Tuesday, October 23, 2012

நசை பெரிதுடைமை


சித்துவிற்கு உயரம் என்றால் பயம். இப்படி நான் சொல்லும் போதெல்லாம் சித்து அருகிருந்தால் உடனே ஆட்சேபிப்பார். "எனக்கு உயரமென்றால் பயமில்லை. ஆழமென்றால் தான் பயம்" என்பார். அந்த  பதில் ஒவ்வொரு முறையும் என்னை ரசனையாய் புன்னகைக்க வைக்கும். உணர்வுகளிலும் கூட இப்படித் தான். அவருக்கு உயர, ஆழங்கள் மிக அரிது. நானோ இவ்விரண்டு புள்ளிகளுக்கிடையில் பயணிப்பதையே தன்னியல்பாய்க் கொண்டவள். சமதளங்கள், புது முகங்கள், பொது இடங்கள், உயர் ஆளுமைகள், ஆரவாரமிக்க சபைகள், சவ்வூடு பரவும் பார்வைகள், பேச்சினை கலையாக அல்லது தொழிலாகக் கருதும் உதடுகள், கணக்குகள், புதிர்கள், அலர், அறிவினா, அரட்டை ஆகியவற்றிலிருந்தெல்லாம் எப்போதும் ஒதுங்கியிருக்கவே விழைவேன். 3 வயதில் முதன் முதலாக பள்ளிக்கு அனுப்பிய போது என்னை விடவும் அம்மா தான் மிகவும் சோர்ந்து போனார்கள். ஓயாத அழுகையில் தொடங்கி, வயிறு வலி, காது வலி, பல் வலி என்றெல்லாம் பொய் சொல்லி அழுது அம்மாவை வரவழைப்பது, இடைவேளை நேரத்தில் தப்பித்து பக்கத்தில் எதாவது கடையில் உக்கார்ந்து கொண்டிருந்து விட்டு பள்ளி முடிந்ததும் போய் பையை எடுத்துக் கொண்டு நல்ல பிள்ளையாய் வீட்டுக்குப் போவது என்று வயது ஏற ஏற என் தப்பித்தலியலும் (எஸ்கேபிசம்?) வளர்ந்து கொண்டிருந்தது. கல்லூரியில் இரண்டாம் வருடம் முதல் நாளன்று அம்மா வகுப்பறை வரை வந்து உள்ளே அனுப்பி விட்டுப் போகுமளவிற்கு அது என்னுள் வேரூன்றியிருந்தது. புகுந்த வீட்டிலும் கூட இந்த குணத்தால் சில சிரமங்கள் இருக்கவே செய்தன. என் பலமென்று நானும் பலவீனமென்று சித்துவும் கருதும் இக்குணாம்சம் அமுதினியிடமும் பிரதிபலிப்பதில் இருவருக்குமே உடன்பாடில்லை தான்,என்றாலும் அவளும் இன்று வரையில் இப்படியான கவலைகளுக்கு இடமளித்ததில்லை. இன்று வரையில்.... :)

அம்முவிற்கு இப்போது இரண்டரை வயதாகிறது. வீட்டைத் தூக்கி ஒரு டப்பாவில் போட்டு குலுக்கி தலைகீழாய் கொட்டுவதற்கு ஈடாய் குறும்புகள் செய்வாள். அவளை வைத்துக் கொண்டு எந்தவொரு வேலையையும் என்னால் செய்துவிட முடியாது. அவள் தூங்கும் நேரம் சமைத்தால் தான் உண்டு. இல்லாவிட்டால் ஹோம் டெலிவரிக்கு தொலைபேச வேண்டியிருக்கும். எப்போதும் என் அருகில் அல்லது மடியில் தான் இருப்பாள். தினமும் இரவு 12 மணிக்கோ 1 மணிக்கோ தூங்குவது. காலையில் 10 மணிக்கு விழிப்பது.. இடைப்பட்ட நேரம் முழுக்க குறும்புகள் செய்வது என்ற அவளது வாழ்க்கை முறையை ஒழுங்குபடுத்த வேண்டி, கடந்த ஒரு மாத காலமாக அவளை பள்ளியில் சேர்ப்பது குறித்த தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியிருந்தோம். அமெரிக்க, இங்கிலாந்து, இந்திய கல்வி முறைகளில் எந்த கல்வித் திட்டத்தைத்  தேர்ந்தெடுப்படுப்பது என்று  திசையறியாது நீண்ட எங்கள் குழப்பம், வெகு நாட்கள் நீடித்து 'மாண்டிசோரி கல்வி' என்ற முனையில் நின்று, 'ப' திருப்பமெடுத்து 'எந்த மாண்டிசோரி பள்ளி?' என்ற திசையில் மீண்டும் நீளத் தொடங்கியது. நல்ல பள்ளி எந்த திசையில், எத்தனை தூரத்திலிருந்தாலும் அங்கேயே வீட்டையும் மாற்றிக் கொள்வது என்ற முடிவோடு அலைந்து திரிந்தோம். பெரிய பள்ளிகள் அனைத்திலும் மாணவர் சேர்க்கை ஆகஸ்டிலேயே முடிந்து விட்டதாக கை விரித்தார்கள். தொடர்ந்து அலைந்ததில் ஒரு வழியாக வீட்டிலிருந்து நடந்து செல்லும் தொலைவுக்குள் சின்னஞ்சிறிய மாண்டிசோரி பள்ளி ஒன்று வாய்த்தது. வெறும் இருபதே குழந்தைகள். அனைத்தும் சின்னஞ்சிறிய இந்திய முகங்கள். வரும் மார்ச் மாதம் வேறு பள்ளியில் இடம் கிடைக்கும் வரை தற்காலிகமாக இங்கே அனுப்பலாம் என்று முடிவெடுத்தோம். பணம் செலுத்தி, ஆசிரியர்களிடம் பேசிக் கொண்டிருந்துவிட்டு கிளம்பும் வரை அம்மு மெய்மறந்து விளையாடிக் கொண்டிருந்தாள். வலுக்கட்டாயமாகப் பிடித்து தூக்கி வந்து காரில் ஏறியதுமே "எவ்ளோ பொம்மை.. என்ன விடு, நான் ஸ்கூலுக்குப் போறேன்" என்று திமிறினாள். வெகு சந்தோஷமாய் இருந்தது. மிகப் பிடித்த பாடலைப் போல அந்த வார்த்தைகள் மனதிற்குள் ஒலித்துக் கொண்டேயிருந்தன.

இன்று அவளை முதன்முதலாய் பள்ளிக்கு அனுப்பும் நாள். எத்தனை முயன்றும் நேற்று இரவு முழுவதும் ஆழ்ந்த உறக்கம் வாய்க்கவே இல்லை. கடந்த இரண்டரை வருடத்தில் முதன் முறையாக இரவு எட்டு மணிக்கெல்லாம் உறங்கப் போய் விட்டோம். திடுமென விழிப்பு வந்ததும்.. விடிஞ்சிடுச்சோ என்று பதறி எழுந்து மணி பார்த்தால் இரவு 10 மணி தான் ஆகியிருந்தது. :) எங்கோ யார் பொறுப்பிலோ குழந்தையைத் தனியாக விடப் போகிறோமே என்ற கவலையை விடவும் அவள் அருகில்லாத 4 நான்கு மணி நேரங்களை எப்படி தனியாக கழிக்கப் போகிறேன் என்ற கவலையே ஆட்டிப் படைத்தது. காலையில் 6 மணிக்கெல்லாம் குழந்தை விழித்து விட்டாள். பள்ளிக்குப் போவது குறித்த அதீத உற்சாகத்திலிருந்தாள். புதுப் பட்டுப் பாவாடையும், ஒற்றைச் சிண்டும், முல்லைச்சரமுமாக ஜொலித்தாள். சாமிப் படங்களின் முன்னால் சித்துவின் மடியில் அமர்ந்து அரிசியில் "அ" எழுதினாள். தொலைபேசியில் தாத்தா, பாட்டி, அத்தை, மாமா என உறவினர்களிடமும் ஜெ.மோவிடமும் ஆசி பெற்றாள். எல்லாமும் வெகு சுலபமாக, சுபமாக நடக்கிறதே என்று நினைத்துக் கொண்டே சென்று அவளை பள்ளியில் சேர்ப்பித்து சிறிது நேரம் உடனிருந்து விட்டு அவளறியாமல் நகர்ந்தோம். முதலில் சித்து அலுவலகத்திற்கு கிளம்பினார். அடுத்த 10 நிமிடங்களில் நானும் வெளியில் வந்து நடக்கத் தொடங்கினேன். வீடு பயமுறுத்தியது. ஒற்றை படுக்கையறை கொண்ட சிறிய வீடு… நினைவில் எவருமற்ற மிகப் பரந்த மைதானமாக விரிந்து கொண்டே போனது. அந்த வெறுமையை சந்திக்காமல் எப்படி தப்பிக்க? 4 மணி நேரங்களை கண்ணீரில்லாமல் எப்படிக் கடக்க? அலுவலகம் சென்று கொண்டிருந்தவரிடம் தொலைபேசியில் தழுதழுத்தபடியே நடந்தவள், வழியில் தேவையே இல்லாமல் ஒரு கடைக்குள் நுழைந்து எதுவுமே வாங்காமல் சுற்றிச் சுற்றி வந்து விட்டு குழந்தைக்குப் பிடித்த சிலவற்றை மட்டும் வாங்கிக் கொண்டு வெளியில் வந்தேன்.  வாசலருகே சித்து காரில் காத்துக் கொண்டிருந்தார்! மனதில் உறைந்திருந்த பாரம்  முழுவதும் உருகி கண்ணீராய் வழியத் தொடங்கியது. முன்னெப்போதை விடவும் சித்துவின் மேல்  பிரியம் அபரிதமிதமாய்ப் பொங்கிப் பிரவகித்தது. இலக்கில்லாமல் தெருக்களில் சுற்றிக் கொண்டிருந்து விட்டு  என்னை வீட்டில் இறக்கி விட்டு திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே கிளம்பிப் போனார்.

உள்ளே நுழைந்தால் கோபித்துக் கொண்டாற் போல வீடு மெளனம் சாதித்தது.. சமையலறைக்குள் நுழையும் போதே "அம்மா பாப்பாகிட்ட வந்துருங்கம்மா.. புவா செய்ய வேணாம்மா" என்றபடி ஓடி வரும் கொலுசொலிக்கு மனம் ஏங்கி நின்றது. திணறலாய் காலையுணவை கொறித்துக் கொண்டிருக்கையில் பள்ளியிலிருந்து தொலைபேசி.. "உங்கள் மகள் ஓயாமல் 'அம்மா, அம்மா' என்று அழுகிறாள்.. வந்து அழைத்துப் போக முடியுமா?" குழந்தை பள்ளிக்குப் போக மறுத்து அழுவதைக் கேட்டு எல்லையில்லா ஆனந்தம் அடைந்த அன்னை உலகிலேயே நானாகத் தான் இருப்பேன் என்று நினைக்கிறேன். :) அப்போதே கிளம்பி ஓட்டமாய் ஓடி பள்ளிக்குள் நுழைந்து, குழந்தையை அள்ளிக் கொண்டேன். அவள் கன்னத்தில் வழிந்து கொண்டிருந்த கண்ணீரைத் துடைத்து விட்டபடியே "எல்லாரும் அழாம விளையாடிட்டு இருக்காங்களேடா? நீ மட்டும் ஏன் அழறே?" என்றால் "அந்த பையன் அழறான் பாரு.. அவனை பாத்து தான் பாப்பாவும் அழறா" என்று ஒரு மூலையில் கத்திக் கொண்டிருந்த பையனைக் காண்பித்தாள். சிரிப்பு பொங்கிக் கொண்டு வந்தது. முகமெல்லாம் மகிழ்ச்சியில் விகசிக்க அவளை அணைத்தபடி வெளியில் வந்தேன். காண்பவையெல்லாம் அந்தக் குழந்தைகளின் கலரிங் புக் போல வண்ணத் தீட்டல்களாகத் தோன்றின. ஓயாமல் முத்தமிட்டுக் கொண்டும் கொஞ்சிக் கொண்டும் அழைத்து வந்தேன். அவள் நான் வேண்டுமென்று அழுதிருக்க மாட்டாள். எனக்கு அவள் வேண்டுமென்று புரிந்து தான் அழுதிருப்பாளாயிருக்கும்… என்ற அபத்த நினைப்பில் மனம் தித்தித்துத் திகட்டியது. வழியெல்லாம் புறாக்களையும் பூனைகளையும் துரத்தியபடி கொண்டாட்டமாய் வீடு வந்து சேர்ந்தோம். வீட்டிற்குள் நுழைந்ததும் வேண்டுமென்றே சமையலறைக்குள் சென்று நின்று கொண்டேன். "அம்மா பாப்பாகிட்ட வந்துருங்கம்மா.. வேலை செய்ய வேணாம்மா.. பாப்பா கூடயே இருங்கம்மா..ப்ளீஸ்மா.. :))

14 comments:

ஸ்ரீ.... said...

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தங்கள் எழுத்தை வாசித்தது மகிழ்ச்சி. அடிக்கடி எழுதுங்கள். மற்றொரு நெகிழ்வான பதிவு.

ஸ்ரீ....

karthikeyan said...

மிக அழகான அனுபவ பதிவு, வரிக்கு வரி தாய்மை மிளிர்கிறது....

karthikeyan said...

மிக அழகான அனுபவ பதிவு, வரிக்கு வரி தாய்மை மிளிர்கிறது.....

எல் கே said...

நீங்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் . என் மகள் அழாமலே பள்ளி சென்று விட்டாள் . அவளுக்கு பலர் கூட விளையாட வேண்டும் என்ற ஆசை அதிகம். புறாக்கூண்டு வாழ்க்கையில் தனியாக இருந்ததால் இப்படி ஒரு ஆசை

கார்த்திகைப் பாண்டியன் said...

இப்படியே இருங்க பிள்ளைங்களா.. பள்ளிக்குச் செல்லும் சிறியவளுக்கு வாழ்த்துகள் காயத்ரி..:-)

BD said...

அருமையான அனுபவப்பகிர்வு, சகோதரி.

நான் முதல் முதலில் பள்ளி சென்ற அனுபவத்தை நினைவூட்டும் வகையில் அமைந்திருந்தது.

இருபத்தைந்து ஆண்டுகள் கழிந்து விட்ட பின்னும் பசுமரத்தாணி போல நினைவிருக்கும் நாள். அம்மா பள்ளி உள்ளே விட்ட பின், திரும்பி திரும்பி அவரையே பார்த்துக்கொண்டு உள்ளே போனேன். கண்ணில் நீர். அப்போது இன்னொரு சக குழந்தை என்னை கை பிடித்து கொண்டு கூட விளையாட வந்தாள்.... (அவள் அம்மா அங்கே டீச்சர் ஆதலால் அவள் ரொம்ப ஜாலியாக இருந்தாள்). இன்று வரை ஒரு உடன் பிறவா சகோதர சகோதரியாக இருக்கிறோம். வாழ்க்கையின் வைகறையில் தொடங்கும் நட்புக்கள் என்றும் ஆழமானவை. அந்த குழந்தைக்கு இப்போது ஒரு குழந்தை பிறந்துள்ளது! ஆங்..... பள்ளி விட்டு வருகையில் Marie Biscuit ஒன்று எனக்கு, ஒன்று அண்ணனுக்கு என்று கேட்டு இரண்டாக வாங்கி வந்தது நன்கு நினைவிருக்கிறது!

அழும் பிள்ளையை கண்டு "வாடிய பயிரைக்கண்ட போதெல்லாம் வாடினேன்" என அழும் தங்கள் மகள் மனம் என்றும் அவ்வுன்னத குணம் பெருக வாழ இறையருளை வேண்டுகிறேன்.

வாழ்த்துக்களுடன்
புவனேஷ்வர்
http://www.bhuvanasays.blogspot.in/

Raj said...

உணர்வுகள் ததும்பும் ஒரு நெகிழ்ச்சியான பதிவு...

Raj said...

உணர்வுகள் ததும்பும் ஒரு நெகிழ்ச்சியான பதிவு...

சில்வண்டு said...

அருமையான பதிவு + பகிர்வு. சித்து மட்டுமல்ல அம்முவும் அதிர்ஷ்டசாலி காயத்ரியால்!

யாத்ரீகன் said...

:-)

யாத்ரீகன் said...

:-)

காயத்ரி சித்தார்த் said...

ஸ்ரீ, கார்த்திகேயன்.. மிக்க நன்றி.

எல்.கே.. எனக்கென்னவோ நீங்கள் தான் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் என்று தோன்றுகிறது. அவள் அழுவதை சகிக்க முடியவில்லை.. :(

காயத்ரி சித்தார்த் said...

//இப்படியே இருங்க பிள்ளைங்களா.. பள்ளிக்குச் செல்லும் சிறியவளுக்கு வாழ்த்துகள் காயத்ரி..:-) //

:)))) நன்றிங்க.. கா.பா

புவனேஸ்வர்.. உங்க நாஸ்டால்ஜியாவ கிளறி விட்டுடுச்சா இந்த பதிவு. :) உங்களுக்கும் உங்கள் தோழிக்கும் என் மனமார்ந்த அன்பும்.. நன்றிகளும்.

காயத்ரி சித்தார்த் said...

சத்தியராஜ்.. யாத்ரீகன்.. நன்றிகள்.

@சில்வண்டு : நன்றிங்க அண்ணிங்க.. :))))