Thursday, May 3, 2007

நினைவுகள்!

உன் அதீத அலட்சியம் தந்த
மிகப் பெரிய வேதனையின் முடிவில்
உறுதியாய்த் தீர்மானித்தேன்
உன்னை மறந்து விடுவதென்று!

உன் நினைவுகளை எங்கேனும்
தொலைத்து விடலாமென
அழைத்துக் கொண்டு கிளம்பினேன்.

திரையரங்கில்..
நூலகத்தில்..
புத்தக இடுக்கில்..
பேருந்தில்..
அலுவலகத்தில்..
சாலையில் பார்த்த
குழந்தையின் சிரிப்பில்...
அழுது வடிந்த ஒரு
மெகா சீரியலில்..

எங்கே தொலைப்பதென
அலைந்து திரிந்து
மீண்டும் வீட்டிற்குத் திரும்பினேன்.

செருப்புகளைக் கழற்றுகையில்
உறைத்தது!
உன் நினைவுகளைக் காணவில்லை!!

மகிழ்ச்சியாய் நுழைந்து
படுக்கையறையைத் திறந்தேன்

அங்கே...
அலைந்த களைப்பில்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்..
என் கட்டிலில் படுத்து
உறங்கிக் கொண்டிருந்தன
உன் நினைவுகள்!

2 comments:

Anonymous said...

அழகான கவிதை! ஆழமான சிந்தனை!

உங்களுக்கு என் வாழ்த்துக்கள்

டீக்கடை பையன்
(வலைப்பக்கம் வந்து கொஞ்சம் நாளானதுல ID மறந்து போச்சு)

MSK / Saravana said...

நிஜமான கவிதை..


இக்கவிதையை பாராட்ட என்னிடம் வார்த்தைகளே இல்லையென்பதை எப்படி உங்களுக்கு புரியவைப்பது..!!