா, "படத்துக்கு நடுவுல புகை பிடிக்காதீர், அஜந்தா பாக்குத்தூள் னு கார்டெல்லாம் வருமே? அதை சொல்லாம விட்டுட்டியே?" ன்னு கேக்கறாங்க. (அவ்வ்வ்வ்) . நானென்னங்க செய்வேன்? வாழைப்பழத்தை விளக்கெண்ணை விட்டு பிசைஞ்ச மாதிரி இருக்கு கதை. இத விட தெளிவா வேறெப்படி சொல்றதாம்?

சரி வேற மாதிரி சொல்றேன்.. உங்களுக்காச்சும் புரியுதான்னு பாருங்க.

7 வருஷமா லண்டன்ல இருந்த விநய், அப்பா செத்ததும் திரும்பி வர்றார் இந்தியாக்கு. இவ்ளோ நாள் சம்பாதிச்ச காசுல இங்கயே பிசினஸ் தொடங்கலாம்னு நினைக்கறார். வந்து பாத்தா பேங்க்ல பணமேயில்ல. சம்பாதிச்சு அனுப்பின 60 லட்சமும் எங்க போச்சின்னு தெரில. அப்பாக்கு இன்னொரு மனைவி இருக்காங்கன்னும் 20 வயசுல பொண்ணொருத்தி (லேகா வாஷிங்டன்) இருக்கான்னும், தான் அனுப்பின பணத்துல அப்பா மதுரைல ஒரு வீடு வாங்கி வெச்சிருக்கார்னும் விசாரிச்சு தெரிஞ்சுக்கறார்.

அப்பா சொத்து தனக்குத் தான்னு ரெண்டு பேரும் அடிச்சுக்கறாங்க. லேகாக்கு அமெரிக்காக்கு போய் படிக்க பணம் வேணுமாம். ரெண்டு பேரும் அந்த வீட்டை விக்க முயற்சி பண்றாங்க.

ஆச்சா? கத ஒரு மாதிரி வெளங்குதா? இது வரைக்கும் எனக்கு என்னவோ தினத்தந்தில நிலத்தகராறு, சொத்துத் தகராறு நியூஸ் படிக்கறாப்ல இருந்துச்சி.

அப்பால விநய் என்ன செய்றார்னா.. நேரா மதுரைக்கு போய் அந்த வீட்லயே தங்கி அங்க குடியிருக்கற பாவனா ஃபேமிலியை வீட்டைக் காலி பண்ண சொல்றார். பாவனா முடியாதுன்றாங்க. பாவனாவை கன்வின்ஸ் பண்றதுக்காக "நாம சின்ன வயசுல ஒன்னாப் பழகியிருக்கோமே" ன்னு இஷ்டத்துக்கு ரீல் விடறார். தமிழ் சினிமா நியதிப்படியும் டைரக்டர் சொல்லிக்குடுத்த மாதிரியும் பாவனாக்கு விநய் மேல காதல் வந்திடுது.

ஒரு வழியா அவங்க வீடு காலி பண்ணினதும் வீட்டை அளந்து பாத்தா பக்கத்து வீட்டுக்காரன் 1900 சதுரடி ஆக்ரமிச்சு கட்டிருக்கான். ( என்ன அநியாயம் பாருங்க!) அவன் மேல கோர்ட்ல கேஸ் போட்டு, வாதாடி, ஜெயிச்சு, நோட்டீஸ் ஒட்டி, ஆக்ரமிப்பெல்லாம் இடிச்சு, வீட்டை விக்க ஏற்பாடெல்லாம் பண்ணிடறார். (ஆஆவ்வ்வ்வ்)

அப்ப பாத்து தங்கச்சி கிளம்பி வந்து மதுரைய கலக்கிகிட்டிருக்கற குணா-ன்ற தாதா துணையோட வீட்டை விக்கப் பாக்கறா. வில்லனும் என்னவோ கல்யாணத்துக்கு போற மாதிரி பொண்டாட்டியோட குடும்ப சகிதமா ரிஜிஸ்டர் ஆபீஸ்க்கு வந்திடறார். கரெக்டா விநய் ஸ்பாட்டுக்கு வந்து தங்கச்சியப் பாத்து "கையெழுத்து போடாத" ன்றார். வில்லன் "நீ போடு" ன்றார். இவர் "போடாத"ங்கிறார். அவரு "போடு"ங்கிறார். வந்த ஆத்திரத்துல எனக்குத்தான் யார் தலைலயாச்சும் கல்லைத் தூக்கிப் போடலாமான்னு இருந்துச்சு.

இந்த சண்டைல வில்லனோட வைஃப் செத்துப் போய்டறாங்களா அங்க தான் கதைல ஒரு ட்விஸ்ட் வைக்கறாங்க. (அங்ங்ங்ங்க கொண்டு போயா வெச்சீங்க? - நன்றி விவேக்!) வில்லன் துரத்த ஆரம்பிக்கறார். வீடே வேணாம்டா சாமீன்னு இவங்க ஊருக்கு ஓடிர்றாங்க. ஊடால பாவனாவும் சென்னைக்கு வந்து "நாங்க சின்ன வயசுல இருந்து காதலிக்கிறோம்.. எனக்கு அவுக(விநய்) மடில தான் காது குத்தினாங்க"னு அவங்க பங்குக்கு நமக்கு காது குத்தறாங்க . (அய்ய்ய்ய்ய்யோ!) பணம் கிடைக்காம ஹீரோ சுத்தமா வெறுத்துப் போய் மறுபடி லண்டன் கிளம்பறார். அவ்ளோ நாள் சும்மா இருந்த வில்லன், சரியா இவரு கிளம்பற அன்னிக்கு ராகுகாலம் எமகண்டம் பாத்து லேகாவ கடத்திடறார். ஏர்போர்ட் வரைக்கும் போன விநய் நம்ம அபிஅப்பா மாதிரியே ஃப்ளைட்டை கோட்டை விட்டுட்டு தங்கச்சிய காப்பாத்தப் போறார்.

விநய் லேகாவை காப்பாற்றினாரா... ? லேகாவின் லட்சியம் நிறைவேறியதா? தாதா குணாவை போலீஸ் கைது செய்ததா? அண்ணனும் தங்கையும் ஒன்று சேர்ந்தார்களா? பாவனா - விநய் காதல் என்னவாயிற்று? விடைகளை வெள்ளித்திரையில் காண்க ன்னு நான் சொன்னா நீங்க என்னை அடிக்க வர மாட்டீங்க தானே?

இயக்குனர் ஆர்.கண்ணன் மணிரத்தினத்தின் உதவியாளராம். நம்பறாப்ல இல்ல படம். (சைடு பிசினஸா பழனில பஞ்சாமிர்தம் வித்துட்டிருந்தார் போல) இசை வித்யாசாகர் ஒரே ஒரு பாட்டு நல்லாருந்த மாதிரி இருந்துச்சு.. அதும் இப்ப மறந்து போச்சு. படத்துல நகைச்சுவைக்கு விவேக்கும் சந்தானமும். சந்தானம் ஸ்கோர் பண்றார். இவங்க ரெண்டு பேரை விடவும் அருமையா காமெடில கலக்கியிருக்கறது சிவாஜி புகழ் 'லக லக லக' இன்ஸ்பெக்டர் லிவிங்ஸ்டன்! க்ளைமாக்ஸ்ல, கடைசீஈஈஈஈ ஆளா வந்து டுமீல்னு வில்லன சுட்டுட்டு "நான் பாத்துக்கறேன் நீங்க போங்க" ன்னு கம்பீரமா விநய்கிட்ட சொல்ற நகைச்சுவை காட்சியை நான் ரொம்பவே ரசிச்சு சிரிச்சேன்!!
விநய்க்கு தமிழ்நாட்டுல 'விலைவாசி ஏறிட்டே போகுது, டீசல் கிடைக்க மாட்டிங்குது, எப்பவாச்சும் தான் கரெண்ட் வருது..' ன்னு கவலை போலிருக்கு.. எப்பவும் சோகமாவே இருக்கார். க்ளைமாக்ஸ்ல அவர் வில்லனுக்கு அட்வைஸ் பண்ற சீன் இருக்கே... ஸ்ஸஸ்ஸ்ஸ்... (கேப்டன்! உங்களைப் போய் எல்லாரும் கிண்டல் பண்றாங்களே? அடுத்த எலக்ஷன்ல என் ஓட்டு தேமுதிகவுக்கு தான்!)

ஆனா இத்தனை கொடுமையையும் மறக்கற அளவுக்கு பாவனா அழகா இருக்காங்க. விநய் தன்னை பொண்ணு பாக்க வந்திருக்கறதா நினைச்சுகிட்டு தயங்கி தயங்கி பேசற காட்சி அழகு! வில்லன் மனைவியா வர்ற அதிசயா... கொஞ்சமே கொஞ்சம் காட்சிகள்ல வந்தாலும் நடிப்பு அசத்தல்! இலவச இணைப்பு மாதிரி பாவனா தங்கச்சியா வர்ற சின்ன பொண்ணு செம க்யூட். பாட்டெல்லாம் கேக்கற மாதிரி இல்லன்னாலும் பாக்கற மாதிரி இருக்கு...
மொத்தத்தில் ஜெயம்கொண்டான் ரொம்பவும் சகிப்புத் தன்மையுள்ள மக்கள்ஸ் (அதாவது என்னய மாதிரி!) ஒரே ஒரு முறை கண்ண மூடிக்கொண்டு பார்க்கத் தகுந்த படம் என்று இந்த விமர்சனக் குழு பரிந்துரைக்கிறது.

ஜெயம்கொண்டான் - மறைக்கப்பட்ட உண்மைகள் :
படம் முடிஞ்சு வெளில வந்ததும் நானும் தங்கச்சியும் ஒருத்தரையொருத்தர் பரிதாபமா பார்த்துகிட்டோம்... அப்றம் தோள்ல கை போட்டுகிட்டு "நீயும் பொம்மை நானும் பொம்மை நினைச்சு பார்த்தா எல்லாம் பொம்மை.. டொய்ங்க்க்..." அப்டின்னு பாடிகிட்டே வீட்டுக்கு போய்ட்டோம்.

Friday, September 5, 2008

இவரைக் காப்பாத்த யார் இருக்கா??

"எனக்குப் பிடித்த தெய்வம் கணபதி.
எந்த தெய்வம் ஒப்புக் கொள்ளும்
கும்பிட்ட பின் உடைக்க?"
-- ஞானக் கூத்தன்














நன்றி: தொடர்மடலில் அனுப்பிய தீனதயாளனுக்கு.

Tuesday, September 2, 2008

குழந்தையின் சுவர்க்கிறுக்கல்களைப்
போலிருந்தது உன் கோபம்....
எரிநட்சத்திரங்களென்றும்...
ஈரம் பொசிந்த
மழைக்காளான்களென்றும்...
காற்றசைத்த அதிர்வில்
கிளைகள் தவறவிட்ட
மலர்களென்றும் கூட
முன்னொரு முறை
நினைத்துக் கொண்டிருக்கிறேன்.
நீ கோபிக்கிறாய்..
நீளத்துவங்குகிறது என்
ஆச்சரியங்களின் பட்டியல்!

Monday, September 1, 2008

பூவுக்கு பொறந்த நாளு...















என் நேசமிகு தோழியும், பாசமிகு தங்கையுமாய் (2 மாசம் முன்னால பொறந்து தொலைச்சிட்டேன் ) உடனாய்.. துணையாய்.. இனிமையாய்.... இம்சையாய்.. பிரியங்களாய்... நட்பாய் என்னைத் தொடர்ந்து வரும் ஜி3 என்ற காயத்ரி க்கு இன்று பிறந்தநாள். அவள் என்றும் மகிழ்வாய் வாழ மனமுவந்து வாழ்த்துகிறேன்!!!
பிறந்தநாள் வாழ்த்துக்கள் செல்லம்..

Sunday, April 20, 2008

தமிழ்ச்செல்வியின் 'கீதாரி'


" நீ வளர்ந்திருக்க.. அவ்ளோ தான். இன்னும் வாழவே ஆரம்பிக்கல"

எப்போதோ பேச்சுவாக்கில் அம்மா சொன்னது இது! காற்றில் திசையறுந்த பட்டம் போல் மனக்கிளை ஒன்றில் மாட்டிக் கொண்டு எப்போதும் படபடத்துக் கொண்டே இருக்கிறது இந்த வரி. கால் நூற்றாண்டைக் கடந்தாயிற்று.. இன்னும் வாழவில்லை என்றால் எப்படி?

நிஜம்தான். என்றோ துயரமென மறுகியவை புன்னகையாகவும், மகிழ்வெனக் கொண்டாடியவை கண்ணீராகவும் தொடர்ந்து மாறிக்கொண்டேயிருக்கும் விசித்திரத்தின் நடுவில் வாழ்வில் இதுவரை கற்றதும் பெற்றதும் எவையென தேர்ந்து கொள்வது சிரமமாய்த்தானிருக்கிறது.

வாழ்க்கைக்கு அநேக முகங்கள். சிலரிடம் சிரித்தபடியும், சிலரிடம் சினந்தபடியும் சிலருக்கு எக்காலமும் அருள்பாலித்தபடியும் சிலரை என்றென்றும் வெறுத்தொதுக்கியபடியும் அன்பாய், அருவருப்பாய், சாந்தமாய், குரூரமாய்.. விதவிதமாய் இருக்கும் விநோத முகங்கள். எல்லோருக்கும் எல்லா முகங்களையும் சந்திக்க வாய்ப்பதில்லையென்றாலும் பெரும்பாலும் புத்தகங்கள் அவற்றை இனங்காட்டி விடுகின்றன இல்லையா?

ஒவ்வொரு முறையும் பிறவியெடுத்து முழுமையாய் வாழ்ந்து பார்க்க வேண்டிய வாழ்க்கையை, இந்தப் புத்தகங்களில் வீசும் அச்சு மையின் மெல்லிய வாசனைகளூடாய் நாமும் வாழ்ந்து விட முடிவது எத்தனை அற்புதமானது! கீழே விழாமலே அடிபட்ட வலியும்.. இழக்கும் முன்பே இழப்பின் வேதனையும்..காயங்கள் ஏதுமின்றி குருதியுமிழ் புண்களும் வாசிப்பில் மட்டும்தான் சாத்தியம் என்று தோன்றுகிறது.

அப்படியொரு வலி மிகுந்த வாழ்க்கைதான் தமிழ்ச்செல்வியின் 'கீதாரி'. வாங்கி 6 மாதங்களாய் பாத்திரத்தில் சேமித்த விதைநெல் போல பொறுமையாய் காத்துக் கொண்டிருந்தது அது! இம்மாதத் துவக்கத்தில் ஒவ்வொரு நொடியையும் கழுத்தைப் பிடித்து தள்ள வேண்டியிருந்த நாளொன்றில்.. தன்னை எங்காவது தொலைத்துவிடும்படி கெஞ்சிக் கொண்டிருந்த வெயில் நேரத்தை கீதாரிக்குத் தின்னக் கொடுத்திருந்தேன். படித்து முடித்தபோது வெகுவாய் ஓர் ஆயாசமும் கனமும் எஞ்சியிருந்தது மனதில்.

ஏற்கனவே தமிழ்ச்செல்வி பற்றி பிறர் சொல்லக் கேட்டும்.. தம்பியின் 'அளம்' பற்றிய பதிவைப் படித்துமிருந்ததால் புத்தகம் பிரிக்கையில் எதிர்பார்ப்பின் அடர்வு கூடியிருந்தது. ஆனால் முதல் பத்தியிலேயே முன்முடிவுகள் அனைத்தும் சிதைந்து போயின! ஒப்பனைகள் ஏதுமற்ற வெற்று முகம் போன்ற தமிழ்ச்செல்வியின் எழுத்து என்னை அத்தனை ஈர்த்தது எனக்கே ஆச்சரியம் தான்!

"யதார்த்தம் குரூரமாகவும் வக்கிரமாகவும் இருக்கிற போது அதை மிகைப்படுத்தவோ சிதைக்கவோ நான் விரும்புவதில்லை.ஒரு மலையைப் போலவோ அடர்ந்த வனத்தைப் போலவோ உருப்பெறுகிறது என் நாவல்"

எனச் சொல்லிக் கொள்ளும் தமிழ்ச்செல்வி இதை செய்துகாட்டியுமிருக்கிறார்.

*கீதாரி - இயற்கையின் மாற்றங்களையும் சீற்றங்களையும் ஒன்றேபோல வெட்ட வெளியில் எதிர்கொள்ளும் ஆட்டிடையர்களின் துயர்நிரம்பிய வாழ்க்கையைப் பேசுகிறது. ராமு கீதாரி, கரிச்சா என்று இரண்டு கதாபாத்திரங்கள். பூவிடைப்பட்ட நார் போல கதை முழுக்க விரவி நிற்கும் இவர்கள் இருவரையும் உருவி எடுத்துவிட்டால் நாவல் பொலபொலவென வெறும் சொற்களாய்க் கொட்டிவிடுமோவென பிரமை தட்டியது எனக்கு.

அதிலும்.. அந்தப் பெண்... அந்த கரிச்சா..என்னவொரு மனோதிடம் அவளுக்கு! ஒரே பேற்றில் இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்றுவிட்டு இறந்து போகும் புத்திசுவாதீனமற்ற தாயொருத்தியின் மகள் அவள். ராமு கீதாரியின் பாதுகாப்பில் வளர்கிறாள். உடன்பிறந்தவளை வேறொருவருக்கு தத்து கொடுக்கையில் பிரிவில் உருகுகிறாள்.. பூப்படையும் போது பக்கத்தில் பெண் துணையின்றி முதன்முறையாய் இறந்து போன தாயை நினைத்து கொண்டு தவிக்கிறாள்...சந்தர்ப்ப சூழ்நிலையால் அதுவரை தனக்கு 'சித்தப்பா'வாயிருந்த கீதாரியின் வளர்ப்பு மகனையே மணக்கிறாள்... தத்து கொடுக்கப்பட்ட உடன்பிறந்தவள், வளர்ப்புத் தந்தையாலேயே கற்பழித்துக் கொல்லப்பட்டாளென அறிந்து கதறுகிறாள்... குழந்தையில்லை என கணவனின் வெறுப்பிற்கு ஆளாகிறாள்... தாங்க முடியாத கணத்தில் துணிந்து அவனைப் பிரிந்து வருகிறாள்.. 5 வருடங்களாய் வாய்க்காத பிள்ளை வரம் வாய்த்தும் மீண்டும் அவனுடன் சேர்ந்து வாழ மறுக்கிறாள்... முதிர்ந்து தளர்ந்த கீதாரியை தன் பொறுப்பில் பராமரிக்கிறாள்.. தன் மகனை படிக்க வைக்க விரும்புகிறாள்... எதிர்பாராத நாளொன்றில் பாம்பு கடித்து இறந்து போகிறாள்.

கரிச்சாவையும் அவள் தமக்கை சிவப்பியையும் அவள் கணவன் வெள்ளைச்சாமியையும் எதிர்பார்ப்புகளற்ற அன்போடு வளர்த்து ஆளாக்கிய கீதாரி.. கரிச்சாவின் மகனோடு மீண்டும் தன் பயணத்தைத் தொடர்கிறார்!

'இன்னமும் எவ்வளவு துன்புறுத்திவிடுவாய் நீ?' என வாழ்க்கையிடம் பந்தயம் கட்டிக் கொண்டது போலிருக்கிறார்கள் இருவரும். முளைவிதையின் உயிர்த்துடிப்பும் வெட்ட வெட்டத் தழைக்கும் வாழ்தலுக்கான வேட்கையும் நிரம்பிய நாவல் மனதின் இருள் மூலைகளில் வெளிச்சமாய்க் கசிகிறது!

என்றாலும் கதை முழுக்க அறியாமையின் கோரப்பற்கள் ஒவ்வொருவரையும் குரூரமாய்க் கிழித்தெறிவது பரிதாபமாயிருக்கிறது.

"ஊர்விட்டு ஊர்வந்து நாடோடிகள் போல பிழைப்பு நடத்தும் ஆட்டுக்காரர்கள் ஊமைகளாகவே எங்குமிருந்தார்கள். ரோஷம், அவமானம் என்பதையெல்லாம் இவர்கள் ஒரு போதும் நினைப்பதேயில்லை. இவர்களை வலிய கூப்பிட்டு யாரேனும் அடித்து உதைத்தாலும் ஏனென்று கேட்க மாட்டார்கள். இவர்களின் இந்த பரிதாபமான நிலை கண்டு இரக்கப்பட்டு யாராவது இவர்களிடம் விசாரித்தால் அதற்கு இவர்கள் சொல்லும் பதில் இன்னும் பரிதாபமாய் இருக்கும். ' யாரும் எங்கள சும்மா அடிக்க மாட்டாக..போன வருஷம் மொத வருஷத்துல அவுக கொல்ல பயிறு பச்சயில எங்க ஆடுக மேஞ்சிருக்கும்.. அந்த கோவத்துல அடிக்கறாக.. அவுக அடிக்கறது ஞாயந்தான ?. நம்ம மேல தப்பிருக்கு.. பட்டுகிட்டுதான் போகனும்' என்று மிக இயல்பாக சொல்வார்கள்"

இந்த மனிதர்களை என்ன சொல்ல?

படித்து முடிக்கையில்....

"வா விளையாடலாம்
என்று அழைத்துப் போய்
நீ உதைத்து விளையாடும்
பந்தாக என்னை ஆக்கிக் கொண்டாயே"

தபூசங்கரின் வாழ்க்கை பற்றிய வரிகள் ஓடி மறைந்தன மனதிற்குள்..

குறைந்தபட்ச நியதிகள், ஒழுக்கங்கள், தேவைகள் ஆகியவற்றோடு அதிகபட்ச துயரங்களை எதிர்கொள்ளும் இம்மக்களின் வாழ்க்கை, படிக்கும்போதும் படித்தபின்னும் 'அய்யோ' வென்ற பதைபதைப்பையும் 'எத்துணை ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்வு நம்முடையது' என்ற ஆசுவாசத்தையும் கொடுத்துக் கொண்டேயிருக்கிறது.

ஜெயமோகன் சொல்வது எத்தனை உண்மை... நிஜம் தான்.

"வாழ்க்கை மிகப்பெரிய அறிய முடியாமையன்றி வேறல்ல!"

*கீதாரி - ஆட்டிடையர்களின் தலைவரைக் குறிக்கும் பெயர்

Sunday, April 6, 2008

தொலைத்தல் மற்றும் தொலைந்து போதல்

670 ரூபாய் ரொக்கம்
கொஞ்சம் சில்லறைக் காசுகள்
வீடு மற்றும் என் அறையின் சாவி
திருச்சி செல்வதற்கான 42 ரூபாய் டிக்கெட்
கல்லூரியில் செலுத்தவிருந்த 4250 ரூபாய்க்கான டிடி
வங்கி பண அட்டைகள்
படிக்கிறேன்.. பணிபுரிகிறேன் என்பதற்கு சாட்சியங்களான அடையாள அட்டைகள்.
K750i சோனி எரிக்சன் மொபைல்
கறுப்பு ஜெல் பேனா
நான்கைந்து விசிட்டிங் கார்டுகள்
தம்பியின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
ராம மந்திரத்துடன் கூடிய நாமக்கல் ஆஞ்சனேயரின் படம்
டிசைனர் புடவைகளை பெட்ரோல் வாஷிற்கு கொடுத்ததற்கான ரசீது
மிளகு சைஸ் கறுப்பு ஸ்டிக்கர் பொட்டு அட்டை....

இன்னும் அந்த பர்ஸில் என்னவெல்லாம் வைத்திருந்தேன் என்பதை பேருந்தில் அது தொலைந்தபின் தான் அவசர அவசரமாய் யோசித்துக் கொண்டிருந்தேன்..!

போன மாதத்தின் ஏதோவோர் புதன்கிழமை.. எனக்கு முனைவர் பட்டம் வழங்கும் பெருமையை திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகம் பெற்றுக் கொள்ள விரும்பியதால் மனமுவந்து திருச்சிக்குக் கிளம்பினேன். அதிகாலை (பெரும்பாலும் அது யாமம்) 5 மணிக்கே ஈரோட்டில் திருச்சி பஸ் ஏறி வசதியாய் ஒரு சீட் பிடித்து ஜன்னல் கம்பியில் தலை சாய்த்து 5.15 க்கெல்லாம் ஆழ்ந்து தூங்கத் தொடங்கியிருந்தேன். அப்போது மேற்குறிப்பிட்ட இத்தியாதிகளோடு பர்ஸ் என் மடியில் தான் இருந்தது.

அப்பா எப்போதும் நிறைய முன்யோசிப்புகளோடிருப்பவர். அவர் வெளியூர் செல்வதாயிருந்தால் எங்கு போகிறேன்.. யாரைப் பார்க்க.. அவர் முகவரி என்ன.. தொலைபேசி எண் என்ன.. அது பிசியாக இருந்தாலோ அவர் தொடர்பெல்லைக்கு அப்பாலிருந்தாலோ வேறு எந்தெந்த எண்ணில் தொடர்பு கொள்வது.. அதே ஊரில் அந்த நபருக்கு வேறு நண்பர்கள் உண்டா.. அவர்களின் மொபைல் மற்றும் லேண்ட் லைன் எண்கள் என்ன என்பது வரை விலாவரியாய் (கார்பன் வைத்து) 2 பிரதிகள் தயார் செய்து ஒன்றை வீட்டில் எல்லோருக்கும் தெரியும்படி பிரகடனப்படுத்திவிட்டு மற்றொன்றைஅவர் எடுத்துச் சென்றிருப்பார்.

வழக்கமாய் விட்டலாச்சாரியார் படங்களில், ஏழு மலைகள் ஏழுகடல்கள் கடந்து, அடர்ந்த காட்டில், இருள் குகை ஒன்றில், பாம்புகளின் பாதுகாப்பில்,பாறைக்கடியில், மண்ணுக்குள் ஆழப்புதைக்கப்பட்ட கண்ணாடிப் பேழையில், வைக்கப்பட்டிருக்கும் கருவண்டிற்குள் மந்திரவாதியின் உயிர் இருப்பதாய் காட்சி வருமே? அதைப்போலத்தான் பயணங்களின் போது பணத்தையும் வெகுபாதுகாப்பாய் வைக்க விரும்புவார்! நானும் அப்படியே இருக்க வேண்டும் என்பதில் பெருவிருப்பமும் நான் அப்படியில்லாததால் மிகுந்த வருத்தங்களும் அவருக்கு உண்டு. இந்த முறையும் கிளம்பும்போது "ஏம்மா பர்ஸை ஒரு பையில் வைத்து எடுத்துப் போயேன்?" என்று சொல்லத்தான் செய்தார். நான்தான் கேட்கவில்லை.

என்றாலும் நீங்கள் இப்போது நினைப்பது போல நான் ஒன்றும் அத்தனை பொறுப்பற்றவளில்லை. கரூரில் ஒரு முறை, குளித்தலையில் ஒரு முறை அவ்வப்போது கண்விழித்து பர்ஸ் இருப்பதை உறுதி செய்துகொண்டுதானிருந்தேன். ஆனால் எப்போது அது தொலைந்தது என்பதைத்தான் கவனிக்கவில்லை.

மறுமுறை பெயர் தெரியாத ஊரில் கண்விழித்தபோது மடியில் வெறும் ஃபைல் மட்டுமேயிருந்தது. பக்கத்து சீட்டிலோ பின்னிரண்டு இருக்கைகளிலோ ஆட்கள் எவருமில்லை. 'மச்சானை பார்த்தீங்களா' ரீதியில் எவரிடமும் விசாரிக்கவும் வழியில்லை. சின்னதாய் குல்லாவும் சிவப்பு ஸ்வெட்டரும் அணிந்தகைக்குழந்தையுடன் பக்கத்தில் உக்காந்திருந்து எந்த நிறுத்தத்திலோ இறங்கிப் போயிருந்த பெண்ணை சந்தேகிக்க மனம் வரவில்லை. பேருந்தில் கீழே சாஷ்டாங்கமாய் விழாத குறையாய் எல்லாப்பக்கமும் தேடியாயிற்று இனி என்ன செய்ய?

நிலைமையின் தீவிரம் புரிய பதற்றம் கூடிக் கொண்டே போனது. கையில் ஒரு பைசா இல்லை.. திருச்சியில் தெரிந்தவர்கள் எவருமில்லை.. அங்கு போய் சேர்ந்த பின்பாய் திரும்பி வரவும் வழியில்லை. எவரையும் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை.. குறைந்தபட்சமாய் 'மொபைல் தொலைந்து போய்விட்டது' என்பதையாவது அவசரமாய் யாருக்கேனும் போன் செய்து சொல்ல விரும்பினேன் நான். அதற்கும் வழியில்லை. எல்லாவற்றுக்கும் மேலாய் எனது மற்றும் எங்கள் இல்ல தொலைபேசி எண் தவிர்த்து மற்ற எவரின் எண்ணும் நினைவிலில்லை.

கையில் ஒரு ரூபாய் கூட இல்லாத நிலையில் யாருக்கு எப்படி என் நிலைமையை விளக்கி எவரிடம் உதவி கேட்டு எப்போது ஊர் போய்ச் சேர்வதென தவித்துக் கொண்டிருக்கையில் எப்போதோ தம்பி சொன்ன அறிவுரையும் நியாபகம் வந்தது.. 'எப்போதும் பணத்தை ஒரே இடத்தில் வைத்திருக்காதே' என்றான் ஒருமுறை. ஒருவேளை இந்த அதிகார மையம், குவியம், விளிம்பு பற்றில்லாம் இவனும் படித்திருப்பானோஎன்று அசந்தர்ப்பமாய் நினைத்துக் கொண்டேன். என்றாலும் அவன் பேச்சை மதித்துத்தான் பர்ஸின் வெளிப்பக்க அறையில்170 ரூபாயையும் உள்ளறையில் 500 ரூபாய் தாளையும் பிரித்து வைத்திருந்தேன்.. இப்படியாகுமென கனவிலும் நினைக்கவில்லை.

ஒரு வழியாய் யோசித்து, திருச்சியில் இறங்கியதும் கருணை ததும்பும் முகம் கொண்டகடைக்காரர் எவரேனும் கண்ணில் பட்டால் அவரிடம் நிலைமையை விளக்கி ஒரு போன் செய்துவிட்டு, மீட்க எவரேனும் வரும் வரை அடகுப் பொருள் போல கடையிலேயே அமர்ந்துகொள்வதென தீர்மானித்தேன். ஆனாலும் யாருக்குப் போன் செய்வதென்ற குழப்பம் நீடித்தது.

முதல் காரியமாய் எனக்கே போன் செய்யலாம்... அதாவது என் எண்ணுக்கு! மறுமுனையில் எடுப்பார்களா? நிச்சயமாய் எடுப்பார்கள்.. 'தொலைந்து போன பொருள் ஒன்று திரும்பக் கிடைக்கும்..மாற்று இனத்தார் தானே வந்து உதவுவர்' என்று சென்ற மாத ராசிபலனில் போட்டிருந்ததே? சென்ற மாத ராசிபலன் இந்த மாதம் வரை நீடிக்குமா? மாற்று இனத்தவர் என்றால் யார்? தெலுங்கர்கள், கன்னடர்களா? கிறிஸ்துவர்.. இஸ்லாமியர் போன்றவர்களா? யாராயிருந்தால் என்ன போனை எடுத்தால் போதும்.. எடுத்ததும் என்ன பேசுவது? 'ஐயா உங்களிடமிருக்கும் அலைபேசி உண்மையில் என்னுடையது. அதை தாங்கள் என்னிடம்...'என்று பணிவுடனா? அல்லது அபிஅப்பா போல..'டாய்ய்ய்.. நான் யாருன்னு தெரியுமா? ஈரோடு சூரம்பட்டி ஸ்டேசன் இன்ஸ்பெக்டர் என்ஒன்னு விட்ட அக்கா வூட்டுக்காரருக்கு செம தோஸ்து' என மிரட்டலாகவா? சூரம்பட்டி இன்ஸ்பெக்டருக்கு, திருச்சி திருடர்கள் பயப்படுவார்களா என்று வேறு சந்தேகமாயிருந்தது.

இழப்பின் அடர்த்தியை விடவும் இனி செய்யக்கூடியது என்ன என்பதே மிகவும் அலைக்கழித்தது.. "எக்ஸ்க்யூஸ் மீ... மிஸ் இது உங்க பர்ஸா? இங்க கீழ கிடந்தது" என்று காக்க காக்க சூர்யா போல சுமாரான இளைஞர் யாரேனும் சொல்லக்கூடுமா என்றும் கூட எதிர்பார்த்தேன். அப்படி எதுவும் நடப்பதற்கான அறிகுறிகளும் தென்படவில்லை. சோர்ந்து முன்னும் பின்னுமாய் பேருந்திற்குள் அலைபாய்ந்து கொண்டிருக்கையில்.. என் இருக்கைக்கு 3 இருக்கைகள் பின்னால் அமர்ந்திருந்த பெரியவர் 'பாப்பா இதையா தேடறே' என்றார். ஆஹா! அவர் கையில் என்னைப் போலவே சாதுவான தோற்றத்துடன் இருந்தது என் பர்ஸ்! மடியிலிருந்து கீழே விழுந்து 3 இருக்கைகளுக்கு அது தத்தி தத்தி போகும் வரை என்னை உறக்கத்திலேயே ஆழ்த்தியிருந்த நித்திராதேவியை அவசர அவசரமாய் சபித்தேன். பர்ஸைப் பார்க்கப் பார்க்க,

"தேடினென்! கண்டனென்! தேவியே! என
ஆடினன் பாடினன் ஆண்டும் ஈண்டும் பாய்ந்து
ஓடினன் உலாவினன்"

அசோகவனத்தில் சீதையை பார்த்து மகிழ்ந்த அனுமனைப் போல உள்ளுக்குள் உவகை பொங்கியது!

ஆனால் அவர் அதை என்னிடம் தருவதாய் தெரியவில்லை. அவர் கையில் என் அடையாள அட்டை இருந்தது.. என்னையும் அதையும் மாற்றி மாற்றிப் பார்த்து 'இது நீயா?' என்றார் சந்தேகமாய்.. அதில் 'நிச்சயமாய் நீயில்லை'என்ற உறுதிப் பொருள் தொனித்தது. 'சத்தியமா நான் தாங்க.. போட்டோ 5 வருஷம் முன்ன எடுத்தது' என்றேன் சோகமாய். அரைமனதோடு என் கையில் கொடுத்தார். நிச்சயமாய் சொல்கிறேன் இதற்கு முன்பாய் அந்த பர்ஸை அத்தனை அன்புடனும் வாஞ்சையுடனும் நான் பார்த்ததேயில்லை.

"நன்றிங்க... ரொம்ப நன்றி" என்றேன் திரும்பத் திரும்ப. அப்போது மனதிலிருந்த நன்றியைச் சொல்வதற்கு இந்த வார்த்தை போதுமானதாய் இல்லையென தோன்றியது.

பின் கோவில் பிரசாதம் போல பயபக்தியாய் அதை எடுத்துக் கொண்டு என் இருக்கைக்கு திரும்பினேன்.

"தொலைந்து போனது
நீ மட்டுமில்லை
நானும் தான்"

இப்படி ஏதாவது பர்ஸைப்பற்றி தலைப்பில்லாமல் கவிதை எழுதலாமா என்று கூட தோன்றியது.

அந்தப் பெரியவரும் பின்னாலேயே வந்து என் முகம் பார்த்துப் பேச வசதியாய் எதிர் இருக்கையில் உட்கார்ந்து கொண்டார்.

"நானா இருக்கங்காட்டியும் எடுத்துக் கொடுத்தேன்.. வேற எவனாச்சுமா இருந்தா லவட்டிகிட்டு போயிருப்பான்"தனக்குள் பேசுவது போல தன்னை தானே மெச்சிக் கொண்டார். 'ஆமாங்க' என்றேன்.

திடீரென ஆவேசமாகி... "இது தான் ஃப்ர்ஸ்ட் அண்டு லாஸ்ட்டு டைமா இருக்கனும்.. இதை நீ தொலைக்கறது" என்றார் கோபமாய்.

"லாஸ்ட் டைம்னு வேணா சொல்லுங்க.. நான் இதை தொலைக்கறது இதான் ஃப்ர்ஸ்ட் டைம் னு உங்களுக்கு எப்டி தெரியும்?" துடுக்குத்தனமாய் கேள்வி வந்து நின்றது உதட்டில். "பாதகி.. எதையாவது பேசி நன்றி கொன்றவளாகி விடாதே" என உள்ளிருந்து ஒரு காயத்ரி அதட்டியதால் பணிவாய் "சரிங்க" என்றேன்.

அவர் கொஞ்சம் சாந்தமானது போலிருந்தது.. சற்று நேரம் கழித்து "படிக்கறாப்லயா?" என்றார். எனக்கு குழப்பமாயிருந்தது. ஆமாம் என்றால் எத்தனாவது என்று கேட்பாரோ? பி.ஹெச்.டி யை எத்தனாவது என்று சொல்வது? 12+ 3+ 2+... வருடங்களை மனசுக்குள் கூட்டிக் கொண்டே ஆமாம் என்பது போலவும் இல்லை என்பது போலவும் குத்துமதிப்பாய் தலையசைத்தேன்.

"ம்ம்.. படிச்சாத்தான் இந்த காலத்துல பொழைக்க முடியும்" வழக்கம்போல தனக்குத்தானே பேசிக்கொண்டே "ஏம்மா நீ ....... சாதிப்பொண்ணா?" என்றார். எனக்கு தூக்கிவாரிப் போட்டது. சாதியெல்லாம் தெரிந்து என்ன செய்யப்போகிறார் இவர்? லேசாய் கடுப்பாகி' இல்ல' என்றேன் சுருக்கமாய்... 'பின்ன?' என்றார் அவரும் சுருக்கமாய்.

எனக்கு நன்றியுணர்ச்சி மங்கிக் கொண்டே வர எரிச்சல் தலை தூக்கியது. இதுக்கு இந்த பர்ஸ் தொலைஞ்சே போயிருக்கலாம் போல. வேறு வழியில்லாமல் பதில் சொன்னேன். இத்தோடு விட்டுவிடமாட்டாரா என்று ஏக்கமாயிருந்தது.

அவர் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் "அது சரி.. இப்ப எங்க போறாப்ல" என்று கேள்வியைத் தொடர்ந்தார். பற்றிக் கொண்டு வந்தது எனக்கு. 'ஈரோட்டுக்கு' என்றேன். "ஈரோடா? பஸ் திருச்சிக்கில்ல போகுது?" அதிர்ச்சி அவர் முகத்தில் அப்பட்டமாய் தெரிந்தது. "ம்ம்.. ஈரோட்டுக்கு போய்ட்டு திருச்சிக்கு போய்ட்டிருக்கேன்" என்றேன் பஞ்சதந்திரம் பாணியில்! என் கிண்டல் அவருக்கு புரிந்ததாய் தெரியவில்லை. குழப்பமாய் விழித்தார். பின்னும் சளைக்காமல் "ஈரோட்ல தான் வீடா? எந்த ஏரியா?" என்றார்.
நான் நொந்து போனேன்.. அப்பெரியவருக்கு எதேனும் கொள்ளைக் கூட்டத்துடனோ கடத்தல் கும்பலுடனோ தொடர்பிருக்க வாய்ப்பில்லை என்று உறுதியாய் தெரிந்தபோதும் நாங்கள் வசிக்கும் பகுதிக்கு நேர் எதிர்த்திசையில் 20 கி.மீ தள்ளி இருக்கும் இடத்தின் பெயரைச் சொன்னேன்.. "அங்க எங்க?" என்று கேட்பார் என்று முன்கூட்டியே யோசித்ததால் 'பிள்ளையார் கோவில் பக்கத்துல' என்றும் சொல்லிவைத்தேன். பிள்ளையார் கோவில்கள் இல்லாத தெருக்கள் தமிழகத்தில் மிகக்குறைவு தானே?

எதோ யோசித்தவர், அந்த பகுதியிலிருக்கும் ச.ம.உ அலுவலகத்திற்கு (MLA ஆபீஸ்!) எதிர்ச்சந்தில் 3 வதாக இருக்கும் பொட்டிக்கடையை தவிர்த்து விட்டு எண்ணினால் 8 வதாக இருக்கும் ஓட்டு வீட்டில் தான் தன் மூத்த மகளைக் கட்டிக் கொடுத்திருப்பதாக உபதகவல் வேறு சொன்னார். நல்லவேளையாய் அவர் அடுத்த கேள்விக்கு தயாராவதற்குள் திருச்சி வந்திருந்தது. அவசரமாய் விடைபெற்றுக் கொண்டு பெருமூச்சுடன் விலகி நடந்தேன்.

மேலும் இனிமேல் பர்ஸை தொலைப்பதாயிருந்தால் எவருமே இல்லாத இடத்தில் தொலைக்க வேண்டும்..திரும்பிப் போய் மீண்டும் நாமே எடுத்துக் கொள்ளலாம் என்றும் முடிவு செய்து கொண்டேன்!!

Tuesday, March 25, 2008



யார் யாரிடமோ
உன் சாயல்களைப் பார்த்தபடி
வீடு வந்து சேர்ந்தேன்..
வீட்டிலிருந்த நீ
யாரோவாகியிருந்தாய்.
உள்ளங்கையின்
மெல்லிய ரேகையில்
தளர்வாய் ஊர்கிறதோர்
சிற்றெறும்பு...

எல்லையற்ற வெளியில்
வழிதவறியலைவதாய்
ஒருவேளை அது
பதறிக்கொண்டிருக்கலாம்.

இருக்கட்டும் அப்படியே...

எல்லோர்க்கும் கையளவே இருக்கிறது
வாழ்க்கையும்!


நேற்று நேற்றுடனும்
இன்று இன்றுடனும்
முடிவுற்றால் பரவாயில்லை...
நாளைகளின் விளிம்பில்
எனக்கும் முன்பாய்
காத்திருக்கின்றன
நேற்றும் இன்றும்.

Monday, February 25, 2008

பாவமன்னிப்பு



அலைகள் மீண்டும் மீண்டும் மோதி மோதிச் சிதறுண்டு கொண்டிருக்கும் இந்த கடற்கரை எத்தனை அழகானதோ அத்தனை வன்மமிக்கதுமாய் இருக்கிறதென நான் அடிக்கடி நினைத்துக் கொள்கிறேன். இப்படி நான் சொன்னதும் நீங்கள் இக்கூற்றை அவசரமாய் மறுக்கக் கூடும். கேளுங்கள்... உங்கள் ஏற்பைப் பற்றிய அக்கறையோ மறுப்பு குறித்த கவலையோ எப்போதுமில்லை எனக்கு. ஏனெனில் எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது. ஏனெனில் தனக்குத் தோன்றுவனவெல்லாம் சரியானவையே என்றெண்ணிக் கொண்டிருக்கும் கோடானுகோடி சராசரிகளுள் ஒன்றாய்த்தான் நானுமிருக்கிறேன்.. ஏனெனில் அப்படி இருப்பதே போதுமானதென்று எனக்குத் தோன்றுகிறது!


அதோ.. அந்த அலைகளைப் பாருங்கள்.. அத்தனை வலிமையாய், வீரியமிக்கதாய், அகண்டகரங்களோடு பெருங்குரலெடுத்தலறியபடி பாய்ந்து வரும் இவ்வலைகள் இந்தக் கரை தொட்டதும் உடல் சிதறி, உருக்குலைந்து இல்லாமலாகின்றன.

ஆர்ப்பரிக்கும் கடல் வலிமையானதா? அமைதியாயிருக்கும் கரை வலிமையானதா? கண்களுக்கும் கற்பனைக்கும் அடங்காது வானுக்கிணையாய் விரியத் திறந்திருக்கும் இந்தக் கடல், கதவுகளற்ற கரைக்குள் அடங்கியிருப்பது வியப்புதானில்லையா? என்றாலும்.. எல்லா நேரங்களிலும் கடல் கரை மீறத் தவித்தபடியே இருக்கிறது. கரையை வெற்றி கொள்ளும் ஒற்றைத் தருணத்தை எதிர்நோக்கி கணந்தோறும் தோற்றுக் கொண்டேயிருக்கிறது..

உங்களுக்குப் புரிகிறதா இந்த போராட்டம்? உலகின் அடிப்படை நியதியும் இதுவாகத்தானிருக்கிறது.. இத்தாவர சங்கமத்துள் சத்தும் அசத்துமான அனைத்தும் எல்லாக் கண நேரங்களிலும் எதனுடனோ போரிட்டு வென்றபடியோ தோற்றபடியோ தான் இருக்கின்றன. தகுதியுள்ளது தப்பிப் பிழைக்கிறது. தகுதியற்றவர்களும் தகுதியற்றவைகளும் சபிக்கப்பட்டவர்களாகின்றனர்.

தெரியுமா? ஒருவகையில் சபிக்கப்பட்டவனாய்.. சபிக்கப்பட்டவளாய்.. மற்றும் சபிக்கப்பட்டதுவாய் இருப்பது அவனுக்கும் அவளுக்கும் அதற்கும் நிச்சயம் நிம்மதியளிக்கக் கூடியது தான். இன்பங்கள், மகிழ்ச்சிகள், அதிர்ஷ்டங்கள், வசந்த காலங்கள், பூர்ணிமை தினங்கள், புதிய துவக்கங்கள், தவங்கள், வரங்கள், தேவதைகள் மற்றும் இன்ன பிற தெய்வங்களின் தரிசனங்கள் ஆகியவற்றிற்காய் காத்திருக்கும் அவஸ்தை அவர்களுக்கு எப்போதுமிருப்பதில்லை. இந்தக் கடலைப் பார்க்கையிலும் கூட இதுவும் சபிக்கப்பட்ட ஒன்றென்றே தோன்றிக் கொண்டிருக்கிறது எனக்கு.

உங்களுக்கு மயூரியைத் தெரியுமா? அவளும் இந்தக் கடலைப் போல சபிக்கப்பட்டவள் தான். என் இளம் பிராயத்தின் ஏதோவோர் நாளில் அவள் கதையை என் அத்தை எனக்குச் சொல்லியிருந்தாள். அவளும் இந்தக் கடலைச் சேர்ந்தவள் தானாம். இங்கிருந்து 22 லட்சம் கடல் மைல்களுக்கப்பால் அவளின் சிறிய தீவிருந்ததாக அத்தை சொன்னாள்.

மயூரியின் தீவில் அவளைத் தவிர வேறு மனிதர்கள் இல்லை. பெண்ணின் முகம் கொண்ட பொன்னிறப் பசுவொன்று அவளை வளர்த்து வந்தது. அந்தப் பசுவைத் தவிர்த்து பனிக்காலங்களில் பறந்து வரும் சாம்பல் நிறப் பறவைகளும், கடலில் வழி தவறி தீவிலொதுங்கும் மீன்களும், மஞ்சள் நிற வண்ணத்துப் பூச்சிகளும் மட்டுமே அவளறிந்த உயிர்களாயிருந்தன.

மயூரி தன் பதினோராம் வயதில் முதன்முதலாய் ஒரு கடற்கன்னியைச் சந்தித்தாள். வெகு தூரம் நீந்தி வந்ததால் களைப்புற்றிருந்த அக்கடற்கன்னி அத்தீவில் தங்கியிருந்து தன் துடுப்புகளை உலர்த்திக் கொள்ள விரும்பினாள். தன்னையும் தானறிந்த மீன்களையும் ஒத்திருந்த அக்கன்னியின் உருவம் மயூரியை குழப்பத்திலாழ்த்தியது. கடற்கன்னி அழகாயிருந்தாள்.. அதை விடவும் இனிமையுறப் பேசுபவளாயிருந்தாள். மயூரியின் தீவிலிருந்து தென்கிழக்கில் 3000 கடல் மைல்கள் கடந்து சென்றால், தான் வசிக்கும் தீவிருப்பதாய்ச் சொன்னாள். கண்கள் விரியக் கதை கேட்ட மயூரி, தான் அத்தீவைப் பார்க்க விருப்பம் தெரிவித்தாள். சிறுமியான அவளை கடற்கன்னி தன் கைகளில் அணைத்தெடுத்துக் கொண்டாள். நாளது வரை தனியளாய் இருந்த மயூரி புதியதோர் உலகைக் காண ஆயத்தமானாள்.

கடற்கன்னி இம்முறை நீந்திச் செல்லாமல் நீரின் மேல் லாவகமாய் நடந்து சென்றாள். கடல் நீர் கரும்பச்சை நிறப் பளிங்கு போலிருந்தது. சின்னஞ்சிறு மீன்கள் குறுக்கும் நெடுக்குமாய் ஓடியவண்ணமிருந்தன. கடல் எந்தச் சலனமுமின்றி உறங்கும் குழந்தை போலிருந்தது.

"பார் மயூரி! நுனிக்கடலின் ஆர்ப்பரிப்பெதுவும் இங்கில்லை பார். ஆழமுடையது எதுவும் அடக்கமுடையதாயிருக்கிறதில்லையா?" என்றாள் கடற்கன்னி.

ஆழ்ந்த யோசிப்புகளோடு கடலைப் பார்த்த மயூரி.. "ஆம்! ஆனால்.. இந்த ஆழத்திற்குப் பின்னால் நுனிக்கடலின்ஆர்ப்பரிப்பை விடவும் வலிமையான கொந்தளிப்பு நிச்சயமிருக்கும்" என்றாள்.

கடற்கன்னி அதனை ஏற்கவுமில்லை.. மறுக்கவுமில்லை. இரண்டு பகல்கள் மற்றும் மூன்று இரவுகளைக் கடந்து இருவரும் தீவையடைந்தபோது இருவருமே வெகுவாய் சோர்வுற்றிருந்தனர்.

அந்தத் தீவு மயூரியை வியப்பிலாழ்த்தியது. இதுவரை கண்டறியாத கேட்டறியாத விநோதங்களை அவள் அங்கு காண நேர்ந்தது. அங்கே விலங்குகளிருந்தன.. மனிதர்களும் பலர் இருந்தனர்.. ஆனால் ஒருவரும் அவளையொத்த முழு மனித உருவம் பெற்றவர்களாயில்லை. ஒரு மனிதனுக்கு பசுவின் தலையிருந்தது.. சமயங்களில் அது நரியைப் போலவும்.. வல்லூறைப் போலவும் மாறிக் கொண்டேயிருப்பதை கண்டு மயூரி அதிசயித்தாள். யானைத் துதிக்கையுடைய பெண்ணொருத்தியும், ஆந்தையின் கண்களைக்கொண்ட சிறுமியொருத்தியும் அவளை அன்போடு வரவேற்றனர். குரங்கின் சாயலைக் கொண்ட சிறுவனும், ஒட்டகம் போன்று இரட்டைத் திமில்களைக் கொண்ட இளைஞனும் மற்றும் மூக்கின் அருகே ஒற்றைக் கொம்புடைய சிலரும் அவளின் நண்பர்களாயினர். சின்னாட்களில் மயூரி தன் சொந்தத் தீவை முற்றிலும் மறந்தவளானாள்.

அடுக்கிவைக்கப்பட்ட காகிதத்தாள்கள் காற்றில் பறப்பது போல நாட்கள் சிறகுகளின்றிப் பறந்து கொண்டிருந்தன. வெகுநாட்களுக்குப் பின்னாய் தூரதேசமொன்றிலிருந்து பறந்து வந்த மனிதமுகம் கொண்ட பறவையொன்று அவளின் சாளரத்தின் வழிப்புகுந்து அறைநடுவே சோர்ந்து விழுந்தது. பதறியவள் அதைத் தூக்க முற்பட்டபோது வலி மிகுதியால்அது துடித்துக் கொண்டிருந்தது. வெகுநாட்கள்.. வெகுதூரம் பறந்து வந்ததன் காரணமாய் அதன் வெண்ணிறச் சிறகுகள் பலமிழந்திருந்தன. சோர்வுற்ற நிலையிலும் அப்பறவையின் சிறிய கண்கள் மிக வசீகரமாயிருப்பதாய் மயூரி நினைத்துக் கொண்டாள்.

இருநாட்கள் கழித்து அப்பறவை அவளிடம் பேசத் தொடங்கியது. அப்பறவையின் மொழி, பேச்சின் லாவகம், குரலின் இனிமை அனைத்தும் அவள் தன் வாழ்நாளில் கேட்டறியாததாயிருந்தது. அது நிச்சயம் தேவ லிபிகளுள் ஒன்றாய் இருக்க வேண்டுமெனத் தோன்றியதவளுக்கு.

அப்பறவை தன் பெயர் இஸ்தார் என அறிமுகப்படுத்திக் கொண்டது. மனித முகங்களற்ற அத்தீவில் தனக்குப் பொருத்தமானவளாய் மயூரி இருப்பது தனக்கு ஆறுதலளிப்பதாய்ச் சொன்னது. மேலும் மனிதர்களின் வாழ்க்கை, நம்பிக்கை, காதல், நட்பு, காமம், தியாகம், கோபம், துரோகம், வஞ்சகம், சுயநலம், அவநம்பிக்கை, சந்தேகித்தல், சார்ந்து வாழ்தல், முதலானவை பற்றி இடைவிடாது பேசிக் கொண்டிருந்தது.

மயூரி அதன் குரலுக்கு மயங்கினாள். விருப்பங்களுக்கு இசைந்தாள்.. கட்டளைகளுக்கு அடிபணிந்தாள்.. இஸ்தார் சொல்வதனைத்தும் உண்மையாகத்தான் இருக்க வேண்டுமென நம்பத் தொடங்கினாள். ஓர் நாள் இஸ்தார் இறப்பைப் பற்றியும் கொல்வதில் உள்ள இன்பம் பற்றியும்.. கொலை புரிவது மனித மனத்தின் மறக்கப்பட்ட ஆதி இச்சையென்றும் அவளிடம் உரையாற்றிக் கொண்டிருந்தது. அதுவரை மரணங்களையோ, உயிர் பிரியும் வாதனைகளையோ அறிந்திராத அச்சிறுமி தானும் கொலை புரியக் கற்றுக் கொள்ள விரும்புவதாகச் சொன்னாள். மறுநாள் இஸ்தார் அதிகூர்மையும் கண்கூசும் பளபளப்பும் மிகுந்த ஆயுதமொன்றை அவளுக்குக் கொடுத்தது. மேலும் கொலை புரிவதன் நுட்பங்களை ரகசியமாய் அவள் காதில் ஓதி... "கொல்..கொல்" என முழக்கமிட்டுப் பறந்து போனது.

ஆயுதம் கிடைக்கப் பெற்றதும் மயூரி உற்சாகமானாள். கொலை புரியும் ஆவல் கண்களில் மினுமினுங்க கொல்வதற்கு அவசரமாய் ஆள் தேடினாள். திடுமென.. எப்போதும் தன் காலுரசி நிற்பதும்.. அதுவரை தன்னால் புறக்கணிக்கப்பட்டு வந்ததுமான பூனைக்குட்டியைக் கையிலெடுத்து மெதுவாய் அதன் கழுத்தை அறுக்க ஆரம்பித்தாள்! கழுத்து அறுபட்டு குருதி கொப்பளித்து இளஞ்சூடாய் அவள் கைகளில் பரவத் தொடங்க கிறீச்சிட்டலறியது அப்பூனை. அதிர்ந்தவள்.. தலை தொங்கிய பூனைக்குட்டியைப் பதட்டமாய்த் தரையில் வீசினாள். பாதிக்கண்கள் திறந்த நிலையில் இறந்து போயிருந்தது அது. முதன் முதலாய் மரணம் பார்த்த அதிர்வில் தலை சுழன்றது அவளுக்கு. அசைவற்றுக்கிடந்த பூனையின் உடலருகே தானும் அசைவின்றி அமர்ந்து கொண்டாள். கண்கள் பெருக்கெடுத்தோடி பூனையின் இரத்தத்தோடு கலந்த வண்ணமிருந்தது. மரணத்தின் கருநிழல் அவள் மீது படிந்தபடியிருக்க யுகம் யுகமாய் தன்னைத் தானே சபித்துக்கொண்டேயிருந்த அவள், ஒரு பூர்ணிமை நாளில் தானும் இறந்து போனாள்.

அவள் இறந்ததும் தீவு ஸ்தம்பித்தது. மாலையில் கருநிற மழை பொழிய.. மரங்களிலும் செடிகளிலும் நிறமற்ற பூக்கள் பூத்தன. அடுத்த மூன்றாம் நாளில் அந்த அதிசயம் நிகழ்ந்தது. புத்தரும் கர்த்தரும் அத்தீவில் ஒன்றாய்த் தோன்றி அவளை மன்னிக்கத் தலைப்பட்டனர். மயூரி மீண்டும் உயிர்த்தெழுந்தாள். புத்தர் அவளுக்கு உயிரூட்ட பரிசுத்த ஆவியின் பெயரால் கர்த்தர் அவள் பாவங்களை மன்னித்தருளினார். மயூரி தன்னால் கொலையுண்ட பூனைக்குட்டியையும் உயிர்ப்பிக்க வேண்டினாள். அவள் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. மாறாய் அவள் முகத்தில் மெல்லிய மயிர்களும்.. நீண்ட முடிகளுடைய மீசையும் முளைத்தன. கண்கள் வட்ட வடிவம் பெற.. மெல்ல மெல்ல அவள் முகம் இறந்த பூனையின் முகச்சாயலைப் பெற்றது.

சலனமற்ற கடற்பரப்பில் தன் முகம் பார்த்த மயூரி திடீரென உடல் குலுங்க அழத் துவங்கினாள்..

ஆம்.. சில நேரங்களில் தண்டிக்கப்படுதலை விடவும் மன்னிக்கப்படுதல் குரூரமானதாயிருக்கிறது.

Wednesday, February 13, 2008

உதிர்தல்



சில பிரியங்கள்
ஏற்கப்படுவதில்லை
சில பிரியங்களை
ஏற்கமுடிவதில்லை...

அடிக்கடி நினைத்துக் கொள்கிறேன்
ஏற்கப்படாத பிரியங்களும்
எங்கோ கைவிடப்பட்டு
காற்றில் கிடந்தலையும் நேசங்களும்
பின் என்னாகுமென்று...

ஒவ்வொரு காலையிலும்
தன் வாசலில்
பூக்களைப் பரப்பிக் கொள்ளும்
இந்த மரங்களைப் பார்க்கையில்
தோன்றுகிறது

உடைந்து போன நேசங்கள்
உதிர்ந்த பூக்களாகின்றன..

சில நேரங்களில்
கவிதைகளாகவும்.

Sunday, January 20, 2008

வனம்


இப்போதெல்லாம்
சொல்காய்ச்சி மரமாகிவிட்டது
மனம்..

சொல் விழுந்த இடங்களில்
மற்றுமோர் மனம் முளைக்கிறது.

மறுபடி முளைத்து
மறுபடி கிளைத்து
மனங்கள் பெருகிப் பெருகிப்
பெருகியபடியிருக்க
முடிவில்
எல்லைகளில்லாப்
பெருவன
மாகிறேன் நான்.

வனத்திற்குள் வழிகளுண்டா?
வனத்திற்கு வாசல்களுண்டா?
வனமில்லா இடமேதும் உண்டா?
தெரியவில்லை..

உச்சரிக்கவிரும்பா உதடுகள் இப்போது
மெளனம் பேசப் பழகுகின்றன.

நினைவுகள் உரசிக்கொண்டதில் மெதுவாய்
வெந்து தணிகிறது காடு.

Tuesday, January 8, 2008

ஜெயமோகனின் சங்கச் சித்திரங்கள்




ஈரோட்டில் நல்ல புத்தகக் கடைகள் இல்லையென்பது என் நெடுநாளைய வருத்தம். இருக்கும் ஓரிரு கடைகளிலும் "செல்வந்தராவது எப்படி?" "சிகப்பழகு பெற சில வழிகள்" "செட்டிநாட்டு சமையல்"என்ற ரீதியில் மணிமேகலைப் பிரசுரங்களையும் பாடாவதி புத்தகங்களையுமே நிரப்பி வைத்திருக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன் நண்பர் ஒருவருக்கு சங்கநூல்களை அன்பளிக்க வேண்டி கடைகடையாய் ஏறி இறங்கிய போது இதைப் பெருங்குறையாக உணர நேர்ந்தது.

'சங்க இலக்கியம் இருக்கா?' என்ற என் கேள்விக்கு ஏறக்குறைய எல்லாக் கடைக்காரர்களுமே ஒரே மாதிரியான திகைப்புடனும் மொழி விளங்காதது போன்ற பாவனையுடனும் இல்லையென வருத்தம் தெரிவித்துக் கொண்டிருந்தார்கள். ஒருவர் மட்டும் விடாப்பிடியாய்த் தேடி சின்னஞ்சிறு புத்தகக் கட்டிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்து வந்து 'இதுவா? பாருங்க' என்றார். அது ஜெயமோகன் எழுதிய "சங்கச் சித்திரங்கள்". நான் கேட்ட புத்தகத்தின் தலைப்போடு 'சங்கம்' என்ற வார்த்தை பொருந்திப் போயிருப்பதால் தேடியது கிடைத்துவிட்ட திருப்தியோடும் அதை நான் நிச்சயம் வாங்கிக் கொள்வேன் என்ற நம்பிக்கையோடும் முகம் பார்த்து நின்றார் கடைக்காரர். எரிச்சலாயிருந்தது எனக்கு. அவர் தேடும்போதே சங்க இலக்கியம் ஈரோட்டில் கிடைக்கப் போவதில்லை என்ற தீர்மானத்திற்கு வந்து விட்டிருந்ததால், 'வெறுங்கையோடு திரும்பிப் போவானேன்' என்று வாங்கி வந்ததுதான் இந்தப் புத்தகம்.

அதற்கு முன்பாக காடு நாவலில் மட்டுமே ஜெயமோகன் எனக்கு பரிச்சயமாகியிருந்தார். பிரமிப்பூட்டும் வீரியமிக்க எழுத்து அவருடையதென்று அடிக்கடி நினைத்துக் கொள்வதுண்டு. காடு நாவலிலேயே குறுந்தொகை பற்றிய சிலாகிப்புகள் அற்புதமாயிருந்ததால் புத்தகம் பிரிக்கையில் என்னையறியாமலேயே மிதமான எதிர்பார்ப்பு தோன்றியிருந்தது.

"தலைவியின் தவிப்பை கபிலர் எத்தனை நுட்பமாய் வர்ணித்திருக்கிறார்..." என வழக்கமான உரைகாரர்களின் பழக்கப்பட்ட வாசகங்களை எதிர்பார்த்துப் புத்தகம் பிரித்த எனக்கு பெருத்த ஏமாற்றமும் ஆச்சரியமுமாயிருந்தது அவரின் நடை. புத்தகம் முழுக்க கவிதையையோ கவிதைக்களத்தையோ விளக்குவதில் அக்கறை காட்டாமல் தன் சொந்த அனுபவங்களை விவரித்துச் சொல்லியிருந்தார். அதையும் கவிதையோடு முழுமையாய்த் தொடர்பு படுத்தாமல் கொண்டு கூட்டியுணர வைக்கும் உத்தி அபாரம்!

ஒரு மனிதனின் வயது என்பது அவன் உடம்பு வாழ்ந்த காலத்தின் கணக்கு... உண்மையான வயது அவன் அனுபவங்களைக் கொண்டு கணக்கிடப்படுகிறது என்று ஏதோவோர் கதையில் பாலகுமாரன் சொல்லியிருப்பார். அந்த வகையில் ஜெயமோகனின் அனுபவங்களில் நூற்றாண்டு முதிர்ச்சியைக் காணமுடிகிறது. வாசகியும் காதலியுமான அருண்மொழி நங்கையுடனான காதல் நாட்கள், தாயும் தந்தையும் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட பின்னாக பைசாசமாய் மாறித் துரத்திக் கொண்டிருந்த தனியிரவுகள், வறுமையால் குடிசைகளில் வாழ்ந்திருந்த நாட்கள், நிகழ்வுகள் மற்றும் மனதின் அலைவுகளைப் பின்தொடர்ந்து மேற்கொண்ட பயணங்கள் என வாழ்வின் சாரமாயிருக்கும் அனுபவங்களை, அனுபவங்களின் சாரமாயிருக்கும் சங்கக் கவிதைகளோடு அழகாய் இணைத்துப் புரிவிக்க முயன்றிருக்கிறார்.


"இங்கே நாம் சங்க இலக்கியத்தை பள்ளிப்பாடமாக மனப்பாடம் செய்கிறோம்.. கோயில் சிலைகளைப் போல இருட்டில் வைத்து வழிபடுகிறோம்.. அல்லது ஏதோ தொல்பொருள் பொருள் போல சுரண்டி சுரண்டி ஆய்வு செய்கிறோம். கவிதை அடிப்படையில் வாழ்வுடன் தொடர்புள்ளது. வாழ்வை விரிவுபடுத்துவது. வாழ்வை வைத்துத் தான் கவிதையை வாசிக்க வேண்டும்"


என்று முன்னுரையில் இடம்பெறும் பீடிகையின் பொருளாக தன்னனுபவங்களையும் தன்சார்ந்த மனிதர்களின் வாழ்வையுமே நூலின் அடித்தளமாக்கியிருப்பது வாசிக்கத் தூண்டும் நேர்மையானதோர் உத்தி என்பேன்.

குறுந்தொகை, புறநானூறு, நற்றிணை மற்றும் கலித்தொகையிலிருந்து 40 பாடல்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். சங்கப்பாடல்களில் பாலைத்திணைப் பாடல்களின் மீது பெருவிருப்போடிருக்கும் நான், மருதத் திணையை மட்டும் எப்போதும் ரசித்ததில்லை. மருதம் ஊடலும் ஊடல் நிமித்தமுமான உரிப்பொருளுடையது. ஊடலுக்கு முக்கிய காரணியாயிருப்பது தலைவனின் பரத்தமையொழுக்கம். தலைவன் பரத்தையரை நாடிச்செல்வதால் தலைவிக்கு வரும் கோபம் ஊடலுவகையில் வகைப்படுத்தக் கூடியதா? என்னவொரு அபத்தமான வரையறை....! அந்த கோபத்தையும் நேரடியாய் வெளிப்படுத்தவியலாமல் இறைச்சிப் பொருளாய் தலைவி இடித்துரைப்பதும், மதி மயக்கும் அழகோடு வீதியில் நடந்து வரும் பெண்ணைக் கண்டதும் தன் கணவனை அவளிடமிருந்து காத்துக் கொள்ள வேண்டுமேயென கவலைப்படுவதும் எத்தனை ஆபாசமானது?

ஒருவனுக்கு ஒருத்தியென பறைசாற்றிக் கொள்ளும் தமிழ்ப்பண்பாடும், சங்ககாலம் 'பொற்காலம்' என்ற அர்த்தமற்ற கருதுகோளும் பொய்யாகிப் பல்லிளிப்பது மருதத்திணையில் தான். இதையே வழிமொழிவது போல "மருதத்திணைப் பாடல் வேறெந்த நுட்பம் கொண்டதாக இருந்தாலும் என் மனம் அதை ரசிப்பதில்லை"எனச்சொல்லிக் கொள்ளும் ஜெயமோகன்,

"பத்தினியிடமும் பரத்தையரிடமும் மாறி மாறி ஓடும் தலைவர்களைச் சார்ந்து வாழும் அவ்வாழ்க்கையில் பத்தினியாய் இருப்பதற்கும்பரத்தையாக இருப்பதற்கும் வேறுபாடு ஏதும் இல்லை என்றே இப்போது படுகிறது."

என்கிறார்.

வாசகன் தன் பார்வையை படைப்பாளியின் கண்கொண்டு காண நேர்கையில் படைப்பும் அவனும் ஒன்றென்றாகி விடுவதை இதைப் படிக்கும்போது உணர்ந்தேன். தன்னைப் போலவே முகம் கொண்ட மனிதரை எதிர்பாராமல் சந்தித்த மகிழ்வையும் திகைப்பையும் அதிர்ச்சியையும் ஒருங்கே தந்த வரிகள் இவை.

40 கட்டுரைகளில் "சூனியத்தில் ஓர் இடம்" மற்றும் "உதிரச்சுவை" ஆகிய இரண்டு கட்டுரைகளும் கொடியதோர் நோயைப் போல.. தவிர்த்து விட முடியாத ஆழ்மன அச்சத்தைப் போல இன்னும் என்னைப் பீடித்திருக்கின்றன. இரண்டும் இருவேறு விதமான பிரிவைப் பற்றிப் பேசுகின்றன. எட்டு வருடங்களாய்க் குழந்தை வேண்டி தவமிருந்த ஒருவருக்கு முளைவிதை போல சின்னஞ்சிறியதாய் ஒரு பிள்ளை பிறந்து, மண்ணிற்கேற்ப தன்னை தகவமைத்துக் கொள்ளத் தெரியாமல் பிறந்த சில நாட்களில் இறந்து போகிறது.


"ஒருவர் நிரப்பியிருந்த இடம் எவ்வளவு என்று மரணம் மூலம் நாம் அறிகிறோம். வெற்றிடத்தின் வலிமை என்பது அதன் மீது மோதும் சூழலின் அழுத்தமே. முடிவின்மையாகிய கால இடப் பருவெளியின் எடை முழுக்க அந்த வெற்றிடத்தின் மீது கவிகிறது போலும்."


என்ற வரிகள் இழப்பின் வலியை எக்காலத்தும் முடிவற்றதாய் நீட்டித்துச் செல்கின்றன.


உதிரச்சுவை கட்டுரையில் வரும்..


"பிரிவு என்பது எந்தக் காலத்திலும் ஆணின் ஆயுதம் தானா என்று எண்ணிக் கொள்கிறேன். பெண்ணின் அளப்பரிய சக்தியைமுழுக்க அது உறிஞ்சி விடுகிறது போலும். அதை அஞ்சி அவள் மீண்டும் மீண்டும் சரண்டைகிறாள். மேலும் மேலும் பலவீனம் கொள்கிறாள்.இதற்கு மறுபக்கமும் தெரிகிறது. தன் துணைவியின் மனதில் பேருருவம் கொள்ளும் பொருட்டு ஆண் போடும் வேடம் தானா இது?"


என்ற கேள்வி மீண்டும் மீண்டும் மனதில் மின்னி மறைகிறது.


"...............
அஞ்சல் என்ற இறை கைவிட்டெனப்
பைங்கண் யானை வேந்துபுறந்து இறுத்தலின்
களையுநர்க் காணாது கலங்கிய உடைமதில்
ஓரெயில் மன்னனைப் போல
அழிவுவந் தன்றால் ஒழிதல் கேட்டே"


என்ற நற்றிணைக் கவிதையை

"இவளைப் பிரிந்து பயணமாவது
ஒருவேளை உனக்கு
குளிர்தென்றல் போல மகிழ்வூட்டலாம்
இவளுக்கோ
காக்கும் கடவுளால் கைவிடப்பட்டு
ஈரக்கண்களுள்ள யானைப்படையுடன்
பகை மன்னன் முற்றுகையிட
துணைக்கு யாருமில்லாமல் ஆன
விரிசலிடும் ஒற்றைக் கோட்டையுடைய
சிற்றரசனைப் போல
மரணம் நெருங்கி வருகிறது"


என எளிமைப்படுத்தியிருக்கிறார். படித்து முடித்த சில மணித்துளிகளுக்கு நான் செயலிழந்தவளாயிருந்தேன். "களையுநர்க் காணாது கலங்கிய உடைமதில்" ..... "களையுநர்க் காணாது கலங்கிய உடைமதில்" என மனம் பதற்றமாய் திரும்பத் திரும்பப் பிதற்றிக் கொண்டேயிருந்தது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு பெண்ணின் துயரம்... அவளின் வெம்மை மிகுந்த கண்ணீர்.. இன்னும் அப்படியே இருப்பதை ஒவ்வொருவர் மனதிலும் கனமாய்த் தேங்குவதை, தாள முடியாத கணங்களில் உருகி கண்ணீராய் வழிவதை என்னவென்று சொல்ல? காலம் நகராமல் ஓரிடத்தில் உறைந்து விட்டதாய்த் தோன்றுகிறது.

குறுந்தொகையின் முதல் பாடலான "செங்களம் படக்கொன்று அவுணர்த் தேய்த்த.. " என்ற பாடலை எப்போது படிக்க நேர்ந்தாலும் 'என்ன படிமமிருக்கிறது இதில்?' என அலட்சியமாய் நினைத்ததுண்டு. அதே பாடலை

"வரிகளெங்கும் செம்மை தகதகக்கும் இக்கவிதையை உலகக் கவிதை மரபின் மிகச்சிறந்த கவிப்படிமங்களில் ஒன்றாக நான் முன்வைப்பேன்"

என்கிறார் ஜெயமோகன்! இந்த கட்டுரை படித்தபின்பாக 'சங்ககாலக் கவிதைகள் இன்றைய நவீனக்கவிதைகளை விட இறுக்கமான கவிதைமொழி உடையவை. மேலும் நுட்பமான மெளனங்கள் கொண்டவை' என்ற அவரின் கூற்றை ஏற்றுக் கொள்ள வேண்டியிருந்தது.

நூலாக்குபவன் செய்துவிடக் கூடாத நூற்குற்றங்கள் பத்தினை வரிசைப்படுத்தும் நன்னூல், குன்றக் கூறல்.. மிகைபடக் கூறல்.. ஆகியவற்றை முதன்மைக் குற்றங்களாகக் கூறுகிறது. என் வாசிப்பில் கலைஞரின் குறளோவியம் போல் திகட்டிவிடாமல் சுஜாதாவின் 401 காதல் கவிதைகளைப் போல் பற்றாக்குறையாகவுமில்லாமல் மிகச்சரியாய் வாசிப்பின் நீள அகலங்களுக்குள் பொருந்தி வருகிறது இந்த 'சங்கச் சித்திரங்கள்'.

சங்கப்பாடல்களுக்கு நூலாகவோ இணையத்திலோ சுவாரசியமான விளக்க நூல்களில்லை என்ற வருத்தத்திலிருப்பவர்கள் இந்தநூலை விரும்பிப் படிக்க முடியும். படிக்கையில் மனம் ஓரிடத்திலும் கால் பாவாமல் தாவிச் செல்வதும்.. சிலவிடங்களில் கைகட்டி அமர்ந்துகொள்வதுமாயிருக்கிறது! விரும்பினால் வாங்கி வாசித்துப் பாருங்கள்.


நூற்பெயர் : சங்கச்சித்திரங்கள்

எழுதியவர் : ஜெயமோகன்

வெளியிட்டது : கவிதா பப்ளிகேஷன்

விலை : ரூ.100