Showing posts with label திரை விமர்சனம். Show all posts
Showing posts with label திரை விமர்சனம். Show all posts

Thursday, February 14, 2013

சமர் - வி(மர்)சனம்




நீ தானே என் பொன் வசந்தம், கடல், விஸ்வரூபம் ந்னு வரிசையா காய்ச்சு காய்ச்சுன்னு காய்ச்சி “நமக்குப் பிடிச்சிருக்குன்னு சொல்லலாமா கூடாதா? சொன்னா யாராச்சும் மூக்கு மேலயே குத்துவாங்களோ?” ந்னு என்னைய மிரள வெச்சீங்களே மக்கா.. ஒருத்தராச்சும் இந்த வீணாப்போன  ‘சமர்’ பத்தி முன்னாடியே சொன்னீங்களா? போன வருஷம் “ராஜபாட்டை” ந்னு ஒரு படத்துக்குப் போய்ட்டு அப்டியே  நேரா ஹாஸ்பிடல்ல போய் படுத்து 2 பாட்டில் டிரிப்ஸ் இறக்கிகிட்டு தான் வீட்டுக்கே போனோம். அதுக்கப்புறம் இந்த வருஷத்துல ஊரே ஒன்னு கூடி ‘வேணாம்.. பாக்காதீங்க’ ந்னு கத்தியும் கேக்காம கார்த்தியாச்சே.. அனுஷ்காவாச்சே ந்னு சபலப்பட்டு அலெக்ஸ் பாண்டியன் பார்த்தேன்... அதுவும் தன்னந்தனியா.  பாதிப்படம் பாக்கும் போதே “எனக்கு எதாவது ஆய்டுச்சுன்னா அதுக்கு இன்னின்னார் தான் காரணம்”னு  முன்னெச்சரிக்கையா சித்துவுக்கு ஒரு லெட்டர் எழுதி வெச்சிடலாமான்னு தோணுச்சு. ஆனா அதுக்கும் கூட தெம்பில்லாம போய் பழைய படங்கள்ல செத்தவங்க / மயங்கிக் கிடக்கறவங்க பக்கத்துல விஷம்னு எழுதின பாட்டில் ஒன்னு உருண்டு கிடக்குமே.. அதே மாதிரி லேப்டாப் பக்கத்துலயே குத்துயிரும் கொலையுயிருமா நான் உருண்டு கிடந்தேன். அதுக்கப்புறம் அதே மாதிரி நேத்து ஒரு விபத்து. :(

சம்பவம் நடக்கறதுக்கு மொத நாள் நைட் சித்து தனியா என்னவோ லேப்டாப்ல பார்த்துட்டு இருந்தார். கொஞ்சமே கொஞ்சம் பார்த்துட்டு  ரொம்ப உஷாரா ஆஃப் பண்ணிட்டார். சுகமோ துக்கமோ 2 பேரும் சேர்ந்து தான் அனுபவிக்கனும்ன்ற நினைப்பு கூட காரணமா இருக்கலாம். போதாக்குறைக்கு என்கிட்ட ”படம் நல்லா இருக்கும் போலிருக்கு.. நாளைக்கு நாம சேர்ந்து பாக்கலாம்”ன்னு சொல்லிட்டுத் தூங்கினார். இன்னிக்கு பாக்க ஆரம்பிச்சோம்.. ஆரம்பத்துல என்னவோ நல்லாத்தான் போய்ட்டிருந்துது..போகப் போகத் தான் சகிக்கல.   இருங்க.. கதை என்னன்னு சுருக்கமா சொல்ல முடியுதான்னு பாக்கறேன். இதை சுருக்கமா சொன்னாலே உ.த அண்ணாச்சி ’என்னையவா நக்கல் பண்ற?’ ந்னு சண்டைக்கு வர வாய்ப்பிருக்கு. :)

விஷால் பேரு ஷக்தி. ஊட்டில இருக்கார். அவரோட காதலி சுனைனா ”நீ நான் எதிர்பார்க்கற மாதிரியெல்லாம் இல்ல.. என் பர்த் டேவ கூட மறந்துட்ட.. நாம பிரிஞ்சிடலாம்” நு சண்டை போட்டுகிட்டு பாங்காக் போய்டறாங்க. 3 மாசம் கழிச்சு  “உன்னை மறக்க முடியல.. ரொம்ப மிஸ் பண்றேன். பாங்காக் கிளம்பி வா” ந்னு ஃப்ளைட் டிக்கெட்டோட  சுனைனாகிட்டருந்து ஒரு லெட்டர் வருது.. இவரும் கிளம்பிப் போய் சென்னை ஏர்போர்ட்ல பேந்த பேந்த முழிச்சிட்டு நின்னு த்ரிஷாவும் பாங்காக் தான் போறாங்கன்னு அவங்களை ஃப்ரண்ட் புடிச்சிகிட்டு பாங்காக் போய்ச் சேர்றார். அங்க சுனைனா வெய்ட் பண்ண சொன்ன இடத்துல நாள் முழுக்கக் காத்திருந்தும் அம்மணி வரல. நைட் போலீஸ்கார் சம்பத் வந்து என்னா ஏதுன்னு விசாரிச்சுட்டு என் வீட்ல தங்குன்னு கூட்டிட்டு போறார்.  ரெண்டாவது நாளும் சுனைனா வராததால இவரு வெறுத்துப் போய் நான் ஊருக்கே போறேன்னு ரிடர்ன் டிக்கெட் வாங்கி வெச்சிருக்கும் போது திடீர்னு ஒரு டிவிஸ்ட்டு.  ஒரு கும்பல் கார்ல வந்து பொட்டுப் பட்டாசு வெடிக்கறாப்ல விஷாலை கண்டமேனிக்கு சுடுது. (இத்தனை வருஷம் படம் பார்த்த அனுபவத்தை வெச்சி ஒரு குண்டு கூட விஷால் மேல பட்டிருக்காதுன்னு உமக்குத் தெரிஞ்சுதுன்னா நீரும் தமிழரே!)  அப்போ இன்னொரு கும்பல் வந்து பதிலுக்கு பட்டாசு வெடிச்சு விஷாலை காப்பாத்தி கார்ல ஏத்தி கூட்டிட்டு போகுது.  கூட்டிட்டு போற ஆள் “ஷக்தி சார்..நான் உங்க பி.ஏ சார்.. மனோகர். என்னைத் தெரிலயா? என்னாச்சு சார் உங்களுக்கு?” அப்டின்றார். கார்ல இருக்கற எல்லா மேகசின்லயும் விஷால் படமும் பேரும் போட்டு பெரிய பிசினஸ் மேக்னட்னு  எழுதியிருக்குது. விஷாலை நேரா ஒரு  ஹோட்டலுக்கு கூட்டிட்டுப் போய் தங்க வைக்கறாங்க. இவரும் ‘நான் அவனில்லை’ ந்னு கத்திகிட்டே என் பாஸ்போர்ட்டைப் பாருங்கன்னு எடுத்துக் குடுக்கறார். ஊட்டிய விட்டு மொத தடவையா பாங்காக் வந்திருக்கற விஷால் பாஸ்போர்ட்ல எல்லா நாட்டு விசாவும் இருக்குது. விஷால் கன்னாபின்னான்னு குழம்பி நம்மளையும் குழப்பி த்ரிஷாகிட்ட போய் புலம்பறார். அவங்க போலீஸ்கிட்ட கூட்டிட்டு போறாங்க. போலீஸ் விஷாலுக்கு சல்யூட் அடிக்குது.. பேங்க்குக்கு போய் ”நான் வேற ஆளு என் கையெழுத்தை செக் பண்ணுங்க”ன்னு கையெழுத்து போட்டுக் குடுத்தா அது மேட்ச் ஆகி அக்கவுண்ட்ல கோடிக்கணக்குல பேலன்ஸ் காமிக்குது. த்ரிஷாவே மிரண்டு போய் “யார் நீ உண்மையை சொல்லு..” ந்னு மிரட்டறாங்க. ஊடால ஹோட்டல் லிப்ட்ல ஒரு பொண்ணு “நீ மாட்டிகிட்டிருக்க.. உடனே ஓடிப் போயிரு” ந்னு ஒரு துண்டு சீட்டுல எழுதி ரகசியமா கைல குடுக்குது. அது டைரக்டர் ரகசியமா நமக்குக் குடுக்கற மெசேஜ்ன்னு அப்பவே உங்களுக்குப் புரிஞ்சிடுச்சின்னா உங்க ஐ க்யூ லெவல் 200 க்கு மேல இருக்குன்னு அர்த்தம். நீங்க எங்கயோஓஓ போய்டுவீங்க.. :))

இப்ப அடுத்த டிவிஸ்ட்டு. மறுநாள் ஹோட்டலுக்குப் போனா விஷாலோட செக்யூரிட்டீஸ், பி.ஏ ந்னு யாரையும் காணோம். இங்க ஷக்தின்னு யாருமே தங்கலன்னு சொல்லி ஆள் வெச்சு துரத்தறாங்க. அப்ப தான் ஹீரோ ஒரு விஷயத்தை கவனிக்கறார்.. அவர் மொத நாள் லிப்ட் ஏறப் போகும் போது டென்ஷன்ல லிப்ட் பக்கத்துல இருந்த 5 குருவி பொம்மைகள்ல ஒன்னை வேற டைரக்‌ஷன்ல திருப்பி வைப்பார். அது இன்னும் அதே திசைல தான் இருக்கும்..  அவர் தங்கியிருந்த ஹோட்டல் ரூம்லயும் அதே மாதிரி 2 குருவி பொம்மை இருக்கும். ஒரு போலீஸ்கார் வீட்ல 2 நாள் தங்கியிருந்தாரே அந்த வீட்லயும் அதே மாதிரி 2 குருவி பொம்மை இருக்கும். எல்லாம் ஒவ்வொன்னா பளிச் பளிச் நு மின்னல் மாதிரி அவருக்கு நியாபகம் வந்ததும் எதோ பெரிய உண்மையை கண்டுபிடிக்கப் போறார்னு எதிர்பார்த்தேன்.. அதான் இல்ல. ”எல்லாப் பக்கமும் குருவி பொம்மையைக் காட்டறாங்க.. அப்டின்னா என்ன அர்த்தம்? குருவி படத்துல ஹீரோயின் யாரு? த்ரிஷா! அப்ப த்ரிஷா தான் இதுக்கெல்லாம் காரணமா இருக்கனும்” அப்டின்னு சி ஐ டி ஜெய்சங்கர் ரேஞ்சுக்கு நானே உண்மையைக் கண்டுபிடிக்க டிரை பண்ணிட்டிருக்கேன்... இந்த மக்கு விஷால் என்னடான்னா அமிர்தாஞ்சன் விளம்பரம் மாதிரி தலையைப் பிடிச்சிகிட்டு “குழப்பமா இருக்கே” ந்னு கத்தறார். 

அப்றம் மறுக்கா ஒரு டிவிஸ்ட்டு.. எதேச்சையா சுனைனாவே நேர்ல வந்து ”நான் உனக்கு லெட்டர் எதுவும் போடவே இல்ல.. உன்னை காதலிக்கவும் இல்ல” ந்றாங்க.  அதுக்கு பதிலா த்ரிஷா “நான் உன்னை காதலிக்கறேன்”ன்றாங்க. விஷால் முடியாதுன்றார். நியாயமா இந்த இடத்துல “காதல்ன்றது... “ அப்டின்னு தொடங்கி சோகமா 7 பக்கத்துக்கு வசனம் வெச்சிருக்கனும். ஹ்ம்ம்.. டைரக்டருக்கு சாமர்த்தியம் போதல.  அப்றம் விஷால் ”நான் ஊருக்கே போறேன்”னு  கிளம்பும் போது ஏர்போர்ட் வாசல்ல த்ரிஷாவை யாரோ துரத்தறாங்க. இவரு திரும்பி வந்து சண்டை போட்டு காப்பாத்திட்டு இனிமே உன் கூடவே இருக்கேன்றார். அப்றம்  தனக்கு பிஏ ந்னு சொல்லிட்டிருந்த ஆளை எங்கயோ ரோட்ல பார்த்து அரை மணி நேரமா துரத்தி ஒரு மணி நேரம் அடிச்சு “நீ யாரு.. என்ன ஏது” ந்னு கேள்வியா கேக்கறார் ஹீரோ. அந்தாள் ”நான் உண்மையை சொல்லலன்னா நீ என்னை கொன்னுடுவ.. நான் உண்மையை சொல்லனும்னு நினைச்சாலே அவங்க என்னை கொன்னுடுவாங்க. அவங்களை நீ நெருங்கவே முடியாது.. அவங்க கடவுள் டா..” ந்னு அவங்க அப்டி அவங்க இப்டின்னெல்லாம் சொல்லிட்டு லூசு மாதிரி “அது என்ன உண்மைன்னா” ந்னு சொல்ல ஆரம்பிக்கறார். உடனே யாரோ சுட்டு கொன்னுடறாங்க. அந்தாளே குப்புறடிக்க சாக்கடைல விழுந்துடறார். காலைல போலீஸ் வந்து பிணத்தை எடுத்தா அது வேற யாரோட பிணமோவாம். அது ஒரு கஞ்சா வியாபாரி. ”உனக்கும் அவனுக்கும் என்ன தொடர்பு? யூ ஆர் அண்டர் அரஸ்ட்” னு விஷாலை ஜெயில்ல போட்டுடறாங்க. அவ்வ்வ்வ்வ்வ்.. அய்யோ.. அம்மா.. அய்யோ.. அம்மா.. 

அப்றம் த்ரிஷாவோட அங்கிள்னு சொல்லிகிட்டு ஜெயப்பிரகாஷ் வந்து விஷாலை வெளில கொண்டு வர்றார். மறுநாள் திரும்ப விஷால் இந்தியா கிளம்பினா திரும்ப த்ரிஷாவை யாரோ கடத்திட்டு போய்டறாங்க. கடத்திட்டு போற வேனை வேகமா ஃபாலோ பண்ணுங்கன்னு ஜெயப்பிரகாஷ்கிட்ட சொன்னா அவர் வண்டிய ஓரமா நிறுத்தி வெச்சிட்டு ஒரு படகுல விஷாலை எங்கயோ கூட்டிட்டு போறார். அங்க ஸ்ரீமன் உக்காந்துகிட்டு “அந்தப் பொண்ணை மாலி தான் கடத்தியிருப்பான்.. அவனை நெருங்கவே முடியாது. அவளை மறந்துடுங்க” ந்னு சொல்றார். விஷால் அங்க போய் மாலிய அடிச்சிப் போட்டுட்டு த்ரிஷாவை காப்பாத்தறார். த்ரிஷாவை கல்யாணம் பண்ணிக்கலாம்ன்ற முடிவுக்கு வரும்போது த்ரிஷாவோட காதலன்னு சொல்லிகிட்டு ஒரு ஆள் வர்றார். ஊடால ஊடால 2 வில்லனுங்க நைட்ரஸ் ஆக்ஸைடை  மோந்த மாதிரி சும்மனாச்சுக்கும் சிரிச்சிகிட்டே இருக்காங்க. அப்றம் த்ரிஷா செத்துப் போறாங்க... ஆனா சாகல. அப்றம் 2 வில்லனுங்களும் செத்துப் போறாங்க.. ஆனா பாருங்க அவங்களும் சாகல. கடைசியா வில்லன்ஸோட ஆளுங்களே அவங்களைக் கொல்றாங்க. அப்பவும் அந்த லூசுங்க பக பக ந்னு சிரிச்சிகிட்டே இருக்குதுங்க. இதுங்களுக்கு ஒரு பைசாப் பொறாத  ஃப்ளாஷ்பேக் வேற.  முக்கால்வாசிப் படம் பார்க்கும்போது விஸ்வரூபத்துக்கு வருதோ இல்லையோ சமருக்கு பார்ட் 2 கண்டிப்பா வந்தே தீரும்.. இது இப்போதைக்கு முடியாது போலயே ந்னுசெம டயர்டாய்டுச்சி. :((

கட்டங்கடைசியா வில்லனுங்களும் செத்தப்புறம் யாருக்குன்னே தெரியாம விஷால் ஒரு பஞ்ச் டயலாக் பேசறாரு.. “வாழ்க்கை சிலருக்கு வரமா இருக்கும்.. சிலருக்கு சாபமா இருக்கும்.. ஆனா எனக்கு அது யுத்தம்டா” ந்னு. சொக்கத்தங்கம்  படத்துல தன் தங்கச்சிய கிண்டல் பண்ணினவனை ஓங்கி அறைஞ்சிட்டு ”இன்னும் 10 நிமிஷத்துக்குள்ள இவனை ஹாஸ்பிடல் கொண்டு போங்க.. இல்லன்னா செத்த்த்த்துடுவான்” அப்டின்னு கேப்டன் சிரிக்காம சொல்வார். அதை பாக்கறப்பல்லாம் நான் சிரி சிரின்னு சிரிப்பேன். அதுக்கப்புறம் இந்த டயலாக்குக்கு தான் விழுந்து விழுந்து சிரிச்சேன். படம் முடிஞ்சி எழுந்து ரூமுக்குள்ள போகும் போது காலண்டர்ல பார்த்தா 16 - 02 - 2013 ந்னு இருந்துச்சு.. அப்டியே ஷாக்காகி “ ஏம்ப்பா 2 நாளாவா படம் பார்த்துகிட்டு இருக்கோம்?” ந்னு சித்துகிட்ட கேட்டேன். “இல்லம்மா 12 மணி ஆய்டுச்சேன்னு நான் தான்  தேதி கிழிச்சேன்.. கூடவே 2 ஷீட் சேர்ந்து கிழிஞ்சிடுச்சி” ந்னார்.  :)

Tuesday, September 30, 2008

காதலில் விழுந்தேன் - விமர்சனம்


நடிப்பு: நகுலன், சுனேனா, சம்பத்
இசை: விஜய் ஆண்டனி
இயக்கம்: பி.வி.பிரசாத்
தயாரிப்பு: சன் பிக்சர்ஸ்

நீங்கள் 13 வயதிற்குட்பட்டவர் அல்லது 19 வயதிற்கு மேற்பட்டவர் எனில், சாலையில் வாகனம் மோதி இறந்து கிடக்கும் நாய், பூனை மற்றும் மனிதர்களையும், கசாப்புக் கடையில் கழுத்தறுபட்டுக் கொண்டிருக்கும் ஆட்டுக்குட்டியையும் ஒருபோதும் காணச் சகியாதவர் எனில், பிப்ரவரி 14ம் தேதியை 'மற்றுமோர் நாளாக' மட்டுமே பாவிக்கும் யதார்த்தவாதி எனில், 'காதலில் விழுந்தேன்' உங்களுக்குரிய படமல்ல.

அதிலும் சித்தப்பாக்கள், சித்திகள், குழந்தைகள், மாமா, அத்தை, பாட்டி, தம்பி, தங்கை என குடும்ப சகிதமாய் சென்று பார்ப்பவர்களுக்கு நிச்சயம் உகந்த படமல்ல. நேற்று முன்தினம் மாலை சொந்தங்கள் சந்தித்துக் கொண்ட அபூர்வ நாளை கொண்டாடுவதென முடிவெடுத்து இந்த திரைக்காவியத்தைப் பார்க்கப் போய் பாரபட்சமின்றி எல்லோரும் ஒருசேர துயரத்தில் விழுந்தோம். பட்ட காலிலே படும் என்பார்கள். எனக்கு பட்ட தியேட்டரிலேயே படுகிறது.

கடந்த 11 வருடங்களுக்கும் மேலாய் திரையரங்கு பக்கம் வந்திராத எங்கள் தாத்தி (பாட்டி) படத்தின் நடுவே என்னை அழைத்து 'என்னைக் கூட்டிட்டு வர வேற நல்ல படமே கிடைக்கலயா உங்களுக்கு?' என்றார்கள் பரிதாபமாய். என் 3 வயது குட்டித் தங்கை திரையில் ரத்தத்தைப் பார்த்ததும் வீறிட்டு அழத் தொடங்கியவள்... நிறுத்தி நிறுத்தி படம் முழுக்க அழுது கொண்டேயிருந்தாள். இரவுக் காட்சி என்பதால் பாதுகாப்பின் அவசியமுணர்ந்து, எழுந்துபோக வழியின்றி சித்தப்பாக்கள் சங்கடமாய் நெளிந்து கொண்டிருந்தார்கள். என்னைப் பற்றிச் சொல்ல வேண்டுமா என்ன?

சரி கதைக்கு வருவோம்.. யாரோ 4, 5 பலவான்கள் துரத்தி வர அவர்களிடமிருந்து காதலியை காப்பாற்றி புகைவண்டியிலேறி காதலர்கள் உடன்போக்கு செல்லும் காட்சியில் தொடங்குகிறது படம். கதைகளில், திரைப்படங்களில் வரும் காதலுக்கு எப்போதும் நாமெல்லோருமே முழு ஆதரவாளர்கள் தான் என்பதால் 'அப்பாடா தப்பியாச்சு' என்ற ஆசுவாசமும் 'அவனுங்க ஃபாலோ பண்ணாமஇருக்கனுமே' என்ற பதற்றமும் ஒருமித்து எழுகிறது. காதலியை படுக்க வைத்துவிட்டு டிக்கெட் பரிசோதகர் லிவிங்ஸ்டனிடம் தங்கள் கதையை சொல்லவாரம்பிக்கிறார் நாயகன். (வீரத்தளபதி ஜே.கே.ரித்தீஷ் அல்ல)

ஏழை நாயகன் நகுலன், செல்வந்த நாயகி சுனேனா. ஓர் நாள் சுனேனாவின் துப்பட்டா மிக அழகாய் காற்றில் பறந்து சென்று நகுலனின் முகத்தை மூட, தமிழ் சினிமா நியதிப்படி காதல் வந்திருக்க வேண்டிய காட்சியில் எதிர்பாராத விதமாய் விபத்து வந்துவிடுகிறது. (இரண்டும் ஒன்றுதான் என்கிறீர்களா!) தன்னால் தான் விபத்து நேர்ந்தது என்ற குற்ற உணர்வின் நீட்சியில் நகுலனை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்து பணிவிடைகளும் செய்கிறார் சுனேனா. விபத்து நட்பாகி, நட்பு காதலாகிறது. திடீரென விளையாட்டுப் போட்டிக்காக வெளியூர் சென்று திரும்பும் நகுலனிடம் சுனேனா இறந்து விட்டதாக சொல்கிறார்கள் நண்பர்கள். அதை நம்ப மறுக்கும் நகுலன் மார்ச்சுவரிலிருந்து காதலியின் பிரேதத்தைத் தூக்கிக் கொண்டு போகிறார். முதல் காட்சியில் ரயிலில் அவர் படுக்க வைத்ததும் அதைத்தான் என்பது தெரிய வரும்போது 'ஏப்ரல் ஃபூல்' ஆனது போல் முகத்தில் அசடு தட்டுகிறது நமக்கு. சுனேனாவைக் கொன்றது நகுலன் தான் என்று காவல்துறை தீவிரமாக தேடிக்கொண்டிருக்க, கொன்றது யாராயிருக்குமென நம்மையும் தீவிரமாய் யோசிக்க வைத்து 'அட..இது கூடவா தெரில? சொத்துக்காக அவங்க சித்தப்பா தான் கொன்னுட்டார்' என்று பாரம்பரியமிக்க புராதன முடிவையே சொல்லி அசத்தியிருக்கிறார்கள்!

காதலர்கள் பைக்கில் சுற்றுதல், ஹோட்டலில் சந்தித்தல், மேசையினடியில் காலுரசிக் கொள்ளுதல், பூக்கள் சிதறிக்கிடக்கும் சாலையில் கைகோர்த்து நடத்தல், தனியறையில் அரைகுறை ஆடையில் நடனமாடுதல், இதழோடு இதழ் பொருத்தி முத்தமிட்டுக் கொள்ளுதல் உள்ளிட்ட வழமையான தமிழ்த்திரையம்சங்கள் எதற்கும் குறைவின்றி, காட்சிக்குக் காட்சி ஏதோவோர் படத்தை நினைவூட்டியபடி நகர்கிறது முற்பாதி.

முற்பாதி தான் இப்படி நிறைய படங்களை ஞாபகப்படுத்துகிறதே தவிர பிற்பாதி படம் அப்படியில்லை. அது சந்தேகத்திற்கிடமில்லாமல் முழுமையாய் கமல்ஹாசனின் 'குணா'வை மட்டுமே நினைவில் நிறுத்துகிறது! படம் ஆரம்பித்ததிலிருந்தே இறந்து போன காதலியின் உடலைத்தான் நகுலன் தூக்கிக் கொண்டு அலைகிறார், 'எங்களை வாழ விடுங்கள்' என்று எல்லோரையும் கெஞ்சிக் கொண்டு திரிகிறார் என்பதை இடைவேளை முடிந்ததுமே இயக்குனர் சொல்லி விடுவதால், படம் முடிந்துவிட்ட திருப்தியோடு பார்வையாளர்கள் அப்போதே கிளம்பி விட ஏதுவாயிருக்கிறது! இதன் மூலம் படம் பார்ப்பவர்களுக்கு நேரம் வெகுவாய் மிச்சமாகிறது!!

நாயகி சுனேனா அழகாக இருக்கிறார். பிரேதம் போலவே மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்! ஆனால் எப்போது சாவார், எப்போது பிழைத்தெழுந்து நடனமாடுவார் என்பது இயக்குனருக்கே புரியாத புதிராயிருந்திருக்க வேண்டும். தோழிக்கு காதல் கடிதம் கொடுத்த நண்பனுக்கு "இது படிக்கற வயசு.. நீ எவ்ளோ கஷ்டப்பட்டு ஃபீஸ் கட்றன்னு எனக்கு தெரியும். படிப்பை கவனிடா" என்று அட்வைசிக் கொண்டிருந்த நாயகி, வீட்டை விட்டு துரத்தப்பட்டு தன்னிடமே அடைக்கலமாகியிருக்கும் நகுலன் தன்னைக் காதலிப்பது தெரிந்ததும், தன் கல்லூரியிலிருந்து விலகி அவர் வகுப்பிலேயே சேர்ந்து பயில்கிறார். காதலித்தாலும் கல்லூரி மாறியாவது கல்வியைத் தொடர வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள் போலிருக்கிறது. காதல் புகினும் கற்கை நன்றே!

படம் முழுக்க கையில் கிடைப்பவர்களை எல்லாம் கொன்று தீர்க்கிறார் நகுலன். இறுதிக்காட்சி கொடூரம்.

சரி... ஒட்டுமொத்தமாய் குறை மட்டும் சொல்வானேன்?

1. நகுலனின் நடிப்பை நிச்சயம் பாராட்டியாக வேண்டும். பாய்ஸில் பார்த்த நகுலனில் கால்வாசி நகுலன் தான் இருக்கிறார் இப்போது! நடனத்திலும் சண்டைக் காட்சிகளிலும் மின்னல் வேகம். கோபமும் குழந்தைத்தனமும் மாறி மாறி பிரதிபலிக்கிறது முகத்தில்.

2. படத்தின் மற்றுமோர் நாயகன் 'நாக்க முக்க' பாடல். அரங்கம் அதிருகிறது. படத்தில் 2 முறை இடம் பெற்றிருந்தபோதும் ஒவ்வொரு முறையும் ஒன்ஸ்மோர் கேட்டபடி குத்தாட்டம் போடுகிறார்கள் இளைஞர்கள்.

3. விஜய் ஆண்டனியின் இசையும் தாமரையின் வரிகளும் பாடல்கள் படமாக்கப்பட்டிருக்கும் விதமும் ஒன்றையொன்று விஞ்சத் துடிக்கின்றன.

4. மலைப்பிரதேசத்தில் தொலைவில் நடக்கும் சண்டைக்காட்சி அருமை.

5. படத்தில் குறிப்பிடத்தக்க மற்றுமோர் நபர் காவல்துறை அதிகாரியாய் வரும் சம்பத். சரோஜாவிலேயே கலக்கியிருந்தார் மனிதர். இதிலும் குறை வைக்கவில்லை.

தன்னால் இயன்றவரை திரைக்கதையை வைத்து சமாளிக்க முயன்றிருக்கிறார் இயக்குனர் பி.வி.பிரசாத். அத்தனை முயற்சிகளும் கதையிலிருக்கும் மாபெரும் ஓட்டையில் விழுந்து விடுவது தான் பரிதாபம்.

பி.கு: சரோஜா படம் ரொம்ப நல்லாருக்கு!