Showing posts with label வாசித்ததும் நேசித்ததும். Show all posts
Showing posts with label வாசித்ததும் நேசித்ததும். Show all posts

Sunday, April 14, 2013

”உலகெனப்படுவது உயர்ந்தோர் மாட்டே” - சினுவா ஆச்சிபியின் ‘சிதைவுகளை’ முன்வைத்து..



”பாணர் தாமரை மலையவும் புலவர்
பூநுதல் யானையொடு புனைதேர் பண்ணவும்     
அறனோ மற்றிது விறன்மாண் குடுமி!
இன்னா ஆகப் பிறர் மண் கொண்டு
இனிய செய்தி நின் ஆர்வலர் முகத்தே?”

என்ற புறநானூற்றுப் பாடலோடு தொடங்கும் இந்தப் பத்தி  நியாயமாக ஒரு சங்க இலக்கியக் கட்டுரையாக பரிணமித்திருக்க வேண்டியது. ஆனால் இக்கட்டுரை பேசவிருப்பது அதைப் பற்றியல்ல.  மனித  மனத்தின் செயல்பாடுகள் பெரும்பாலும் விநோதமானவை.... நினைவின் எந்தப் பிரி எந்தச் சரடினுடையது என்பது எளிதில் தீர்மானிக்கக் கூடியதாய் இருப்பதில்லை. முகப்பு விளக்குகள் ஒளிர வேகமாக வரும் லாரியை,  அறிவுற்றுத் தீவிழித்து  வாய் பிளந்து  ’ஈஈஈ’ யென்று பல்லிளித்தபடி பாய்ந்து வரும் அரக்கனாக கற்பிதம் செய்வதும், எப்போதும் துடைப்பத்தை வைத்து வீட்டைப் பெருக்கிக் கொண்டேயிருக்கும் பக்கத்து வீட்டுப் பெண்மணியைப் பார்க்கையில்,  கூண்டில் வைத்த நெல்லையும் பழங்களையும் நாளெல்லாம் காலால் எத்தி எத்தி  ஒரு மூலைக்கு நகர்த்திக் கொண்டே இருந்துவிட்டு ஒன்றும் சாப்பிடாமலேயே  இறந்து போன பச்சைக் கிளியைப் பற்றிய சாயம் போன நினைவுகளை மேலெழுப்புவதும் மனதின் கிறுக்குத்தனங்களேயன்றி வேறென்ன?  இதோ இப்போதும் கூட “உன்னைப் புகழ்ந்து பாடும் பாணர்களுக்கு பொன்னாலான தாமரைப் பூவை சூடிக் கொள்ளக் கொடுப்பதற்காக, உன்னைப் போற்றி எழுதும் புலவர்களுக்கு யானைகளையும் தேரையும் பரிசளிப்பதற்காக  பிறரை வருத்தி அவர்களுடைய மண்ணைக் கவர்ந்து கொள்கிறாயே.. இது  நியாயமா அரசே?”  என்ற திகைப்பூட்டும் கேள்வியைச் சுமந்திருக்கும் பாடலைத் தான்  கட்டுரையின் கருப்பொருளாகத் தேர்ந்து கொள்ளத் தீர்மானித்திருந்தேன். யாசகக் குரல்களால் நிரம்பியிருக்கும் புறநானூற்றில் தனித்து ஒலிக்கும் அடக்குமுறைக்கான முதல் எதிர்ப்புக் குரல் இது. ஆனால்.. “இன்னா ஆகப் பிறர் மண் கொண்டு” என்னும் வரியை வாசிக்கையில் மனது அவ்வரியோடு, சம்பந்தப்பட்ட மன்னனோடு, அது எழுதப்பட்ட காலத்தோடு நின்று விடாமல்,எங்கெங்கோ  குறுக்குச் சந்துகளுக்குள் புகுந்து இறுதியில் சினுவா ஆச்சிபியின் “சிதைவுகள்’ நாவலில் முட்டி நிற்கிறது. 

சினுவா ஆச்சிபி - நவீன ஆப்பிரிக்க இலக்கியத்தின் தந்தை என்று போற்றப்படும் உலகப் புகழ் பெற்ற நாவலாசிரியர், கவிஞர், சிறுகதையாசிரியர்  மற்றும் திறனாய்வாளர். 1930 ல் நைஜீரியாவில்  ஈபோ இனத்தில் பிறந்த ஆச்சிபி தனது 28 வது வயதில் தனது முதல் படைப்பான “Things Fall Apart" (சிதைவுகள்) நாவலை வெளியிட்டார். 1999 வரை உலகம் முழுவதும் ஒரு கோடிப் பிரதிகள் விற்பனையாகி, 50 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு அவருக்கு உலகப்புகழை  வாரிக் கொடுத்த இந்நாவலை, சென்ற மாதத்தில் தான் எனக்கு வாசிக்க வாய்த்தது. வாசித்து முடித்த அடுத்த ஓரிரு நாட்களுக்கு ஊனுறக்கம் கொள்ள முடியாத அளவிற்கு அவஸ்தை என்றெல்லாம் சொல்ல முடியாவிட்டாலும் உள்ளூர இனம் புரியாத சஞ்சலத்தைக் கொடுத்துக் கொண்டேயிருந்தது. 

ஆச்சிபி இந்நாவலைத் தொடர்ந்து No Longer at Ease, Arrow of God, A Man of the People, Anthills of the Savannah முதலிய நாவல்களையும், ஏராளமான சிறுகதைகளையும், கவிதைகளையும், குழந்தை இலக்கியங்களையும், கட்டுரைத் தொகுதிகளையும், திறனாய்வு விமர்சனங்களையும்  எழுதியிருக்கிறார்.  அவரது கவிதைகளில் சிலவற்றைஇங்கே வாசிக்கலாம். A Mother in a Refugee Camp கவிதை மனதைப் பிசைகிறது. நைஜீரிய அரசியலில் பெரும் பங்கு வகித்திருந்த சினுவா ஆச்சிபி தன் வாழ்வின் இறுதிப் பகுதியை அமெரிக்காவில் கழித்தார். ஒரு கார் விபத்தில் முதுகெலும்பில் அடிபட்டு இடுப்பிற்குக் கீழ் செயலிழந்த நிலையில் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே கல்லூரிப் பேராசிரியராக தன் பணியைத் தொடர்ந்த இவர் கடந்த 21.03.2013 ம் நாள் மரணமடைந்தார். அவர் மரணமும் என் வாசிப்பும் ஏறத்தாழ ஒரே காலகட்டத்தில் நிகழ்ந்தது அபாரமான யதேச்சையே. இவரது படைப்புகள் அனைத்திலும் பார்க்க நாவல்களே அதிகம் புகழ் வாய்ந்தவையாய் இருக்கின்றன. உலகெங்கும் கல்வித் துறைகளில் பாடமாக வைக்கப்பட்டிருக்கின்றன. 

“Things Fall Apart" ஐ   கூகுளைப் போலவோ ஏனைய மொழி’பெயர்ப்பாளர்களைப்’ போன்றோ “விஷயங்களைத் தவிர வீழ்ச்சி”  என்று பெயர்த்தெடுக்காமல் “சிதைவுகள்” என்று அழகாய் மொழிபெயர்த்த திரு.என்.கே.மகாலிங்கம் அவர்களை இத்தருணத்தில் நிச்சயம் நன்றியுடன் நினைத்துப் பார்க்க வேண்டும். ”பூரணி” என்னும் சிற்றிதழின் ஆசிரியராகப் பணியாற்றி இலக்கிய உலகில் பூரணி மகாலிங்கம் என்றே அறியப்படும் இவர் ஒரு இலங்கைத் தமிழர். நைஜீரியாவில் பல்லாண்டுகள் ஆசிரியராய்ப் பணியாற்றியவர். உச்சரிக்கச் சிரமப்படுத்தும் ஆப்பிரிக்கப் பெயர்களையும், அவர்களின் ஆச்சரியமூட்டும் விநோதமான சடங்குகள், சம்பிரதாயங்களையும் கொஞ்சமும் அந்நியமாக உணராத வகையில் தமிழையும் வாசகர்களையும் படுத்தாமல்  வெகு அழகாய்த் தமிழ்ப்படுத்தியிருக்கிறார். இந்நூலுக்கு அணிந்துரை வழங்கியிருக்கும் சுந்தரராமசாமி “சிதைவுகள் தமிழுக்கு வரும்போது அதன் கதாபாத்திரங்கள் தம் வாழ்க்கையில் தழுவி நின்ற பண்டைய வாழ்க்கை முறை போல மற்றொரு பண்டைய வாழ்க்கை முறை சார்ந்த வாசகர்களிடம் வந்து சேர்கிறார்கள். மொழிபெயர்ப்பாளரின் திறனால் இந்த உறவு அக்கதாபாத்திரங்களுக்கு வெகு இதமாகக் கூடியிருக்கிறது. தமிழ் அலட்டிக் கொள்ளாமல் அம்மக்களுக்குரிய வாழ்வை வாங்கிக் கொள்வதையும் இம்மொழிபெயர்ப்பு மூலம் நாம் உணர முடியும்.” என்று பாராட்டுகிறார். 

”சிதைவுகள்” நாவலின் கதைச் சுருக்கம் வெகு எளிமையானது. ஒக்கொங்வோ என்ற தனி மனிதனின் இளமைப் பருவம் முதல் அவன் மரணம் வரையிலான வாழ்க்கையைச் சொல்வது. ஆனால் ஒரு மனிதனின் வாழ்வு என்பது எத்தனை முயன்றபோதும் சமூகத்திலிருந்து முற்றிலும் வேறாய் பிரித்து எடுத்து விடக் கூடியதாய் இருப்பதில்லை தானே? ஒக்கொங்வோவின் வாழ்க்கை என்னும் சிறு மொட்டு அவன் சுற்றம், சமூகம், கிராமங்கள், அவர்களின் நம்பிக்கைகள், சடங்குகள், கடவுள்கள், கலாச்சாரம், குற்றங்கள், தண்டனைகள் மற்றும் இவையனைத்திலும் ஏற்படும் சிதைவுகள் ஆகியவற்றை படிப்படியாய் காட்சிப்படுத்தியபடி பல்லடுக்குத் தாமரையாய் விரிவதே நாவல். ஒற்றைப் பார்வையில் மிக எளிமையான கதையாகத் தெரிந்தபோதிலும் ஆதி மனிதர்களின் வாழ்விலிருந்து இன்று வரை தொடர்ந்து வரும் சக மனிதர்கள் / இனக் குழுக்கள் மீதான அடக்குமுறையையும், ஒரு மொழியோ, இனமோ, பண்பாடோ  பென்சில் சீவப்படுவது போல அதிகார வர்க்கத்தால் சிறிது சிறிதாய் செதுக்கிச் சிதைக்கப்படுகையில் உருவாகும் வலியையும் அதிர்வையும் மிக அழுத்தமாகப் பதிவு செய்வதாலேயே இது மிக முக்கியமான நாவலாகியிருக்கிறது. Gods must be crazy திரைப்படம் மற்றும் அ.முத்துலிங்கத்தின் எழுத்துக்கள் வாயிலாக மட்டுமே நான் பெற்றிருந்த ஆப்பிரிக்க கலாச்சாரம் குறித்த சித்தரிப்புகளை இந்நூல் பெருமளவில் விசாலமாக்கியிருக்கிறது. 

ஒக்கொங்வோ ஒரு இளைஞன். சோம்பேறியும் செலவாளியும், எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திக்காதவனும், நோயுற்று உடல் வீக்கமுற்று, தானே தன் புல்லாங்குழலோடு தனித்து இடுகாடு சென்று மரணித்து பிறரால் அடக்கம் செய்யப்படும் பெருமையைக் கூட இழந்தவனுமான உனோக்கா என்பவனின் மகன். தன் தந்தையைப் போல தானும் ஆகிவிடக் கூடாது என்ற பயம் அவனை வாழ்நாள் முழுவதும் ஆட்டிப் படைக்கிறது. அந்த பயமே அவனை பெரிய மல்யுத்த வீரனாகவும், கோபக்காரனாகவும், அன்பை வெளிக்காட்ட மறுப்பவனாகவும் ஆக்குகிறது. அந்த பயம் தான் அவனை கடும் உழைப்பாளியாகவும், மூன்று மனைவிகளையும் அவர்கள் குழந்தைகளையும் சொந்த வீட்டில் பராமரிப்பவனாகவும், வருடம் முழுவதற்கும் குடும்பத்திற்குத் தேவையான வள்ளிக் கிழங்குகளை களஞ்சியத்தில் சேமித்திருக்கும் செல்வந்தனாகவும், சமூகத்தில் மதிப்பிற்குரிய பட்டங்களைப் பெற்றவனாகவும் வைத்திருக்கிறது. மேலும் பல பட்டங்கள் பெற்று சமூகத்தின் பிரபுக்களுள் ஒருவனாக வாழ விரும்பியவனின் கனவு எதிர்பாராதவிதமாக  திடீரென ஒரே நாளில் சிதைகிறது. ஒரு மரணவீட்டில் சாவுப்பறை முழக்கி எல்லோரும் நடனமாடுகையில் தவறுதலாக இவனது துப்பாக்கி வெடித்து 16 வயதுப் பையன் ஒருவன் இறந்து போகிறான்.

 தன் குலத்தைச் சேர்ந்தவனை தானே கொல்லுதல் பெருங்குற்றம். குற்றங்களில் இரண்டு வகை உண்டு. ஆண் குற்றம், பெண் குற்றம். அறியாமல் செய்வது பெண் குற்றம். இவன் செய்தது பெண் குற்றமாகையால் 7 ஆண்டுகள் குலத்தை விட்டு விலக்கி வைத்து தண்டனை கொடுக்கிறார்கள். இரவோடு இரவாக வீட்டையும் கிழங்கு களஞ்சியத்தையும், வளர்ப்புப் பிராணிகளையும்  விட்டுவிட்டு குடும்பத்தோடு தன் தாயின் சொந்தங்கள் இருக்கும் கிராமத்தில்  தஞ்சமடைகிறான். ஒவ்வொரு தாயும் அவள் இறந்த பின்பாக அவளுடைய பிறந்த மண்ணிலேயே புதைக்கப்படுவாள். தந்தை அடித்ததும் தாயிடம் சென்று அழும் குழந்தை போல குற்றமிழைத்த ஆண் தன் குலத்தை விட்டு விலகி தாய் புதைக்கப்பட்ட மண்ணில் அவளின் பிறந்தகத்தாரிடம் தஞ்சம் புக வேண்டும் என்பது அவர்கள் நியதி. தந்தைவழிச் சமூகமாய் வாழ்ந்த போதிலும் தாயை “நேகா ” (தாயே தன்னிகரில்லாதவள்) என்று மதிக்கிறார்கள்.

7 வருடங்கள். காலம் கரையானைப் போல ஒக்கொங்வோவின் கனவுகளையும் வாழ்க்கையையும் கொஞ்சம் கொஞ்சமாய் அரித்து விடுகிறது. “ஒருவனுடைய இடம் அவனுக்காக காத்துக் கொண்டிருப்பதில்லை. ஒருவன் அவ்விடத்தை விட்டுப் போனவுடன் உடனடியாக வேறொருவன் அவ்விடத்தை நிரப்பி விடுவான். குலம் ஒரு பல்லியைப் போல. தன் வாலை இழந்தவுடன் அதற்குப் புதிய வால் விரைவிலே முளைத்து விடும்” என்கிறார் ஆச்சிபி. 3 பகுதிகளாகப் பிரியும் நாவல் ஒக்கொங்வோ  குற்றமிழைத்து குலம் விட்டு வெளியேறும் வரை முதல் பிரிவாகவும், அவன் தனது தாயின் பிறந்தகத்தில் வாழும் நாட்களை இரண்டாம் ,பிரிவாகவும் அவன் மீண்டும் குலத்திற்கே திரும்பிய பின்னான வாழ்க்கையை மூன்றாம் பிரிவாகவும் விவரிக்கிறது. நாவலின் இரண்டாம் பகுதியில் அவர்கள் கிராமத்திற்குள் மெல்ல கிறித்துவ சமயம் நுழைகிறது. அவனது மூத்த மகன் அவனை வெறுத்துப்  பிரிந்து கிறித்துவ சமயத்தில் இணையும் துயர சம்பவம் நடைபெறுகிறது. அவன் குலத்திற்குத் திரும்பும் போது சமயத்தோடு சேர்ந்து வெள்ளையர்களின் அரசாங்கமும் நுழைந்திருக்கிறது. வெள்ளையர்களின் அடக்குமுறையையும் சமயத்தையும் வெறுத்து அவர்களை வெளியேறும்படி போராடத் தொடங்குகின்றனர். அவர்களில் ஒக்கொங்வோ உட்பட 6 தலைவர்களை சமாதான பேச்சு வார்த்தைக்காக அழைக்கும் ஆங்கிலேயர்கள், எதிர்பாராத விதமாக அவர்களைக் கைது செய்து, தலை மயிரை மழித்து, சிறையில் அடைத்து 3 நாட்களுக்குப் பட்டினி போட்டு சித்திரவதை செய்து பின்னர் விடுவிக்கின்றனர்.... “தொழுத கையுள்ளும் படையொடுங்கும்”

ஒக்கொங்வோவை அந்த துரோகமும் அவமதிப்பும் அலைக்கழிக்கிறது. தான் கிராமமே நடுங்கும் மல்யுத்த வீரனாய் இருந்த நாட்களை எண்ணிப் பார்த்து அந்த கவுரவத்தை மீட்டெடுக்க விரும்புகிறான். அதன் தொடக்கமாக ஆங்கிலேய ஏவலாளி ஒருவனை  ஊர்ப் பொதுவில் வாளால் வெட்டிக் கொல்கிறான். ஆனால் அவன் எதிர்பார்த்த எழுச்சி மக்களிடம் வரும் முன்பாகவே அவன் வீட்டருகே இருக்கும் மரத்தில்  தூக்கில் பிணமாகத் தொங்குகிறான். அவன் தற்கொலை செய்து கொண்டு இறந்தானா அல்லது கொல்லப்பட்டானா என்பதை சினுவா புதிராகவே விட்டு வைக்கிறார். அவன் இறந்தது குறித்து விசாரிக்க வந்த ஆங்கிலேய மாவட்ட ஆணையாளன், தான் எழுதப்போகும் நூலில் ஒக்கொங்வோவைப் பற்றியும் எழுத உத்தேசிக்கிறான். “ஏவலாளன் ஒருவனைக் கொன்று விட்டு தானும் தற்கொலை  செய்து கொண்ட இந்த மனிதனின் கதை படிப்பவருக்குச் சுவாரஸ்யமாக இருக்கும். எத்தனையோ விஷயங்களை உள்ளடக்க வேண்டியிருக்கிறது. இருந்தாலும் பல விபரங்களை வெட்டி விடுவதில் உறுதியாக இருக்க வேண்டும்.” என்று எண்ணிக் கொள்ளும் அவன் தன் நூலுக்கான பெயரையும் முடிவு செய்கிறான். “கீழ் நைஜரின் ஆதி இனக் குல மரபுகளைச் சமாதானமயப்படுத்தல்” என்பதே அந்நூலின் பெயர். 

முதல் பகுதியில் அறியாமல் செய்த தவறால் ஒக்கொங்வோவின் கனவுகளும்,  இரண்டாம் பகுதியில் அவன் சேமித்து வைத்திருந்த பிம்பமும் நம்பிக்கைகளும், மூன்றாம் பகுதியில் அவனது ஒட்டுமொத்த வாழ்வும் படிப்படியாகச் சிதைகின்றன. எவராலும் அணை போட்டுத் தடுத்துவிட முடியாத பெரும் பிரவாகமாக வாழ்க்கை அடித்து இழுத்துப் போகையில் நீர்வழிப்படுவதைத் தவிர்த்து வேறு வழியறியாத சிறு துரும்பெனவே மனிதர்கள் அலைக்கழிய நேர்கிறது. நாவல் முழுவதிலும் எவர் சார்பிலும் நின்று பேசாமல், உள்ளதை உள்ளபடியே காட்டிப் போகும் கதாசிரியனாக பாத்திரங்களின் உணர்ச்சிகளுக்கு வழிவிட்டு ஒதுங்கியே நிற்கிறார் சினுவா ஆச்சிபி. வேற்று மதம் உள்ளே நுழைகையில் அதை ஏற்க முடியாமல் பதறித் தவிக்கும் மக்களிடையே அப்புது மதத்தை தங்களின் பற்றுக்கோடாக, நம்பிக்கை ஒளிக் கீற்றாக உணர்ந்து வழி மாறும் மனிதர்களின்  ஆசுவாசத்தினையும் அவர் பதிவு செய்யத் தவறவில்லை. 

நாவலில் எனக்கு மிகுந்த உணர்வெழுச்சியைக் கொடுத்த இடம் ஒன்றுண்டு. ஒக்கொங்வோவின் குலத்தைச் சேர்ந்த பெண்ணொருத்தியை அயல் குலத்தார் கொலை செய்ததற்கு பரிகாரமாக அக்குலத்திலிருந்து கன்னிப் பெண் ஒருத்தியையும், சிறுவன் ஒருவனையும் தானமாக அனுப்பி வைப்பார்கள். கன்னிப்பெண்ணை இறந்தவளுக்கு மாற்றாக அவள் கணவனுக்கு அனுப்பி விட்டு சிறுவனை என்ன செய்வது என்று முடிவு செய்யும் வரை ஒக்கொங்வோவின் பராமரிப்பில் வைத்திருக்க முடிவு எடுக்கப்படும். ஆரம்ப நாட்களில் தாயையும் தங்கையையும் நினைத்து அழும் சிறுவன் நாளடைவில் அவர்கள் வீட்டில் ஒருவனாகி ஒக்கொங்வோவின் மூத்த மகனுக்கு நெருங்கிய நண்பனாகி விடுவதோடு ஒக்கொங்வோவையும் ‘அப்பா’ என்றே அழைப்பான். திடீரென ஒரு நாள் குலத்தெய்வம் அச்சிறுவனை கொன்று விடச் சொல்லி விட்டது என்று கூறி அவனைக் கொல்வதற்கு ஒக்கொங்வோவையும் அழைப்பார்கள். சிறுவனின் தலையில் கள்ளுப் பானையை வைத்து முன்னால் நடக்கவிட்டு ஊர் எல்லையைத் தாண்டிய பின் அவனை வெட்டிக் கொல்வதாக ஏற்பாடு. சிறுவன் முதலில் என்ன நடக்கிறது என்று புரியாமல் குழம்பி பயந்தாலும் ஒக்கொங்வோவும் உடன்வருவதால் ‘அப்பா தான் இருக்கிறாரே’ என்ற தைரியத்துடனேயே நடப்பான். 

“இகெமெஃபுனாவுக்கு பின்னால் வந்த ஒருவன் தொண்டையைச் சரி பண்ணினான். இகெமெஃபுனா திரும்பிப் பார்த்தான். நின்று திரும்பிப் பார்க்காமல் போய்க் கொண்டிருக்கும்படி அவன் உறுமினான். அவன் சொல்லிய முறை இகெமெஃபுனாவின் முதுகுத் தண்டை விறைக்கச் செய்தது. அவன் தூக்கிச் சென்ற கறுத்த பானையில் அவன் கை லேசாக நடுங்கியது. ஒக்கொங்வோ ஏன் பின்புறம் போய்விட்டான்? தன் கால்கள் உருகின மாதிரி அவன் உணர்ந்தான். திரும்பிப் பார்க்க பயமாக இருந்தது.தொண்டையைக் கனைத்த மனிதன் தன் வாளை உருவி உயர்த்தினான். ஒக்கொங்வோ வேறு பக்கம் தலையைத் திருப்பிக் கொண்டான். வெட்டு அவனுக்குக் கேட்டது. பானை மண்ணில் விழுந்து உடைந்தது. “என் அப்பா.. என்னைக் கொன்று போட்டாங்க” என்று இகெமெஃபுனா அழுது கொண்டு அவனிடம் ஓடி வந்தது கேட்டது. பயத்தால் அலமந்து ஒக்கொங்வோவும் தன் வாளை உருவி அவனை வெட்டி விழுத்தினான். தான் பலவீனமானவன் என்று அவர்கள் நினைத்து விடுவார்களோ என்று பயந்தான்.”

என்று அந்த சம்பவத்தை விவரித்து முடிக்கிறார் ஆசிரியர். எனக்கு மனம் சிலிர்த்துச் சிலும்பி நின்றது. அடுத்த வந்த நாட்களில் உள்ளே தங்கி ஓயாமல் அறுத்துக் கொண்டிருந்த சம்பவங்களில் இதுவே முக்கியமானதாக இருந்தது. இகெமெஃபுனா இறந்த நாளிலிருந்து தன் தந்தையை உள்ளூர வெறுக்கும் மூத்த மகன் நாவோயெ, புதிய சமயத்தின் பாசுரங்களால் ஈர்க்கப்படுகிறான். “இருட்டிலும் பயத்திலும் இருந்த சகோதரர்களைப் பற்றிய இறைவன் புகழ்பாடிய பாசுரங்கள் அவன் இளம் ஆன்மாவைக் கவர்ந்தன. அவை தெளிவின்றியும் தொடர்ந்தும் அவனைப் பிடித்து அமுக்கிய பல கேள்விகளுக்கு விடை கூறுவன போல இருந்தன. அவனுடைய வாடிப் போன ஆன்மாவுக்குள் அப்பாசுரங்கள் நீரை வார்த்தது போன்ற ஆறுதலை அவன் உணர்ந்தான்”  என்று அவனது விட்டு விடுதலையாகும் உணர்வு புலப்படுத்தப்படுகிறது.

 மேலும் முதன் முறையாக ஒரு பெண்ணும் மதம் மாறுகிறாள். அவள் பெயர் நேகா. அவள் நிறை மாத கர்ப்பிணி. “நேகா முன்பு நாலு முறை கர்ப்பிணியாக இருந்து பிள்ளை பெற்றவள். ஒவ்வொரு முறையும் இரட்டைப் பிள்ளைகளையே பெற்றாள். உடனடியாக அப்பிள்ளைகளை வீசிவிட்டார்கள். அவளுடைய கணவனும் குடும்பமும் அப்படிப்பட்ட பெண்ணைக் குறை கூறுபவர்களாகவே இருந்தனர். அதனால் அவள் கிறித்தவர்களுடன் சேர ஓடிப் போனபோது அவர்கள் தேவைக்கதிகமாக அலட்டிக் கொள்ளவில்லை. அவள் போனது நல்லது என்றே அவர்கள் நினைத்தனர்.” 

ஆப்பிரிக்க தேசத்தை எங்கோ தொலைதூரத்திலிருக்கும் அந்நிய பிரதேசமாகக் கருத விடாமல் நாம் இது வரை அறிந்திராத நம் தேசத்துப் பழங்குடி மக்கள்  என்றே உணருமளவிற்கு அத்தனை இணக்கமான சித்தரிப்புகள் இந்நாவலில் கூடி வந்திருக்கின்றன. இதனை  “அந்த வாழ்க்கை முறையை அறியாத மக்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் ஆங்கிலம் அறிந்த உலக வாசகர்களின் தேவையை முன்னிட்டு நிகழ்த்தும் காரியம்”  என்கிறார் சுந்தரராமசாமி. என்றாலும் இதில் ஒன்றும் தவறில்லை என்றே தோன்றுகிறது. அறிமுகப்படுத்தும் பாணி தான் என்ற போதும் நாவலில் எந்த இடத்திலும் தோய்வோ சலிப்போ தென்படுவதேயில்லை. 

“மனிதன் வயிற்றிலோ வேறு அங்கங்களிலோ வீக்கம் ஏற்பட்டுத் துன்பப்பட்டால் அவனை வீட்டில் சாக விட மாட்டார்கள். அவனை தீய காட்டில் கொண்டுபோய் விட்டு அங்கே சாக விடுவார்கள். அந்த நோய் நிலத்துக்குச் சாபக்கேடாகையால் அவன் இறந்தால் நிலத்துள் புதைப்பதில்லை.”

”அந்தக் குழந்தை ஒரு ஒக்பான்ஜி. அதாவது கெட்டப்பிள்ளைகளில் ஒன்று. அது இறந்தவுடன் திரும்பவும் தாயின் கருப்பையில் பிறப்பதற்காக புகுந்து விடும் என்றும் அவன் சொன்னான். ... இறந்த பிள்ளைக்கு இனி துக்கங் கொண்டாடக் கூடாது என்று மந்திரவாதி கட்டளையிட்டான். ஒரு கூரிய கத்தியை எடுத்து பிள்ளையை கண்ட துண்டமாக வெட்டினான். பின் அதை கணுக்காலில் பிடித்து தனக்குப் பின்னால் நிலத்தில் போட்டு இழுத்துக் கொண்டு தீய காட்டுக்கு புதைப்பதற்கு எடுத்துச் சென்றான். அப்படிச் செய்த பிறகு அது திரும்பவும் வருவதாக இருந்தால் ஒன்றுக்கு இரண்டு தரம் யோசிக்கும். “

“சில வேளைகளில் மூதாதையரின் ஆவிகள் - எக்வுக்வு - சில கீழ் லோகத்திலிருந்து உடம்பு முழுவதும் நாரினால் செய்யப்பட்ட உருவத்தில் தோன்றி நடுங்கிய வேறோர் உலகக் குரலில் பேசும். அவற்றுள் சில மிக ஊறு செய்யக் கூடியவை.  எல்லாவற்றிலும் பார்க்க பீதி அடையச் செய்வது இன்னும் வரவில்லை. அது எப்போதும் தனியத்தான் வரும். சவப்பெட்டி போன்றது அதன் உருவம். அது போகிற இடமெல்லாம் அழுகிய நாற்றம் வரும். ஈக்களும் அதனைத் தொடரும். உயிர் வாழ்பவர்களின் உலகம் மூதாதையர்களின் உலகத்துக்கு அதிக தூரத்தில் இல்லை. அங்கிருந்து இங்கு வருவதும் போவதும் சர்வ சாதாரணம்.”

என்பதாக அம்மக்களின் நம்பிக்கைகள் உள்ளபடியே விவரிக்கப்பட்டுள்ளன. நாவலை வாசித்து முடிக்கையில் அவர்களது உணவு, வாழ்முறை, பழக்க வழக்கங்கள், திருமணங்கள், ஊர் விழாக்கள், போட்டிகள், போர்கள், கடவுள்கள், வழிபாடுகள், நீதிபரிபாலனம், சமூகத்தில் பெண்களின் இடம் ஆகியவை குறித்த பொதுவான மற்றும் தெளிவான சித்திரம் ஒன்று வாசிப்பவரின் மனதில் உருவாக்கப்படுகிறது. இவற்றை அறியாமை, மூடநம்பிக்கைகள் என்றெல்லாம் வாசகரின் அறிவு பகுத்துப் பார்ப்பதாயிருந்தாலும் ஒரு வகையில் அவை அம்மக்களின் தனித்துவம் மிக்க கலாச்சாரமாக விளங்குவதையும், தங்கள் கலாச்சாரத்தின் வேர்கள் ஒவ்வொன்றாய் துண்டிக்கப்படும் போது அம்மக்கள் சுவாசத்திற்கு ஏங்கும் மூச்சுக் குழல்களாகத் தவிப்பதையும் உணர முடிகிறது. 

முதன் முதலாய் ஆங்கிலேயர்கள் உமோஃபியாவிற்குள் கிறித்துவ தேவாலயம் அமைக்க இடம் கேட்கும் போது அவர்களுக்கு ஒரு துண்டு நிலம் வழங்க அம்மக்கள் முடிவு செய்கிறார்கள். அந்நிலம் அவர்கள் தீய காடு என்று ஒதுக்கி வைத்திருக்கும் பகுதியில் இருக்கிறது. தீய ஆவிகள் அலையும் அப்பகுதியில் இடம் கொடுத்தால் புதிய சமயத்தார் தானாகவே அழிந்து விடுவார்கள் என்ற நம்பிக்கையை உடைத்து தேவாலயம் அவ்விடத்தில் நிமிர்ந்து நிற்கிறது. அவர்கள் அறியும் முன்னரே அவர்தம்   காலடிகளுக்குக் கீழாவே வேகமாக வேர் விட்டுப் பரவுகிறது.  கிராமத்து மக்களில் பலர் கிறித்துவத்தைத் தழுவிய பின்பாக அவ்வூரில் நடக்கும் கூட்டமொன்றில்..

“இன்று காலையில் இங்கு இருக்கும் நாம் மட்டுந்தான் எங்கள் தந்தையர்களுக்கு உண்மையானவர்கள். எங்கள் சகோதரர்கள் எங்களைக் கைவிட்டு விட்டார்கள். அவர்களின் தந்தையர் நாட்டை மாசுபடுத்தும் அந்நியர்களுடன் சேர்ந்து விட்டார்கள். நாங்கள் அந்நியர்களுடன் சண்டை செய்தால் எங்கள் சகோதரர்களையும் நாங்கள் அடிக்க வேண்டும். சிலவேளை எங்கள் குலத்தவர்களின் இரத்தத்தையும் சிந்த வேண்டி வரும். ஆனால் நாங்கள் அதைச் செய்யத்தான் வேண்டும். எங்கள் தந்தையர் அப்படியான காரியத்தைக் கனவு கூட கண்டிருக்க மாட்டார்கள். அவர்கள் ஒரு காலமுமே அவர்களுடைய சகோதரர்களைக் கொல்லவில்லை. ஆனால் ஒரு வெள்ளையனும் அவர்களிடம் வரவே இல்லை. எனேக்கா பறவையைப் பார்த்து நீ ஏன் எந்த நேரமும் பறந்து கொண்டிருக்கிறாய் என்று கேட்டபோது அது சொன்னது: மனிதர்கள் குறி தவறாது சுடப் பழகி விட்டார்கள். அதனால் நான் ஒரு கிளையிலும் தங்காமல் இருக்கப் பழகிவிட்டேன் என்று. நாங்கள் இந்தத் தீமையை வேருடன் களைய வேண்டும். தீமையுடன் எங்கள் சகோதரர்கள் வந்தால் அவர்களையும்  நாம் வேருடன் அழிக்க வேண்டும். அதை நாம் இப்போதே செய்ய வேண்டும். கணுக்கால் அளவு மட்டும் தண்ணீர் இருக்கும் போதே இத்தண்ணீரை இறைத்துச் சுத்தம் செய்திட வேண்டும்”

என்று பேசுகிறார்கள்.  குலத்தைச் சேர்ந்தவனை அறியாமல் கொன்ற குற்றத்திற்காக ஒருவனை 7 வருடங்கள் ஊரை விட்டு விலக்கி வைக்கும் மக்கள், இறுதியில் பேசும் இச்சொற்கள் அவர்கள் மனதிலிருக்கும் வலியையும் கசப்பையும் வாசிப்பவருக்குக் கடத்துகின்றன. 

இந்நாவலில் நான் மிகவும் ரசித்த மற்றொரு விஷயம் நாவல் முழுவதும் விரவியிருக்கும் சின்னச் சின்ன நாடோடிக் கதைகள். கதை சொல்லல் ஆப்பிரிக்க மக்களின் பாரம்பரியத்தோடு இணைந்தது. ஆப்பிரிக்க இலக்கியம் ஏராளமான வாய்மொழி இலக்கியங்களைக் கொண்டதாக இருக்கிறது. இந்நாவலிலும் கதையோட்டத்தின் போக்கை கொஞ்சமும் குலைக்காமல்  அலாதியான நாடோடிக் கதைகள் இடம் பெறுகின்றன. ஆமையின் ஓடு ஏன் வழுவழுப்பாக இல்லை?,  வானத்திற்கும் பூமிக்கும் சண்டை வந்து பஞ்சம் வந்தபோது மக்கள் யாரைத் தூது அனுப்பினார்கள்? கொசு ஏன் காதருகே வந்து ரீங்கரித்தபடியே இருக்கிறது? ஓணான் ஏன் தன் தாயைக் கொன்றது? இடியையும் மழையும் மக்கள் என்னவாகப் புரிந்து கொள்கின்றனர்.. என்பன போன்ற கேள்விகளுக்கெல்லாம் எளிமையும் சுவாரஸியமும் கலந்த குட்டிக் கதைகள் பதில்களாய் அமைந்திருக்கின்றன.  எனக்கும் கூட, சிறு வயதில் இடி இடிக்கும் போது காதைப் பொத்திக் கொண்டு “அர்ஜுனா அர்ஜுனா” என்று கத்தியதையும், வீட்டிற்குள் குளவி நுழைந்து சுற்றிச் சுற்றிப் பறந்த போது “உம்பிள்ள கல்யாணத்துக்கு வந்துடறேன்.. போ..” என்று சொல்லிக் கொண்டே இருந்ததையும் இனிமையாக  நினைவூட்டிய கதைகள். 

அணிந்துரையில், ”சிதைவுகளைப் படிக்கும் தமிழ் வாசகன் தமிழ் வாழ்வுடனும் இந்திய வாழ்வுடனும் அது கொண்டிருக்கும் ஒற்றுமையை உணராமல் இருக்க முடியாது. அவர்களுடைய நம்பிக்கைகளும், பழக்க வழக்கங்களும், சம்பிரதாயங்களும் நம் வாழ்வோடு நெருங்கி வருகின்றன. மேற்கத்திய வாழ்வின் அந்நியத் தன்மையை மொழிபெயர்ப்புகளில் கண்டு சலித்தவர்களுக்கு இத்தமிழாக்கம் நெருக்கமான அனுபவத்தைத் தரக் கூடியதாக இருக்கும்”  என்கிறார் சுந்தர ராமசாமி. இந்நூலை வாசித்த தமிழ் வாசகி என்ற முறையில் இக்கருத்தை அழுத்தமாக வழிமொழிகிறேன்.  ஆச்சிபிக்கு நன்றி கலந்த அஞ்சலிகள்.

 - இம்மாத ‘பண்புடன்’ இணைய இதழில் வெளியான கட்டுரை

Saturday, January 14, 2012

'அதைச் சாப்பிடும் நோக்கமே அவளுக்கு கிடையாது'



என் செல்ல மகள் அமுதினிக்கு ஒன்னரை வயதாகிறது. அவள் என் வயிற்றில் 3 மாதக் குழந்தையாக இருந்த போதிலிருந்து இன்று வரையிலும் அவளுக்கென்று பிரத்யேகமாய் ஒரு கடிதத்தை எழுதிவிட முயன்று முயன்று தோற்றுக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் முதலில் ஓரிரு வரிகள் எழுதுவதும், அதையே திரும்பப் படித்து, திருப்தியில்லாமல் வார்த்தைகளை மாற்றுவதும், அடித்துத் திருத்தித் திருத்தி ஒருவழியாக அவ்வரிகளை அரை மனதோடு ஏற்றுக் கொள்ளும் போது "இதை அடுத்த பத்தியில் சேர்த்துக் கொள்ளலாம். மடலின் துவக்கம் இன்னும் அழகாக, இன்னும் வாஞ்சையாக, இன்னும் குழைவாக... அவள் மீதான என் உள்ளன்பு முழுவதையும் வெளிக்காட்டுவதாக அமைந்தால் நன்றாக இருக்குமே" என்றோர் ஏக்கம் தோன்றுவதும், பெருமூச்சோடு அம்முயற்சியை அப்படியே கிடப்பில் போடுவதும் இது வரை பல தடவைகள் நடந்து விட்டது. ஒவ்வொரு வரியிலும் ஒரு சொல் நிரப்ப வேண்டிய இடத்திற்கென அதே பொருள் கொண்ட ஒன்பது சொற்கள் முட்டி மோதிப் போட்டியிட்டு ஒன்றும் வெற்றி பெறாமல் போவதே இதற்குக் காரணம் என்று நினைக்கிறேன். இதே போன்றதொரு இடர்ப்பாட்டினை எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின் கதைகள் குறித்து எழுத முயல்கையிலும் நான் சந்திக்க நேர்கிறது.

வாத்சல்யம் என்றோர் சமஸ்கிருதச் சொல் உண்டு. மனதிற்குள் உச்சரித்தாலும் காதுகளுக்குள் இனிமையாக ஒலிக்கக் கூடிய பிரியமான சொல் அது. வாத்சல்யம் என்றால் அன்பு என்று நேரடியாகப் பொருள் கூற முடியாதபடி, அன்பு, அக்கறை, வாஞ்சை, மிகப்பிரியம், குற்றம் காணாத் தன்மை எனப் பல்வேறு அர்த்தங்களில் தொனிக்கும் அடர்த்தியான அதே சமயம் மிக மிருதுவான சொல்லாக விளங்குவது. என் அம்முவை எத்தனை வாத்சல்யத்தோடு அணுகுகிறேனோ அதே அளவு வாத்சல்யத்துடனே அ.மு வின் எழுத்துக்களையும் எதிர்கொள்கிறேன் என்று சொல்வது பொருத்தமாக இருக்கக் கூடும்.

''இலங்கை கொக்குவில் கிராமத்தை பிறப்பிடமாகக் கொண்ட அ. முத்துலிங்கம், அப்பாத்துரை ராசம்மா தம்பதிகளுக்கு பிறந்த ஏழு பிள்ளைகளில் ஐந்தாவது ஆவார். கொக்குவில் இந்துக் கல்லூரியிலும், யாழ்ப்பாணக் கல்லூரியிலும் பயின்ற இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்தபின் இலங்கையில் சாட்டர்ட் அக்கவுண்டனாகவும், இங்கிலாந்தின் மனேஜ்மெண்ட் அக்கவுண்டனாகவும் பட்டம் பெற்றவர். பணி நிமித்தமாக பல நாடுகளுக்கு பணித்திருக்கும் இவர் ஏறத்தாழ இருபது ஆண்டுகள் உலக வங்கியிலும், ஐக்கிய நாடுகள் சபையின் OPS பிரிவிலும் முக்கியமான பதவிகளில் கடமையாற்றி தற்சமயம் ஓய்வுபெற்று தன் மனைவி கமலரஞ்சினியுடன் வசிப்பது கனடாவில். இவரின் மகன் சஞ்சயனும், மகள் வைதேகியும் வசிப்பது அமெரிக்காவில்.''

என்று இவருக்கு அறிமுகம் தந்திருக்கிறது தமிழ் விக்கிபீடியா. இதை விடவும் 'உண்மை கலந்த நாட்குறிப்புகள்', 'அங்கே இப்ப என்ன நேரம்' முதலான தொகுப்புகளிலும் இன்ன பிற கதைகள் மற்றும் கட்டுரைகளிலும் இவர் தன்னைப் பற்றியும் தன் குடும்பத்தினர் பற்றியும் கொடுத்திருக்கும் தகவல்களே மனதிற்கு மிக நெருக்கமானவையாய் இருக்கின்றன. ' பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டு நள்ளிரவில் திரும்பி வரும் மகனிடம் பரிசு குறித்து ஒன்றுமே கேட்காமல் விழித்திருந்து உணவு பரிமாறும் அம்மா, கதவிற்கு வெளியே உருண்டு வரும் தேசிக்காய்களை வைத்து குழந்தைகள் பிறந்த நேரத்தைக் குறித்துக் கொண்டு, ஊருக்கு வரும் ஒவ்வொரு ஜோசியரிடமும் பிள்ளைகளின் ஜாதகக் கட்டைக் கொடுத்து பலன் கேட்கும் தந்தை, தம்பியைப் படம் எடுக்க வீட்டிற்கு புகைப்படக்காரர் வந்த போது அழுது அரற்றி தன்னையும் படம் பிடிக்கும்படி பிடிவாதம் செய்த அண்ணர், சங்கீதம் கற்றுக் கொள்ளும் அக்காள், தன் தலையைக் காட்டிலும் பெரிதான மாம்பழத்தை நெஞ்சோடணைத்து வீடெங்கும் தூக்க முடியாமல் தூக்கித் திரிந்த குட்டித்தங்கை, கனமான புத்தகங்களை அடியிலும் மெலிதானவற்றை மேலாகவுமாக அடுக்கி வைத்து ஒரே கதையின் அடுத்தடுத்த பாகங்களை கீழ்மேலாக தேடச் செய்யும் மனைவி, குதிரையிடம் கடி வாங்கிய மகள், சூட்டிகையான பேத்தி அப்சரா' என்று அவரது உறவினர்கள் அனைவருமே ஏற்கனவே நன்கு அறிமுகமான தூரத்து சொந்தங்களாகவே தோன்றுகின்றனர்.

"நாங்க 5 பேரும் தினம் 8 மணிக்கெல்லாம் தூங்கிடுவோம். தாத்தி மட்டும் தாத்தாவுக்காக முழிச்சிருப்பாங்க. நைட் 10, 11 மணிக்கு வருவார். வெளியூருக்கு போய்ட்டு வந்தார்னா அன்னேரத்துலயும் உசிரோட வாத்தோ, கோழியோ வாங்கிட்டு வந்து அப்பவே தோலுரிச்சி மஞ்சப் பூசிக் குடுத்து சமைக்கச் சொல்லுவார். தாத்தி நடுராத்திரில அம்மில வருக் வருக்னு மசாலா அரைச்சி குழம்பு வைப்பாங்க. புள்ளைங்க சூடா சாப்பிடட்டும்னு நைட் 1 மணிக்கு எங்களை எழுப்பி சாப்பிடச் சொல்லுவார் தாத்தா. தூங்கி விழுந்துகிட்டே சாப்பிடுவோம். காலைல கேட்டா உன் கடைசிச் சித்தி நான் நைட் சாப்பிடவே இல்லன்னு அழுவா" என்று நாங்கள் பார்த்தேயிராத தாத்தாவைப் பற்றியும் எங்கள் குழந்தைப் பருவத்துக் குறும்புகள் பற்றியும் அம்மா சொல்லும் கதைகளில் இருக்கும் சுவாரஸியத்தையும் நம்பகத் தன்மையையும் அச்சுப் பிசகாமல் கொண்டிருப்பவை அ.முவின் அனுபவக் கதைகள்.

இவரது கதைகளின் சிறப்பம்சமாக அதில் விரவியிருக்கும் நகைச்சுவையை பலரும் குறிப்பிடுவதைக் கேட்டிருக்கிறேன். "புன்னகைக்கும் கதை சொல்லி" என்பார் ஜெயமோகன். உடல்நலம் குன்றிய தன் குழந்தையை மருத்துவமனையில் சேர்த்து அருகில் துணைக்கிருந்த இரவில், சூழலுக்கு கொஞ்சமும் பொருந்தாமல் வாய் விட்டுச் சிரித்தபடியே 'அங்கே இப்ப என்ன நேரம்' தொகுப்பை வாசித்துக் கொண்டிருந்ததாக சொல்கிறார் பா.ராகவன். 'ஐவேசு' கதையை தன் பதிவில் குறிப்பிட்டு எழுதியதன் வாயிலாக எனக்கு முதன் முதலாக அ.மு வை அறிமுகப்படுத்திய ஆசிப் அண்ணாச்சியும் அதன் நகைச்சுவையே தன்னை வெகுவாகக் கவர்ந்த அம்சம் என்று கூறியிருக்கிறார். ஆனால் என்னளவில் நகைச்சுவையைக் காட்டிலும் அ.மு வின் கதை சொல்லும் நேர்த்தியும் சொக்க வைக்கும் விவரணைகளுமே அவரது அதி சிறந்த அம்சங்களாகத் தோன்றுகின்றன.

ஜெயமோகனின் தாயார் பாதம் சிறுகதையில் "சும்மா தேனீமேலே ஏறி ஒக்காந்து ரீ….ம்னு நந்தவனமெல்லாம் சுத்தி, நந்தியாவட்டை மல்லிகை ரோஜான்னு பூப்பூவா உக்காந்து மண்ட மண்ட தேன்குடிச்சுட்டு வந்து எறங்கின மாதிரி ஒரு அனுபவம்." என்றொரு வரி இடம்பெற்றிருக்கும். அ.முத்துலிங்கத்தின் எழுத்தை வாசிக்கும் போதெல்லாம் இப்படியானதொரு அனுபவம் வாய்க்கத் தவறியதில்லை. அவரின் இணையதளத்தில் இருக்கும் 'மாம்பழம்' என்ற கட்டுரை நான் மிக மிக ரசித்துக் கிறங்கிப் படித்த கட்டுரைகளுள் ஒன்று. தோட்டத்திலிருக்கும் மாமரத்திலிருந்து வீட்டுக் குழந்தைகள் ஒவ்வொருவரும் தங்களுக்கான பழத்தைத் தேர்வு செய்து அதில் தங்கள் பெயர் எழுதிய சீட்டுக்களை கட்டி வைக்கின்றனர். அவற்றின் வளர்ச்சியைத் தொடர்ந்து கண்காணித்து அவை முற்றிக் கனிந்ததும் அவரவர் கனியை பறித்து உண்டு மகிழ்கின்றனர். அவர்களுள் மிகச் சிறியவளான 3 வயது தங்கையின் மாம்பழம் குறித்து பின்வருமாறு விவரிக்கிறார் ஆசிரியர்.

"ஆக எஞ்சியது தங்கச்சியின் மாங்காய்தான். அது ஒவ்வொரு நாளும் பெருத்துக்கொண்டே வந்தது. அவளுடைய தலையளவுக்கு பெருத்த பிறகு நிறம் வைக்கத் தொடங்கியது. ஒருநாள் காலை பழுத்து கனிந்து சாப்பிடுவதற்கான பருவத்தை எட்டியது. அண்ணர் அதை ஆய்ந்து அவளிடம் கொடுத்தார். இரண்டு கைகளாலும் ஏந்திப் பிடிக்க கைகளில் அவளுக்கு போதிய பலம் கிடையாது. ஆனாலும் அவள் அதை கீழே இறக்கவில்லை. குழந்தையை அணைத்துப் பிடிப்பதுபோல நெஞ்சோடு சேர்த்து இறுக்கிக்கொண்டு வீடு முழுக்க அலைந்தாள். ஒரு புதுப் பொம்மை கிடைத்ததுபோல மகிழ்ச்சி. மதியம்வரை அதை நெஞ்சைவிட்டு கீழே இறக்கவில்லை. அதைச் சாப்பிடும் நோக்கமே அவளுக்கு கிடையாது."

இந்தப் பத்தியைப் படிக்கும் போதே மாம்பழத்தைத் தூக்க முடியாமல் தூக்கித் திரியும் குட்டிப் பெண்ணின் உருவம் மனக்கண்ணில் தோன்றியதோடு அவளின் மகிழ்ச்சி என் முகத்திலும் கசிந்து விரவிக் கொண்டிருந்தது. இறுதியாய் 'அதைச் சாப்பிடும் நோக்கமே அவளுக்குக் கிடையாது' என்ற வரியை வாசித்தபோது உண்டான மனக்கிளர்ச்சியை எப்படிச் சொல்வதெனத் தெரியவில்லை. ஏறத்தாழ அ.முவின் எழுத்துக்களை நானும் இப்படித்தான் தூக்கிக் கொண்டு திரிகிறேனோ என்று தோன்றுகிறது!

விவரணைகளைப் போன்றே அவர் கையாளும் உவமைகளும் மிக மிக அழகானவை. 'ஐயோ' எப்படித்தான் இப்படியெல்லாம் சொல்லத் தோன்றுகிறதோவென மாய்ந்து மாய்ந்து வியக்கச் செய்பவை.

"தாயின் கையை பறித்துக்கொண்டு ஓடும் குழந்தைபோல ஒரு முடிக்கற்றை நெற்றியிலே விழுந்தது"

"இப்பொழுதுதான் பிறந்த ஆட்டுக்குட்டி எழுந்து நிற்பதுபோல அவர் கால்கள் நடுங்கின"

"என்னுடைய முகம் சாத்தி வைத்த கதவு போல இருந்தது"

"ஒரு குளவியை அறைக்குள் விட்டு கதவைச் சாத்தியது போல அறையின் இந்த மூலைக்கும் அந்த மூலைக்குமாக கனகி சர்க் சர்க் என்று பறந்து கொண்டிருந்தாள்."

"குழந்தை அவசரமாக தாயைப் பின் தொடர்ந்தது. திடீரென நின்று, தானியத்தைக் கொத்துவதற்கு குருவி தயங்குவது போல யோசித்தது"

" கனடாவின் 143 வருட சரித்திரத்தில் முதன்முதலாக ஓர் ஈழத்தமிழர் உடலழகன் போட்டியில் பங்குபற்றியதுமல்லாமல் இரண்டாவது இடத்தையும் வென்றிருந்தார். அவர் பெயர் பகீரதன் விவேகானந். ஒரு மேப்பிள் இலை உதிர்ந்ததுபோல, ஒரு குறுக்கெழுத்துப் புதிர் பூர்த்தியானதுபோல, ஒரு வீதி விளக்கு சிவப்பிலிருந்து பச்சைக்கு மாறியதுபோல இந்தச் சம்பவம் மிகச் சாதாரணமாக மறக்கப்பட்டுவிடும் "

என்பவை சில எடுத்துக்காட்டுகள். எவருடைய நூலைப் பற்றியாவது சிலாகித்துப் பேசுகையில் அதில் வரும் மிகச் சிறந்த வசனத்தை சுட்டிக் காட்டி "இந்த ஒரு வசனத்திற்கே புத்தகத்திற்கு கொடுத்த மொத்த விலைப்பணமும் சரியாய்ப் போய்விட்டது" என்று குறிப்பிடுவது அ.முத்துலிங்கம் அவர்களின் வழக்கம். அவரது புத்தகத்தை வாசிக்கையில் குறைந்தது 50 முறைகளாவது இதே வரியை நினைவு கூர வேண்டியிருக்கிறது. உவமைகளைப் போன்றே ஒவ்வொரு கதையிலும் புதிதாக அறிந்து கொள்வதற்கென நிறைய சுவாரஸியமான செய்திகள் பொதிந்திருக்கும். அட! என புருவமுயர்த்தி ஆச்சரியப்பட வைக்கும்.

"ஆராய்ச்சி’ என்று ஒரு மாமரம். அதன் காய்கள் பனங்காய் அளவுக்கு பெரிசாக வளர்ந்து தன் பாரத்தை தானே தாங்க முடியாமல் வெடித்துவிடும். இன்னொரு வகை ’மத்தளம்தூக்கி’. நார்ச்சத்துள்ள இனிய பழம். இன்னொன்று ’வெங்காயம் காய்ச்சி’. இதை பழுக்க வைப்பதில்லை, இதில் வெங்காய வாசனை வரும் ஆகவே கறிக்கு பயன் படுத்துவார்கள்."


"தென் அமெரிக்காவில் 150 பேர் மட்டுமே கொண்ட ஓர் இனக்குழு உண்டு. அவர்களுடைய மொழியில் ’அரைகுறையாக அம்பு எய்தவன்’ என்பதற்கு ஒரு வார்த்தை உண்டு. அரைகுறையாக அம்பு எய்தால் மிருகம் வலியில் துடித்து உழன்றுதான் சாகும். அந்த மொழியில் ஆக மோசமாக ஒருவரை திட்டவேண்டும் என்றால் அந்த வார்த்தையை சொல்லி வைவார்கள். "

"ஆப்பிரிக்காவில் மணமுடிக்கும் முன்னரே பிள்ளை பெற்ற பெண்ணுக்கு மதிப்பு அதிகம். அவள் கர்ப்பம் தரிப்பது பிரச்னை இல்லாததால் அவளை மணக்க ஆடவர் போட்டியிடுவர். இந்தியப் படங்களில் ஒரு பெண் கற்பைக் காப்பாற்றப் போராடும் இடங்கள் அவர்களுக்குப் புரிவதேயில்லை."

"ஆப்பிரிக்காவில் வாழும் இந்தியர்கள் பிணத்தை எரிப்பதைப் பார்த்ததும் ஆப்பிரிக்கர்கள் கிலி பிடித்து ஓடிவிடுவார்கள். இது ஒரு காட்டுமிராண்டித்தனமான பழக்கம் என்று என்னிடமே சொல்லியிருக்கிறார்கள்".

இப்படி தனி நூலாய்த் தொகுக்குமளவிற்கு கதையெங்கும் பரவியிருக்கும் நுண்ணிய அவதானிப்புகள் மட்டுமல்லாது சாதாரணமாய் நகரும் கதையை ஒற்றை வரியால் சட்டென வேறு தளத்திற்கு உயர்த்திச் செல்லும் லாவகமும், மாலையா இரவா எனப் பிரித்தறிய முடியாதபடி மயங்கி வரும் பொழுதைப் போல உண்மையா புனைவா என்றுணர மாட்டாத மயக்கத்தோடு அனுபவங்களை விவரித்து செல்லும் பாங்கும், வெவ்வேறு தேசங்கள், பல்வேறு வாழ்க்கை முறைகள் என வாசிப்போருக்கு அந்நியமாயிருக்கும் அனைத்தையும் எளிய தமிழின் வழியாக மிக அணுக்கமானதானக் காட்டும் திறமையும், செறிவான சொற்களைத் தேடித் தேடிப் பயன்படுத்தும் வசீகரமும் அவரின் தனிச்சிறப்புக்களாக மிளிர்கின்றன.

அ.மு வின் கதைகளில் எதிரி, மட்டுப்படுத்தப்பட்ட வினைச் சொற்கள், மயான பராமரிப்பாளர், வேட்டை நாய், என் குதிரை நல்லது, முதலியவற்றோடு எனக்கு மிக மிகப் பிடித்தமான கதைகள் இரண்டு உண்டு. "அடுத்த புதன் கிழமை உன்னுடைய முறை" "உடனே திரும்ப வேண்டும்" ஆகிய 2 கதைகளையும் என்னால் மறக்க முடிந்ததே இல்லை.

இவை என் மனதில் ஆழப் பதிந்து அழியாமல் நின்று விட்டமைக்கு, இந்த இரண்டு கதைகளுமே உடல் நலமின்றித் துன்புறும் இளங்குழந்தையைப் பற்றியும் குழந்தையின் அவஸ்தையைக் காணச் சகியாத பெற்றோரைப் பற்றியுமான கதைகளாய் அமைந்தது காரணமாயிருக்கலாம். என் மகள் பிறக்கும் முன்பாகவே இவ்விரண்டு கதைகளையும் பதைபதைப்போடு மிகவூன்றிப் படித்திருந்தேன். அவள் பிறந்து வளர்ந்து முதன் முதலாகப் பின்னோக்கித் தவழத் தொடங்கிய நாட்களிலும், சமீபமாய் உடல்நலமின்றி இரவெல்லாம் கடுமையான சளித் தொந்தரவோடும் காய்ச்சலோடும் அவள் அவதிப்பட்ட நாட்களிலும் இக்கதைகளை மீண்டும் மீண்டும் நினைவு கூர்ந்த படியே இருந்தேன்.

'அடுத்த புதன் கிழமை உன்னுடைய முறை' என்ற கதையில் வரும், தவழும் பருவத்துக் குழந்தையான லவங்கி திடீரென கடுமையான நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்படுவாள். ஒரு சுவாசப் பை முற்றிலும் மடிந்து உயிருக்கு ஆபத்தான நிலையிலிருக்கும் குழந்தைக்கு ஊசி மருந்து செலுத்துவதும், சலைன் ஏற்றுவதும், உடலில் மெல்லிய குழாயைச் செலுத்தி சிறுநீர் எடுப்பதுமாக மருத்துவ சோதனை என்ற பெயரில் அலைக்கழிப்பார்கள். ஒவ்வொன்றிற்குமாக அழுது அழுது களைத்த குழந்தை, எக்ஸ்ரே எடுப்பதற்காக அந்நிய மனிதர்கள் இருவர் அவளை அழுத்திப் பிடித்ததும் அது வரை இல்லாத அளவுக்கு கதற ஆரம்பிப்பாள். இதற்கு அனுமதித்த தன் அப்பாவை நம்ப முடியாத கண்களால் பார்ப்பாள். முதல் மொட்டை அடிப்பதற்காக அமுதினியை எல்லாருமாக சேர்ந்து அழுத்திப் பிடித்து தலையில் தண்ணீர் தெளித்த போது இதே போன்ற பார்வையுடன் தான் கதறித் தீர்த்தாள். அம்மா.. அம்மா என்றே ஓயாமல் அழுதாள். சுற்றியிருந்த அத்தனை பேரையும் விடுத்து அவள் கருவிழிகள் என்னை மட்டுமே ஊடுருவித் துளைத்தன. அவ்விழிகளில் கண்ணீரோடு சேர்ந்து நீயுமா இதற்கு உடந்தை? என்ற கேள்வியும் கலந்து கன்னத்தில் இறங்கியபடியே இருந்தது.

மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மகளை மனைவியின் வசம் ஒப்படைத்து, இரண்டே நாட்களில் திரும்பி விடுவதாக வாக்களித்து விட்டு பணி நிமித்தமாய் தூர தேசம் செல்லும் தந்தை தொடர்ந்து 8 நாட்களாக ஊருக்குத் திரும்ப இயலாமல் அவதிப்படுவதைப் பற்றிய சிறுகதை 'உடனே திரும்ப வேண்டும்'. போதாக்குறைக்கு கைக்குழந்தையான அவர் மகளின் தோள் மூட்டில் பூச்சியொன்று முட்டையிட்டு கண்ணுக்குத் தெரியாத அந்த முட்டைப்புழு சருமத்திற்குள் வளர ஆரம்பித்து சருமம் வீங்கத் தொடங்கியிருக்கும். வலி தாளாமல் குழந்தை தொடர்ந்து அழுது கொண்டேயிருக்கும். விமானம் பழுதாகி விசா இல்லாமல் அல்லாடி மீண்டும் விமானம் ஏற முடியாமல் தவித்து முழுதாக 8 நாட்கள் கழித்து அவர் திரும்பி வரும் போது அப்புழு வளர்ந்து குழந்தையின் தசையைப் பிளந்து கொண்டு வெளியேறிப் போயிருக்கும். குழந்தை சுரம் குறைந்து களைப்போடு ஒரு குட்டித் தலையணையில் தன் குட்டித் தலையை வைத்துப் படுத்திருக்கும்.

இரு கதைகளிலுமே குழந்தை உடலால் அனுபவிக்கும் வேதனைக்கு சற்றும் குறையாத வேதனையைப் பெற்றோர் மனதால் அனுபவிக்கின்றனர். எப்போது நினைத்துக் கொண்டாலும் மையுறிஞ்சும் தாளைப் போல நெஞ்சில் துக்கம் பரவிப் பாய்வதைத் தடுக்க முடிந்ததில்லை. வாசிக்கும் போது கண்ணோடும் கையிலிருக்கும் நூலோடும் மட்டும் நின்று விடாமல் வாசிப்பவரின் நெஞ்சோடு கலந்து வாழ்க்கை முழுவதும் துணை வரும் படியாக இப்படி ஒரு சில கதைகளே வாய்க்கின்றன. என் கல்லூரிக்கால முதல் வகுப்பில் 'இலக்கியத்தின் பயன் என்ன?' என்று எங்கள் ஆசிரியர் கேட்ட கேள்விக்கான பதிலையும் இது போன்ற சந்தர்ப்பங்களில் மட்டுமே நான் கண்டு கொள்கிறேன்.

நான் தமிழ் இலக்கியம் பயின்றவள். எந்தவொரு பொருள் குறித்தும் காய்தல் உவத்தல் இன்றி ஆராய்ந்து நேர்மையான முறையில் அவற்றின் நிறை, குறைகளை முன்வைத்து கட்டுரை படைக்கப்பட வேண்டும் என்றே எனக்கு பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது. என்றாலும் எனக்குப் பிடித்தமானவை குறித்து நானெழுதும் கட்டுரைகள் அனைத்திலும் சிலாகிப்புகள் மட்டுமே நிரம்பியிருக்கின்றன. 'எழுதுங்கால் கோல் காணாக் கண்ணே போல்' என்பார் வள்ளுவர். ரோஜாக்களைப் பற்றி பேச முனைகையில் முட்களை முன்னிறுத்த வேண்டிய அவசியம் தான் என்ன?

Wednesday, September 16, 2009

பகடையாட்டம்

21 புள்ளிகள்.. 5 வரை நடுப்புள்ளி என்றோ, வேறு ஏதேனுமோர் எண்ணிக்கையிலோ வாசலில் விரைந்து புள்ளியிடும் அம்மாவின் விரல்களை அருகமர்ந்து வியப்பாய்ப் பார்த்துக் கொண்டிருக்கையில், புள்ளிகள் இணைந்த பின் வரவிருப்பது தேரா, தாமரைகளா, தீபங்களைச் சுற்றி இழையும் சர்ப்பங்களா.. அல்லது வேறு ஏதேனுமா என்பது என் பால்ய மனதிற்கு எப்போதும் புதிராகவே இருக்கும். புள்ளிகள் சேரச் சேர, புலனாகும் மாக்கோல வடிவம் யூகங்களுக்குட்பட்டதாக இருப்பின் இனம் புரியா மகிழ்வொன்று மனதில் நுரைத்துப் பொங்கும். யுவனின் 'பகடையாட்டம்', வாசிப்பினிறுதியில் இத்தகைய குதூகலத்தையே விட்டுச் சென்றுள்ளது.

யுவன் பற்றிய எனது அறிதல் சித்தார்த்தின் இந்தப் பதிவிலிருந்து தான் தொடங்கியதென நினைக்கிறேன். என் வரையில், சமகால எழுத்தாளர்களில் என்னைத் தொடர்ச்சியாய் பிரம்மிப்பிலாழ்த்திக் கொண்டேயிருப்பவர்கள் மூவர். ஜெயமோகன், அம்பை மற்றும் யுவன். முன்னிருவரைப் போன்றே எளிதில் நிராகரித்து விட முடியாத / கூடாத மொழி யுவனுடையது. யுவன் படைப்புகளில் முதன்முதலில் வாசித்த 'ஏற்கனவே' சிறுகதைத் தொகுப்பு அதன் எளிமையாலும், நேர்த்தியாலும், சிறிய விஷயங்களை அழகாய்க் கோர்த்துச் சொல்லும் சுவாரசியத்தாலும் வெகுவாய்க் கவனம் ஈர்த்தது. பின், ஈரோட்டிலிருந்து கோவை வரையிலான 2 மணி நேரப் பயணத்தில் படித்து முடித்த 'கானல் நதி', பேருந்தென்றும் பாராமல் கண்ணீர் சிந்த வைத்ததோடு அடுத்த பல நாட்களுக்குப் பலமாய் அலைக்கழித்தது. அதற்குப் பின்னாய் சற்றே நீண்ட இடைவெளிக்குப் பின் தற்போது வாசிக்கக் கிடைத்த பகடையாட்டம், என் சிந்தனா சக்தியை இன்னும் தன் பிடியிலேயே வைத்திருக்கிறது. வாசிக்கையிலும், முடித்த பின்னும் பயிற்சியாளனுக்கு கட்டுப்பட்டு சாகசங்கள் புரியும் பணிவான வனமிருகம் போன்றும், கணவனின் அன்புக் கரங்களுக்குள் இழையும் மனைவியைப் போன்றும், யுவனிடம் மொழி இணங்கியும் நெருங்கியும் எப்போதும் கூப்பிடு தொலைவிலேயே காத்து நிற்பதாய்த் தோன்றுகிறது.

"சதுரங்கக் காய்களுக்குச் சுய சிந்தனை கூடாது என்பது முதல் பாடம்"

எனத் தொடங்கும் இந்நாவல், தனது அத்தியாயங்களைச் சதுரங்கப் பலகையின் கருப்பு வெள்ளைக் கட்டங்களாகவும், கதை மாந்தர்களை சதுரங்கக் காய்களாகவும் கற்பித்துக் கொண்டு மெல்ல மெல்ல கற்பனையின் பரப்பில் எல்லையற்று விரியத் தொடங்குகிறது. இந்தியா - திபெத் - நேபாளம் என்னும் முக்கோணத்திற்கிடையில் இருக்கும் ஸோமிட்ஸியா என்ற கற்பனை தேசத்தின் அரசியல் நிலைப்பாடுகளைப் பேசும் ஒரு புத்தகம், ஸோமிட்ஸியாவின் ஆதி தோற்றம் பற்றி விவரிக்கும் பூர்வ கிரந்தம் என்னும் நூல், மேஜர் க்ருஷ் என்றழைக்கப்படும் கீழக்குண்டு ஜெயராமன் கிருஷ்ணமூர்த்தியின் சுயசரிதத்தினின்று சில பக்கங்கள், ஜூலியஸ் லுமும்பா - ஹான்ஸ் வெய்ஸ்முல்லர் என்னும் கருப்பு வெள்ளை நண்பர்களின் வாழ்க்கை வரலாறு.... இவற்றைத் தனித்தனிப் பக்கங்களாகக் கிழித்து அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக வரிசை மாற்றிக் கலந்து வைத்தால் கிடைக்கும் ஒற்றைப் புத்தகமே பகடையாட்டம்!

ஒன்றுக்கொன்று தொடர்பேயில்லாதது போன்று நகரும் அத்தியாயங்கள் அனைத்தும் முடிவில் இதற்காகத் தான் இது என்பது போல காரண காரியங்களோடு வரிசையாய்க் கைகோர்த்துக் கொள்வதும், தொடங்கியதிலிருந்தே பூத்தொடுப்பது போல மனம் அவற்றை கோர்க்க முயன்று கொண்டேயிருப்பதுமாய்.... இப்புத்தகம் என்னை மீண்டும் புள்ளிக் கோலங்களை வியந்து கொண்டிருக்கும் சிறுமியாக்கி விட்டிருக்கிறது.

ஒரு மனிதனின் வாழ்க்கை என்பது, முழுக்க முழுக்க அவனுடையதாக மட்டுமே இருத்தல் சாத்தியமா? வெற்றுத் தாளில் மசியினால் வைக்கப்பட்டிருக்கும் ஒற்றைப் புள்ளிக்குக் கூட திசைகளும், இடம், காலம் என்னும் அலகுகளும், பெளதிக விதிகளும், தாள், எழுதுகோல், மசி, அவற்றைக் கையாளும் கரம் ஆகியவற்றுடனான தொடர்புகளும், அவை குறித்த நீண்ட வரலாறுகளும், அப்புள்ளி எதோவொன்றின் தோற்றுவாயாகவோ, முற்றிடமாகவோ மாறும் சாத்தியங்களும், என்ன வடிவமாகவேனும் பரிணமிக்கும் அளவற்ற சுதந்திரமும் வாய்த்திருக்கையில்.. கற்பனையால் எழுதப்படும் ஒரு மனிதனின் வாழ்க்கை அல்லது ஒரு தேசத்தின் வரலாறு என்பது, எத்தனை எண்ணற்ற பரிமாணங்களையும், அலகற்ற சாத்தியங்களையும் , ஆதியந்தம் காணவியலாத தொன்மைகளின் தொடர்புகளையும் பெற்றிருக்கக் கூடும்? அச்சாத்தியங்களை தன்னால் இயன்ற வரை இந்நூலுக்குள் மொழியால் கட்டி இழுத்து வந்திருக்கிறார் யுவன் சந்திரசேகர்.

இந்நாவலினூடே உடன் பயணிக்கும் பூர்வ கிரந்தம் என்னும் கற்பனை நூலின் மொழிநடை வெகு அலாதியானது. "ஸோமிட்ஸியாவின் அரசியல் நிலைமையையும், சமூக வாழ்க்கையின் கதியையும் முழுக்க முழுக்க நிர்ணயிப்பது, பூர்வ கிரந்தம் என்றழைக்கப்படுகின்ற நூல். அரசியல் சாசனம் என்று கொள்ள முடியாத, மதநூல் என்று தள்ளவும் முடியாத, குழந்தைகளுக்கான மாயாஜாலப் புத்தகம் என்று சுவாரசியமாக ரசிக்கவும் முடியாத விநோதநூல்." என்று நாவலிலேயே இந்நூல் பற்றிய விவரணை இடம்பெறுகிறது. இவ்விவரிப்பிற்குக் கொஞ்சமும் மாறுபடாமல், முழு நாகரிக வளர்ச்சியோ கல்வியின் நிறைவையோ பெற்றிராத ஒரு தேசத்தின் மக்கள் கண்மூடித் தனமாகப் பின்பற்றும் விதிமுறைகளும், நம்பிக்கைகளும், வரலாறுகளும், மாய தளங்களும் விரவியதாக, பழமை போர்த்திய வசீகர மொழியில் எழுதப்பட்டிருக்கிறது பூர்வ கிரந்தம்.

"நீரை வணங்குவாயாக.
நீரே உயிரின் சாரம். நீரின் அலைகளில் வாழ்வின் தாளம்.
கனியில் ருசியாய், மலரில் மணமாய், ஞாபகத்தில் நெகிழ்வாய், காமத்தின் நதியாய்..
நீரை அறிவாயாக... நீரின் தீராக் குழந்தைமையை வணங்குவாயாக.

ஆகாயத்தை வணங்குவாயாக.
நிறங்கள் சலனங் கொள்ளும் பிரபஞ்சக் கூரை அது. பறவைகளும் மேகங்களும் வசிக்கும் மெளனவெளி. ஆழத்தில் கோள்களும் இன்னும் ஆழத்தில் விண்மீன்களும் யாரும் ஆணையிடாமலே கடமை தவறாமல் சுழன்று நீந்திக் களிக்கும் மகா சமுத்திரம்."

"நகர்தல் நதியின் தியானம். வளர்தல் செடியின் தியானம். சும்மாயிருத்தல் பாறையின் தியானம். நீரையும் நதியையும் பிரித்தறிதல் இயலாது. தியான மெளனத்தில் சலனமுறும் சுவாசமே உயிர்ப்புலம் என்றறிக"

என்பன சில எடுத்துக்காட்டுகள். இந்நாவல் உருவான விதம் மற்றும் களம் குறித்துக் கூறுகையில், வெவ்வேறு காரணங்களுக்காக வெவ்வேறு நாடுகளை விட்டு வெவ்வேறு காலகட்டங்களில் புலம்பெயர்ந்த திபெத்திய துறவிச் சிறுவன் ஒருவனைப் பற்றிய செய்தியும், ஜெர்மானிய ராணுவ அதிகாரி ஒருவரின் சுயசரிதையும், நாவலின் விதைகள் என்கிறார் யுவன்.

"புனைகதையின் உயிர் அதன் சாரத்திலில்லை, உருவத்தில் தான் இருக்கிறது என்று எனக்கு ஒரு நம்பிக்கை. சொல்லித் தீர்ந்து விட்டன எல்லாக் கதைகளும். மறுகூறலுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் புனைவு, சொல்லலின் நூதனத்தில் மட்டுமே தன் உயிரை வைத்திருக்கிறது."

என்ற அவர் கூற்று நாவலின் சதுரங்க வடிவத்திற்கான விளக்கமாக அமைகிறது. மேலும் உலகின் எண்ணற்ற நாடுகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்காமல் கற்பனை தேசம் ஒன்றை உருவாக்கியதற்கும் பின்வருமாறு காரணம் சொல்கிறார்..

"நான் பிறக்க நேர்ந்த நாட்டைத் தவிர வேறு எந்த நாட்டைக் களமாகக் கொண்டு எழுதினாலும் அந்த நாட்டின் புற, அக குணாம்சங்களைப் பொறுத்தவரை நான் அந்நியனாகத் தான் இருப்பேன். இந்த நாவலின் களமாகக் கட்டமைக்கப்பட்ட ஸோமிட்ஸியா என்ற நாட்டுடன் எனக்கு உருவாகிய சுவாதீனம் அளவிட முடியாதது. அந்த நாட்டின் நிலப்பரப்பிலும், குடிமக்களின் அகப்பரப்பிலும், அதன் அரசியல் நிர்வாக மட்டங்களிலும் மிகச் சுதந்திரமாகப் போய் வர முடிந்தது என்னால்."

சரி தான். பிள்ளையைப் பற்றி தாயைக் காட்டிலும் அதிகம் அறிந்தவர் யார் இருக்க முடியும்! புத்தக வாசிப்பின் போது மனங்கவர்ந்த வரிகளை அடிக்கோடிடும் (நல்ல / கெட்ட) பழக்கம் என்னிடமுண்டு. இப்புத்தகத்தில் அதனைக் கையாளவில்லை.. நூலின் பெரும்பான்மைப் பகுதிகள் அடிக்கோடுகளால் நிரம்பியிருக்கக் கூடும். அவற்றுள் மிகச் சில மட்டும் இங்கே..

"கண்ணுக்குத் தெரியாத அழிரப்பர் ஒன்று எல்லாவற்றையும் அழித்துக் கொண்டே போக, தன் முயற்சியில் தளராத மாயப் பென்சில் பின் தொடர்ந்து எழுதிப் போகிறது என்று தோன்றியது செல்லச்சாமி வாத்தியாருக்கு. ஆனாலும் ரப்பரின் சக்தி தான் பெரியது. மீண்டும் அதே மாதிரி எதையும் எழுத முடியவில்லை பென்சிலால்."

"ஒரு நட்சத்திரத்திற்கும் இன்னொன்றும் உள்ள அதே அளவு இடைவெளி, ஒரு மனிதனுக்கும் இன்னொரு மனிதனுக்கும் இடையிலும் இருக்கிறது.."

"எந்தக் கேள்விக்கும் பதில் தேட வேண்டிய அவசியமின்றி, தேவையானபோது உண்பதற்கான உணவு மூட்டையாய் மாறிவிடுகிறது மனதில் சேகரமாகியிருக்கும் தகவல் தொகுப்பு"

"சக மனிதர்களின் உணர்வுகளைச் சாப்பிடாமல் மனிதர்களால் உயிர் வாழவே முடியாது.."

"பார்வைக்குத் தெரிகிற மனிதனும் பழக்கத்துக்குத் தெரிகிற மனிதனும் ஒன்றாயிருப்பது அபூர்வம் தானே..?"

என்னளவில் நான் வாசித்தவற்றுள் ஆகச்சிறந்த நாவல்களில் ஒன்றாய் பகடையாட்டத்தைக் குறிப்பிடுவேன். மற்றும் என் அலைவரிசையைச் சேர்ந்த எவருக்கும் இந்நூலை தைரியமாய்ப் பரிந்துரைப்பேன்.


நூல் : பகடையாட்டம்
ஆசிரியர் : யுவன் சந்திரசேகர்

வெளியீடு : தமிழினி

விலை: ரூ. 130

Thursday, September 10, 2009

யுவன் கவிதை

யுவன் சந்திரசேகரின் பகடையாட்டம் வாசித்துக் கொண்டிருக்கிறேன். 87 பக்கங்களைக் கடந்தாயிற்று. சென்று சேருமிடம் குறித்த முன்முடிவுகள் / யூகங்கள் ஏதுமின்றி, தொடர்ந்து பாதைகளை மாற்றிக் கொண்டேயிருக்கும் கதையின் பாதச்சுவடுகளை அடியொற்றிச் செல்வதில் மட்டுமே கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறேன். கடந்த ஜனவரிக்குப் பிறகு நாளை, நாளை என்று நான் ஒத்திப் போட்டுக் கொண்டே வந்த, 'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை இன்றென நிர்ணயித்திருக்கிறது போல. கதையை, இன்று இதற்கு மேல் தொடர முடியாதெனத் தோன்றுகிறது. கவிதையை மட்டும் இங்கு பதிவு செய்கிறேன்.


"ஒரு சிட்டுக்குருவியைக் கொல்வது
வெகு சுலபம்

முதலில் உள்ளங்கை நிரம்பிய
தானிய மணிகளால் அதைக்
கவர்ந்திழுக்க வேண்டும்.

ஆகாயத்தை விடவும்
கூண்டு பாதுகாப்பானது என்று
நம்பச் செய்ய வேண்டும்.

சுவாதீனம் படிந்த பிறகு,
எதிர்பாராத தருணமொன்றில்
அதன் சிறகுகளைத் தரித்துக்
குப்பையில் வீச வேண்டும்,
தூவிகளில் ஒட்டிய
ஆகாயக் கனவுகள் மட்கும் வண்ணம்.

பிறகு
அதன் கால்களை ஒடித்துவிட வேண்டும்
உயிர்வாழும் வேட்கையால்
நடந்தேனும் இரைதேட விடாதபடி.

அடுத்ததாக,
அதன் அலகை முறித்து விடுவது நல்லது
தானாய் வந்து
சிக்கும் இரையைப் பிடிப்பதையும்
தடுத்து விடலாம்.

இப்போது சிட்டுக்குருவி
ஒரு கூழாங்கல் ஆகிவிட்டது

சிறு வித்தியாசத்துடன்.

கல்போலின்றி, பறந்த நாட்களை
நினைவு கூரும் குருவி.

பூர்விக நியாபகம் போல
உயிர் துடிக்கும்
அதன் கண்களில்.

இனி நீங்கள் செய்ய வேண்டியது
ஒன்று தான். குருவிமிச்சத்தைத்
தரையில் இட்டுக் காலால் தேய்த்துவிட வேண்டும்.

சிட்டுக்குருவியைக் கொல்வது,
ஒரு நட்பையோ
ஒரு ஆன்மாவையோ
முறிப்பது போல,
மிக மிகச் சுலபம்"

புத்தகத்தை மூடிவிட்டு, சிட்டுக்குருவிகள் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறேன். நான் சிட்டுக் குருவியாய் இருந்த தருணங்களையும்.

Wednesday, September 17, 2008

அக்மதோவாவும் அக்கரைப் பூக்களும்

முதல் வாசிப்பிலேயே எவரிடமாவது பரிந்துரைக்கத் தூண்டிய தொகுப்பு நூல் இது. என்ன காரணத்தாலோ விட்டுப் போனது. இன்றைய விடியலை மேலும் அடர்வு மிக்கதாய் மாற்றியதில் இத்தொகுப்பின் மீதான மீள்வாசிப்பிற்கும் பங்குண்டு என்பதால் இன்றே எழுதிவிடுவதென்ற தீர்மானத்தோடு துவங்கியிருக்கிறேன்.

இது ஒரு கவிதைத் தொகுப்பு. அக்மதோவா முதலாக 18 பிறமொழி கவிஞர்கள் எழுதிய, தேர்ந்தெடுக்கப்பட்ட 53 கவிதைகளின் மொழிபெயர்ப்பு. பெரும்பாலும் தமிழில் மொழிபெயர்ப்பு கவிதைகள், வரிவரியாய் மணலோடிய படுகையைச் சுட்டிக்காட்டி 'இதற்கு முன் இங்கு ஓர் நதியிருந்தது' எனச் சொல்வன போன்று அமைந்திருப்பதாகவே படுமெனக்கு. சற்றும் இளகலில்லாத ஒரு வறட்சி அதில் படிந்திருப்பது, கவிதைகளை கணக்குப் புத்தகங்கள் போலாக்கி விடுகிறது இல்லையா? ஆனால் வ.கீதாவும் எஸ்.வி.ராஜதுரையும் மொழிபெயர்த்திருக்கும் இக்கவிதைகள் மேற்படி குற்றச்சாட்டிலிருந்து பெருமளவு தப்பியிருக்கின்றன.

இந்நூலில் அன்னா அக்மதோவாவின் 13 கவிதைகளை பெயர்த்துத் தந்திருக்கிறார்கள். மேலதிகமாய் அவரைப் பற்றிய விரிவான முன்னுரை ஒன்றும் வழங்கப்பட்டிருக்கிறது.

"சோவியத் யூனியனின் தகர்வுக்கு 4 ஆண்டுகளுக்கு முன் மாஸ்கோவின் முன்னணி இலக்கிய ஏடான 'அக்டோபர்' "இரங்கற்பா" என்னும் தொடர்கவிதையை வெளியிட்டதன் மூலம் சென்ற நூற்றாண்டின் மாபெரும் கவிஞர் ஒருவருக்கு நீண்டகாலமாக இழைக்கப்பட்டு வந்திருந்த அநீதியை துடைத்தெறிந்தது. அப்படைப்பு உருவாக்கப்பட்டு 47 ஆண்டுகளுக்கும் அவற்றைப் படைத்தவர் மறைந்து 21 ஆண்டுகளுக்கும் பிறகு அது வெளியிடப்பட்டமை சோவியத் சமூக வாழ்வில் அறநெறிகள் புதுப்பிக்கப்படுவதன் அறிகுறியாகத் தெரிந்தது"

என்று தொடங்கும் முன்னுரை, அடுத்த 15 பக்கங்களில் அவரின் வாழ்க்கையை, ஆளுமையை, காதலை, பிரிவை, வலியை, தேசத்தின் மீதான வலுவான பிடிப்பை, எந்த நிர்ப்பந்தத்திற்கும் வளைந்து கொடுக்காத அவரது கவிதைகளை... தொடர்ச்சியாய் பேசிப்போகிறது.

அன்னா அக்மதோவா ஒரு ரஷ்யர். ரஷ்ய இலக்கிய உலகின் குறிப்பிடத்தக்க கவிஞர். அதைவிடவும் அவர் ஓர் பெண் கவிஞர். விசும்பென விரிந்து கிடக்கும் தமிழின் நீள்நெடும் இலக்கிய வரலாற்றிலும் கூட பெண் கவிஞர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் மட்டுமே காணக் கிடைப்பதால், அடக்குமுறைகளை எதிர்த்து உரத்து எழும், முதல் பெண் குரல் உலகின் எந்த மூலையிலிருந்து ஒலித்தாலும் அக்குரல் மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவே இருக்கிறது!

அக்மதோவா 1899 க்கும் 1966 க்கும் இடைப்பட்ட காலத்தில் ரஷ்யாவில் வாழ்ந்தவர். புகழ்பெற்ற கவிஞரான நிகோலாய் குமிலியோவை பள்ளிப்பருவத்திலேயே காதலித்து மணந்தவர். தவறான குற்றச்சாட்டின் பெயரால் குமிலியோவ் சுட்டுக் கொல்லப்பட்டபோதும் துயரத்திற்குத் துணையாய் தன் கவிதைகளை மட்டுமே அருகிருத்திக் கொண்டவர். பல்லாயிரக்கணக்கான கம்யூனிஸ்ட்டுகளும் பொதுமக்களும் கொடிய அடக்குமுறைகளுக்கும் மரணதண்டனைகளுக்கும் உள்ளாக்கப்பட்ட காலத்தில் அம்மக்களின் வேதனைகளுக்கு நிரந்தர சாட்சியமாய் 'இரங்கற்பா' என்னும் தொடர்கவிதையை எழுதினார். அவர் இறந்து 21 ஆண்டுகளுக்கு பிறகாய் அக்கவிதையை வெளியிட்டு பரிகாரம் தேடிக்கொண்டது 'அக்டோபர்' இலக்கிய இதழ். அடுத்து வந்த 1989 ம் ஆண்டை 'அக்மதோவா ஆண்டாக' அறிவித்து அவரின் புகழை உறுதிப்படுத்தியது யுனெஸ்கோ நிறுவனம். தனது சுயத்தின் வெளிப்பாடுகளை, ஆணின் அனுபவங்களையே சார்ந்து நிற்கும் மொழியின் மீதே சுமத்தி தனது தனிப்பட்ட அர்த்தங்களுக்கு அக்மதோவா புதுக்குரல் கொடுப்பதாகச் சொல்கிறார்கள் வ.கீதாவும் எஸ்.வி. ராஜதுரையும்.

இந்நூலில் கொடுக்கப்பட்டிருக்கும் அன்னாவின் 13 கவிதைகளில் என்னை மிகவும் அலைக்கழித்த கவிதை இது..

"ஆழ்கிணற்றின் அடியாழத்திலுள்ள ஒரு வெள்ளைக்கல் போல
என்னிடத்தில் ஒரே ஒரு நினைவு மட்டும்.
அதை நான் போக்க முடியாது, போக்க விரும்புவதுமில்லை
அது ஒரு உவகை, அது வேதனையும் கூட.
எனக்குத் தோன்றுகிறது என் கண்களை உற்றுப் பார்ப்பவருக்கு
அது தெளிவாகத் தெரியுமென்று.
சோகம் ததும்பும் கதையொன்றைக் கேட்பவரை விட
அவர் நெஞ்சம் மேலும் கனக்கும், துயருறும்.
எனக்குத் தெரியும் கடவுளர் மனிதரைக்
கல்லாக மாற்றியுள்ளனர்,
மனங்களை அப்படியே விட்டுவைத்து.
அந்த அற்புதமான சோகங்கள்
இன்னும் எஞ்சியிருக்க வேண்டுமென்று
என் நினைவாக மாற்றப்பட்டு விட்டாய் நீ."

நிஜம் தான்.. கல்லை மனமாய்க் கொண்டிருக்கும் மனிதர்களைப் பற்றி எவரும் அக்கறை கொள்ள வேண்டியதில்லை. ஆனால் மனம் மரிக்காமலிருக்கையிலேயே வெளியில் கல்லாய்ச் சமைந்த மனிதர்கள் பெரும் பரிதாபத்திற்குரியவர்கள். எல்லோருடைய மனங்களின் அடியாழத்திலும் சில அற்புதமான சோகங்கள், மறக்க விரும்பாத நினைவுகள் குளிர்ந்த கற்களாய் தேங்கிக் கிடப்பதை யாரேனும் மறுக்கக் கூடுமா என்ன?

மற்றுமோர் கவிதையில்..

"அன்பு இல்லாமலிருப்பது
என் நிம்மதியைக் கூட்டத்தான் செய்கிறது"

என்கிறார் அக்மதோவா. அன்பு ஒரு வகையில் மெல்லிய கண்ணாடிச் சிற்பம் போன்றது தான் இல்லையா? சிற்பத்தின் மீதான பிடி இறுகும்போதும் விலகும்போதும் மனங்கள் நொறுங்குவது தவிர்க்க முடியாததாகிறது. அன்பு இல்லாமலிருப்பதும் கூட சில நேரங்களில் ஆசுவாசமாய்த் தான் இருக்கும் போல!

நற்றிணையில் ஓர் பாடல் உண்டு. தலைவி தோழியரோடு விளையாடுகையில் என்றோ மண்ணில் புதைத்து வைத்த புங்க விதை முந்தைய மழையில் முளை விட்டிருக்கும். 'இம்மரம் உன்னை விடவும் சிறந்தது உனக்கு சகோதரி போன்றது' என்று தாய் சொல்ல.. பாலும் நெய்யும் ஊற்றி அந்த மரத்தை வளர்க்கிறாள் தலைவி. அம்மரத்தினடியில் தலைவன் அவளைச் சந்திக்க வருகையில் 'என் சகோதரியின் முன்பாக உங்களுடன் காதல்மொழி பேச நாணமாயிருக்கிறது' என்பாள். இயற்கையோடு இயைந்த வாழ்வை, எக்காலத்தும் மாறாமலிருக்கும் பெண்களின் மெல்லிய உணர்வுகளை நுட்பமாய் முன்வைக்கும் கவிதை அது. அக்மதோவாவிடம் இதே நுண்ணுணர்வை காண நேர்ந்தபோது மொழி, நாடு, இனம் என மனிதன் வகுத்துக்கொண்ட அற்ப எல்லைகள் அனைத்தும் சட்டென்று இல்லாமலாகின. இதயத்துடிப்பு போல எல்லா மனிதர்களுக்கும் உணர்வுகளும் ஒன்று தானோவெனும் ஐயம் மீண்டுமொருமுறை தோன்றி மறைந்தது.

அக்மதோவாவால் நேசிக்கப்பட்டிருந்த ஒரு வெண்ணிற வில்லோ மரம் வெட்டப்பட்டு விடுகிறது. அப்போது எழுதுகிறார்...

"நான் நேசித்தவை புற்களும் புதர்களும்.
எல்லாவற்றையும் விட ஒரு
வெண்ணிற வில்லோ மரத்தையே.
அதுவும் விசுவாசத்துடன்
வாழ்நாள் முழுவதும் என்னோடே இருந்தது
..............................................................
என்ன ஆச்சரியம்!
அதன் ஆயுளையும் விஞ்சிவிட்டேன் நான்.
குத்துக்கட்டை மாத்திரம் அங்கே நிற்கிறது:
..............................................................
நானோ மெளனத்தில்..
ஒரு சகோதரனை இழந்தவளைப் போல"

வேறு சில கவிதைகளில்,

"தெருவின் பனிப்போர்வையின் மீது
முந்தய நாள் நான் விட்டுச் சென்ற
என் பாதச்சுவடுகளைத் தேடி ஏமாறுவேன்"

எனத் தன் குழந்தைமையை பதிந்து செல்லும் அக்மதோவா,

"குழந்தைகள் இறைக்கும் சாலையோர பூக்கள்
யாரும் பொருட்படுத்தாக் காட்டு மலர்கள்..."

என அழகான அவதானிப்புகளையும் சுட்டிச் செல்கிறார்.

துயரத்தாலும் அவலச்சுவையாலும் சமூக அநீதிகளுக்கெதிரான கூக்குரல்களாலும் நிரப்பப்பட்டிருக்கும் அவரின் 'இரங்கற்பா' இப்படி தொடங்குகிறது...

"இத்தகைய துயரம் மலைகளுக்குக் கூனல் விழச் செய்துவிடும்
ஆறுகளின் போக்கைத் திருப்பி விடும்..."
................................................................................
இறந்தவர் மட்டுமே அன்று புன்னகைத்தனர்
அமைதியடைந்ததில் ஆனந்தம்."

அக்மதோவா தவிர ஷேக்ஸ்பியர், ஜான் கீட்ஸ், பெய் டாவோ, ப்ளாகா டிமிட்ரோவா, கரோல் சத்தியமூர்த்தி உள்பட 17 கவிஞர்களின் சிறந்த கவிதைகள் அக்கரைப் பூக்களாய்த் தொகுக்கப்பட்டிருக்கின்றன இதில்.

"கூழாங்கல்
ஒரு வடுவற்ற படைப்பு
அதற்கு நிகர் அது தான்
அதற்குத் தன் வரம்புகள் தெரியும்
அதில் நிரம்பியுள்ளது
ஒரு கூழாங்கல் அர்த்தம்"

எனத்தொடங்கும் ஜிபிக்னியூ ஹெர்பர்ட்டின் கூழாங்கல் கவிதை மிக அருமை.

ப்ளாகா டிமிட்ரோவாவின் 'சாலையில் தனியாய் ஒரு பெண்'

"இன்னும் ஆண்களுடையதாகவே இருக்கும்
இந்த உலகத்தில்
எங்கும் ஆபத்தும் தொல்லையும் தான்"

எனவாரம்பித்து எப்போதும் மாறாமலிருக்கும் பெண்ணின் பாதுகாப்பற்ற நிலையைவெளிச்சமிட்டுக் காட்டுகிறது.

இவை தவிர ஆசை, அந்த காதலை மீண்டும் என்னிடமிருந்து கேட்காதே, கை ரேகை பார்த்தல், காலதேவனின் அரிவாள், எனது மனைவியைப் பற்றிய எளிய பாடல், காதலும் சாதலும், உடைந்த நிலா ஆகிய கவிதைகள் இந்தத் தொகுப்பில் குறிப்பிடத்தகுந்தவையாய் இருக்கின்றன.


நூல்பெயர் : அக்மதோவா - அக்கரைப்பூக்கள்
தமிழாக்கம் : வ.கீதா - எஸ்.வி.ராஜதுரை
விலை : ரூ.65
பதிப்பு : அடையாளம் பதிப்பகம். (04332 - 273444)
admin@adaiyalam.com

Sunday, April 20, 2008

தமிழ்ச்செல்வியின் 'கீதாரி'


" நீ வளர்ந்திருக்க.. அவ்ளோ தான். இன்னும் வாழவே ஆரம்பிக்கல"

எப்போதோ பேச்சுவாக்கில் அம்மா சொன்னது இது! காற்றில் திசையறுந்த பட்டம் போல் மனக்கிளை ஒன்றில் மாட்டிக் கொண்டு எப்போதும் படபடத்துக் கொண்டே இருக்கிறது இந்த வரி. கால் நூற்றாண்டைக் கடந்தாயிற்று.. இன்னும் வாழவில்லை என்றால் எப்படி?

நிஜம்தான். என்றோ துயரமென மறுகியவை புன்னகையாகவும், மகிழ்வெனக் கொண்டாடியவை கண்ணீராகவும் தொடர்ந்து மாறிக்கொண்டேயிருக்கும் விசித்திரத்தின் நடுவில் வாழ்வில் இதுவரை கற்றதும் பெற்றதும் எவையென தேர்ந்து கொள்வது சிரமமாய்த்தானிருக்கிறது.

வாழ்க்கைக்கு அநேக முகங்கள். சிலரிடம் சிரித்தபடியும், சிலரிடம் சினந்தபடியும் சிலருக்கு எக்காலமும் அருள்பாலித்தபடியும் சிலரை என்றென்றும் வெறுத்தொதுக்கியபடியும் அன்பாய், அருவருப்பாய், சாந்தமாய், குரூரமாய்.. விதவிதமாய் இருக்கும் விநோத முகங்கள். எல்லோருக்கும் எல்லா முகங்களையும் சந்திக்க வாய்ப்பதில்லையென்றாலும் பெரும்பாலும் புத்தகங்கள் அவற்றை இனங்காட்டி விடுகின்றன இல்லையா?

ஒவ்வொரு முறையும் பிறவியெடுத்து முழுமையாய் வாழ்ந்து பார்க்க வேண்டிய வாழ்க்கையை, இந்தப் புத்தகங்களில் வீசும் அச்சு மையின் மெல்லிய வாசனைகளூடாய் நாமும் வாழ்ந்து விட முடிவது எத்தனை அற்புதமானது! கீழே விழாமலே அடிபட்ட வலியும்.. இழக்கும் முன்பே இழப்பின் வேதனையும்..காயங்கள் ஏதுமின்றி குருதியுமிழ் புண்களும் வாசிப்பில் மட்டும்தான் சாத்தியம் என்று தோன்றுகிறது.

அப்படியொரு வலி மிகுந்த வாழ்க்கைதான் தமிழ்ச்செல்வியின் 'கீதாரி'. வாங்கி 6 மாதங்களாய் பாத்திரத்தில் சேமித்த விதைநெல் போல பொறுமையாய் காத்துக் கொண்டிருந்தது அது! இம்மாதத் துவக்கத்தில் ஒவ்வொரு நொடியையும் கழுத்தைப் பிடித்து தள்ள வேண்டியிருந்த நாளொன்றில்.. தன்னை எங்காவது தொலைத்துவிடும்படி கெஞ்சிக் கொண்டிருந்த வெயில் நேரத்தை கீதாரிக்குத் தின்னக் கொடுத்திருந்தேன். படித்து முடித்தபோது வெகுவாய் ஓர் ஆயாசமும் கனமும் எஞ்சியிருந்தது மனதில்.

ஏற்கனவே தமிழ்ச்செல்வி பற்றி பிறர் சொல்லக் கேட்டும்.. தம்பியின் 'அளம்' பற்றிய பதிவைப் படித்துமிருந்ததால் புத்தகம் பிரிக்கையில் எதிர்பார்ப்பின் அடர்வு கூடியிருந்தது. ஆனால் முதல் பத்தியிலேயே முன்முடிவுகள் அனைத்தும் சிதைந்து போயின! ஒப்பனைகள் ஏதுமற்ற வெற்று முகம் போன்ற தமிழ்ச்செல்வியின் எழுத்து என்னை அத்தனை ஈர்த்தது எனக்கே ஆச்சரியம் தான்!

"யதார்த்தம் குரூரமாகவும் வக்கிரமாகவும் இருக்கிற போது அதை மிகைப்படுத்தவோ சிதைக்கவோ நான் விரும்புவதில்லை.ஒரு மலையைப் போலவோ அடர்ந்த வனத்தைப் போலவோ உருப்பெறுகிறது என் நாவல்"

எனச் சொல்லிக் கொள்ளும் தமிழ்ச்செல்வி இதை செய்துகாட்டியுமிருக்கிறார்.

*கீதாரி - இயற்கையின் மாற்றங்களையும் சீற்றங்களையும் ஒன்றேபோல வெட்ட வெளியில் எதிர்கொள்ளும் ஆட்டிடையர்களின் துயர்நிரம்பிய வாழ்க்கையைப் பேசுகிறது. ராமு கீதாரி, கரிச்சா என்று இரண்டு கதாபாத்திரங்கள். பூவிடைப்பட்ட நார் போல கதை முழுக்க விரவி நிற்கும் இவர்கள் இருவரையும் உருவி எடுத்துவிட்டால் நாவல் பொலபொலவென வெறும் சொற்களாய்க் கொட்டிவிடுமோவென பிரமை தட்டியது எனக்கு.

அதிலும்.. அந்தப் பெண்... அந்த கரிச்சா..என்னவொரு மனோதிடம் அவளுக்கு! ஒரே பேற்றில் இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்றுவிட்டு இறந்து போகும் புத்திசுவாதீனமற்ற தாயொருத்தியின் மகள் அவள். ராமு கீதாரியின் பாதுகாப்பில் வளர்கிறாள். உடன்பிறந்தவளை வேறொருவருக்கு தத்து கொடுக்கையில் பிரிவில் உருகுகிறாள்.. பூப்படையும் போது பக்கத்தில் பெண் துணையின்றி முதன்முறையாய் இறந்து போன தாயை நினைத்து கொண்டு தவிக்கிறாள்...சந்தர்ப்ப சூழ்நிலையால் அதுவரை தனக்கு 'சித்தப்பா'வாயிருந்த கீதாரியின் வளர்ப்பு மகனையே மணக்கிறாள்... தத்து கொடுக்கப்பட்ட உடன்பிறந்தவள், வளர்ப்புத் தந்தையாலேயே கற்பழித்துக் கொல்லப்பட்டாளென அறிந்து கதறுகிறாள்... குழந்தையில்லை என கணவனின் வெறுப்பிற்கு ஆளாகிறாள்... தாங்க முடியாத கணத்தில் துணிந்து அவனைப் பிரிந்து வருகிறாள்.. 5 வருடங்களாய் வாய்க்காத பிள்ளை வரம் வாய்த்தும் மீண்டும் அவனுடன் சேர்ந்து வாழ மறுக்கிறாள்... முதிர்ந்து தளர்ந்த கீதாரியை தன் பொறுப்பில் பராமரிக்கிறாள்.. தன் மகனை படிக்க வைக்க விரும்புகிறாள்... எதிர்பாராத நாளொன்றில் பாம்பு கடித்து இறந்து போகிறாள்.

கரிச்சாவையும் அவள் தமக்கை சிவப்பியையும் அவள் கணவன் வெள்ளைச்சாமியையும் எதிர்பார்ப்புகளற்ற அன்போடு வளர்த்து ஆளாக்கிய கீதாரி.. கரிச்சாவின் மகனோடு மீண்டும் தன் பயணத்தைத் தொடர்கிறார்!

'இன்னமும் எவ்வளவு துன்புறுத்திவிடுவாய் நீ?' என வாழ்க்கையிடம் பந்தயம் கட்டிக் கொண்டது போலிருக்கிறார்கள் இருவரும். முளைவிதையின் உயிர்த்துடிப்பும் வெட்ட வெட்டத் தழைக்கும் வாழ்தலுக்கான வேட்கையும் நிரம்பிய நாவல் மனதின் இருள் மூலைகளில் வெளிச்சமாய்க் கசிகிறது!

என்றாலும் கதை முழுக்க அறியாமையின் கோரப்பற்கள் ஒவ்வொருவரையும் குரூரமாய்க் கிழித்தெறிவது பரிதாபமாயிருக்கிறது.

"ஊர்விட்டு ஊர்வந்து நாடோடிகள் போல பிழைப்பு நடத்தும் ஆட்டுக்காரர்கள் ஊமைகளாகவே எங்குமிருந்தார்கள். ரோஷம், அவமானம் என்பதையெல்லாம் இவர்கள் ஒரு போதும் நினைப்பதேயில்லை. இவர்களை வலிய கூப்பிட்டு யாரேனும் அடித்து உதைத்தாலும் ஏனென்று கேட்க மாட்டார்கள். இவர்களின் இந்த பரிதாபமான நிலை கண்டு இரக்கப்பட்டு யாராவது இவர்களிடம் விசாரித்தால் அதற்கு இவர்கள் சொல்லும் பதில் இன்னும் பரிதாபமாய் இருக்கும். ' யாரும் எங்கள சும்மா அடிக்க மாட்டாக..போன வருஷம் மொத வருஷத்துல அவுக கொல்ல பயிறு பச்சயில எங்க ஆடுக மேஞ்சிருக்கும்.. அந்த கோவத்துல அடிக்கறாக.. அவுக அடிக்கறது ஞாயந்தான ?. நம்ம மேல தப்பிருக்கு.. பட்டுகிட்டுதான் போகனும்' என்று மிக இயல்பாக சொல்வார்கள்"

இந்த மனிதர்களை என்ன சொல்ல?

படித்து முடிக்கையில்....

"வா விளையாடலாம்
என்று அழைத்துப் போய்
நீ உதைத்து விளையாடும்
பந்தாக என்னை ஆக்கிக் கொண்டாயே"

தபூசங்கரின் வாழ்க்கை பற்றிய வரிகள் ஓடி மறைந்தன மனதிற்குள்..

குறைந்தபட்ச நியதிகள், ஒழுக்கங்கள், தேவைகள் ஆகியவற்றோடு அதிகபட்ச துயரங்களை எதிர்கொள்ளும் இம்மக்களின் வாழ்க்கை, படிக்கும்போதும் படித்தபின்னும் 'அய்யோ' வென்ற பதைபதைப்பையும் 'எத்துணை ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்வு நம்முடையது' என்ற ஆசுவாசத்தையும் கொடுத்துக் கொண்டேயிருக்கிறது.

ஜெயமோகன் சொல்வது எத்தனை உண்மை... நிஜம் தான்.

"வாழ்க்கை மிகப்பெரிய அறிய முடியாமையன்றி வேறல்ல!"

*கீதாரி - ஆட்டிடையர்களின் தலைவரைக் குறிக்கும் பெயர்

Tuesday, January 8, 2008

ஜெயமோகனின் சங்கச் சித்திரங்கள்




ஈரோட்டில் நல்ல புத்தகக் கடைகள் இல்லையென்பது என் நெடுநாளைய வருத்தம். இருக்கும் ஓரிரு கடைகளிலும் "செல்வந்தராவது எப்படி?" "சிகப்பழகு பெற சில வழிகள்" "செட்டிநாட்டு சமையல்"என்ற ரீதியில் மணிமேகலைப் பிரசுரங்களையும் பாடாவதி புத்தகங்களையுமே நிரப்பி வைத்திருக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன் நண்பர் ஒருவருக்கு சங்கநூல்களை அன்பளிக்க வேண்டி கடைகடையாய் ஏறி இறங்கிய போது இதைப் பெருங்குறையாக உணர நேர்ந்தது.

'சங்க இலக்கியம் இருக்கா?' என்ற என் கேள்விக்கு ஏறக்குறைய எல்லாக் கடைக்காரர்களுமே ஒரே மாதிரியான திகைப்புடனும் மொழி விளங்காதது போன்ற பாவனையுடனும் இல்லையென வருத்தம் தெரிவித்துக் கொண்டிருந்தார்கள். ஒருவர் மட்டும் விடாப்பிடியாய்த் தேடி சின்னஞ்சிறு புத்தகக் கட்டிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்து வந்து 'இதுவா? பாருங்க' என்றார். அது ஜெயமோகன் எழுதிய "சங்கச் சித்திரங்கள்". நான் கேட்ட புத்தகத்தின் தலைப்போடு 'சங்கம்' என்ற வார்த்தை பொருந்திப் போயிருப்பதால் தேடியது கிடைத்துவிட்ட திருப்தியோடும் அதை நான் நிச்சயம் வாங்கிக் கொள்வேன் என்ற நம்பிக்கையோடும் முகம் பார்த்து நின்றார் கடைக்காரர். எரிச்சலாயிருந்தது எனக்கு. அவர் தேடும்போதே சங்க இலக்கியம் ஈரோட்டில் கிடைக்கப் போவதில்லை என்ற தீர்மானத்திற்கு வந்து விட்டிருந்ததால், 'வெறுங்கையோடு திரும்பிப் போவானேன்' என்று வாங்கி வந்ததுதான் இந்தப் புத்தகம்.

அதற்கு முன்பாக காடு நாவலில் மட்டுமே ஜெயமோகன் எனக்கு பரிச்சயமாகியிருந்தார். பிரமிப்பூட்டும் வீரியமிக்க எழுத்து அவருடையதென்று அடிக்கடி நினைத்துக் கொள்வதுண்டு. காடு நாவலிலேயே குறுந்தொகை பற்றிய சிலாகிப்புகள் அற்புதமாயிருந்ததால் புத்தகம் பிரிக்கையில் என்னையறியாமலேயே மிதமான எதிர்பார்ப்பு தோன்றியிருந்தது.

"தலைவியின் தவிப்பை கபிலர் எத்தனை நுட்பமாய் வர்ணித்திருக்கிறார்..." என வழக்கமான உரைகாரர்களின் பழக்கப்பட்ட வாசகங்களை எதிர்பார்த்துப் புத்தகம் பிரித்த எனக்கு பெருத்த ஏமாற்றமும் ஆச்சரியமுமாயிருந்தது அவரின் நடை. புத்தகம் முழுக்க கவிதையையோ கவிதைக்களத்தையோ விளக்குவதில் அக்கறை காட்டாமல் தன் சொந்த அனுபவங்களை விவரித்துச் சொல்லியிருந்தார். அதையும் கவிதையோடு முழுமையாய்த் தொடர்பு படுத்தாமல் கொண்டு கூட்டியுணர வைக்கும் உத்தி அபாரம்!

ஒரு மனிதனின் வயது என்பது அவன் உடம்பு வாழ்ந்த காலத்தின் கணக்கு... உண்மையான வயது அவன் அனுபவங்களைக் கொண்டு கணக்கிடப்படுகிறது என்று ஏதோவோர் கதையில் பாலகுமாரன் சொல்லியிருப்பார். அந்த வகையில் ஜெயமோகனின் அனுபவங்களில் நூற்றாண்டு முதிர்ச்சியைக் காணமுடிகிறது. வாசகியும் காதலியுமான அருண்மொழி நங்கையுடனான காதல் நாட்கள், தாயும் தந்தையும் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட பின்னாக பைசாசமாய் மாறித் துரத்திக் கொண்டிருந்த தனியிரவுகள், வறுமையால் குடிசைகளில் வாழ்ந்திருந்த நாட்கள், நிகழ்வுகள் மற்றும் மனதின் அலைவுகளைப் பின்தொடர்ந்து மேற்கொண்ட பயணங்கள் என வாழ்வின் சாரமாயிருக்கும் அனுபவங்களை, அனுபவங்களின் சாரமாயிருக்கும் சங்கக் கவிதைகளோடு அழகாய் இணைத்துப் புரிவிக்க முயன்றிருக்கிறார்.


"இங்கே நாம் சங்க இலக்கியத்தை பள்ளிப்பாடமாக மனப்பாடம் செய்கிறோம்.. கோயில் சிலைகளைப் போல இருட்டில் வைத்து வழிபடுகிறோம்.. அல்லது ஏதோ தொல்பொருள் பொருள் போல சுரண்டி சுரண்டி ஆய்வு செய்கிறோம். கவிதை அடிப்படையில் வாழ்வுடன் தொடர்புள்ளது. வாழ்வை விரிவுபடுத்துவது. வாழ்வை வைத்துத் தான் கவிதையை வாசிக்க வேண்டும்"


என்று முன்னுரையில் இடம்பெறும் பீடிகையின் பொருளாக தன்னனுபவங்களையும் தன்சார்ந்த மனிதர்களின் வாழ்வையுமே நூலின் அடித்தளமாக்கியிருப்பது வாசிக்கத் தூண்டும் நேர்மையானதோர் உத்தி என்பேன்.

குறுந்தொகை, புறநானூறு, நற்றிணை மற்றும் கலித்தொகையிலிருந்து 40 பாடல்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். சங்கப்பாடல்களில் பாலைத்திணைப் பாடல்களின் மீது பெருவிருப்போடிருக்கும் நான், மருதத் திணையை மட்டும் எப்போதும் ரசித்ததில்லை. மருதம் ஊடலும் ஊடல் நிமித்தமுமான உரிப்பொருளுடையது. ஊடலுக்கு முக்கிய காரணியாயிருப்பது தலைவனின் பரத்தமையொழுக்கம். தலைவன் பரத்தையரை நாடிச்செல்வதால் தலைவிக்கு வரும் கோபம் ஊடலுவகையில் வகைப்படுத்தக் கூடியதா? என்னவொரு அபத்தமான வரையறை....! அந்த கோபத்தையும் நேரடியாய் வெளிப்படுத்தவியலாமல் இறைச்சிப் பொருளாய் தலைவி இடித்துரைப்பதும், மதி மயக்கும் அழகோடு வீதியில் நடந்து வரும் பெண்ணைக் கண்டதும் தன் கணவனை அவளிடமிருந்து காத்துக் கொள்ள வேண்டுமேயென கவலைப்படுவதும் எத்தனை ஆபாசமானது?

ஒருவனுக்கு ஒருத்தியென பறைசாற்றிக் கொள்ளும் தமிழ்ப்பண்பாடும், சங்ககாலம் 'பொற்காலம்' என்ற அர்த்தமற்ற கருதுகோளும் பொய்யாகிப் பல்லிளிப்பது மருதத்திணையில் தான். இதையே வழிமொழிவது போல "மருதத்திணைப் பாடல் வேறெந்த நுட்பம் கொண்டதாக இருந்தாலும் என் மனம் அதை ரசிப்பதில்லை"எனச்சொல்லிக் கொள்ளும் ஜெயமோகன்,

"பத்தினியிடமும் பரத்தையரிடமும் மாறி மாறி ஓடும் தலைவர்களைச் சார்ந்து வாழும் அவ்வாழ்க்கையில் பத்தினியாய் இருப்பதற்கும்பரத்தையாக இருப்பதற்கும் வேறுபாடு ஏதும் இல்லை என்றே இப்போது படுகிறது."

என்கிறார்.

வாசகன் தன் பார்வையை படைப்பாளியின் கண்கொண்டு காண நேர்கையில் படைப்பும் அவனும் ஒன்றென்றாகி விடுவதை இதைப் படிக்கும்போது உணர்ந்தேன். தன்னைப் போலவே முகம் கொண்ட மனிதரை எதிர்பாராமல் சந்தித்த மகிழ்வையும் திகைப்பையும் அதிர்ச்சியையும் ஒருங்கே தந்த வரிகள் இவை.

40 கட்டுரைகளில் "சூனியத்தில் ஓர் இடம்" மற்றும் "உதிரச்சுவை" ஆகிய இரண்டு கட்டுரைகளும் கொடியதோர் நோயைப் போல.. தவிர்த்து விட முடியாத ஆழ்மன அச்சத்தைப் போல இன்னும் என்னைப் பீடித்திருக்கின்றன. இரண்டும் இருவேறு விதமான பிரிவைப் பற்றிப் பேசுகின்றன. எட்டு வருடங்களாய்க் குழந்தை வேண்டி தவமிருந்த ஒருவருக்கு முளைவிதை போல சின்னஞ்சிறியதாய் ஒரு பிள்ளை பிறந்து, மண்ணிற்கேற்ப தன்னை தகவமைத்துக் கொள்ளத் தெரியாமல் பிறந்த சில நாட்களில் இறந்து போகிறது.


"ஒருவர் நிரப்பியிருந்த இடம் எவ்வளவு என்று மரணம் மூலம் நாம் அறிகிறோம். வெற்றிடத்தின் வலிமை என்பது அதன் மீது மோதும் சூழலின் அழுத்தமே. முடிவின்மையாகிய கால இடப் பருவெளியின் எடை முழுக்க அந்த வெற்றிடத்தின் மீது கவிகிறது போலும்."


என்ற வரிகள் இழப்பின் வலியை எக்காலத்தும் முடிவற்றதாய் நீட்டித்துச் செல்கின்றன.


உதிரச்சுவை கட்டுரையில் வரும்..


"பிரிவு என்பது எந்தக் காலத்திலும் ஆணின் ஆயுதம் தானா என்று எண்ணிக் கொள்கிறேன். பெண்ணின் அளப்பரிய சக்தியைமுழுக்க அது உறிஞ்சி விடுகிறது போலும். அதை அஞ்சி அவள் மீண்டும் மீண்டும் சரண்டைகிறாள். மேலும் மேலும் பலவீனம் கொள்கிறாள்.இதற்கு மறுபக்கமும் தெரிகிறது. தன் துணைவியின் மனதில் பேருருவம் கொள்ளும் பொருட்டு ஆண் போடும் வேடம் தானா இது?"


என்ற கேள்வி மீண்டும் மீண்டும் மனதில் மின்னி மறைகிறது.


"...............
அஞ்சல் என்ற இறை கைவிட்டெனப்
பைங்கண் யானை வேந்துபுறந்து இறுத்தலின்
களையுநர்க் காணாது கலங்கிய உடைமதில்
ஓரெயில் மன்னனைப் போல
அழிவுவந் தன்றால் ஒழிதல் கேட்டே"


என்ற நற்றிணைக் கவிதையை

"இவளைப் பிரிந்து பயணமாவது
ஒருவேளை உனக்கு
குளிர்தென்றல் போல மகிழ்வூட்டலாம்
இவளுக்கோ
காக்கும் கடவுளால் கைவிடப்பட்டு
ஈரக்கண்களுள்ள யானைப்படையுடன்
பகை மன்னன் முற்றுகையிட
துணைக்கு யாருமில்லாமல் ஆன
விரிசலிடும் ஒற்றைக் கோட்டையுடைய
சிற்றரசனைப் போல
மரணம் நெருங்கி வருகிறது"


என எளிமைப்படுத்தியிருக்கிறார். படித்து முடித்த சில மணித்துளிகளுக்கு நான் செயலிழந்தவளாயிருந்தேன். "களையுநர்க் காணாது கலங்கிய உடைமதில்" ..... "களையுநர்க் காணாது கலங்கிய உடைமதில்" என மனம் பதற்றமாய் திரும்பத் திரும்பப் பிதற்றிக் கொண்டேயிருந்தது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு பெண்ணின் துயரம்... அவளின் வெம்மை மிகுந்த கண்ணீர்.. இன்னும் அப்படியே இருப்பதை ஒவ்வொருவர் மனதிலும் கனமாய்த் தேங்குவதை, தாள முடியாத கணங்களில் உருகி கண்ணீராய் வழிவதை என்னவென்று சொல்ல? காலம் நகராமல் ஓரிடத்தில் உறைந்து விட்டதாய்த் தோன்றுகிறது.

குறுந்தொகையின் முதல் பாடலான "செங்களம் படக்கொன்று அவுணர்த் தேய்த்த.. " என்ற பாடலை எப்போது படிக்க நேர்ந்தாலும் 'என்ன படிமமிருக்கிறது இதில்?' என அலட்சியமாய் நினைத்ததுண்டு. அதே பாடலை

"வரிகளெங்கும் செம்மை தகதகக்கும் இக்கவிதையை உலகக் கவிதை மரபின் மிகச்சிறந்த கவிப்படிமங்களில் ஒன்றாக நான் முன்வைப்பேன்"

என்கிறார் ஜெயமோகன்! இந்த கட்டுரை படித்தபின்பாக 'சங்ககாலக் கவிதைகள் இன்றைய நவீனக்கவிதைகளை விட இறுக்கமான கவிதைமொழி உடையவை. மேலும் நுட்பமான மெளனங்கள் கொண்டவை' என்ற அவரின் கூற்றை ஏற்றுக் கொள்ள வேண்டியிருந்தது.

நூலாக்குபவன் செய்துவிடக் கூடாத நூற்குற்றங்கள் பத்தினை வரிசைப்படுத்தும் நன்னூல், குன்றக் கூறல்.. மிகைபடக் கூறல்.. ஆகியவற்றை முதன்மைக் குற்றங்களாகக் கூறுகிறது. என் வாசிப்பில் கலைஞரின் குறளோவியம் போல் திகட்டிவிடாமல் சுஜாதாவின் 401 காதல் கவிதைகளைப் போல் பற்றாக்குறையாகவுமில்லாமல் மிகச்சரியாய் வாசிப்பின் நீள அகலங்களுக்குள் பொருந்தி வருகிறது இந்த 'சங்கச் சித்திரங்கள்'.

சங்கப்பாடல்களுக்கு நூலாகவோ இணையத்திலோ சுவாரசியமான விளக்க நூல்களில்லை என்ற வருத்தத்திலிருப்பவர்கள் இந்தநூலை விரும்பிப் படிக்க முடியும். படிக்கையில் மனம் ஓரிடத்திலும் கால் பாவாமல் தாவிச் செல்வதும்.. சிலவிடங்களில் கைகட்டி அமர்ந்துகொள்வதுமாயிருக்கிறது! விரும்பினால் வாங்கி வாசித்துப் பாருங்கள்.


நூற்பெயர் : சங்கச்சித்திரங்கள்

எழுதியவர் : ஜெயமோகன்

வெளியிட்டது : கவிதா பப்ளிகேஷன்

விலை : ரூ.100

Saturday, November 3, 2007

அலையின் பாடல் - கலீல் ஜிப்ரான்

வலிமையான கரையே என் காதலன்; நான் அவனது காதலி.

காதலால் கட்டுண்டவர்கள் நாங்கள். நிலவுதான் என்னை அவனிடமிருந்து இழுக்கிறது.

அவசரமாய் அவனை நோக்கி நான் செல்கிறேன்; சட்டென பிரிகிறேன்; பலமுறை சின்னச் சின்ன விடைபெறல்கள்.

நீலவானத்திற்கு அப்பாலிருந்து வெள்ளி நுரைகளை நான் சட்டென திருடி வந்து, அவனது பொன்மணல் மேல் பரப்பி வைக்கிறேன்.

ஒளிமயமாய் நாங்கள் கூடிக் கலக்கிறோம்.

நான் அவனது தாகத்தைத் தணிக்கிறேன். அவனது இதயத்திற்குள் செல்கிறேன்.

அவன் என் குரலை மென்மையாக்குகிறான்; என் சினத்தை அடக்குகிறான்.

விடியற்காலையில் நான் அவன் காதில் காதலின் விதிகளை ஓதுகிறேன். அவன் ஆசையோடு என்னைத் தழுவிக் கொள்கிறான்.

ஏற்றவற்ற அலைகளின்போது நான் நம்பிக்கையின் பாடல் பாடுகிறேன். அவன் முகத்தின்மேல் இனிய முத்தங்கள் பதிக்கிறேன்.

எனக்கு பயம். எனக்கு வேகம்.

ஆனால் அவன் அமைதி; பொறுமை;சிந்தனை.

அவனது நிம்மதியின்மையை அவனது பரந்த மார்பு அமைதிப்படுத்துகின்றது.

அலையடிக்க நாங்கள் தொட்டுக் கொள்கிறோம். அலை பின்வாங்க நான் அவனது காலடியில் விழுந்து வணங்குகிறேன்.

கடற்கன்னிகளைச் சுற்றி பல முறை நான் நடனமாடியிருக்கிறேன். அவர்கள் என் அடியாழத்திலிருந்து எழுந்து அலை நுனியில் நின்று விண்மீன் பார்ப்பார்கள்.

காதலர்கள் பலமுறை என்னிடம் வந்து முறையிடுவது வழக்கம். நான் அவர்கள் பெருமூச்சு விட உதவுவேன்.

பலமுறை நான் பாறைகளை சீண்டிவிட்டு பார்த்திருக்கிறேன். அவற்றை கிச்சுகிச்சு மூட்டியும் பார்த்திருக்கிறேன். அவை ஒரு முறை கூட சிரிக்கவே இல்லை.

என்னில் மூழ்கிப் போகிற உயிர்களை மென்மையாய் ஏந்தி கரை சேர்த்திருக்கிறேன்.

கரைக்காதலன் என் வலிமை எடுத்தது போல அவர்களுக்கு வலிமை தந்திருக்கிறான்.

பலமுறை நான் அடியாழத்திலிருந்து வைரமணிகளைத் திருடி வந்து என் காதலனுக்குப் பரிசளித்திருக்கிறேன். அவன் மெளனமாய் அவற்றை ஏற்றான். என்னை அவன் வரவேற்பான் என்று இன்னமும் தந்து கொண்டிருக்கிறேன்.

கனத்த இரவில் எல்லாம் உறங்க நான் அமர்ந்து ஒரு்முறை பாடுகிறேன். ஒரு முறை பெருமூச்சு விடுகிறேன். நான் என்றும் விழித்திருக்கிறேன்.

அந்தோ! உறக்கமின்மை என்னை பலவீனப்படுத்திவிட்டது. என்றாலும் நான் காதலியாயிற்றே? காதலின் உண்மை கனத்தது அல்லவா?

நான் களைத்துப் போனாலும் எனக்கு மரணமில்லை!

பி.கு: நூலகத்தில் எதையோ தேடப்போக உண்மையில் புதையலாக கிடைத்தது கலீல் ஜிப்ரானின் "பொன்மணிப் புதையல்". அதிலிருந்து என்னோடு சட்டென்று ஒட்டிக் கொண்ட கவிதை இது! முடிந்தால் விரிவான விமர்சனம் தர முயற்சிக்கிறேன்.

Saturday, September 22, 2007

எனக்குப் பிடித்த கவிதைகள்!

நான் கவிதைப் ப்ரியை! எக்காலத்திலும் எந்நேரங்களிலும் கவிதைகள் என்னை ஈர்த்தபடியும் மயக்கியபடியுமிருக்கின்றன. பிடித்த கவிதைகள் என்று கணக்கெடுத்தால் இன்னொரு வாரம் முழுக்க எழுத நேரிடும். (அப்படியொரு அசம்பாவிதம் நடக்காது. பயப்படாதீங்க!!) என்றாலும் படித்து முடித்ததும் நாய்க்குட்டி போல என் பின்னேயே ஓடி வந்துவிட்ட ஒரு சில கவிதைகளை மட்டும் உங்களுக்கும் அறிமுகப்படுத்துகிறேன். (இனி நீங்களாச்சு, அதுங்களாச்சு!)


1. "என்ன சொல்லி என்ன
என்ன எழுதி என்ன
நான் சொல்ல வருவதைத் தவிர
எல்லாம் புரிகிறது உனக்கு!"


- கனிமொழி

2. "பறிக்க முடியாத
பட்டுப்பூச்சியை மறக்க
பறக்க முடியாத பூக்களை
வெடுக்கெனெக் கிள்ளி
வீசின விரல்கள்"


3. "சிலைகளை விட
மலைகளை விட
பாறைகள் அழகானவை
கூழாங்கற்களும் கூட"

- கல்யாண்ஜி

4." கல்லெறிபட்டும்
கலங்காது
தேனையே சொரிகிறது
தேன்கூடு"

- தேவதேவன்


5. "அதை அவ்வளவுதான்
புரிந்துகொள்ள முடிந்தது
நண்பர்களுக்கு
எதிரியே! உன் கைகளை
முத்தமிட அனுமதி
என் நண்பர்களைவிடவும்
அதை நீ புரிந்து கொண்டதற்கு!"


- மனுஷ்யபுத்திரன்


6. "அநேகமாய்
பார்க்க மறந்தாலும்
தலைக்கு மேல் வானம்
என் நினைவுக்குள்
நீயும்!"

- இரா. சேதுபதி

7. "கவிதைக்குள் வராத
எந்தவொன்றும் உலகில் இல்லை
உன்னை நான்
முத்தமிட்டு உயிர் பெற்ற
எனது காலத்தின்
முதற்கணத்தைத் தவிர"


-ரமேஷ் - ப்ரேம்

8. "எனக்கு யாருமில்லை
நான் கூட"
- நகுலன்


9. "எல்லாக் கவிதைகளுமே
உன்னைப் பற்றியவை தானெனினும்
ஒரு கவிதை கூட
உன்னை மாதிரி இல்லையே?"

- தபூ சங்கர்



10. "விலக விலக
புள்ளி தானே?
நீ மட்டும் எப்படி
விஸ்வரூபம்?"

- இரா. பார்த்திபன்


11. "இன்னும் உடையாத
ஒரு நீர்க் குமிழி
நதியில் ஜீவிக்க
நழுவுகிறது.
கைப்பிடியளவு கடலாய்
இதழ்விரிய உடைகிறது
மலர் மொக்கு"

-பிரமிள்


12. "கடவுளைக் கண்டேன்
எதையும் கேட்கவே
தோன்றவில்லை.
அவரும் புன்னகைத்துப்
போய் விட்டார்.
ஆனாலும்
மனதிலே ஒரு நிம்மதி"


- ஆத்மாநாம்

13. "இனி பார்க்க வேண்டும் என்கிற
ஆசை வருகிற போதெல்லாம்
அந்த வானத்தைப் பார்த்துக் கொள்ளலாம்
எங்காவது ஒரு புள்ளியில்
நம் பார்வைகளாவது
சந்தித்துக் கொள்ளட்டுமே"

-அறிவுமதி


14."..... ஆயத்தங்களில்
கழிகிறது என் காலம்
திறந்து வைத்த கற்பூரம் போல்.."

-பசுவய்யா (சு.ரா)


15. "கூந்தலின்
ஒற்றை முடியென
சந்திப்பின் குறுகிய வெளியில்
என் பிரியங்களைப்
பிரித்துக் காட்ட
அவகாசமேதுமின்றியே
நிகழ்ந்தது நம் பிரிவும்..."

- சல்மா


முலைகள்

16. "....ஒரு நிறைவேறாக் காதலில்
துடைத்தகற்ற முடியாத
இரு கண்ணீர்த் துளிகளாய்த்
தேங்கித் தளும்புகின்றன. "

- குட்டி ரேவதி


17. "பழத்தை சாப்பிட்டு விடு
நாளைக்கென்றால் அழுகிவிடும்
என்றாள் அம்மா
வாங்கி விண்டு உண்டேன்
இன்றை"


- தேவதச்சன்

18. "அந்திக் கருக்கலில்
திசை தவறிய
பெண் பறவை
தன் கூட்டுக்காய்
தன் குஞ்சுக்காய்
அலைமோதிக் கரைகிறது
எனக்கதன் கூடும் தெரியும்
குஞ்சும் தெரியும்
இருந்தும் எனக்கதன்
பாஷை புரியவில்லை."


- கலாப்ரியா


19. "உன் பெயர்
இந்த இரவில்
காலி அறையில்
மாட்டிய கடிகாரம்"

-சுகுமாரன்


20. "சுற்றிலும் இருட்டைவீசி
தயாராக நிற்கிறது இரவு
மனிதர்கள் சுவர்களுக்குள் ஒடுங்க
அனாதைகளாக அழும் தெருக்கள்"

- சமயவேல்


பி.கு: விட்டுப்போனவை இன்னும் இருக்கக் கூடும். (பொழச்சுப் போங்க!)நினைவிலிருந்து எழுதியதால் வரிகளோ கவிஞர்களின் பெயர்களோ மாறுபட்டிருக்கலாம். பிழையிருந்தால் குட்டு (மெதுவாய்) வைத்து திருத்தும்படி வேண்டிக் கொள்கிறேன்.