Saturday, June 2, 2007

மெளனத்தின் மொழி

நேற்று...
எங்கோ ஓர் காதல் நிராகரிக்கப்பட்ட...
யாருக்கோ ஏமாற்றம் கொடுத்த...
நம்பிக்கை ஒன்று கைவிடப்பட்ட....
சாத்தானால் ஆசீர்வதிக்கப்பட்ட...

துயர் மிகுந்த கணம் ஒன்றில்
முடிவெடுத்தேன்
உன்னிடம்
பேசாதிருப்பது என்று.

அதனால்..
உனக்கென்று சுரந்த சொற்களை
சேமிக்க வேண்டியதாயிருந்தது
நாள் முழுவதும்.

தசைகளில்
நரம்புகளில்
ரத்தநாளங்களில்
சுவாசப்பைகளில்
இதய அறைகளில்
நிரம்பி வழிந்த சொற்களால்
வீக்கமடைந்தது உடல்.

மாலையில் நீ வந்தாய்...

பேச எத்தனிக்கும் முன்பாக
சட்டென்று துளிர்த்து
கன்னங்களில்
கோடாய் இறங்கிய கண்ணீரில்
வடிந்து போயின
எல்லாச் சொற்களும்!

21 comments:

Ken said...

மெளனத்தின் குரூரம் புரிவதில்லை

நந்தா said...

வர வர உங்க கவிதை படம் காமிக்குது.


///பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது
அழுதால் கொஞ்சம் நிம்மதி.
பேச மறந்த சிலையாய் நின்றால்
அதுதான் தெய்வத்தின் சன்னதி.
அதுவே காதல் சன்னதி.////

இந்த பாடல் தான் நினைவிற்கு வருகிறது. அருமையான கவிதை காயத்ரி. வாழ்த்துக்கள்......

CVR said...

நல்லா இருக்கு கவிதை! :-)

Guna said...

ரொம்ப நல்ல இருக்கு.

காயத்ரி சித்தார்த் said...

கென்.. நந்தா.. சி.வி.ஆர்.. குணா..எல்லாருக்கும் நன்றி.

குட்டிபிசாசு said...

//சட்டென்று துளிர்த்து
கன்னங்களில்
கோடாய்//

வார்த்தைகள் அழகு!

குட்டிபிசாசு said...

நீங்க எப்படிங்க இப்படி எழுதிரீங்க!!எனக்கு இப்படி எல்லாம் தோணுவதே இல்லை! தோணிச்சாலும் வார்த்தைகளும் கிடைக்கிறது இல்லை! அப்படியே எழுதினாலும் தருமி மாதிரி "உரைநடை" யாக இருக்கிறது! டிப்ஸ் எதாவது கொடுங்க!!

இரா.கோகிலவாணி கார்த்திகேயன் said...

காயத்ரி ,
உங்களுடைய எல்லா கவிதைகளும் மனதை ஏதோ செய்கின்றன. அவை காதலை வெளிப்படுத்துவதால் மட்டும் அல்ல, அதையும் தாண்டி ஏதோ ஒன்று!

இலக்கியமாக எழுகிறேன் பேர்வழி என்று என்னைப் போன்ற சிறு மூளைகளுக்கு எட்டாக் கவிதைகளை எழுதும் பழக்கம் உங்களுக்கு இல்லையே!

இனி தவறாது உங்கள் பதிவுகள் வாசிக்கப்படும்!

காயத்ரி சித்தார்த் said...

//இலக்கியமாக எழுகிறேன் பேர்வழி என்று//

ஏங்க! இதுவரை எழுதினதெல்லாம் இலக்கியமா தெரியலயா உங்களுக்கு? :(

//டிப்ஸ் எதாவது கொடுங்க!! //

வேலை வெட்டி எதாச்சும் பாத்திங்கன்னா உடனே ராஜினாமா பண்ணிட்டு உக்காந்து கம்ப்யூட்டரை மொறச்சு மொறச்சு பாருங்க!! நான் அப்டி பண்ணிட்டிருக்கிறதா தான் எங்கம்மா சொல்லிட்டே இருக்காங்க!! :)))

குட்டிபிசாசு said...

உங்க ஐடியா கேட்டால் முதலுக்கே மோசம் ஆகிடும் போல..

மொறச்சு பார்க்கிறது என்ன..மடிகணிணியோட தான் தூங்குறேன்!

ஆனால் வேலைய விவாகிரத்து பண்ண சொல்லுரீங்க..! நான் பேசாம உரைநடையே எழுதுரேன்! நன்றி!

G3 said...

//சாத்தானால் ஆசீர்வதிக்கப்பட்ட...//

எப்படிமா உனக்கு மட்டும் இப்படி எல்லாம் தோணுது??

எப்படியோ.. கவிதை அருமை :-))

நிஜமாவே உன் எல்லா கவிதைகளும் இதயத்தை தொடற மாதிரி இருக்கு :-))

இரா.கோகிலவாணி கார்த்திகேயன் said...

////ஏங்க! இதுவரை எழுதினதெல்லாம் இலக்கியமா தெரியலயா உங்களுக்கு? :(/////////

அடடா! எல்லாருக்கும் புரிகிற மாதிரி எழுதினா இலக்கியம் இல்லைன்னு சொல்லிட்டு இப்போதுள்ள இலக்கியவாதிகள் சொல்றாங்கோ! ஆனால் உங்க கவிதை மனதுக்கு பக்கத்தில், புரிகிற மாதிரி இருப்பதால் அப்படி கேட்டுட்டேன்! வருத்தப்படாதீங்க ப்ளீஸ்!

selventhiran said...

நன்றாக இருக்கிறது. முக்கியமாக முதல் வாசிப்பிலேயே புரிகிறது.

காயத்ரி சித்தார்த் said...

குட்டிபிசாசு ரொம்ப பயந்துட்டீங்க போல!! நீங்க ரொம்ப நல்லா கவிதை எழுதறதா அய்யனார் சொல்லிருக்காரே? ஏன் கவலைப்படறீங்க?

அப்பாடா எங்க இன்னும் நம்ம பொண்ண கானோமேன்னு பாத்தேன். ஜி3 வரலன்னா எனக்கு அடுத்த பதிவு எழுதவே தோணறதில்லன்ன பாருங்க!! :)

வருத்தமில்ல கோகிலவாணி! அது சும்மா..பாராட்டினதுக்கு நன்றி. செல்வேந்திரன் உங்களுக்கும்!

none said...

ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க காயத்ரி.
வாழ்த்துக்கள்!

G3 said...

//ஜி3 வரலன்னா எனக்கு அடுத்த பதிவு எழுதவே தோணறதில்லன்ன பாருங்க!! :)//

ஆ..ஹச்... ஒண்ணுமில்லை.. நீ வெச்ச ஐஸ்ல கொஞ்சம் ஜலதோஷம் புடிச்சிக்குச்சு.. அவ்ளோதான் ;-))

காயத்ரி சித்தார்த் said...

நன்றி பூர்ணிமா!

//நீ வெச்ச ஐஸ்ல கொஞ்சம் ஜலதோஷம் புடிச்சிக்குச்சு.. அவ்ளோதான்//

ஏய் ஐஸ் எல்லாம் இல்ல. அடுத்த பதிவு போட்டாச்சு பாரு.

Anonymous said...

ஜூப்பர் :) கலக்கிட்டீங்க

நவீன் ப்ரகாஷ் said...

//பேச எத்தனிக்கும் முன்பாக
சட்டென்று துளிர்த்து
கன்னங்களில்
கோடாய் இறங்கிய கண்ணீரில்
வடிந்து போயின
எல்லாச் சொற்களும்! //

காதல் என்றாலே கண்ணீரா காயத்ரி ??:))) அழகான சோகம் !! :)))

காயத்ரி சித்தார்த் said...

//காதல் என்றாலே கண்ணீரா காயத்ரி ?//

இல்லையே? யார் அப்படி சொன்னது நவீன்? எந்த உறவிலும் பிரிவு என்பது கண்ணீர் தானே? பாலைத்திணை - பிரிவும் பிரிவின் நிமித்தமும்!

நன்றி ஜீவா.

MSK / Saravana said...

"அதனால்..
உனக்கென்று சுரந்த சொற்களை
சேமிக்க வேண்டியதாயிருந்தது
நாள் முழுவதும்.

தசைகளில்
நரம்புகளில்
ரத்தநாளங்களில்
சுவாசப்பைகளில்
இதய அறைகளில்
நிரம்பி வழிந்த சொற்களால்
வீக்கமடைந்தது உடல்.

மாலையில் நீ வந்தாய்..."

இக்கவிதையையும் பாராட்ட என்னிடம் வார்த்தைகளே இல்லையென்பதை எப்படி உங்களுக்கு புரியவைப்பது..!!????