
பயணங்கள் மட்டுமே வாழ்வாயிருந்த தினங்களை, என்னிடம் அவையேற்படுத்தியிருந்த ஆழ்ந்த சலிப்பினை இப்போது வாய்த்திருக்கும் இந்த அபூர்வ பயணத்தில் நீண்ட பெருமூச்சுகளினூடே மீண்டும் நினைத்துக் கொள்கிறேன். வெளியில் இன்னமும் தீர்ந்து போய்விடாத இரவையும் கனத்த இருளையும் ஊடுருவி பகலை நோக்கி விரைகிறது பேருந்து. தவிட்டு நிற, ஒளி குன்றிய கண்ணாடி சன்னல்களின் பின்னாலிருந்து ஓர் மொட்டவிழ்வது போல மெல்ல விரிந்து கொண்டிருக்கும் இன்றைய நாள், மெலிதாய் கண்களுக்குத் தட்டுப்படுகிறது. இது வரை நான் கண்டுவந்திருக்கும் விடியல்களைப் போன்றே அதே ரம்மியங்களோடு, அதே நிறங்களோடு, அதே நிதானங்களோடு, அதே புன்னகையோடு... அனைத்திலும் அதுவே போன்ற, ஆனால் இதுவரை கண்டேயிராத இந்த விடியல் புதியதோர் பரவசத்திலாழ்த்துகிறது!
வியப்பாயிருக்கிறது.. என் நாட்களும் கூட இப்படியாகத்தான் மிக நீண்டதோர் இரவை, அதன் மீது வழிந்து கொண்டிருக்கும் அடர்கருமையை, அதன் மெளனத்திற்குள் ஒளிந்திருக்கும் அதிபயங்கரங்களைக் கடந்து, கடந்து, இப்போது தான்.. இதோ இந்த புலர்காலையைப் போன்றே மென்மையாய் விடிந்து கொண்டிருப்பதாய்த் தோன்றுகிறதெனக்கு.
ஒருவர் பின்னொருவராய் முன்னிருப்பவரின் உடுப்பைப் பற்றிக் கொண்டு ஓடி வரும் சிறுபிள்ளைகளைப் போல உன் நினைவுகள் கூச்சலிட்டபடி ஓடி வருகின்றன... ஒரு வட்டத்தின் துவக்கப் புள்ளி போல உன்னிலிருந்து தொடங்கும் என் அனைத்தும் உன்னிலேயே வந்து முடிவதை வெகு ஆச்சரியங்களோடு பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஒருவேளை என்னால் இயன்றதும், இயல்வதும்.. எனக்கென்று பணிக்கப்பட்டிருப்பதும் கூட வெறுமனே பார்த்திருத்தலாகத் தான் இருக்கக் கூடுமோ? தெரியவில்லை. என்றாலும் பங்கேற்றிருத்தலும் நாமாய், பார்த்திருத்தலும் நாமாய் இருப்பதில் அனேக சுவாரஸ்யங்கள் இருக்கத்தான் செய்கின்றன இல்லையா? நம் சந்திப்பு முதலாய் இந்நாள் வரையிலும் நம் நாட்களை கையெடுக்காமல் வரையப்பட்ட கோட்டோவியமாய்த் தொடர்ந்து வரைந்து கொண்டிருக்கும் அற்புத விரல்களை, இக்கணத்தில் நன்றியின் பொங்குதல்களோடு நினைத்துக் கொள்கிறேன்.
முத்துக்களின் நுண்ணிய துளைகளின் வழி மெல்லிய இழையொன்று புகுந்து புறப்படுவதையொத்து நினைவுகளை கண்களுக்குப் புலப்படாத கண்ணியால் கோர்க்க விழைகிறதென் இதயம். என் வாழ்வின் துயரங்கள், பிறழ்வுகள், இழப்புகள் ஆகியவற்றின் துவக்கத்தைப் போன்றே பூபாளத்தின் முதல் ஸ்வரத்தை, பரிவினால் சுரந்து காற்றில் கலந்து வந்த அன்பின் கதகதத்த வெம்மையை இதே போன்றதோர் விடியல் தான் என்வசம் கொணர்ந்து சேர்த்தது. அப்போது அல்லிகள் மலர்ந்து, வெயில் மெதுவாய் ஊர்ந்து கொண்டிருந்த குளக்கரையின் விளிம்பிலமர்ந்தபடி, தளும்பும் நீரலைகளில் பார்வையைப் பதித்த வண்ணம், நிறைய தயக்கங்களோடு மெல்ல விரிந்த விரல்களை, அன்பும், நம்பிக்கையும், பாதுகாப்பும், உறுதியும் மிக்க விரல்கள் மிக உரிமையாய் கோர்த்துக் கொண்டன. வெயில் வேகமாய் நகர்ந்து அவ்விரல்களின் மீது வெளிச்சமிட்டது. அவ்விடத்தில் வெயிலோடு தானும் ஊர்ந்து கொண்டிருந்த எறும்புகளும், உறக்கத்தில் ஒரு முறை கண்விழித்துப் பார்த்த பூனைக் குட்டியும் அப்புனித நிகழ்விற்கு சாட்சியங்களாகின!
உனக்குத் தெரியுமா? அந்த நாளை, அந்த விடியலை, இறுக மூடியிருக்கும் சிசுவின் உள்ளங்கைகளைப் போன்று கண் கூசச் செய்யும் அதன் தூய்மையை, எத்தனை பெரிய அந்தகாரத்தின் நடுவிலும் பிரகாசமாய் ஒளிரும் அதன் வசீகர அழகை, எவரும் எதுவும் நெருங்கவியலாத ஆழத்தில் இதயத்தின் ரகசிய அறையில் நான் பொதிந்து வைத்துக் கொண்டிருக்கிறேன். என்றேனும் நானறியாப் பொழுதில் அது திறந்து கொள்கையில் அதன் அற்புதப் பிரவாகத்தில் நான் மூழ்கிவிட நேர்கிறது. நான், என் என்பது ஏதுமற்று நெருப்பில் கரையும் கற்பூரமாகி விடுகிறது மனது. என்னால் நிச்சயமாய்ச் சொல்ல முடியும்.. அந்த நாளுக்குப் பின்னாக வந்த வேறெந்த நாளும் அதனுடைய வனப்பில் பாதியைக் கூடப் பெற்றுவிட முடியவில்லை.
இப்போது நீ எங்கிருப்பாய்? எங்கோ தொலைவில்... வெகு தொலைவில்.. பசியால் அழுது ஓய்ந்த குழந்தையின் சாயல்களோடு, எனக்கான மிச்ச ஏக்கங்களோடு, முகத்தில் எப்போதும் ததும்பும் கருணையோடு, அயர்ச்சியில் உறங்கிக் கொண்டிருப்பாய். என் மனம், இப்போது வெளியே பொழிந்து கொண்டிருக்கும், புற்களிலும், பூக்களிலும், வயல்களிலும், மரங்களிலும், துயில் கலைந்து பறக்கத் துவங்கியிருக்கும் பறவைகளின் சிறகுகளிலும் படிந்து கொண்டிருக்கும், மெல்லிய பனியாய் மாறிவிடத் துடிக்கிறது. உறங்கும் உன் சிப்பியிமைகளில் மிருதுவாய்ப் படிந்து, அவை மெல்லத் திறக்கையில் உன் பார்வை தொடும் முதல் உணர்வாய், முதல் குளிராய் உள்நுழைந்து குழந்தைமைகளை கொஞ்சமும் இழந்து விடாத உன் தூய இதயம் முழுவதிலும், ஒவ்வொரு அணுவிலும் நிரம்பி விடத் தவிக்கிறது. உனக்கும் எனக்குமான தூரங்களை நிறைத்திருக்கும் வெளி முழுவதும் தானேயாகப் படர்ந்து உன்னை அடைந்துவிட விழைகிறது....
இயலாமையின் தோற்கடிப்பில் விழிசோர்கிறதெனக்கு. சன்னல்களின் கண்ணாடித் திரை விலக்கி கொட்டும் பனியை கைகளில் ஏந்துகிறேன். மழையைப் போல் விரல்களினூடே வழிந்து விடாமல் ஏந்திய கரங்களில் தேங்குகிறது பனி. அன்றோர் நாள் அடிபட்ட பறவையாய் உன் மடியில் நான் வீழ்கையில் பறக்கவியலாதவென் சிறகுகளை ஆதுரத்துடன் வருடிய உன் கரங்களின் குளுமையை நினைவூட்டிக் கொண்டே உள்ளங்கைக் குழிவில் படிந்து கொண்டிருக்கிறது.. வெட்டப்படாத என் சிறகுகளை பெருமையாய்ப் பார்த்த வண்ணம் நீயிருக்கும் திசை நோக்கிப் பறக்கத் தீர்மானிக்கிறேன் நான்.