Sunday, June 24, 2007

பாசக்காரக் குடும்பம் - சந்திப்பு!

மயிலாடுதுறையில் பாசக்கார குடும்பத்தினர் சந்திப்பு இன்னிக்கு கலகலப்பா நடந்துச்சு! பதிவு போடனுமேன்னு அடிச்சு பிடிச்சு ஊருக்கு வந்தா அதுக்குள்ள கண்மணி அக்கா முந்திகிட்டாங்க! வழக்கமா இந்த வலைப்பதிவர் சந்திப்புன்னு அறிவிப்பு வந்தா நான் போறதே இல்லீங்க.. நாம வேற புதுசாச்சே.. போனா யாரப் பாத்து என்ன பேசறது? 'ஏன் இப்டி எல்லாம் எழுதி எங்கள கொடுமைப்படுத்தறீங்க'ன்னு யாராச்சும் சண்டைக்கு வந்துடுவாங்களோன்னு பயம்தான்!

'இது பதிவர் சந்திப்பு' இல்ல.. பாசக்கார குடும்ப சந்திப்புன்னு அபிஅப்பா தெளிவா சொன்னதால தைரியமா கிளம்பிட்டேன். அபிபாப்பாவோட குட்டித்தம்பிய பாக்கப் போனோம்னு தான் பேரு.. அவன பாத்ததென்னவோ வெறும் 10 நிமிஷம் மட்டும்தாங்க.. அங்கியும் சும்மா கும்மி களை கட்டிருச்சு.

நம்ம அண்ணாச்சி நைட்ல இருந்தே 'கிளம்பிட்டிங்களா' 'எத்தன மணிக்கு பஸ் ஏறுரீங்க' ன்னு விசாரிச்சுட்டே இருந்தார். 'ச்சே! என்னவொரு அக்கறை'ன்னு நெகிழ்ந்து போய் காலைல 5.20 க்கெல்லாம் மாயவரத்துல இறங்கி போன் பண்ணினா... 6.15 வரை மனுஷர் போன எடுக்கவே இல்லீங்க! 'தூங்கிட்டாரா.. இல்ல வீட்ட காலி பண்ணிட்டு கிளம்பிட்டாரா'ன்னு தெரியல. அட்ரசும் தெரியாம அல்லாடி ஒரு வழியா நம்ம குடும்ப உறுப்பினர்களை விசாரிச்சு அட்ரஸ் கண்டுபிடிச்சு ஆட்டோல ஏறப் போகும் போது ஃபோன் அடிக்குது! எடுத்தா.. "நீங்க காயத்ரியா? நான் கோபி" ன்னு ஒரு குரல்! "ஓ.. துபாய் கோபியா.. சொல்லுங்க எங்கிருக்கீங்க" ன்னு கேட்டா.. "உங்க பின்னாடி தான் நிக்கறேன்"ங்கிறார். (துபாய்க்காரங்க எல்லாரும் இப்டி தானா? :( ) திரும்பிப் பாத்தா கேத்ரீன், ரீட்டா, வில்மான்னு எல்லா புயலும் சேர்ந்து அடிச்ச மாதிரி பரிதாபமா நிக்கறார் மனுஷன். என்னாச்சுங்கன்னா "3.30 ல இருந்து கூப்பிடறேன்.. அபிஅப்பா ஃபோன் எடுக்க மாட்டீங்கிறார்.. பஸ் ஸ்டேண்ட சுத்தி சுத்தி வந்தேன்.. ஒரே கொசுக்கடி" ன்னு சொன்னார்! அட.. நாம பரவால்ல போலிருக்கேன்னு சந்தோஷம் எனக்கு!

தேடிப்பிடிச்சு வீட்டுக்கு போறதுக்குள்ள அபிஅப்பாக்கு தெளிஞ்சுடுச்சு. (தூக்கத்தை சொன்னேன்! தப்பா புரிஞ்சுக்காதீங்க!!) வீட்டு வாசல்ல நின்னு.. போன் பண்ணினா.. ஓவர் குழப்பத்துல இருந்தார் போலிருக்கு " சொல்லு கோபி" ங்கிறார் என்கிட்ட! "அண்ணாச்சி வாசல்ல பாவமா நின்னுட்டிருக்கோம்.. கதவ திறங்க ப்ளீஸ்"னு கெஞ்சின பின்னாடி பதறியடிச்சு ஓடி வந்தார். :) இவரு நல்லா கவுந்தடிச்சு தூங்கிட்டு... 'அபி பாப்பா ஃபோன எங்கியோ கொண்டுபோய் வெச்சிட்டா'ன்னு அந்த பச்ச புள்ள மேல பழியப் போட்டார். கொஞ்சம் கூட நம்பற மாதிரி இல்ல!

மெதுவா.. 8.30 - 9 மணி இருக்கும் போது.. நம்ம சின்ன கைப்புள்ள ராயல் ராம், கவிஞர் ஜி, இம்சையரசி ஜெயந்தி வந்தாங்க. நலம் விசாரிப்பு.. எங்க சோகக் கதை எல்லாம் பேசி முடிக்கும்போது முத்துலட்சுமி வந்தாங்க... அவ்ளோ தான்.. அப்புறம் அவங்களே தான் பேசினாங்க! நடுவுல அவங்க தெரியாம கமா, புல்ஸ்டாப் ஏதாவது வெச்சாங்கன்னா நாங்க யாராச்சும்.. "எக்ஸ்க்யூஸ் மீ அக்கா! ஒரு பின்னூட்டம் போட்டுக்கலாமா?" ன்னு பர்மிஷன் வாங்கிட்டு பேசிக்கிட்டோம்! பேசினாங்க.. பேசினாங்க அவ்ளோ பேசினாங்க!

10 மணிக்கு மேல சென்ஷி வந்தார். முத்துலட்சுமி அக்காவ தவிர வேற யாரயும் தெரியாததால திருதிருன்னு முழிச்சார். அபிஅப்பா அவர் பாணில.. ஜெயந்திய காயத்ரின்னும்.. என்னை ஜெயந்தின்னும்.. கோபிய ஜி -ன்னும் ஜி-ய கோபின்னும் (ஏதாவது புரிஞ்சுதா?!) அறிமுகப்படுத்தி.. அப்புறம் தெளிவுபடுத்தினார். எவ்ளோ தெளிவுபடுத்தியும் பாவம்! சென்ஷி நிலைமை பரிதாபம்.. "நான் இன்னும் செட்டில் ஆகல போலிருக்கு"ன்னு புலம்பிட்டே இருந்தார்!

எல்லோராலும் ரொம்ப எதிர்பார்க்கப்பட்ட கண்மணியக்கா தான் காலைல 10 க்கு வரேன்னு சொல்லி 1 மணிக்கு வந்து சேர்ந்தாங்க! (டீச்சரே லேட்!) அப்புறம் கூட்டம் செமயா களை கட்டிருச்சு.. அக்கா சொன்ன மாதிரி இம்சையரசி, பணம் குடுத்தாக்கூட வாயத் திறக்கல! "பதிவு பக்கம் வந்து ரொம்ப நாளாய்டுச்சு... நீங்க பேசறது எதுவுமே புரியல" ன்னு சொல்லிட்டு ஒரு குமுதமோட செட்டில் ஆய்ட்டாங்க. ஆனா.. ப.பா சங்கத்த யாரோ கிண்டல் பண்ணினதும் பொங்கி எழுந்து சண்டைக்கு வந்தாங்க! (யாரு நாங்க!!) ஜி-யும், கோபியும் நாங்களும் இருக்கோம்னு காட்டிக்கிற மாதிரி அப்பப்ப பேசினாங்க. கோபி டீச்சர்ட்ட ரொம்ப மரியாதையா பேசினார். சென்ஷிக்கு முத்துலட்சுமியக்காவ கலாய்க்கறதும், ராமுக்கு என்னைக் கலாய்க்கறதும் தலையாய கடமைகளா இருந்துச்சு! அபிஅப்பா செம பிசி. வந்து வந்து பேசிட்டுப் போனார். முத்துலட்சுமியக்கா மட்டும்... அதான் ஏற்கனவே சொன்னனே!! டீச்சர் வந்த உடனே... "எங்கே எல்லாரும் ஒவ்வொருத்தரா ரைம்ஸ் சொல்லுங்க"ன்ற மாதிரி எல்லார் டீடெய்ல்சும் சொல்ல சொன்னாங்க. எந்திரிச்சு நின்னு கைய கட்டிகிட்டு சொன்னோம்!! வேற என்ன...

* கும்மின்னா கண்மணி கண்மணின்னா கும்மி ன்னு ஆய்ட்டதால சீரியஸ் பதிவு போட்டா ஒருத்தரும் மதிக்கிறதில்லன்னு வருத்தப்பட்டாங்க. அதுக்கு தான் கும்மிக்குன்னு தனிப்பதிவு போட்டாங்களாம்.

* குழந்தைகளுக்காக 'குட்டீஸ் ஜங்ஷன்' ன்னு ஒரு பதிவு ஆரம்பிச்சிருக்கிறதா சொன்னாங்க.

* மூத்த பதிவர் (!!) ராயல் ராம்... வேறு சில மூத்த பதிவர்களைப் பற்றியும், காணாமல் போய்விட்ட பதிவர்களைப் பற்றியும், தமிழ்மணம் பற்றியும்
பேசினார். ரொம்ப சின்ன பெண்ணான நான் ஜெயந்தி போலவே முழிக்க வேண்டியிருந்தது!

* Wordpress templates பயன்படுத்துவதில் இருக்கிற சாதக பாதகங்களைப் பேசினார். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் என்னை கலாய்ச்சதோட அப்பப்ப என் கவிதை மற்றும் மொக்கை பதிவுகளை பெரிய மனசு பண்ணி பாராட்டினார்.

* முத்துலட்சுமி சீரியசாய் நிறைய பேசினதால எல்லாத்தயும் நியாபகம் வெச்சுக்க முடியல. முக்கியமா.. "நாம இப்பிடியெல்லாம் கும்மி அடிக்கிறோமே.. இது சரியா தப்பா" ன்னு நாயகன் ஸ்டைல்ல கேட்டாங்க.. அதுக்கு ராம் "நாலு பேர பாதிக்காதுன்னா எந்த கும்மியும் தப்பில்ல" ன்னு அதே ஸ்டைல்ல பதில் சொல்லிட்டார். குறிப்பாக.. கும்மியடிப்பவர்கள் அனைவரும் நம் குடும்பத்தவர்கள் என்பதாலேயே அது சரி என்று ஏற்றுக்கொள்ளப்பட்டது.

* புதிய பதிவர்களில்.. குசும்பன் மற்றும் குட்டிப்பிசாசின் பதிவுகள் நன்றாக இருப்பது பற்றி பேசப்பட்டது. அய்யனார் நாள் முழுக்க பேச்சில் அடிபட்டுக் கொண்டே இருந்தார். ( விக்கல் எடுத்துச்சா அய்யனார்?) பின்னூட்ட கும்மிகளைப் பற்றியும் பேசிச் சிரித்தோம். சென்ஷி வழக்கம் போலவே பேச்சிலும் "ரிப்பீட்டே" போட்டுக் கொண்டிருந்தார். மை ஃப்ரண்ட், சுகுணாதிவாகர், தமிழ்நதி, ஜி3, அவந்திகா ஆகியோர் பற்றியும் பேசினோம்.

* இது பாசக்கார குடும்ப சந்திப்பாக மட்டுமல்லாமல் ப.பா சங்கத்தின் செயற்குழு கூட்டமாகவும் அமைந்தது தனிச்சிறப்பு! (கண்மணி, நான், ஜெயந்தி)

* பின்நவீனத்துவம் (பின்னால தத்துவம்?) பற்றிக்கூட பேச ஆரம்பித்தோம்.. எங்கள் யாருக்குமே அது பற்றி தெரியாததால் நிறுத்திவிட்டோம்! :))

* அபிபாப்பாவும் முத்துலட்சுமியக்காவின் மகள் மாதினியும் இணைந்து பதிவு தொடங்கவிருப்பது புதிய தகவல்! விரைவில் அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கலாம்!


இது தவிர அபிஅப்பாவின் பொறுப்புணர்ச்சி, அபிபாப்பாவின் திறமைகள் போன்றவை தெரிய வந்தது. ஜன்னல் கதவை திறக்கக்கூட.. "பாப்பா இத எப்பிடி திறக்கனும்?"ன்னு சந்தேகம் கேட்கிறார் அண்ணாச்சி.

இறுதியாக அபிதம்பியை மருத்துவமனையில் சந்தித்தோம். பஞ்சுப்பொதி போல, கொள்ளை அழகுடன் உள்ளங்கைகளை இறுக்கிகொண்டு மும்முரமாய் தூங்கிக் கொண்டிருந்தார்! இரவெல்லாம் கண்விழித்து அழுததன் களைப்பாம்!! நேரமின்மையால் 10 நிமிடங்கள் மட்டுமே அங்கிருக்க முடிந்தது.

காலையில் சொதப்பி விட்டதால் இரவு நான் ஊருக்கு திரும்பி வரும்போது அப்பப்ப போன் பண்ணி விசாரிச்சுட்டே இருந்தார் அண்ணாச்சி! "நீங்க பத்திரமா போய்சேர்ந்துட்டீங்கன்னு (!!??) தெரிஞ்சா தான் நான் நிம்மதியா தூங்குவேன்"னு சொன்னார். 12.42 க்குக்கூட பேசினவர்.. 12.51 க்கு நாங்க வீட்டுக்கு வந்து போன் பண்ணும் போது தூங்கிட்டார். :) எடுக்கவே இல்ல!!

ஆக மொத்தம் நான் பிற்காலத்துல எழுதப்போற சுயசரிதைல 'மறக்க முடியாத அனுபவங்கள்' ன்னு ஒரு அத்தியாயம் எழுத வாய்ப்பளித்த பாசக்கார குடும்பத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்!!

பி.கு : மதியம் சாப்பாட்டில் நடப்பன, பறப்பன, நீந்துவன எல்லாமே இருந்தது நிஜம் தான். நேரமின்மை காரணமாகவும் நண்பர்களின் கேலி கிண்டலாலும் மிகககக் குறைவாகத் தான் சாப்பிட்டேன் என்பதை இதன் மூலம் கண்மணி அக்காவிற்கு தெரிவித்துக் கொள்கிறேன்! :(

201 comments:

«Oldest   ‹Older   201 – 201 of 201
லெனின் பொன்னுசாமி said...

நிஜமா அட்டகாசமா எழுதறீங்க.. சூப்பர்.

அபி அப்பாவை ஓட்டுவதை கண்டிக்கிறேன்.

«Oldest ‹Older   201 – 201 of 201   Newer› Newest»