Wednesday, September 17, 2008

அக்மதோவாவும் அக்கரைப் பூக்களும்

முதல் வாசிப்பிலேயே எவரிடமாவது பரிந்துரைக்கத் தூண்டிய தொகுப்பு நூல் இது. என்ன காரணத்தாலோ விட்டுப் போனது. இன்றைய விடியலை மேலும் அடர்வு மிக்கதாய் மாற்றியதில் இத்தொகுப்பின் மீதான மீள்வாசிப்பிற்கும் பங்குண்டு என்பதால் இன்றே எழுதிவிடுவதென்ற தீர்மானத்தோடு துவங்கியிருக்கிறேன்.

இது ஒரு கவிதைத் தொகுப்பு. அக்மதோவா முதலாக 18 பிறமொழி கவிஞர்கள் எழுதிய, தேர்ந்தெடுக்கப்பட்ட 53 கவிதைகளின் மொழிபெயர்ப்பு. பெரும்பாலும் தமிழில் மொழிபெயர்ப்பு கவிதைகள், வரிவரியாய் மணலோடிய படுகையைச் சுட்டிக்காட்டி 'இதற்கு முன் இங்கு ஓர் நதியிருந்தது' எனச் சொல்வன போன்று அமைந்திருப்பதாகவே படுமெனக்கு. சற்றும் இளகலில்லாத ஒரு வறட்சி அதில் படிந்திருப்பது, கவிதைகளை கணக்குப் புத்தகங்கள் போலாக்கி விடுகிறது இல்லையா? ஆனால் வ.கீதாவும் எஸ்.வி.ராஜதுரையும் மொழிபெயர்த்திருக்கும் இக்கவிதைகள் மேற்படி குற்றச்சாட்டிலிருந்து பெருமளவு தப்பியிருக்கின்றன.

இந்நூலில் அன்னா அக்மதோவாவின் 13 கவிதைகளை பெயர்த்துத் தந்திருக்கிறார்கள். மேலதிகமாய் அவரைப் பற்றிய விரிவான முன்னுரை ஒன்றும் வழங்கப்பட்டிருக்கிறது.

"சோவியத் யூனியனின் தகர்வுக்கு 4 ஆண்டுகளுக்கு முன் மாஸ்கோவின் முன்னணி இலக்கிய ஏடான 'அக்டோபர்' "இரங்கற்பா" என்னும் தொடர்கவிதையை வெளியிட்டதன் மூலம் சென்ற நூற்றாண்டின் மாபெரும் கவிஞர் ஒருவருக்கு நீண்டகாலமாக இழைக்கப்பட்டு வந்திருந்த அநீதியை துடைத்தெறிந்தது. அப்படைப்பு உருவாக்கப்பட்டு 47 ஆண்டுகளுக்கும் அவற்றைப் படைத்தவர் மறைந்து 21 ஆண்டுகளுக்கும் பிறகு அது வெளியிடப்பட்டமை சோவியத் சமூக வாழ்வில் அறநெறிகள் புதுப்பிக்கப்படுவதன் அறிகுறியாகத் தெரிந்தது"

என்று தொடங்கும் முன்னுரை, அடுத்த 15 பக்கங்களில் அவரின் வாழ்க்கையை, ஆளுமையை, காதலை, பிரிவை, வலியை, தேசத்தின் மீதான வலுவான பிடிப்பை, எந்த நிர்ப்பந்தத்திற்கும் வளைந்து கொடுக்காத அவரது கவிதைகளை... தொடர்ச்சியாய் பேசிப்போகிறது.

அன்னா அக்மதோவா ஒரு ரஷ்யர். ரஷ்ய இலக்கிய உலகின் குறிப்பிடத்தக்க கவிஞர். அதைவிடவும் அவர் ஓர் பெண் கவிஞர். விசும்பென விரிந்து கிடக்கும் தமிழின் நீள்நெடும் இலக்கிய வரலாற்றிலும் கூட பெண் கவிஞர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் மட்டுமே காணக் கிடைப்பதால், அடக்குமுறைகளை எதிர்த்து உரத்து எழும், முதல் பெண் குரல் உலகின் எந்த மூலையிலிருந்து ஒலித்தாலும் அக்குரல் மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவே இருக்கிறது!

அக்மதோவா 1899 க்கும் 1966 க்கும் இடைப்பட்ட காலத்தில் ரஷ்யாவில் வாழ்ந்தவர். புகழ்பெற்ற கவிஞரான நிகோலாய் குமிலியோவை பள்ளிப்பருவத்திலேயே காதலித்து மணந்தவர். தவறான குற்றச்சாட்டின் பெயரால் குமிலியோவ் சுட்டுக் கொல்லப்பட்டபோதும் துயரத்திற்குத் துணையாய் தன் கவிதைகளை மட்டுமே அருகிருத்திக் கொண்டவர். பல்லாயிரக்கணக்கான கம்யூனிஸ்ட்டுகளும் பொதுமக்களும் கொடிய அடக்குமுறைகளுக்கும் மரணதண்டனைகளுக்கும் உள்ளாக்கப்பட்ட காலத்தில் அம்மக்களின் வேதனைகளுக்கு நிரந்தர சாட்சியமாய் 'இரங்கற்பா' என்னும் தொடர்கவிதையை எழுதினார். அவர் இறந்து 21 ஆண்டுகளுக்கு பிறகாய் அக்கவிதையை வெளியிட்டு பரிகாரம் தேடிக்கொண்டது 'அக்டோபர்' இலக்கிய இதழ். அடுத்து வந்த 1989 ம் ஆண்டை 'அக்மதோவா ஆண்டாக' அறிவித்து அவரின் புகழை உறுதிப்படுத்தியது யுனெஸ்கோ நிறுவனம். தனது சுயத்தின் வெளிப்பாடுகளை, ஆணின் அனுபவங்களையே சார்ந்து நிற்கும் மொழியின் மீதே சுமத்தி தனது தனிப்பட்ட அர்த்தங்களுக்கு அக்மதோவா புதுக்குரல் கொடுப்பதாகச் சொல்கிறார்கள் வ.கீதாவும் எஸ்.வி. ராஜதுரையும்.

இந்நூலில் கொடுக்கப்பட்டிருக்கும் அன்னாவின் 13 கவிதைகளில் என்னை மிகவும் அலைக்கழித்த கவிதை இது..

"ஆழ்கிணற்றின் அடியாழத்திலுள்ள ஒரு வெள்ளைக்கல் போல
என்னிடத்தில் ஒரே ஒரு நினைவு மட்டும்.
அதை நான் போக்க முடியாது, போக்க விரும்புவதுமில்லை
அது ஒரு உவகை, அது வேதனையும் கூட.
எனக்குத் தோன்றுகிறது என் கண்களை உற்றுப் பார்ப்பவருக்கு
அது தெளிவாகத் தெரியுமென்று.
சோகம் ததும்பும் கதையொன்றைக் கேட்பவரை விட
அவர் நெஞ்சம் மேலும் கனக்கும், துயருறும்.
எனக்குத் தெரியும் கடவுளர் மனிதரைக்
கல்லாக மாற்றியுள்ளனர்,
மனங்களை அப்படியே விட்டுவைத்து.
அந்த அற்புதமான சோகங்கள்
இன்னும் எஞ்சியிருக்க வேண்டுமென்று
என் நினைவாக மாற்றப்பட்டு விட்டாய் நீ."

நிஜம் தான்.. கல்லை மனமாய்க் கொண்டிருக்கும் மனிதர்களைப் பற்றி எவரும் அக்கறை கொள்ள வேண்டியதில்லை. ஆனால் மனம் மரிக்காமலிருக்கையிலேயே வெளியில் கல்லாய்ச் சமைந்த மனிதர்கள் பெரும் பரிதாபத்திற்குரியவர்கள். எல்லோருடைய மனங்களின் அடியாழத்திலும் சில அற்புதமான சோகங்கள், மறக்க விரும்பாத நினைவுகள் குளிர்ந்த கற்களாய் தேங்கிக் கிடப்பதை யாரேனும் மறுக்கக் கூடுமா என்ன?

மற்றுமோர் கவிதையில்..

"அன்பு இல்லாமலிருப்பது
என் நிம்மதியைக் கூட்டத்தான் செய்கிறது"

என்கிறார் அக்மதோவா. அன்பு ஒரு வகையில் மெல்லிய கண்ணாடிச் சிற்பம் போன்றது தான் இல்லையா? சிற்பத்தின் மீதான பிடி இறுகும்போதும் விலகும்போதும் மனங்கள் நொறுங்குவது தவிர்க்க முடியாததாகிறது. அன்பு இல்லாமலிருப்பதும் கூட சில நேரங்களில் ஆசுவாசமாய்த் தான் இருக்கும் போல!

நற்றிணையில் ஓர் பாடல் உண்டு. தலைவி தோழியரோடு விளையாடுகையில் என்றோ மண்ணில் புதைத்து வைத்த புங்க விதை முந்தைய மழையில் முளை விட்டிருக்கும். 'இம்மரம் உன்னை விடவும் சிறந்தது உனக்கு சகோதரி போன்றது' என்று தாய் சொல்ல.. பாலும் நெய்யும் ஊற்றி அந்த மரத்தை வளர்க்கிறாள் தலைவி. அம்மரத்தினடியில் தலைவன் அவளைச் சந்திக்க வருகையில் 'என் சகோதரியின் முன்பாக உங்களுடன் காதல்மொழி பேச நாணமாயிருக்கிறது' என்பாள். இயற்கையோடு இயைந்த வாழ்வை, எக்காலத்தும் மாறாமலிருக்கும் பெண்களின் மெல்லிய உணர்வுகளை நுட்பமாய் முன்வைக்கும் கவிதை அது. அக்மதோவாவிடம் இதே நுண்ணுணர்வை காண நேர்ந்தபோது மொழி, நாடு, இனம் என மனிதன் வகுத்துக்கொண்ட அற்ப எல்லைகள் அனைத்தும் சட்டென்று இல்லாமலாகின. இதயத்துடிப்பு போல எல்லா மனிதர்களுக்கும் உணர்வுகளும் ஒன்று தானோவெனும் ஐயம் மீண்டுமொருமுறை தோன்றி மறைந்தது.

அக்மதோவாவால் நேசிக்கப்பட்டிருந்த ஒரு வெண்ணிற வில்லோ மரம் வெட்டப்பட்டு விடுகிறது. அப்போது எழுதுகிறார்...

"நான் நேசித்தவை புற்களும் புதர்களும்.
எல்லாவற்றையும் விட ஒரு
வெண்ணிற வில்லோ மரத்தையே.
அதுவும் விசுவாசத்துடன்
வாழ்நாள் முழுவதும் என்னோடே இருந்தது
..............................................................
என்ன ஆச்சரியம்!
அதன் ஆயுளையும் விஞ்சிவிட்டேன் நான்.
குத்துக்கட்டை மாத்திரம் அங்கே நிற்கிறது:
..............................................................
நானோ மெளனத்தில்..
ஒரு சகோதரனை இழந்தவளைப் போல"

வேறு சில கவிதைகளில்,

"தெருவின் பனிப்போர்வையின் மீது
முந்தய நாள் நான் விட்டுச் சென்ற
என் பாதச்சுவடுகளைத் தேடி ஏமாறுவேன்"

எனத் தன் குழந்தைமையை பதிந்து செல்லும் அக்மதோவா,

"குழந்தைகள் இறைக்கும் சாலையோர பூக்கள்
யாரும் பொருட்படுத்தாக் காட்டு மலர்கள்..."

என அழகான அவதானிப்புகளையும் சுட்டிச் செல்கிறார்.

துயரத்தாலும் அவலச்சுவையாலும் சமூக அநீதிகளுக்கெதிரான கூக்குரல்களாலும் நிரப்பப்பட்டிருக்கும் அவரின் 'இரங்கற்பா' இப்படி தொடங்குகிறது...

"இத்தகைய துயரம் மலைகளுக்குக் கூனல் விழச் செய்துவிடும்
ஆறுகளின் போக்கைத் திருப்பி விடும்..."
................................................................................
இறந்தவர் மட்டுமே அன்று புன்னகைத்தனர்
அமைதியடைந்ததில் ஆனந்தம்."

அக்மதோவா தவிர ஷேக்ஸ்பியர், ஜான் கீட்ஸ், பெய் டாவோ, ப்ளாகா டிமிட்ரோவா, கரோல் சத்தியமூர்த்தி உள்பட 17 கவிஞர்களின் சிறந்த கவிதைகள் அக்கரைப் பூக்களாய்த் தொகுக்கப்பட்டிருக்கின்றன இதில்.

"கூழாங்கல்
ஒரு வடுவற்ற படைப்பு
அதற்கு நிகர் அது தான்
அதற்குத் தன் வரம்புகள் தெரியும்
அதில் நிரம்பியுள்ளது
ஒரு கூழாங்கல் அர்த்தம்"

எனத்தொடங்கும் ஜிபிக்னியூ ஹெர்பர்ட்டின் கூழாங்கல் கவிதை மிக அருமை.

ப்ளாகா டிமிட்ரோவாவின் 'சாலையில் தனியாய் ஒரு பெண்'

"இன்னும் ஆண்களுடையதாகவே இருக்கும்
இந்த உலகத்தில்
எங்கும் ஆபத்தும் தொல்லையும் தான்"

எனவாரம்பித்து எப்போதும் மாறாமலிருக்கும் பெண்ணின் பாதுகாப்பற்ற நிலையைவெளிச்சமிட்டுக் காட்டுகிறது.

இவை தவிர ஆசை, அந்த காதலை மீண்டும் என்னிடமிருந்து கேட்காதே, கை ரேகை பார்த்தல், காலதேவனின் அரிவாள், எனது மனைவியைப் பற்றிய எளிய பாடல், காதலும் சாதலும், உடைந்த நிலா ஆகிய கவிதைகள் இந்தத் தொகுப்பில் குறிப்பிடத்தகுந்தவையாய் இருக்கின்றன.


நூல்பெயர் : அக்மதோவா - அக்கரைப்பூக்கள்
தமிழாக்கம் : வ.கீதா - எஸ்.வி.ராஜதுரை
விலை : ரூ.65
பதிப்பு : அடையாளம் பதிப்பகம். (04332 - 273444)
admin@adaiyalam.com

32 comments:

Sanjai Gandhi said...

//முதல் வாசிப்பிலேயே எவரிடமாவது பரிந்துரைக்கத் தூண்டிய தொகுப்பு நூல் இது//

இன்னும் நீ திருந்தலையா காயத்ரி? :(

குப்பன்.யாஹூ said...

கோடானு கோடி நன்றிகள்.

மிக நல்ல புத்தகம் அறிமுகம் (அடையாளம்) பதிப்பகம்) செய்தமைக்கு.

வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகளுடன்

குப்பன்_யாஹூ

குப்பன்.யாஹூ said...

எனக்கு வாய்த்த
சபிக்கப்பட்ட வாழ்வின் பங்காய்
உனக்கு அன்பைத் தராவிடினும்
காயங்களைத் தராமலிருந்திருக்கலாம்

ரசித்த வரிகள் மிக அருமை.

நல்ல நல்ல வரிகளை பங்கு அளிப்பதற்கு நன்றிகள்.

குப்பன்_யாஹூ

Sanjai Gandhi said...

//என்ன காரணத்தாலோ விட்டுப் போனது//

எல்லாp புகழும் Skype ற்கே.. :P

நாமக்கல் சிபி said...

//எனக்கு வாய்த்த
சபிக்கப்பட்ட வாழ்வின் பங்காய்
உனக்கு அன்பைத் தராவிடினும்
உன் கவிதைகளை வாசித்துத் தொலைக்காமல் இருந்திருக்கலாம்//

ரிப்பீட்டேய்!

நாமக்கல் சிபி said...

//வரிவரியாய் மணலோடிய படுகையைச் சுட்டிக்காட்டி 'இதற்கு முன் இங்கு ஓர் நதியிருந்தது//

ரைட்டேய்!

//சற்றும் இளகலில்லாத ஒரு வறட்சி அதில் படிந்திருப்பது//

பாலைத் திணைல இருந்து ரெகமெண்டேஷன் வருதுன்னா பின்னே எப்படி இருக்குமாம்?

//எல்லோருடைய மனங்களின் அடியாழத்திலும் சில அற்புதமான சோகங்கள், மறக்க விரும்பாத நினைவுகள் குளிர்ந்த கற்களாய் தேங்கிக் கிடப்பதை யாரேனும் மறுக்கக் கூடுமா என்ன?
//

:((

MSK / Saravana said...

புத்தகத்தை அறிமுகம் செய்ததற்கு நன்றி காயத்ரி..

:))

Vishnu... said...

நல்ல விமர்சனம் ...
நல்ல ஒரு தொகுப்பை ..அறிமுகம் செய்தமைக்கு நன்றிகளுடன் ...

விஷ்ணு ..

ILA (a) இளா said...

நம்ம வூட்டுக்கு இந்தப் பொஸ்தவம் பார்சல்ல்ல்ல்ல்ல்ல்ல்

வல்லிசிம்ஹன் said...

வெளியில் கல்லாய்ச் சமைந்த மனிதர்கள் பெரும் பரிதாபத்திற்குரியவர்கள். எல்லோருடைய மனங்களின் அடியாழத்திலும் சில அற்புதமான சோகங்கள், மறக்க விரும்பாத நினைவுகள் குளிர்ந்த கற்களாய் தேங்கிக் கிடப்பதை யாரேனும் மறுக்கக் கூடுமா என்ன?//
முடியாது.
சிலசமயம் சந்தோஷத்திவலைகளால் அவற்றைக் குளிர வைக்கலாம்.
மீண்டும் உங்கள் பகிர்வுக்கு வந்ததற்கு எனக்கு சந்தோஷம்.

Anonymous said...

நல்ல விமர்சனம்...எப்படியாவது தேடி பிடித்து வாங்கி படிக்கத் தூண்டுகிறது உங்கள் விமர்சனம்...நன்றி!

Anonymous said...

//"அன்பு இல்லாமலிருப்பது
என் நிம்மதியைக் கூட்டத்தான் செய்கிறது" //

இந்த வரி எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

Krishnan said...

அருமையான பதிவு ! புத்தகத்தை வாங்க துடிக்குது மனசு...

காயத்ரி சித்தார்த் said...

//இன்னும் நீ திருந்தலையா காயத்ரி? :(
//

கிர்ர்ர்ர்... நீங்க அடங்க மாட்டிங்களா சஞ்சய்?

காயத்ரி சித்தார்த் said...

//கோடானு கோடி நன்றிகள். //

குப்பன்.. எதுக்கு இவ்ளோ நன்றி சொல்றீங்க? நான் என் கடமையைத் தான செஞ்சேன்? :))

//ரசித்த வரிகள் மிக அருமை.

நல்ல நல்ல வரிகளை பங்கு அளிப்பதற்கு நன்றிகள்.//

அது நண்பர் சந்திரசேகரோட கவிதை... முழுக்கவிதையும் ரொம்ப நல்லாருக்கும். லிங்க் குடுத்திருக்கேன் பாருங்க.

காயத்ரி சித்தார்த் said...

//எல்லாp புகழும் Skype ற்கே.. :P
//

பிசாசே...

காயத்ரி சித்தார்த் said...

சிபியண்ணே.. என்னைக் கலாய்க்கறேன்னு ஆர்.வி.சி யை கலாய்ச்சிருக்கீங்களே? பாவம் அவரு.. :(

சரவணக்குமார், விஷ்ணு நன்றி.

இளா அண்ணா நன்றி.. எப்பவாச்சும் இந்த பக்கமும் எட்டிப் பாக்கறதுக்கு. :)

காயத்ரி சித்தார்த் said...

@ வல்லிசிம்ஹன்..

//மீண்டும் உங்கள் பகிர்வுக்கு வந்ததற்கு எனக்கு சந்தோஷம்.//

ஆஹா.. ஏற்கனவே வந்திருக்கீங்களா? தங்கள் வரவு நல்வரவாகுக. நன்றிங்க. :)

காயத்ரி சித்தார்த் said...

// இனியவள் புனிதா said...
//"அன்பு இல்லாமலிருப்பது
என் நிம்மதியைக் கூட்டத்தான் செய்கிறது" //

இந்த வரி எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.//

ம்ம்.. ரொம்ப நல்லாருக்குல்ல? நன்றி புனிதா.

காயத்ரி சித்தார்த் said...

கிருஷ்ணன் முதல் வருகையா இது? நன்றி! :)

Anonymous said...

//ம்ம்.. ரொம்ப நல்லாருக்குல்ல?//

ம்ம்ம் :-) என் நிம்மதி தொலைந்து நீண்ட நாளாச்சு......

Sanjai Gandhi said...

//இளா அண்ணா நன்றி.. எப்பவாச்சும் இந்த பக்கமும் எட்டிப் பாக்கறதுக்கு. :) //

ம்க்கும்.. நீயே எப்போவாச்சும் தான் இந்த பக்கம் எட்டிப் பார்க்கிற.. இந்த லட்சணத்துல இளாவை சொல்றியா?
... என்னாச்சி.. திடிர்னு ஒரு பதிவு போடற அளவுக்கு டைம் கெடைச்சிருக்கு... ஒடம்பு எதும் சரியில்லையா? ( உனக்கில்ல.. :P )

Krishnan said...

ஆமாம் காயத்ரி அவர்களே...தங்களின் வாசித்ததும் நேசித்ததும் பகுதியை விரும்பி வாசிக்கிறேன்.

Prabhu said...

மின்னஞ்சலில் தங்களின் வலைப்பதிவுகளை பெற்றுக்கொள்ள விருப்பம்.

Prabhu said...

மின்னஞ்சலில் தங்களின் பதிவுகளை பெற்றுக்கொள்ள விருப்பம்.இயலுமா? பின்வரும் வலைப்பூவில் இவ்வசதி உள்ளது.(http://pudhiyayugam.blogspot.com/)

தறுதலை said...

நன்றி

-------------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'08)

அது சரி said...

//
கல்லை மனமாய்க் கொண்டிருக்கும் மனிதர்களைப் பற்றி எவரும் அக்கறை கொள்ள வேண்டியதில்லை. ஆனால் மனம் மரிக்காமலிருக்கையிலேயே வெளியில் கல்லாய்ச் சமைந்த மனிதர்கள் பெரும் பரிதாபத்திற்குரியவர்கள்.
//

அடேங்கப்பா.... இந்த ரெண்டு வரி, ஒரு நூறு கவிதைகளுக்குச் சமம். மிக மிக ஆழமான வாக்கியங்கள்!

இதைத்தான் கண்ணதாசன் "ஒருவன் மனது ஒன்பதடா, அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா" என்று சொன்னார் நினைக்கிறேன். ஆனால் அவர் சொன்னதை விட நீங்கள் சொன்னது மிக ஆழமாய் இருக்கிறது.

வாழ்த்துக்கள்!

King... said...

மீண்டும் நல்வரவு...

colourkool said...

....

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

மிகு நாட்களுக்குப் பின் உன் வருகை,அப்படின்னு ஆரம்பிச்சு ஒரு கவிதைல பின்னூட்டம் போடலாம்னுதான் நெனைச்சேன்,அப்புறம் படிச்சு பஸ்ஸுல பர்ஸைத் தொலைச்சா மாதிரி ஒரே அழுவாச்சி ஆகி,திரும்ப நீங்க அழுவாச்சிப் பதிவு எழுதினா மனசு கஷ்டப் படுமேன்னு விட்டுடறேன்!
:)

ஆனா அறிமுகம் நல்லா இருந்தது.

Sanjai Gandhi said...

//முதல் வாசிப்பிலேயே எவரிடமாவது பரிந்துரைக்கத் தூண்டிய தொகுப்பு நூல் இது. என்ன காரணத்தாலோ விட்டுப் போனது//

காரணம் எனக்குத் தெரியுமே :)))
..அப்போவே நீ ரொம்ப பிசியா காயத்ரி?... :)))

( ஆமா .. இப்போ எதுக்கு இந்தப் பதிவு தமிழ்மண்ம் முகப்புல புதுப் பதிவுகள் பட்டியல்ல வருது? :((

N A V ! N said...

nice...