"எல்லாத்தையும் விட்டுட்டு செத்துப் போய்டலாமா?" என்று எந்த ஒரு வலி மிகுந்த கணத்திலாவது நீங்கள் நினைக்காமல் இருந்ததுண்டா?
முதுகின்மேல் கனக்கும் வாழ்க்கையின் பாரம் அதிகரிக்கையில், துயரங்களின் துரத்தல்களுக்குப் பணிந்து ஓடிக் களைத்து மூச்சிரைத்து நிற்கையில் ஏதோவோர் கணத்தில் எல்லோருக்குமே விட்டு விடுதலையாவதற்கான வேட்கை வருகிறது இல்லயா? சாலைச் சந்திப்பில் நின்றபடி போக வேண்டிய பாதையைத் தேர்ந்தெடுப்பது போலவே பிரச்சினைகளின் விளிம்பில் நின்றபடி வாழ்வா? சாவா? என்று திசை தீர்மானிக்க வேண்டிய கட்டாயங்களுக்கு 'தற்கொலை' மிகச்சிறந்த தப்பித்தலாய் அமைந்து விடுகிறது.
நேற்றும்கூட தனது இரண்டு பிள்ளைகளுடன் தீக்குளித்து இறந்து நேற்றைய முக்கியச்செய்திகளில் இடம்பிடித்தார் ஒரு பெண். இப்படி தினமும் காலையில் கொலையும் தற்கொலையுமான தகவல்களால் நிரம்பிவரும் நாளிதழ்கள் எல்லாம் கண்களுக்கும் கவனங்களுக்கும் வெகுவாய் பழக்கப்பட்டுப் போய் நம்மை சகஜ நிலையிலேயே வைத்திருப்பது எத்தனை குரூரமானது?
மக்கள் தொடர்பு ஊடகங்களை பகுதிநேரங்களில் சார்ந்திருக்கும் நான் தினமும் ஒரு சில மரணச்சேதிகளையாவது ஊருக்குச் சொல்ல வேண்டியவளாயிருப்பதால், "தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்" "மண்ணெண்ணை ஊற்றிக் கொண்டு தீக்குளித்தார்" என்பன போன்ற சொற்கோர்வைகள் ஏதோ "இன்று திங்கட்கிழமை"" என்பது போலத்தான் காதில் விழுகின்றன. மேலதிகமாய் விஷம் குடித்து மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பவன் சற்று வீரியமுள்ள எதையாவது குடித்துத் தொலைத்திருக்கக் கூடாதா? தலைப்புச் செய்திக்கு உபயோகப்பட்டிருக்குமே என்ற ரீதியிலான தொழில் தர்மங்களையும் சந்தித்ததுண்டு. என்றாலும் சில துர்மரணங்கள் கண்ணாடியில் வீசப்பட்ட கல்லாய் உணர்வுகளை, வாழ்வின் அஸ்திவாரங்கள் மீதான அடிப்படை நம்பிக்கைகளை சிதறடித்துப் போவதைத் தவிர்க்க முடிவதில்லை.
சேலத்தில் 10 மாதக்குழந்தையை கிணற்றில் வீசிக் கொன்று தானும் தூக்கு மாட்டி இறந்து போனாள் ஒரு தாய். கிணற்றிலிருந்து தண்ணீர் எடுப்பது போல வாளியில் எடுத்தார்கள் அந்த குழந்தையை. வாளியின் பக்கவாட்டில் சாய்ந்தபடி உறங்குவது போல மரித்திருந்த அந்தப் பிள்ளை இரண்டு வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் எதோவோர் நடுநிசியிலும் பின்னிரவுகளிலும் என் உறக்கம் கலைத்தபடியே இருக்கிறது.
இதோ நாம் சந்தோஷமாய்ச் சிரித்துக் கொண்டிருக்கிற நிம்மதியாய் உறங்கிக் கொண்டிருக்கிற, கதைத்துக் கொண்டோ, காதலித்துக் கொண்டோ, பொழுது போக்கிக் கொண்டோ இருக்கின்ற இந்த கணங்களில் எங்காவது யாராவது நெஞ்சம் வெடிக்கும் வேதனையிலும் விரக்தி மற்றும் வெறுப்பைச் சுமந்தபடியும் சாவதற்கான ஆயத்தங்களைச் செய்து கொண்டிருப்பார்களோ என்ற எண்ணம் அதிபயங்கரமாயும் தாங்க முடியாததாயுமிருக்கிறது.
கொடைக்கானலில் சூசைட் பாய்ண்ட் பார்த்தபோதும் கூட அடிவயிற்றில் சில்லிட்ட பயத்தை விடவும், வழியும் கண்ணீருடனோ விரக்தியில் வாடிப்போன முகத்துடனோ அங்கு வந்து நின்றிருந்து கசப்பின் உச்ச கணங்களில் உயிரை வீசியெறிந்து தற்கொலை கொண்ட மனிதர்களைப் பற்றிய கற்பனை தாங்க முடியாததாயிருந்தது. அங்கு வீசும் காற்றிலும் அவர்களின் துயரமும் கண்ணீரின் ஈரமும் மிச்சமிருப்பதாய்ப் பட்டது.
நினைவறிந்து இதுவரை 2 முறை என்னை உலுக்கியெடுத்த உயிரிழப்புகள் நிகழ்ந்திருக்கின்றன. முதல் தற்கொலை ஜெயஸ்ரீயினுடையது. 'பள்ளியிறுதித் தேர்வில் தோல்வி' என்ற வெகு அற்பமான காரணமே வாழ்க்கையை முடித்துக் கொள்ள போதுமானதாயிருந்தது அவளுக்கு. பாதம் மறைக்கும் பட்டுப்பாவாடைகளும், காதை நிறைக்கும் சதங்கைக் கொலுசும், திரும்பிப் பார்க்க வைக்கும் முகமும் ஜெயஸ்ரீயின் தனித்துவமான அடையாளங்கள்.
என்ன காரணத்தாலோ என்னை மிகவும் நேசிப்பவளாயிருந்தாள். எப்போதும் அவள் என்னுடனே இருந்தாளென்பதை அவள் இல்லாத நாட்களில் தான் என்னால் உணர முடிந்தது. அவள் அன்பை அவ்வப்போது தேவைக்கேற்ப மட்டுமே நான் பயன்படுத்திக் கொண்டேன் என்ற குற்ற உணர்வை அவள் மரணம் என் மனதில் நிரந்தமாக்கிவிட்டுப் போயிருக்கிறது.
ஜெயஸ்ரீ நல்ல நிறம். தாழம்பூ போலிருக்கிறாள் என்று கூட நான் நினைத்ததுண்டு. தேர்வு முடிவு வந்த அன்று மாலை பூட்டிய அறைக்குள் மண்ணெண்ணெய் ஊற்றி பற்றவைத்துக் கொண்டாள் என்றும் அரை மணி நேரம் எரிந்து கொண்டிருந்தாள் என்று சொன்னார்கள். போய்ப் பார்க்கும் அளவிற்குத் திராணியில்லை எனக்கு.
காதல், கடன், வன்கலவி இவற்றின் வரிசையில் தற்கொலைக்குத் தூண்டும் காரணிகளில் ஒன்றாய் தேர்வு முடிவுகளும் இருக்கும் அவலம்ம் நம் நாட்டில் மட்டும் தானா?
அதன் பின்னாய் 6 வருடங்கள் கழித்து மீண்டும் அதே அளவிற்கு அதிர்ச்சி தந்தவள் சிந்தியா... வெகு அழகு. வட்ட முகம்.. எப்போதும் சிரித்தபடியிருக்கும் உதடுகள். மிகுந்த தைரியசாலியான பெண் என்று சொல்ல வைக்கும் தோற்றம். ஆனால் அவளின் அலங்காரமும் ஆர்ப்பாட்டமான பேச்சும் சுற்றியிருப்பவர்களுக்கு அவளின் பத்தினித்தனத்தைச் சந்தேகிக்க உதவுவனவாய் இருந்தன.
ஒரு முறை ஹேண்ட்பேக்கிலிருந்து நீளமாயிருந்த செயின் ஒன்றை எடுத்து கழுத்தில் மாட்டிக் கொண்டிருந்தாள். "இதென்ன டிசைன்? வித்தியாசமாய்..?" என்றதற்கு "இதுவா? இது தாலி" என்றாள் அலட்சியமாய். சில நேரங்களில் 'அவள் அப்படித்தான்' பட கதாநாயகியை நினைவூட்டும் படியாய் நடந்து கொள்வாள்.
சில பல மாதங்கள் கழித்து வெகு சோம்பலாய் நகர்ந்து கொண்டிருந்த அலுவலக மாலை நேரத்தை "சிந்தியா சூசைட் பண்ணிகிட்டா" என்ற செய்தியின் மூலம் பரபரப்பாக்கினாள். பதறியடித்துக் கொண்டு பார்க்கப் போனோம். ஹால் நடுவில் அவள் கிடத்தப்பட்டிருக்க மூலையில் டிவி ஓடிக் கொண்டிருந்தது. எவரையும் இழந்ததற்கான அறிகுறி எதுவும் அவள் கணவன் மற்றும் குடும்பத்தாரின் முகத்தில் இருந்ததாய் தெரியவில்லை.
கண்கள் பிதுங்கிய நிலையிலும், மூக்கிலும் கடைவாயிலும் ரத்தம் வழிந்தோடிய நிலையிலும் விகாரமடைந்திருந்த அவள் முகத்தைப் பார்த்தபோது வாழ்க்கை மீதான நம்பிக்கைச் சங்கிலியில் சில இணைப்புகள் சட்டென்று விட்டுப் போயின. அவள் இறப்பிற்கான காரணம் தெரியவில்லை. ஏன்? எதற்காக என்ற கேள்விகள் மட்டுமே எஞ்சியிருந்தன எல்லோரிடமும்.
அவள் உயிரோடிருந்தபோது "அது கேசுப்பா" என்று வர்ணித்த ஆண்கள் எல்லோரும் எத்தனை 'ஒழுக்க சீலர்கள்' என்பதையும் எல்லோரது குரலிலும் "சீச்சி இந்தப் பழம் புளிக்கும்" என்ற ஏமாற்ற தொனியிருந்ததையும் நான் அப்பட்டமாய் உணர்ந்திருக்கிறேன். காலங்காலமாய்ச் சொல்லிக் கொடுக்கப்பட்டு வருவதைப் போல அவள் 'குத்துவிளக்காய்' இல்லாவிட்டாலும் உண்மையில் அவள் நெருப்பாகவே இருந்தாள். ஏன் அணைந்து போனாளென்பது அவள் மட்டுமே அறிந்த ரகசியம்.
"பெண் ஒழுக்கமாயிருப்பதை விடவும் தான் ஒழுக்கமாயிருப்பதை ஒவ்வொருவரிடமும் நிரூபித்துக் கொண்டேயிருக்க வேண்டும்" என்ற அசிங்கமான உண்மையை அவள் மெளனமாய்ச் சொல்லிப் போயிருக்கிறாள் என்றே தோன்றியது எனக்கு.
இரக்கமற்று மீண்டும் மீண்டும் தோற்கடித்துக் கொண்டே இருக்கும் வாழ்க்கையை பழிவாங்குவதற்கான இறுதி முயற்சியாய் மனிதர்கள் தற்கொலையைத் தேர்ந்தெடுக்கிறார்களா? சாவைத் தீர்மாணிக்கும் கணங்கள் வெகு சொற்பமாய் இருந்தபோதும் எளிதில் கடந்து விட முடியாத தொலைவாய் நீள்கின்றன. மரணத்தை அதன் வாசலிலேயே சந்திக்கவும் ஓர் அசாத்திய தைரியம் தேவைதான் இல்லையா?
"தற்கொலை என்பது கோழைத்தனம்" " கோழைகள் எடுக்கும் துணிச்சலான முடிவு" என்றெல்லாம் வக்கணையாய்ப் பேசிக் கொண்டாலும் அந்தக் கணங்களை நேரடியாய்ச் சந்திக்க நேர்கையில் எல்லோரிடமும் மிஞ்சுவது எதுவும் கையாலாகாத இயலாமை மட்டுமே. இத்தனை குரூரங்களுக்கு மத்தியில் தான் நாமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என நினைக்கையில் கனிமொழியின் வரிகளைத்தான் சொல்லிக் கொள்ளத் தோன்றுகிறது.
" அகால முடிவுகள் என்ற செய்திகளோடுவிடியும் நாள்களைவாழவும் முடியவில்லைவாழாதிருக்கவும் முடியவில்லை"