Sunday, May 6, 2007

நான் தனியாள் இல்ல!!

"இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்" னு தலைப்பு போட்டு.."நான் என்பது இலக்கணத்தில் ஒருமை.. நடைமுறையில் பன்மை"னு வைரமுத்து மாதிரி கவித்துவமா ஆரம்பிச்சா நல்லாத்தான் இருக்கும். ஆனா.. 'இந்தப் பொண்ணும் எதோ கிறுக்குதே'னு அப்பப்ப பாலைத்திணைக்குள்ள எட்டி பாக்குறவங்களும்.."அடி ஆத்தி"னு அலறி அடிச்சு ஓடிட்டா என்ன பண்றதுனு இப்டி தலைப்பு குடுத்திருக்கேன். ( மீண்டும் ஒரு முறை தலைப்பை சிட்டிஜன் அஜித் ஸ்டைலில் படிக்கவும்!)

இந்த 16 வருஷத்துல.. சாரி பழைய நியாபகம்! இந்த 25 வருஷத்துல... எனக்கு கை கொடுத்தவங்க.. தோள் கொடுத்தவங்க.. இந்த கிணத்துல(?) (என் மனசு ரொம்ப ஆழம்!) கல்லு.. மரம்.. மட்டை..னு எறிஞ்சு இந்த அமைதியான பொண்ண (!?) சலனப்படுத்தினவங்க எல்லாரயும்.. வரிசைப்படுத்தப் போறேன். ரெடி ஜூட்! (ஓடறவங்க இப்பவே ஜகா வாங்கிக்கலாம்!)

10. திரு.கென் : நம்ம ப்ளாக்கர் தாங்க! இவரு கவிதை எழுதறாரா... இல்ல அடி பட்ட இடத்தை அப்டியே ரத்தகாயமா நம்மகிட்ட காட்றாரானு தெரில. பாக்கும் போதே வலிக்குது. ஆனா.."நான் நல்லவன்னு பொய் சொல்ல நான் ஒன்னும் கெட்டவனும் இல்ல. நான் கெட்டவன்னு உண்மைய ஒத்துக்க நான் ஒன்னும் நல்லவனும் இல்ல" அப்டினு அவர பத்தி தெளிவா(!) புரிய வைப்பார்!

9. சுஜா அப்பா: என் யு.ஜி ஃப்ரண்ட் சுஜாவோட அப்பா. எங்கப்பாவே எட்டிப் பாக்காத எங்க ஹாஸ்டலுக்கு மாசம் ஒரு தடவ வந்து... முறுக்கு, பப்ஸ், good day, வீட்டு சாப்பாடு, ..இன்ன பிற அயிட்டங்கள கொண்டு வந்து குடுத்துட்டு.. எனக்கும் ராதிகாவுக்கும் சேர்த்து 3(!) லாலி பப் வாங்கி குடுத்து "சண்டை போடாம சாப்பிடுங்க"னு சொல்லிட்டு போகும் பாசக்கார தந்தை. நாங்க இரண்டாம் ஆண்டு படிக்கும் போது மாரடைப்பால் இறந்து போனார். நினைவு தெரிந்து நான் சந்தித்த.. என்னை உலுக்கிய.. முதல் மரணம். :-(

8. பேரில்லா பச்சைக்கிளி: நான் ஏழாவது படிச்சிட்டிருந்தப்போ.. ஸ்கூல் மரத்துல இருந்து காலொடிஞ்ச கிளி ஒன்னு கீழ விழுந்துச்சு. அத வீட்டுக்கு தூக்கிட்டு போக எல்லாருக்கும் ஒரே அடிதடி! கடைசியா எல்லார் பேரையும் சீட்டுல எழுதி குலுக்கிப் போட்டு எடுத்தாங்க.. பாத்தா என் பேரு! சந்தோஷமா வீட்டுக்கு தூக்கிட்டு வந்துட்டேன். ராமன் சொன்ன மாதிரி.."நால்வரோடு ஐவரானோம்" னு எங்க ஃபேமிலி மெம்பராய்டுச்சு. " குயில் கூவும்.. மயில் அகவும்.. கிளி பேசும்" னு ஒன்னாப்புல படிச்சதுக்கு அப்ப தான் அர்த்தம் புரிஞ்சுது. அவ்ளோ அழகா என்னை.."அக்கா.. அக்கா.."னு கூப்பிட்ட என் பச்சைக்கிளி.. ஒரு விஷேச நாள்-ல நாய் கடிச்சு செத்துப் போச்சு. வாயில கேசரியோட (நான் செஞ்சது இல்ல) அது செத்து கிடந்தத பாத்து நாள் முழுக்க சோறு தண்ணி இல்லாம அழுதேன். ஜூலை 6 ம்(!) தேதி அதுக்கு திதி வருதுங்க. ;-(

7. கண்ணன் சார்: என்னோட வெல்விஷர்.. வழிகாட்டி.. காட் ஃபாதர்.. எப்டி வேணா இவர சொல்லலாம். காந்திஜி, அப்துல்கலாம் ரேஞ்சுக்கு இவர் மேல மரியாதை வெச்சிருக்கேன்னா பாத்துக்குங்க. இவர் என்ன சொன்னாலும் நான் கேப்பேன். அதனால.. "போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே"!

6. ஆனந்த்: எப்பவும் புலம்பிட்டே இருக்கிற பொடிப்பையன். எனக்கு ஆச்சரியமெல்லாம்.. இவன எப்டி விப்ரோ -ல செலெக்ட் பண்ணினாங்கங்கிறது தான். "நீ ஏன் தமிழ் ப்ளாக் ஒன்னு ஆரம்பிக்கக் கூடாது" னு கேட்டு என் அறிவுக்கண்ணை ஓபன் பண்ணின புண்ணியவான். ஆகவே மக்களே! என் மேல எதுனா கோபம் -னா.. நீங்க இவன தொடர்பு கொள்ளலாம்! (பழி ஓரிடம், பாவம் ஓரிடம்-னு ஆயிடக் கூடாதில்ல?)

5. கதிரேசன்: நல்லவன்.. வல்லவன்.. நாலும் தெரிஞ்சவன்! chat ல அறிமுகமான நான் மிகவும் நேசிக்கிற நேர்மையான நண்பன். என்ன ஒரே குறைன்னா.. நியாபக மறதி ஜாஸ்தி. பத்து நாள் ஆன்லைன்ல வரலனா யார் நீ-னு கேப்பான்! ஆனா ரொம்ம்ம்ம்ப... நல்லவன்!!

4. ராதிகா: யு.ஜி ல அறிமுகமான அழகான லூசு! ( அழகு-னு சொல்லிடதால.. லூசு-னு சொன்னத கண்டுக்க மாட்டா!) க்ளாஸ்ல.. ரூம்ல.. னு கூடவே இருந்து கழுத்தறுத்த இம்சை அரசி. இவளும் ஒரு பாவப்பட்ட காலேஜ் ல.."அரம் செய்ய இரும்பு" னு சொல்லிக் குடுத்துகிட்டு இருக்கா! ரெண்டு பேரும் காலேஜ் போகும்போது ஒரு உளியும் சுத்தியும் எடுத்திட்டு போவோம். எதிர்கால இந்தியாவ செதுக்கனுமில்ல?! மொத்ததுல.. கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையார், துரியோதனன் - கர்ணன், பாரி - கபிலர், சரத்குமார் - விஜயகுமார், விஜய் - சூர்யா, வரிசைல வர்ற சரித்திரப் புகழ் பெற்ற நண்பிகள்!

3. அப்பா:  பாசமே உருவான என் தந்தை! தாய்மையை விடவும் அதிகமான அன்பை எங்கள் மீது செலுத்துபவர். அப்பாவுக்கு என்னவெல்லாம் தெரியும் என்று எனக்கு தெரியாது.. ஆனால்.. நான் என்றால் அவருக்கு 'உயிர்' என்பது மட்டும் தெரியும்!

2. அம்மா: மனைவி.. குடும்பத்தலைவி.. அம்மா.. ஃப்ரண்ட்.. என்று எல்லா பரிமாணங்களிலும் பிரகாசிக்கும் இனிய அம்மா! பூஜ்ஜியத்தை அடைந்து விட்ட குடும்ப பொருளாதாரத்தை  படிப்படியாய் உயர்த்தியவர். அசுர உழைப்பாளி... வேலை செய்த நேரம் போக மிச்சமிருந்த சொற்ப நேரங்களில்.. அன்பு..ஒழுக்கம்.. நேர்மை.. பண்பாடு.. இன்ன பிற குணங்களை கற்றுத் தந்தவர். குடும்பத்தை உருவாக்கி.. காப்பாத்தி.. கஷ்டங்கள அழிச்சு...ஆக்கல், காத்தல், அழித்தல் னு 3 gods செய்ற வேலைய 3 in 1 ஆ செஞ்சுகிட்டு இருக்காங்க! அவங்ககிட்ட எதயுமே நான் மறைச்சதில்ல.. என்ன வேணா பேசலாம்.. என்ன வேணா!
( கொஞ்சம் எமோஷனல் ஆய்ட்டேன் இல்ல! அம்மாவ நினச்சா ஒரே
ஃபீலிங்க்ஸ்பா!)

1. தீனதயாளன்: அடுத்து நம்ம டாப் டென்ல முதலிடத்தைப் பிடிக்கிறது.. என் கருவறைத் தோழன்.. ரத்தத்தின் ரத்தம்.. அருமைச் சகோதரன் தீனதயாளன்! அழுத்தம் னா அழுத்தம் அப்டி ஒரு அழுத்தக்காரன்! (பொம்பளைங்க தோத்து போகனும்) நான் பத்து வார்த்தை பேசினா அவன் குட்டியா ஒரு வார்த்தை பேசுவான். குறை இல்லாத மனுஷங்க கிடையாது.. பொறந்ததுல இருந்து இவன் -ட ஏதாச்சும் குறை இருக்கானு நக்கீரர் பேத்தி ரேஞ்சுல தேடரேன்.. மனுஷன் சிக்க மாட்டேங்கிறான்! கோபம்.. பாசம்.. வருத்தம் எல்லாத்தயும் 10% தான் வெளில காட்டுவான். அதுலயே நான் சரண்டர் ஆய்டுவேன்! ஒரே பாச மலர் தான் போங்க! (அக்கா-தம்பி பாசத்தை படமாக எடுக்க விரும்பும் தயாரிப்பாளர்கள் கவனிக்க!)

அவ்ளோ தான்..

பி.கு 1 : விதிமுறைகளுக்குட்பட்டது! கண்ணாலம்.. குழந்த குட்டி னு ஆன பின்னாடி இந்த பட்டியல் மாறலாம்!

பி.கு 2: இந்த பாலைத்திணைக்கு மூலகாரணமான ஜீவனை இந்த லிஸ்ட்டுல சேர்க்கல.

11 comments:

கதிர் said...

:))

MyFriend said...

டாப் 10 எல்லாம் போட்டு அசத்துறீங்க? அசத்துங்க அசத்துங்க..

MyFriend said...

சரி.. உங்களுக்கு டேக் எழுதுறது பிடிக்கும் போல.. எல்லா ப்ளாக்கரு்ம் எழுதியாச்சு.. நீங்களும் அழகைப் பற்றி எழுதலாமே? நான் டேக் பண்றேன். உங்க பின்னூட்டத்தில். சரி்யா?

MyFriend said...

உங்க பதிவுகளின் தலைப்புக்களே ரொம்ப ரொம்ப வித்தியாசமா இருக்கே? ;-)

கதிரவன் said...

நல்லா எழுதறீங்க காயத்திரி..ஆனந்துக்கு வாழ்த்துக்கள் சொல்லிடுங்க

அப்புறம்...பேரில்லா பச்சைக்கிளிங்கறத பொருத்தமா பச்சைக்கலர்ல எழுதியிருக்கீங்க பாருங்க !! ஆகா..என்ன ஒரு ரசனை !! :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\இந்த பாலைத்திணைக்கு மூலகாரணமான ஜீவனை இந்த லிஸ்ட்டுல சேர்க்கல//

ஊருல இல்லாத அநியாயமா இருக்கே..அது யார் எனக்கு தெரிஞ்சே ஆகணும். :)

காயத்ரி சித்தார்த் said...

எல்லாருக்கும் டேங்ஸ் பா! முத்துலட்சுமி மேடம் பாவம் அந்த ஜீவனுக்கு கண்ணாலம் ஆய்டுச்சு! நாம வேற பேரப் போட்டு நோகடிக்கணுமா? அப்றமா உங்களுக்கு மட்டும் சொல்றேன்!

MyFriend said...

//அப்றமா உங்களுக்கு மட்டும் சொல்றேன்! //

ம்ம்.. எனக்கும் சொல்லணும்.. :-)

காயத்ரி சித்தார்த் said...

உனக்கு சொல்லாமயா? கண்டிப்பா சொல்ரேன் என் செல்ல தங்கச்சி..

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

காயத்ரி, உங்கள் எழுத்தில் ஒரு ஈர்ப்பு உண்டாகிறது. உணர்ச்சி கலந்த நடை. தொடர்ந்து எழுதுங்கள்.

தமிழ் விரிவுரையாளரா நீங்கள்? நானும் உங்க ஊரு தான் ! எப்படியோ உள்ளே வந்தவன் ஊர்ப்பெயர் பார்த்து இன்னும் கொஞ்சம் பார்க்க, உங்கள் எழுத்து நடை கவர்ந்தது.

MSK / Saravana said...

நல்லா எழுதறீங்க..