
ஒரு அழகான ரம்மியமான சாயந்திர நேரம்! என்ன பண்ணிருக்கனும் நான்? ஊர்ல புத்தகத்திருவிழா நடக்குது, ஒரெட்டு போய் பாத்திட்டு வந்திருக்கலாம். சின்னதா ஒரு கூடைல திரி, எண்ணெய், கற்பூரம், கொஞ்சம் பூ எல்லாம் எடுத்திட்டு நல்ல புள்ளையா எதாச்சும் ஒரு கோவிலுக்கு போயிருக்கலாம், பக்கத்து வீட்டு வாண்டுகளை கூப்பிட்டு வெச்சி 'சிங்கம்' அல்லது 'புலி'க்கதை சொல்லிருக்கலாம்.. அட மொட்டை மாடிக்குப் போய் டீ குடிச்சிட்டே... வாங்கினதுல இருந்து இன்னும் படிக்காம 'இழுத்துட்டே' போற 'ரப்பர்' நாவலையாச்சும் படிச்சு முடிச்சிருக்கலாம். இதெல்லாம் பண்ணாம 'கிரீடம்' படத்துக்கு போலாம்னு நான் முடிவு பண்ணினதுக்கு வெளிநாட்டு சதி அல்லது எதாச்சும் அமானுஷ்ய சக்தி தான் காரணம்னு நான் நினைக்கிறேன்! நீங்க என்ன நினைக்கறீங்க?
இந்த படத்து ஸ்டில்ஸ் எல்லாம் பார்த்து அஜித் போலீஸ் ஆபீசர் போலன்னு நினைக்கறீங்க தானே? அதான் இல்ல.. அவரு ஒரு ரௌடி. அப்புறம் எதுக்கு இந்த ஸ்டில்? என்னைக் கேட்டா? படத்துல அப்படி தாங்க சொல்றாங்க!!! இருங்க கடைசில புரியும்.
படத்துல 'தல' இன்ட்ரோ சீன் அட்டகாசம். ஜெயில்ல இருந்து தப்பிச்சு போற கைதிங்க எல்லாரையும் கொட்ற மழைல செமயா ஃபைட் பண்ணி அரெஸ்ட் பண்றார் அஜித். அடடா ன்னு ஆர்வமா சீட்ல நிமிர்ந்து உக்காந்தா அதெல்லாம் அஜித்தோட அப்பா ராஜ்கிரண் கண்ட கனவாம். (எப்பிடி சிக்கிருக்கேன் பாத்திங்களா?)
ராஜ்கிரண் ஒரு நேர்மையான... ஆமா! கரெக்ட் போலீஸ் தான்! போலீஸ் ஹெட்கான்ஸ்டபிளான இவரு பையன் அஜித்தை எஸ்.ஐ ஆக்கனும்ங்கிறத தன்னோட வாழ்நாள் லட்சியமா வெச்சிருக்காரு. ஆனா அஜித் என்னா பண்றாருன்னா... த்ரிஷாவோட க்ளோஸ் ஃப்ரெண்டா இருந்த புள்ளையார் சாமிய அவங்க வீடு பூந்து திருடறாரு. (எதாச்சும் வெளங்குது?) திருடி முடிச்சதும் ஒரு பாட்டு. அது என்ன பாட்டுன்னு புரியல.... எதுக்கு பாட்டுன்னும் தெரியல. அதெல்லாம் நாம கேக்கப்படாது, தமிழ்சினிமால ஹீரோ அறிமுகமாகும்போது இப்படி 10, 20 பேர் கூட சேர்ந்து பாடி ஆடனும்னு ஒரு நியதி இருக்கு.. ஆனா ஹீரோ இன்ட்ரோ முடிஞ்சு 4, 5 சீனுக்கு பின்னாடியும் இப்படி பாடலாமான்னு தெரியல. (ரூல்ஸ மாத்திட்டாய்ங்க போலிருக்கு!) சரி கேளுங்க.. நான் மட்டும் கஷ்டப்பட்டு பாக்கல? நான் யார்கிட்ட கேப்பேனாம்?
சரி பாட்டு முடிஞ்சுதா? த்ரிஷா பாவம்.. புள்ளையாரையும் அதை திருடின அஜித்தையும் தேடிட்டே இருக்காங்க. அந்த புள்ளையார் இல்லன்னா அவங்க எக்ஸாம்ல பெயில் ஆய்டுவாங்களாம். (இதை அவங்க சொல்லும் போது துக்கம் தாங்காம நான் அழுதுட்டேன் தெரியுமா?) அதனால அஜித் என்ன பண்றாரு, கரெக்டா அவங்க எக்ஸாம் அன்னிக்கு த்ரிஷாவ அந்த புள்ளையார்கிட்ட கூட்டிட்டு போறாரு. (என்னமோ வேற யாரோ திருடினத இவர் கண்டுபிடிச்சாப்பல.. என்ன கொடுமை சார் இது?) இப்ப என்னாகும்? மறுபடி தமிழ்சினிமா நியதிப்படி த்ரிஷாக்கு அஜித் மேல காதல் வந்துடுது.
இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் நம்ம நேர்மையான ராஜ்கிரண் வழக்கம் போல ஒரு எம்.எல்.ஏ பையன்கிட்ட வம்பு வளர்க்க, டிப்பார்ட்மெண்ட் வழக்கம் போல அவரை தண்ணியில்லாத காட்டுக்கு மாத்த, அங்க வழக்கம் போல ஒரு ரௌடி ஊரையே மிரட்டிட்டு இருக்க, இவரும் வழக்கம் போல அவன்கிட்டயும் தன் நேர்மைய காட்டி அடிவாங்க, அஜித் வழக்கம் போல அப்பாவ காப்பாத்த உணர்ச்சிவசப்பட்டு அந்த ரௌடிய கன்னாபின்னான்னு அடிக்க.... அவ்வ்வ்வ்வ்வ்.. என்னால முடியலங்க.
இருங்க.. எங்க ஓடறீங்க? முழுசா சொ(கொ)ல்லாம விடறதில்ல இன்னிக்கு. அப்புறம் என்ன ஆச்சுன்னா... அரைகுறையா உசிர் பொழச்ச அந்த ரௌடி "என்னை யாருமே அடிக்கல" ன்னு போலீஸ்கிட்ட சொல்றார். அஜித் அவரை மண்டைலயே அடிச்சதால அப்படி சொல்றாரா வேற எதுனாச்சும் காரணமான்னு தெரியல எனக்கு.
அப்புறம் வழக்கம் போல ஜாமீன்ல வெளில வந்து மறுபடி வழக்கம் போல அஜித்தை துரத்தி அவர் குடும்பத்துல எல்லாரையும் அடிச்சு போட்டு ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்றார் மிஸ்டர். ரவுடி!! உடனே அஜித்துக்கு பயங்கரமா கோபம் வந்து நேரா அந்த ரவுடிகிட்ட போய்.. "நான் சாக வந்திருக்கேன்.. என்னை கொல்லு"ன்றார். ஆனா ரொம்ப நேரம் சண்டை போட்டுட்டு இவரு தான் அந்த ரவுடியை கொல்றார். (என்ன இழவுடா இது?) ஒரு கொலைகாரனுக்கு பொண்ணு தர மாட்டோம்னு த்ரிஷா அப்பாம்மா சொல்லிடறாங்க. பாவம் த்ரிஷா அழறாங்க..
இதுக்கெல்லாம் நடுவுல ஒரு பாட்டு வருது.. அந்த பாட்டுலயே அஜித் எக்சர்சைஸ் எல்லாம் பண்ணி, எஸ்.ஐ எக்ஸாம் எல்லாம் எழுதி முடிச்சி, செலக்ட்டும் ஆய்டறாரு. போலீஸ் வெரிபிகேஷன் பண்ணி ஓகே.. ன்னு சொன்னா அவருக்கு எஸ்.ஐ போஸ்ட் கிடைச்சிரும்... வெரிபிகேஷன் ரிப்போர்ட் குடுக்கப்போற அப்பா ராஜ்கிரண் கடைசில அந்த பரபரப்பான க்ளைமாக்ஸ்ல (!!?) 'அவனுக்கு எஸ்.ஐ ஆகத் தகுதி இல்ல' அப்படின்னு சொல்லிடறாரு. (நாங்க தான் சொன்னோமுல்ல? அவரு நேர்மையானவர்னு!) உடனே அஜித்தோட போட்டோவ போலீஸ் ஸ்டேஷன்ல குற்றவாளிகள் லிஸ்ட்ல சேர்த்துடறாங்க. இப்படி ஒரு உருக்கமான காட்சியோட படம் முடிஞ்சு போச்சுங்க. (ஸ்ஸ்! அப்பாடா!!)
நியாயமா விமர்சனம் பண்றவங்க படத்தோட முழுக்கதை அல்லது க்ளைமாக்ஸ சொல்லாம விடறதுதான் மரபு. நான் ஏன் இங்க அந்த மரபை மீறி செயல்பட்டிருக்கேன்னா என்னை மாதிரி வேற யாரும் நொந்து போகக் கூடாதுன்ற ஒரே நல்லெண்ணம் தான் காரணம். படம் ரொம்ப யதார்த்தமா இருக்கறதா சிலர் சொல்றாங்க... இண்ட்ரோ சாங் ல இருந்து, த்ரிஷாவோட காதல் வரை எல்லாம் சினிமாத்தனமா செயற்கையா வெச்சிட்டு 'நாயகனின் தோல்வியை இயல்பா படமாக்கிருக்கோம்'னு பெருமைப்பட்டுக்கறது நிஜமாவே நல்ல காமெடி.
காமெடின்னதும் நியாபகம் வருது.. படத்துல விவேக் இருக்கார்.. எதுக்கு இருக்கார்னு தெரியல. சந்தானம் கூட பரவாயில்லை, லேசா எப்பவாச்சும் சிரிக்க வைக்கிறார். இசை ஜி.வி.பிரகாஷ். ஒரே ஒரு பாட்டுல மனுஷன் அசத்தியிருக்கார். "அக்கம் பக்கம் யாரும் இல்லா பூலோகம் வேண்டும்" னு சாதனாசர்கம் நெருப்புல போட்ட வெண்ணையா கரைஞ்சி உருகறாங்க.. படத்துல உருப்படியா பாக்கற மாதிரி அழகான லொக்கேஷன்ஸ்ல எடுத்திருக்கற ஒரே பாட்டு இது.
அஜித் அரிசி மூட்டைக்கு பனியன் போட்ட மாதிரி 'ரெட்' அஜித்தாவோ, சோமாலியாவுல இருந்து பஞ்சம் பொழைக்க வந்த 'பரமசிவன்'அஜித்தாவோ இல்லாம கொஞ்சம் பாக்கற மாதிரி இருந்தது படத்துல இன்னொரு பெரிய ஆறுதல். என்னமோ போங்க.. விஜய் ஒரு பக்கம் போக்கிரி பக்கிரின்னு எப்படி நடிச்சாலும் படம் ஓஹொன்னு ஓடிட்டிருக்க நல்ல நடிப்புத்திறமைய வெச்சிட்டு இவரு இப்படி திணறுறத பாத்தா பாவமாத்தான் இருக்கு. அஜித் நீங்க எதுக்கும் ஒரு நடை திருநள்ளாறு போய் எள் தீபம் ஏத்திட்டு வாங்களேன்?
பி.கு: நான் இனிமே சன் டிவி தவிர வேறெதுலயும் புதுப்படம் பாக்க போறதில்ல.