
அப்படித்தான் இருந்தாள் அவள்.
கரை தொலைத்த தோணிகளுக்காய்
தொலைவில்
மின்னிச்சுழலும் ஓர் ஒளித்தீண்டல் போல..
நன்னீர் சுரந்திருக்கும்
சின்னஞ்சிறு சுனையென
கரவலைகள் வீசி
தளும்பிக் கொண்டிருந்தாள்.
பின்னோர் நாள் கண்டேன்
கவிமனம் தேடியலையும்
முதற்சொல்லொன்று
எம் முற்றத்தில்
தவழ்ந்து கொண்டிருப்பதை.
இப்போது
அவள் விரல்நுனி பிடித்து
தத்தி நடக்கிறது காலம்.
காற்றசைத்த மலரென
வீடெங்கும்
சிதறிக் கிடக்கிறது மொழி.
ஆம்..
அவள் வளர்ந்து கொண்டிருக்கிறாள்
நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
சென்ற வருடம் இதே நாளில் அரை மயக்கத்தில் கண்விழித்துப் பார்க்கையில், சின்னஞ்சிறு சிப்பி இமைகள் மூடியிருக்க, கைகளிரண்டையும் கமலப்பூவின் அரும்பு போல நெஞ்சின் மேல் குவித்து, தானிருந்த கண்ணாடிப் பேழை முழுவதிலும் தன்னுடலின் விரிசோதியினை நிரப்பியபடி, தந்தையின் சாயலோடு உறங்கிக் கொண்டிருந்த செல்ல மகள்....