
பயணங்கள் மட்டுமே வாழ்வாயிருந்த தினங்களை, என்னிடம் அவையேற்படுத்தியிருந்த ஆழ்ந்த சலிப்பினை இப்போது வாய்த்திருக்கும் இந்த அபூர்வ பயணத்தில் நீண்ட பெருமூச்சுகளினூடே மீண்டும் நினைத்துக் கொள்கிறேன். வெளியில் இன்னமும் தீர்ந்து போய்விடாத இரவையும் கனத்த இருளையும் ஊடுருவி பகலை நோக்கி விரைகிறது பேருந்து. தவிட்டு நிற, ஒளி குன்றிய கண்ணாடி சன்னல்களின் பின்னாலிருந்து ஓர் மொட்டவிழ்வது போல மெல்ல விரிந்து கொண்டிருக்கும் இன்றைய நாள், மெலிதாய் கண்களுக்குத் தட்டுப்படுகிறது. இது வரை நான் கண்டுவந்திருக்கும் விடியல்களைப் போன்றே அதே ரம்மியங்களோடு, அதே நிறங்களோடு, அதே நிதானங்களோடு, அதே புன்னகையோடு... அனைத்திலும் அதுவே போன்ற, ஆனால் இதுவரை கண்டேயிராத இந்த விடியல் புதியதோர் பரவசத்திலாழ்த்துகிறது!
வியப்பாயிருக்கிறது.. என் நாட்களும் கூட இப்படியாகத்தான் மிக நீண்டதோர் இரவை, அதன் மீது வழிந்து கொண்டிருக்கும் அடர்கருமையை, அதன் மெளனத்திற்குள் ஒளிந்திருக்கும் அதிபயங்கரங்களைக் கடந்து, கடந்து, இப்போது தான்.. இதோ இந்த புலர்காலையைப் போன்றே மென்மையாய் விடிந்து கொண்டிருப்பதாய்த் தோன்றுகிறதெனக்கு.
ஒருவர் பின்னொருவராய் முன்னிருப்பவரின் உடுப்பைப் பற்றிக் கொண்டு ஓடி வரும் சிறுபிள்ளைகளைப் போல உன் நினைவுகள் கூச்சலிட்டபடி ஓடி வருகின்றன... ஒரு வட்டத்தின் துவக்கப் புள்ளி போல உன்னிலிருந்து தொடங்கும் என் அனைத்தும் உன்னிலேயே வந்து முடிவதை வெகு ஆச்சரியங்களோடு பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஒருவேளை என்னால் இயன்றதும், இயல்வதும்.. எனக்கென்று பணிக்கப்பட்டிருப்பதும் கூட வெறுமனே பார்த்திருத்தலாகத் தான் இருக்கக் கூடுமோ? தெரியவில்லை. என்றாலும் பங்கேற்றிருத்தலும் நாமாய், பார்த்திருத்தலும் நாமாய் இருப்பதில் அனேக சுவாரஸ்யங்கள் இருக்கத்தான் செய்கின்றன இல்லையா? நம் சந்திப்பு முதலாய் இந்நாள் வரையிலும் நம் நாட்களை கையெடுக்காமல் வரையப்பட்ட கோட்டோவியமாய்த் தொடர்ந்து வரைந்து கொண்டிருக்கும் அற்புத விரல்களை, இக்கணத்தில் நன்றியின் பொங்குதல்களோடு நினைத்துக் கொள்கிறேன்.
முத்துக்களின் நுண்ணிய துளைகளின் வழி மெல்லிய இழையொன்று புகுந்து புறப்படுவதையொத்து நினைவுகளை கண்களுக்குப் புலப்படாத கண்ணியால் கோர்க்க விழைகிறதென் இதயம். என் வாழ்வின் துயரங்கள், பிறழ்வுகள், இழப்புகள் ஆகியவற்றின் துவக்கத்தைப் போன்றே பூபாளத்தின் முதல் ஸ்வரத்தை, பரிவினால் சுரந்து காற்றில் கலந்து வந்த அன்பின் கதகதத்த வெம்மையை இதே போன்றதோர் விடியல் தான் என்வசம் கொணர்ந்து சேர்த்தது. அப்போது அல்லிகள் மலர்ந்து, வெயில் மெதுவாய் ஊர்ந்து கொண்டிருந்த குளக்கரையின் விளிம்பிலமர்ந்தபடி, தளும்பும் நீரலைகளில் பார்வையைப் பதித்த வண்ணம், நிறைய தயக்கங்களோடு மெல்ல விரிந்த விரல்களை, அன்பும், நம்பிக்கையும், பாதுகாப்பும், உறுதியும் மிக்க விரல்கள் மிக உரிமையாய் கோர்த்துக் கொண்டன. வெயில் வேகமாய் நகர்ந்து அவ்விரல்களின் மீது வெளிச்சமிட்டது. அவ்விடத்தில் வெயிலோடு தானும் ஊர்ந்து கொண்டிருந்த எறும்புகளும், உறக்கத்தில் ஒரு முறை கண்விழித்துப் பார்த்த பூனைக் குட்டியும் அப்புனித நிகழ்விற்கு சாட்சியங்களாகின!
உனக்குத் தெரியுமா? அந்த நாளை, அந்த விடியலை, இறுக மூடியிருக்கும் சிசுவின் உள்ளங்கைகளைப் போன்று கண் கூசச் செய்யும் அதன் தூய்மையை, எத்தனை பெரிய அந்தகாரத்தின் நடுவிலும் பிரகாசமாய் ஒளிரும் அதன் வசீகர அழகை, எவரும் எதுவும் நெருங்கவியலாத ஆழத்தில் இதயத்தின் ரகசிய அறையில் நான் பொதிந்து வைத்துக் கொண்டிருக்கிறேன். என்றேனும் நானறியாப் பொழுதில் அது திறந்து கொள்கையில் அதன் அற்புதப் பிரவாகத்தில் நான் மூழ்கிவிட நேர்கிறது. நான், என் என்பது ஏதுமற்று நெருப்பில் கரையும் கற்பூரமாகி விடுகிறது மனது. என்னால் நிச்சயமாய்ச் சொல்ல முடியும்.. அந்த நாளுக்குப் பின்னாக வந்த வேறெந்த நாளும் அதனுடைய வனப்பில் பாதியைக் கூடப் பெற்றுவிட முடியவில்லை.
இப்போது நீ எங்கிருப்பாய்? எங்கோ தொலைவில்... வெகு தொலைவில்.. பசியால் அழுது ஓய்ந்த குழந்தையின் சாயல்களோடு, எனக்கான மிச்ச ஏக்கங்களோடு, முகத்தில் எப்போதும் ததும்பும் கருணையோடு, அயர்ச்சியில் உறங்கிக் கொண்டிருப்பாய். என் மனம், இப்போது வெளியே பொழிந்து கொண்டிருக்கும், புற்களிலும், பூக்களிலும், வயல்களிலும், மரங்களிலும், துயில் கலைந்து பறக்கத் துவங்கியிருக்கும் பறவைகளின் சிறகுகளிலும் படிந்து கொண்டிருக்கும், மெல்லிய பனியாய் மாறிவிடத் துடிக்கிறது. உறங்கும் உன் சிப்பியிமைகளில் மிருதுவாய்ப் படிந்து, அவை மெல்லத் திறக்கையில் உன் பார்வை தொடும் முதல் உணர்வாய், முதல் குளிராய் உள்நுழைந்து குழந்தைமைகளை கொஞ்சமும் இழந்து விடாத உன் தூய இதயம் முழுவதிலும், ஒவ்வொரு அணுவிலும் நிரம்பி விடத் தவிக்கிறது. உனக்கும் எனக்குமான தூரங்களை நிறைத்திருக்கும் வெளி முழுவதும் தானேயாகப் படர்ந்து உன்னை அடைந்துவிட விழைகிறது....
இயலாமையின் தோற்கடிப்பில் விழிசோர்கிறதெனக்கு. சன்னல்களின் கண்ணாடித் திரை விலக்கி கொட்டும் பனியை கைகளில் ஏந்துகிறேன். மழையைப் போல் விரல்களினூடே வழிந்து விடாமல் ஏந்திய கரங்களில் தேங்குகிறது பனி. அன்றோர் நாள் அடிபட்ட பறவையாய் உன் மடியில் நான் வீழ்கையில் பறக்கவியலாதவென் சிறகுகளை ஆதுரத்துடன் வருடிய உன் கரங்களின் குளுமையை நினைவூட்டிக் கொண்டே உள்ளங்கைக் குழிவில் படிந்து கொண்டிருக்கிறது.. வெட்டப்படாத என் சிறகுகளை பெருமையாய்ப் பார்த்த வண்ணம் நீயிருக்கும் திசை நோக்கிப் பறக்கத் தீர்மானிக்கிறேன் நான்.
Thursday, January 29, 2009
பின்பனிக்காலத்திலோர் விடியல்..
Friday, January 9, 2009
பாற்கடல்!
சித்துவிற்கு புத்தகங்கள் என்றால் அலாதிப் ப்ரியம். உயிர் வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகளின் பட்டியலில் நிச்சயம் அவையும் இடம் பெற்றிருப்பதாய் சாதிப்பார்! இந்த முறை சென்னையிலும் ஈரோட்டிலுமாய் புத்தகக் கடைகளில் ஏறி இறங்குகையில் லா.ச.ரா வின் 'பாற்கடலை' அதிதீவிரமாய் தேடிக் கொண்டிருந்தார். ஒரு வழியாய் ஈரோடு பாரதி புத்தகாலயத்தில் லா.ச.ரா -வின் படைப்புலகம் கிடைத்தது.. மேலதிகமாய் கவிஞர் அபியின் விமர்சனங்களோடு.
சிறுகதைகள், நேர்காணல்கள், கட்டுரைகள் மற்றும் குறுநாவல்கள் பற்றிய அறிமுகங்களோடு கூடிய அத்தொகுப்பு நூலை இருள் கவியத் தொடங்கிய மாலையொன்றில் காவிரி ஆற்றங்கரையில் அமர்ந்து படிக்கத் துவங்கினோம். காவிரி முன் போலில்லை. என் சின்னஞ்சிறு விழிகளில் விரிந்து விரிந்து.. என் இளம் பிராயங்களின் கரைகளில் நிரம்பித், ததும்பிக் கொண்டிருந்தது போல பின்னெப்போதும் அது இருக்கவில்லை. ஆறும் கல்பொரு சிறு நுரையாகிக் கொண்டிருக்கிறதோ என்னவோ? என்றாலும் ஆற்றங்கரைகளுக்கேயுரிய தனி வசீகரமும் இல்லாமலில்லை.
"சிறு அசைவுகளில் பெரிய விளைவுகள் உண்டாக்க வேண்டும். சொல்லாமல் உணர்த்தும் நளினம் கைவர வேண்டும். தமது நடவடிக்கைகள் மெளனத் தளத்தில் இருக்க வேண்டும்" என்று தீவிரமாக ஆசைப்படுபவர் லா.ச.ரா என்கிறார்
அபி.
அபியின் கணிப்பு சரி தான் என்றாமோதிக்கிறது 'பாற்கடல்'. பாற்கடலைப் போல, படிக்கப் படிக்க உடம்பு சிலிர்த்துக் கொண்டதும், மனம் பெரு மைதானம் போல விரிந்து கொண்டே சென்றதும், படித்து முடிக்கையில் பேரானந்தமும்
பெருந்துக்கமுமாய் தொண்டை அடைத்துக் கொண்டதுமான மெய்ப்பாடுகள் வேறெப்போது நிகழ்ந்தனவென்று நினைவிலில்லை. எங்கள் முன்னால் வற்றி இளைத்து, உடம்பெங்கும் எலும்புகள் துருத்தினாற் போல் நகர்ந்து கொண்டிருந்த நதி கூட சட்டென்று பாற்கடலாகி விட்டது போலொரு பிரமை தட்டிற்று. சொல்லி வைத்தாற் போல் நிறைவாய் இரு புன்னகைகள் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டன.
'நல்ல கதை... நல்ல்ல கதை' - சித்து தன்னையறியாமல் முணுமுணுத்துக் கொண்டேயிருந்தார். கடிதமா கதையா என்று பிரித்துப் பார்க்கவியலாதபடி வெகு இலாவகமாய் நகரும் கதையின் கட்டமைப்பை வெகு நேரம் வியந்து கொண்டிருந்தார். வலைப்பதிவில் நிச்சயம் எழுதவேண்டும் என்றார்.
இதோ இப்போது பாற்கடல் பற்றி எழுதுவது என்று முடிவான பின்னும் கூட லா.ச.ரா விரும்பும், அவர் படைப்புகள் அனைத்திலும் அவர் நிகழ்த்திக் காட்டியிருக்கும் 'சொல்லாமல் உணர்த்தும் நளினம்' கைவருமா
என்ற சந்தேகத்தில் தான் நான் இப்படி சுற்றி வளைத்துக் கொண்டிருக்கிறேன்.
இக்கட்டுரை நிச்சயம் ஒரு விமர்சனக் கட்டுரையில்லை.. இன்னின்ன நிறைகள், இத்தனை குறைகள் என்று பட்டியலிடும் எண்ணமில்லை. மாறாய் ஒரு அளப்பரிய உன்னத கணத்தை, எப்போதும் மாறாமலிருக்கும் உண்மையொன்றை, மனம் தளும்பும் மகிழ்ச்சியொன்றை தற்செயலாய் ஸ்பரிசித்து விட்ட அனுபவத்தை மட்டுமே இதில் சுட்டிப் போக விரும்புகிறேன். ஒரு விழைவு.. அல்லது ஆற்றுப்படுத்தும் முயற்சி.. அல்லது முதன்முதலாய் கடல் பார்க்கும் குழந்தையின் ஆச்சரியம்!
"குடும்பம் ஒரு பாற்கடல். அதிலிருந்து லட்சுமி, ஐராவதம், உச்சஸ்ரவஸ் எல்லாம் உண்டாயின. .... ஆலகால விஷமும் அதிலிருந்து தான் உண்டாகியது; உடனேயே அதற்கு மாற்றான அம்ருதமும் அதிலேயே தான்.."
என்று நிறைவுறுகிறது கதை. நம் பழஞ்சமூகம் முன்னொரு காலத்தில் கட்டமைத்திருந்த கட்டுப்பாடுகள் நிறைந்த குடும்பம் தான் பாற்கடலின்
கதைக்களமாகியிருக்கிறது. கூட்டுக்குடும்பங்கள் பற்றிய தற்காலத்தைய அவநம்பிக்கையை, முன்மதிப்பீடுகளை எல்லாம் பொட்டிலறைந்தாற் போல ஒரே ஒரு கதையின் மூலம் களைந்து விட முடியுமா என்ற ஐயப்பாட்டை சாத்தியமாக்கியிருக்கிறது லா.ச.ரா வின் எழுத்து. அன்பு, பாசம், காதல், நெகிழ்ச்சி, உறவு, பிரிவு.... இன்னும் பின்னவீனத்துவ வாதிகளின் கேலிக்குள்ளாகும் இதேபோன்ற இன்னபிற பொய்களில் நிறைந்திருக்கும் உண்மையின் சதவீதத்தை அன்னம் போல பிரித்துக் காட்டியிருக்கிறது.
கதை படித்த நாளிலிருந்து பாற்கடல் என்ற படிமம் குறித்துச் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். எவர் உருவாக்கியிருப்பார்கள் இதை? கற்பனைக்கெட்டா வண்ணம் ஆழமும் விரிவுமாய் பரவியிருக்கும் உவர்கடலை, முழுவதும் பாலால் நிரப்பிப் பார்க்க எந்த மனம் விரும்பியிருக்கும்? விஷமும் அமிர்தமும் அதிலிருந்தே வந்ததென்ற கற்பனை எவர் மனத்தில் உதித்திருக்கும்?
தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த கதை, மனதில் நல்லவர்களுக்கும் தீயவர்களுக்குமிடையிலான தடுப்புச் சுவற்றை வலுவுற மேலெழுப்பிக் கட்டியதெனில் லா.ச.ராவின் 'பாற்கடல்' இருமைகளுக்கிடையிலான தடித்த கோட்டினை முற்றிலும் இல்லாமலாக்கியிருக்கிறது. உண்மை தான். சூரியன் ஒரேயிடத்தில் இருக்கையில் இரவேது? பகலேது? உறவுகளும் அவை தரும் துன்பங்களும் அதைத் தொடர்ந்த தேற்றுதல்களும் பின் வரும் இன்பங்களும் என்றான வாழ்க்கைச் சுழற்சி கூட இத்தனை நாட்கள் இரவு பகலைப் போல வேறு வேறாய் காட்சியளித்தவை தானில்லையா? நன்றும் தீயதுமான அல்லது நன்மையும் தீமையுமற்ற பாற்கடலைப் போன்றது தான் குடும்பங்களெனில் ஒவ்வொரு மனிதரையும் கூட பாற்கடலாய்த் தான் பார்க்கத் தோன்றுகிறது!
Tuesday, September 30, 2008
காதலில் விழுந்தேன் - விமர்சனம்
நடிப்பு: நகுலன், சுனேனா, சம்பத்
இசை: விஜய் ஆண்டனி
இயக்கம்: பி.வி.பிரசாத்
தயாரிப்பு: சன் பிக்சர்ஸ்
நீங்கள் 13 வயதிற்குட்பட்டவர் அல்லது 19 வயதிற்கு மேற்பட்டவர் எனில், சாலையில் வாகனம் மோதி இறந்து கிடக்கும் நாய், பூனை மற்றும் மனிதர்களையும், கசாப்புக் கடையில் கழுத்தறுபட்டுக் கொண்டிருக்கும் ஆட்டுக்குட்டியையும் ஒருபோதும் காணச் சகியாதவர் எனில், பிப்ரவரி 14ம் தேதியை 'மற்றுமோர் நாளாக' மட்டுமே பாவிக்கும் யதார்த்தவாதி எனில், 'காதலில் விழுந்தேன்' உங்களுக்குரிய படமல்ல.
அதிலும் சித்தப்பாக்கள், சித்திகள், குழந்தைகள், மாமா, அத்தை, பாட்டி, தம்பி, தங்கை என குடும்ப சகிதமாய் சென்று பார்ப்பவர்களுக்கு நிச்சயம் உகந்த படமல்ல. நேற்று முன்தினம் மாலை சொந்தங்கள் சந்தித்துக் கொண்ட அபூர்வ நாளை கொண்டாடுவதென முடிவெடுத்து இந்த திரைக்காவியத்தைப் பார்க்கப் போய் பாரபட்சமின்றி எல்லோரும் ஒருசேர துயரத்தில் விழுந்தோம். பட்ட காலிலே படும் என்பார்கள். எனக்கு பட்ட தியேட்டரிலேயே படுகிறது.
கடந்த 11 வருடங்களுக்கும் மேலாய் திரையரங்கு பக்கம் வந்திராத எங்கள் தாத்தி (பாட்டி) படத்தின் நடுவே என்னை அழைத்து 'என்னைக் கூட்டிட்டு வர வேற நல்ல படமே கிடைக்கலயா உங்களுக்கு?' என்றார்கள் பரிதாபமாய். என் 3 வயது குட்டித் தங்கை திரையில் ரத்தத்தைப் பார்த்ததும் வீறிட்டு அழத் தொடங்கியவள்... நிறுத்தி நிறுத்தி படம் முழுக்க அழுது கொண்டேயிருந்தாள். இரவுக் காட்சி என்பதால் பாதுகாப்பின் அவசியமுணர்ந்து, எழுந்துபோக வழியின்றி சித்தப்பாக்கள் சங்கடமாய் நெளிந்து கொண்டிருந்தார்கள். என்னைப் பற்றிச் சொல்ல வேண்டுமா என்ன?
சரி கதைக்கு வருவோம்.. யாரோ 4, 5 பலவான்கள் துரத்தி வர அவர்களிடமிருந்து காதலியை காப்பாற்றி புகைவண்டியிலேறி காதலர்கள் உடன்போக்கு செல்லும் காட்சியில் தொடங்குகிறது படம். கதைகளில், திரைப்படங்களில் வரும் காதலுக்கு எப்போதும் நாமெல்லோருமே முழு ஆதரவாளர்கள் தான் என்பதால் 'அப்பாடா தப்பியாச்சு' என்ற ஆசுவாசமும் 'அவனுங்க ஃபாலோ பண்ணாமஇருக்கனுமே' என்ற பதற்றமும் ஒருமித்து எழுகிறது. காதலியை படுக்க வைத்துவிட்டு டிக்கெட் பரிசோதகர் லிவிங்ஸ்டனிடம் தங்கள் கதையை சொல்லவாரம்பிக்கிறார் நாயகன். (வீரத்தளபதி ஜே.கே.ரித்தீஷ் அல்ல)
ஏழை நாயகன் நகுலன், செல்வந்த நாயகி சுனேனா. ஓர் நாள் சுனேனாவின் துப்பட்டா மிக அழகாய் காற்றில் பறந்து சென்று நகுலனின் முகத்தை மூட, தமிழ் சினிமா நியதிப்படி காதல் வந்திருக்க வேண்டிய காட்சியில் எதிர்பாராத விதமாய் விபத்து வந்துவிடுகிறது. (இரண்டும் ஒன்றுதான் என்கிறீர்களா!) தன்னால் தான் விபத்து நேர்ந்தது என்ற குற்ற உணர்வின் நீட்சியில் நகுலனை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்து பணிவிடைகளும் செய்கிறார் சுனேனா. விபத்து நட்பாகி, நட்பு காதலாகிறது. திடீரென விளையாட்டுப் போட்டிக்காக வெளியூர் சென்று திரும்பும் நகுலனிடம் சுனேனா இறந்து விட்டதாக சொல்கிறார்கள் நண்பர்கள். அதை நம்ப மறுக்கும் நகுலன் மார்ச்சுவரிலிருந்து காதலியின் பிரேதத்தைத் தூக்கிக் கொண்டு போகிறார். முதல் காட்சியில் ரயிலில் அவர் படுக்க வைத்ததும் அதைத்தான் என்பது தெரிய வரும்போது 'ஏப்ரல் ஃபூல்' ஆனது போல் முகத்தில் அசடு தட்டுகிறது நமக்கு. சுனேனாவைக் கொன்றது நகுலன் தான் என்று காவல்துறை தீவிரமாக தேடிக்கொண்டிருக்க, கொன்றது யாராயிருக்குமென நம்மையும் தீவிரமாய் யோசிக்க வைத்து 'அட..இது கூடவா தெரில? சொத்துக்காக அவங்க சித்தப்பா தான் கொன்னுட்டார்' என்று பாரம்பரியமிக்க புராதன முடிவையே சொல்லி அசத்தியிருக்கிறார்கள்!
காதலர்கள் பைக்கில் சுற்றுதல், ஹோட்டலில் சந்தித்தல், மேசையினடியில் காலுரசிக் கொள்ளுதல், பூக்கள் சிதறிக்கிடக்கும் சாலையில் கைகோர்த்து நடத்தல், தனியறையில் அரைகுறை ஆடையில் நடனமாடுதல், இதழோடு இதழ் பொருத்தி முத்தமிட்டுக் கொள்ளுதல் உள்ளிட்ட வழமையான தமிழ்த்திரையம்சங்கள் எதற்கும் குறைவின்றி, காட்சிக்குக் காட்சி ஏதோவோர் படத்தை நினைவூட்டியபடி நகர்கிறது முற்பாதி.
முற்பாதி தான் இப்படி நிறைய படங்களை ஞாபகப்படுத்துகிறதே தவிர பிற்பாதி படம் அப்படியில்லை. அது சந்தேகத்திற்கிடமில்லாமல் முழுமையாய் கமல்ஹாசனின் 'குணா'வை மட்டுமே நினைவில் நிறுத்துகிறது! படம் ஆரம்பித்ததிலிருந்தே இறந்து போன காதலியின் உடலைத்தான் நகுலன் தூக்கிக் கொண்டு அலைகிறார், 'எங்களை வாழ விடுங்கள்' என்று எல்லோரையும் கெஞ்சிக் கொண்டு திரிகிறார் என்பதை இடைவேளை முடிந்ததுமே இயக்குனர் சொல்லி விடுவதால், படம் முடிந்துவிட்ட திருப்தியோடு பார்வையாளர்கள் அப்போதே கிளம்பி விட ஏதுவாயிருக்கிறது! இதன் மூலம் படம் பார்ப்பவர்களுக்கு நேரம் வெகுவாய் மிச்சமாகிறது!!
நாயகி சுனேனா அழகாக இருக்கிறார். பிரேதம் போலவே மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்! ஆனால் எப்போது சாவார், எப்போது பிழைத்தெழுந்து நடனமாடுவார் என்பது இயக்குனருக்கே புரியாத புதிராயிருந்திருக்க வேண்டும். தோழிக்கு காதல் கடிதம் கொடுத்த நண்பனுக்கு "இது படிக்கற வயசு.. நீ எவ்ளோ கஷ்டப்பட்டு ஃபீஸ் கட்றன்னு எனக்கு தெரியும். படிப்பை கவனிடா" என்று அட்வைசிக் கொண்டிருந்த நாயகி, வீட்டை விட்டு துரத்தப்பட்டு தன்னிடமே அடைக்கலமாகியிருக்கும் நகுலன் தன்னைக் காதலிப்பது தெரிந்ததும், தன் கல்லூரியிலிருந்து விலகி அவர் வகுப்பிலேயே சேர்ந்து பயில்கிறார். காதலித்தாலும் கல்லூரி மாறியாவது கல்வியைத் தொடர வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள் போலிருக்கிறது. காதல் புகினும் கற்கை நன்றே!
படம் முழுக்க கையில் கிடைப்பவர்களை எல்லாம் கொன்று தீர்க்கிறார் நகுலன். இறுதிக்காட்சி கொடூரம்.
சரி... ஒட்டுமொத்தமாய் குறை மட்டும் சொல்வானேன்?
1. நகுலனின் நடிப்பை நிச்சயம் பாராட்டியாக வேண்டும். பாய்ஸில் பார்த்த நகுலனில் கால்வாசி நகுலன் தான் இருக்கிறார் இப்போது! நடனத்திலும் சண்டைக் காட்சிகளிலும் மின்னல் வேகம். கோபமும் குழந்தைத்தனமும் மாறி மாறி பிரதிபலிக்கிறது முகத்தில்.
2. படத்தின் மற்றுமோர் நாயகன் 'நாக்க முக்க' பாடல். அரங்கம் அதிருகிறது. படத்தில் 2 முறை இடம் பெற்றிருந்தபோதும் ஒவ்வொரு முறையும் ஒன்ஸ்மோர் கேட்டபடி குத்தாட்டம் போடுகிறார்கள் இளைஞர்கள்.
3. விஜய் ஆண்டனியின் இசையும் தாமரையின் வரிகளும் பாடல்கள் படமாக்கப்பட்டிருக்கும் விதமும் ஒன்றையொன்று விஞ்சத் துடிக்கின்றன.
4. மலைப்பிரதேசத்தில் தொலைவில் நடக்கும் சண்டைக்காட்சி அருமை.
5. படத்தில் குறிப்பிடத்தக்க மற்றுமோர் நபர் காவல்துறை அதிகாரியாய் வரும் சம்பத். சரோஜாவிலேயே கலக்கியிருந்தார் மனிதர். இதிலும் குறை வைக்கவில்லை.
தன்னால் இயன்றவரை திரைக்கதையை வைத்து சமாளிக்க முயன்றிருக்கிறார் இயக்குனர் பி.வி.பிரசாத். அத்தனை முயற்சிகளும் கதையிலிருக்கும் மாபெரும் ஓட்டையில் விழுந்து விடுவது தான் பரிதாபம்.
பி.கு: சரோஜா படம் ரொம்ப நல்லாருக்கு!
Monday, September 29, 2008
குறையொன்றுமில்லை..
பூக்களாலான பள்ளத்தாக்கினுள்
விழுந்து விட்டாற் போலிருக்கிறது.
கூறும் முன்பாய்க்
குறைகள் களையப்படுகின்றன.
உவகையில் கசியும் விழிநீர்
தரைவிழும் முன்னர்த்
தடுத்தாட் கொள்ளப்படுகிறது.
'போய பிழையும்
புகுதருவான் நின்றனவும்
உன் முன்னால்
தீயினில் தூசாகித்'
திசை கெட்டழிகின்றன.
இருபெரும் கரைகளுக்குள்
பெருகியோடும் நதியாய்
உன்னிரு கரங்களுக்குள்
வாழ்ந்துவிட தோன்றுகிறது...
ஒரு சில யுகங்களேனும்.
Wednesday, September 17, 2008
அக்மதோவாவும் அக்கரைப் பூக்களும்
முதல் வாசிப்பிலேயே எவரிடமாவது பரிந்துரைக்கத் தூண்டிய தொகுப்பு நூல் இது. என்ன காரணத்தாலோ விட்டுப் போனது. இன்றைய விடியலை மேலும் அடர்வு மிக்கதாய் மாற்றியதில் இத்தொகுப்பின் மீதான மீள்வாசிப்பிற்கும் பங்குண்டு என்பதால் இன்றே எழுதிவிடுவதென்ற தீர்மானத்தோடு துவங்கியிருக்கிறேன்.
இது ஒரு கவிதைத் தொகுப்பு. அக்மதோவா முதலாக 18 பிறமொழி கவிஞர்கள் எழுதிய, தேர்ந்தெடுக்கப்பட்ட 53 கவிதைகளின் மொழிபெயர்ப்பு. பெரும்பாலும் தமிழில் மொழிபெயர்ப்பு கவிதைகள், வரிவரியாய் மணலோடிய படுகையைச் சுட்டிக்காட்டி 'இதற்கு முன் இங்கு ஓர் நதியிருந்தது' எனச் சொல்வன போன்று அமைந்திருப்பதாகவே படுமெனக்கு. சற்றும் இளகலில்லாத ஒரு வறட்சி அதில் படிந்திருப்பது, கவிதைகளை கணக்குப் புத்தகங்கள் போலாக்கி விடுகிறது இல்லையா? ஆனால் வ.கீதாவும் எஸ்.வி.ராஜதுரையும் மொழிபெயர்த்திருக்கும் இக்கவிதைகள் மேற்படி குற்றச்சாட்டிலிருந்து பெருமளவு தப்பியிருக்கின்றன.
இந்நூலில் அன்னா அக்மதோவாவின் 13 கவிதைகளை பெயர்த்துத் தந்திருக்கிறார்கள். மேலதிகமாய் அவரைப் பற்றிய விரிவான முன்னுரை ஒன்றும் வழங்கப்பட்டிருக்கிறது.
"சோவியத் யூனியனின் தகர்வுக்கு 4 ஆண்டுகளுக்கு முன் மாஸ்கோவின் முன்னணி இலக்கிய ஏடான 'அக்டோபர்' "இரங்கற்பா" என்னும் தொடர்கவிதையை வெளியிட்டதன் மூலம் சென்ற நூற்றாண்டின் மாபெரும் கவிஞர் ஒருவருக்கு நீண்டகாலமாக இழைக்கப்பட்டு வந்திருந்த அநீதியை துடைத்தெறிந்தது. அப்படைப்பு உருவாக்கப்பட்டு 47 ஆண்டுகளுக்கும் அவற்றைப் படைத்தவர் மறைந்து 21 ஆண்டுகளுக்கும் பிறகு அது வெளியிடப்பட்டமை சோவியத் சமூக வாழ்வில் அறநெறிகள் புதுப்பிக்கப்படுவதன் அறிகுறியாகத் தெரிந்தது"
என்று தொடங்கும் முன்னுரை, அடுத்த 15 பக்கங்களில் அவரின் வாழ்க்கையை, ஆளுமையை, காதலை, பிரிவை, வலியை, தேசத்தின் மீதான வலுவான பிடிப்பை, எந்த நிர்ப்பந்தத்திற்கும் வளைந்து கொடுக்காத அவரது கவிதைகளை... தொடர்ச்சியாய் பேசிப்போகிறது.
அன்னா அக்மதோவா ஒரு ரஷ்யர். ரஷ்ய இலக்கிய உலகின் குறிப்பிடத்தக்க கவிஞர். அதைவிடவும் அவர் ஓர் பெண் கவிஞர். விசும்பென விரிந்து கிடக்கும் தமிழின் நீள்நெடும் இலக்கிய வரலாற்றிலும் கூட பெண் கவிஞர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் மட்டுமே காணக் கிடைப்பதால், அடக்குமுறைகளை எதிர்த்து உரத்து எழும், முதல் பெண் குரல் உலகின் எந்த மூலையிலிருந்து ஒலித்தாலும் அக்குரல் மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவே இருக்கிறது!
அக்மதோவா 1899 க்கும் 1966 க்கும் இடைப்பட்ட காலத்தில் ரஷ்யாவில் வாழ்ந்தவர். புகழ்பெற்ற கவிஞரான நிகோலாய் குமிலியோவை பள்ளிப்பருவத்திலேயே காதலித்து மணந்தவர். தவறான குற்றச்சாட்டின் பெயரால் குமிலியோவ் சுட்டுக் கொல்லப்பட்டபோதும் துயரத்திற்குத் துணையாய் தன் கவிதைகளை மட்டுமே அருகிருத்திக் கொண்டவர். பல்லாயிரக்கணக்கான கம்யூனிஸ்ட்டுகளும் பொதுமக்களும் கொடிய அடக்குமுறைகளுக்கும் மரணதண்டனைகளுக்கும் உள்ளாக்கப்பட்ட காலத்தில் அம்மக்களின் வேதனைகளுக்கு நிரந்தர சாட்சியமாய் 'இரங்கற்பா' என்னும் தொடர்கவிதையை எழுதினார். அவர் இறந்து 21 ஆண்டுகளுக்கு பிறகாய் அக்கவிதையை வெளியிட்டு பரிகாரம் தேடிக்கொண்டது 'அக்டோபர்' இலக்கிய இதழ். அடுத்து வந்த 1989 ம் ஆண்டை 'அக்மதோவா ஆண்டாக' அறிவித்து அவரின் புகழை உறுதிப்படுத்தியது யுனெஸ்கோ நிறுவனம். தனது சுயத்தின் வெளிப்பாடுகளை, ஆணின் அனுபவங்களையே சார்ந்து நிற்கும் மொழியின் மீதே சுமத்தி தனது தனிப்பட்ட அர்த்தங்களுக்கு அக்மதோவா புதுக்குரல் கொடுப்பதாகச் சொல்கிறார்கள் வ.கீதாவும் எஸ்.வி. ராஜதுரையும்.
இந்நூலில் கொடுக்கப்பட்டிருக்கும் அன்னாவின் 13 கவிதைகளில் என்னை மிகவும் அலைக்கழித்த கவிதை இது..
"ஆழ்கிணற்றின் அடியாழத்திலுள்ள ஒரு வெள்ளைக்கல் போல
என்னிடத்தில் ஒரே ஒரு நினைவு மட்டும்.
அதை நான் போக்க முடியாது, போக்க விரும்புவதுமில்லை
அது ஒரு உவகை, அது வேதனையும் கூட.
எனக்குத் தோன்றுகிறது என் கண்களை உற்றுப் பார்ப்பவருக்கு
அது தெளிவாகத் தெரியுமென்று.
சோகம் ததும்பும் கதையொன்றைக் கேட்பவரை விட
அவர் நெஞ்சம் மேலும் கனக்கும், துயருறும்.
எனக்குத் தெரியும் கடவுளர் மனிதரைக்
கல்லாக மாற்றியுள்ளனர்,
மனங்களை அப்படியே விட்டுவைத்து.
அந்த அற்புதமான சோகங்கள்
இன்னும் எஞ்சியிருக்க வேண்டுமென்று
என் நினைவாக மாற்றப்பட்டு விட்டாய் நீ."
நிஜம் தான்.. கல்லை மனமாய்க் கொண்டிருக்கும் மனிதர்களைப் பற்றி எவரும் அக்கறை கொள்ள வேண்டியதில்லை. ஆனால் மனம் மரிக்காமலிருக்கையிலேயே வெளியில் கல்லாய்ச் சமைந்த மனிதர்கள் பெரும் பரிதாபத்திற்குரியவர்கள். எல்லோருடைய மனங்களின் அடியாழத்திலும் சில அற்புதமான சோகங்கள், மறக்க விரும்பாத நினைவுகள் குளிர்ந்த கற்களாய் தேங்கிக் கிடப்பதை யாரேனும் மறுக்கக் கூடுமா என்ன?
மற்றுமோர் கவிதையில்..
"அன்பு இல்லாமலிருப்பது
என் நிம்மதியைக் கூட்டத்தான் செய்கிறது"
என்கிறார் அக்மதோவா. அன்பு ஒரு வகையில் மெல்லிய கண்ணாடிச் சிற்பம் போன்றது தான் இல்லையா? சிற்பத்தின் மீதான பிடி இறுகும்போதும் விலகும்போதும் மனங்கள் நொறுங்குவது தவிர்க்க முடியாததாகிறது. அன்பு இல்லாமலிருப்பதும் கூட சில நேரங்களில் ஆசுவாசமாய்த் தான் இருக்கும் போல!
நற்றிணையில் ஓர் பாடல் உண்டு. தலைவி தோழியரோடு விளையாடுகையில் என்றோ மண்ணில் புதைத்து வைத்த புங்க விதை முந்தைய மழையில் முளை விட்டிருக்கும். 'இம்மரம் உன்னை விடவும் சிறந்தது உனக்கு சகோதரி போன்றது' என்று தாய் சொல்ல.. பாலும் நெய்யும் ஊற்றி அந்த மரத்தை வளர்க்கிறாள் தலைவி. அம்மரத்தினடியில் தலைவன் அவளைச் சந்திக்க வருகையில் 'என் சகோதரியின் முன்பாக உங்களுடன் காதல்மொழி பேச நாணமாயிருக்கிறது' என்பாள். இயற்கையோடு இயைந்த வாழ்வை, எக்காலத்தும் மாறாமலிருக்கும் பெண்களின் மெல்லிய உணர்வுகளை நுட்பமாய் முன்வைக்கும் கவிதை அது. அக்மதோவாவிடம் இதே நுண்ணுணர்வை காண நேர்ந்தபோது மொழி, நாடு, இனம் என மனிதன் வகுத்துக்கொண்ட அற்ப எல்லைகள் அனைத்தும் சட்டென்று இல்லாமலாகின. இதயத்துடிப்பு போல எல்லா மனிதர்களுக்கும் உணர்வுகளும் ஒன்று தானோவெனும் ஐயம் மீண்டுமொருமுறை தோன்றி மறைந்தது.
அக்மதோவாவால் நேசிக்கப்பட்டிருந்த ஒரு வெண்ணிற வில்லோ மரம் வெட்டப்பட்டு விடுகிறது. அப்போது எழுதுகிறார்...
"நான் நேசித்தவை புற்களும் புதர்களும்.
எல்லாவற்றையும் விட ஒரு
வெண்ணிற வில்லோ மரத்தையே.
அதுவும் விசுவாசத்துடன்
வாழ்நாள் முழுவதும் என்னோடே இருந்தது
..............................................................
என்ன ஆச்சரியம்!
அதன் ஆயுளையும் விஞ்சிவிட்டேன் நான்.
குத்துக்கட்டை மாத்திரம் அங்கே நிற்கிறது:
..............................................................
நானோ மெளனத்தில்..
ஒரு சகோதரனை இழந்தவளைப் போல"
வேறு சில கவிதைகளில்,
"தெருவின் பனிப்போர்வையின் மீது
முந்தய நாள் நான் விட்டுச் சென்ற
என் பாதச்சுவடுகளைத் தேடி ஏமாறுவேன்"
எனத் தன் குழந்தைமையை பதிந்து செல்லும் அக்மதோவா,
"குழந்தைகள் இறைக்கும் சாலையோர பூக்கள்
யாரும் பொருட்படுத்தாக் காட்டு மலர்கள்..."
என அழகான அவதானிப்புகளையும் சுட்டிச் செல்கிறார்.
துயரத்தாலும் அவலச்சுவையாலும் சமூக அநீதிகளுக்கெதிரான கூக்குரல்களாலும் நிரப்பப்பட்டிருக்கும் அவரின் 'இரங்கற்பா' இப்படி தொடங்குகிறது...
"இத்தகைய துயரம் மலைகளுக்குக் கூனல் விழச் செய்துவிடும்
ஆறுகளின் போக்கைத் திருப்பி விடும்..."
................................................................................
இறந்தவர் மட்டுமே அன்று புன்னகைத்தனர்
அமைதியடைந்ததில் ஆனந்தம்."
அக்மதோவா தவிர ஷேக்ஸ்பியர், ஜான் கீட்ஸ், பெய் டாவோ, ப்ளாகா டிமிட்ரோவா, கரோல் சத்தியமூர்த்தி உள்பட 17 கவிஞர்களின் சிறந்த கவிதைகள் அக்கரைப் பூக்களாய்த் தொகுக்கப்பட்டிருக்கின்றன இதில்.
"கூழாங்கல்
ஒரு வடுவற்ற படைப்பு
அதற்கு நிகர் அது தான்
அதற்குத் தன் வரம்புகள் தெரியும்
அதில் நிரம்பியுள்ளது
ஒரு கூழாங்கல் அர்த்தம்"
எனத்தொடங்கும் ஜிபிக்னியூ ஹெர்பர்ட்டின் கூழாங்கல் கவிதை மிக அருமை.
ப்ளாகா டிமிட்ரோவாவின் 'சாலையில் தனியாய் ஒரு பெண்'
"இன்னும் ஆண்களுடையதாகவே இருக்கும்
இந்த உலகத்தில்
எங்கும் ஆபத்தும் தொல்லையும் தான்"
எனவாரம்பித்து எப்போதும் மாறாமலிருக்கும் பெண்ணின் பாதுகாப்பற்ற நிலையைவெளிச்சமிட்டுக் காட்டுகிறது.
இவை தவிர ஆசை, அந்த காதலை மீண்டும் என்னிடமிருந்து கேட்காதே, கை ரேகை பார்த்தல், காலதேவனின் அரிவாள், எனது மனைவியைப் பற்றிய எளிய பாடல், காதலும் சாதலும், உடைந்த நிலா ஆகிய கவிதைகள் இந்தத் தொகுப்பில் குறிப்பிடத்தகுந்தவையாய் இருக்கின்றன.
நூல்பெயர் : அக்மதோவா - அக்கரைப்பூக்கள்
தமிழாக்கம் : வ.கீதா - எஸ்.வி.ராஜதுரை
விலை : ரூ.65
பதிப்பு : அடையாளம் பதிப்பகம். (04332 - 273444)
admin@adaiyalam.com
Wednesday, September 10, 2008
மறுபடி ஒரு மொக்கைப் படம் பார்த்து தொலைச்சிட்டேன்...

