ஒரு
புலர்காலைப் பொழுதைப் போன்று மெல்ல விடிந்து கொண்டிருக்கிறேன். கனத்த
சாம்பல் நிறத்து இருட்திரைக்குள்ளிருந்து துலக்கம் பெற்று ஒளிரத்
துவங்கியிருக்கின்றன வாழ்வின் மறைபொருட்கள் ஒவ்வொன்றும். மகள் வளர்ந்து
கொண்டிருக்கிறாள். தொடுவானம் போல பார்க்கப் பார்க்க ஆச்சரியங்களை இறைத்துக்
கொண்டேயிருக்கிறாள். மழை நேரத்து வானவில் போல வண்ணம் மிகுத்துப்
பெய்கிறாள். முத்துக் குளித்து மேலெழுபவள் போல நிதமும் எங்கிருந்தோ
மகிழ்ச்சியை அள்ளி வருகிறாள். ஏன் இப்படியெல்லாம்? எதற்காக? எதன்
பொருட்டு? என்றெல்லாம் எப்போதோ மனதின் இருள் மூலைகளில் துடித்துக்
கொண்டிருந்த வலி மிகுந்த வினவல்கள் அத்தனைக்கும் ஒற்றைப் பதிலாய், ஒரேயொரு
ஆறுதலாய் நின்று புன்னகைத்துக் கொண்டிருக்கிறாள்.
அமுதினி... என் தவம். என் மோட்சம். என் செருக்கு. என் ஆழம். என் விடியல். என் மீட்சி. என்னாயுள் நீட்டிக்கும் அமுதம்....
நேற்று அவளுக்கு இரண்டாவது பிறந்தநாள். அவளை வாழ்த்த வேண்டும்.. எப்போதை
விடவும் மிகச் சிறப்பாக, மிகப் பிரியமாக, மிகவுயர்ந்ததாக, இது வரையிலும்
இல்லாத வாழ்த்தாக அது அமைய வேண்டும். இப்படித்தான் எப்போதும் நினைக்கிறேன்.
ஆனால், இம்முயற்சி பலிப்பதில்லை. ஒவ்வொரு முறையும் மனம் பிரியத்தால்
கசிந்து கசிந்து, இயலாமையில் வதிந்து இறுதியில் சொல்லின்மைக்குள் ஓடி முகம்
புதைத்துக் கொள்கிறது. சொல்லவியலாத அன்பினைச் சொல்லிச் சொல்லி
நைவதற்காகவேனும் ஒரு முறை மாணிக்கவாசகராய் பிறக்கத் தோன்றுகிறது.
அவள் பிறந்து 16 வது நாளில் அம்மா அவளுக்கென்று ஒரு பட்டுப் பாவாடை
தைத்தார்கள். அன்று அவளைத் தொட்டிலில் கிடத்துகையில் பாவாடையின் பட்டுக்
கரை கால்கொலுசு வரை நிறைத்துக் கொண்டு வெகு ரம்மியமாய் இருந்தது. இன்று
எடுத்துப் பார்க்கையில் வெறும் ஒன்னேகால் சாண் நீளமேயிருக்கிறது. என்ன இது!
இத்தனை சின்னவளாகவா இருந்தாள் என் குழந்தை? யப்பா! எப்படி வளர்ந்து
விட்டாள்! ஒரு நாளின் அத்தனை மணிநேரங்களும் அவளுடனேயே/ அவளுக்காக / அவளால்
இருக்கிறேன். எனக்குத் தெரியாமல் எப்போது வளர்கிறாள் இந்தப் பெண்?
அமுதினி எட்டாம் மாதத்தின் இறுதியில் பேசத் தொடங்கினாள். அவள் பேசிய முதல்
சொல் "ம்மா". நான் அவளை விட்டு எங்கு நகர்ந்தாலும் "ம்மா.. ம்மா" என்றபடி
தவழ்ந்து வருவாள். தனக்குவமை இல்லாத வெகு அழகான செயல் அது. பத்தாம்
மாதத்திலிருந்து சொற்கள் ஒவ்வொன்றாய் உயிர் பெற்றெழத் தொடங்கின. இப்போது
கோர்வையாய் பேசுகிறாள்.. நிறைய பேசுகிறாள். கதைகள் சொல்கிறாள். ஸ்லோகங்கள்
சொல்கிறாள். ஓயாமல் பாடிக் கொண்டேயிருக்கிறாள். தமிழும், தெலுங்கும் கலந்து
அவள் வசதிக்கேற்றபடி சொற்றொடர்களை அமைத்துக் கொள்கிறாள். கொஞ்சமும்
மழலையின்றி குழந்தையின் குரலில், ஆனால் அட்சர சுத்தமாய் சொற்கள் வந்து
விழுகின்றன. என்றாலும் இலக்கணம் இவளிடம் சிக்கிக் கொண்டு அல்லாடுவதைப்
பார்க்க மகிழ்ச்சியாய் இருக்கிறது. :))
“இங்க வந்து நில்லு” என்றால்.. “வேணாம்.. இங்கயே நில்லுக்கறேன்” என்பாள்.
“நீயே எடுத்து சாப்பிடறயா? அம்மா ஊட்டட்டுமா என்று கேட்டால் “நீயே எடுத்து
சாப்டுக்கறேன்” என்பாள். ("காதோடு தான் நான் பாடுவேன்" என்ற பாட்டைக் கூட
"காதோடு தான் நீ பாடுவேன்" என்று தான் பாடுகிறாள்)
“ என்னடா
பண்ற? டோரா ஸ்டிக்கரை பிக்கக் கூடாதுன்னு சொல்லிருக்கேனில்ல? என்று
அதட்டினால் “டோரா பிக்கலம்மா.. டைனோசரத்தான் பிக்குனேன்” என்று பதில்
சொல்வாள்.
“தமிழ் என்னும் மாபெரும் மதயானை குழந்தைகளின் முன்பாக
மட்டும் மண்டியிட்டு மத்தகம் தாழ்த்தி அவர்களை முதுகில் ஏற்றிக் கொண்டது”
என்று கொற்றவையில் ஒரு வாசகம் இடம்பெற்றிருக்கும். மொழியை இவள் தன்னுடைய
பொம்மைகளில் ஒன்றாக காதைப் பிடித்து தரையத் தரைய இழுத்துச் செல்லும்
போதெல்லாம் இப்படியொரு மாயப்பிம்பம் கண்ணில் மின்னி மறைகிறது!
எதைப் பெறுகையிலும் "தேங்க்யூ" என்கிறாள். எது வேண்டுமென்றாலும் "இத
கொஞ்சம் பாப்பாக்கு குடுங்களேன்" என்று கெஞ்சலாய்க் கேட்கிறாள்.
திறந்திருக்கும் கதவை தானே இழுத்து சார்த்திக் கொண்டு தலையை மட்டும் உள்ளே
நீட்டி “மே ஐ கமின்?” என்கிறாள். வீட்டுக் கதவை யாரேனும் தட்டினால் "யாரு
அது? பூச்சாண்டியா?" என்று அதட்டுகிறாள். "ஒன்னுல்ல.. ஒன்னுல்ல..
வலிக்காது" என்றபடி பேனாவின் நுனியினால் ஊசி போடுகிறாள். ஸ்பூனை கையில்
வைத்துக் கொண்டு "குனிஞ்சிக்கோ.. மொட்டை அடிக்கிறேன்" என்கிறாள்.
என்னை
அடித்து விட்டாலோ, இடித்து விட்டாலோ உடனே குற்ற உணர்வு கொண்டு என் கண்களில்
வராத கண்ணீரைத் துடைத்துத் துடைத்து "சாரி, சாரி.. அழாதம்மா" என்கிறாள்.
திடீரென்று நினைத்துக் கொண்டாற் போல "ஐ லவ் யூஊஊஊ அம்மா" என்று
ராகமிழுக்கிறாள். நான் பதில் ஒன்றும் சொல்லாவிட்டாலும் " மீ டூ லவ் யூஊஊஊ
அம்மா" என்கிறாள். கோபமாய் அதட்டும் போது முகத்தை கூம்பிக் கொண்டு
நிலைப்படியில் உட்கார்ந்து "மயில்க் குட்டியை திட்டிட்டாங்க" என்று
புலம்புகிறாள். தூக்கி நெஞ்சோடு அணைத்து "செல்லக்குட்டி தங்கக்குட்டி
பட்டுச் செல்லம் அம்முத் தங்கம்.." என்று லயம் மாறாமல் கொஞ்சிக்
கொண்டிருக்கையில் "தங்கச்செல்லம் சொல்லும்மா, மயில்க்குட்டி சொல்லு" என,
இடையில் விட்டுப் போன கொஞ்சல்களை நினைவூட்டுகிறாள். கொஞ்சம் சுணங்கிப்
படுத்தாலும் "அம்மா என்னாச்சி? இங்க ஜுரம் வந்துடுச்சா? இங்கயா?" என்றபடி
கை, கால், கன்னம், நெற்றி என தொட்டுத் தொட்டு பிஞ்சு விரல்களில் வாஞ்சை
ததும்பத் தடவிக் கொடுக்கிறாள். அடிபட்டு ரத்தம் கசிந்து கொண்டிருந்த என்
கீழுதட்டை கலவரமாய் தொட்டுத் தொட்டுப் பார்த்து எதிர்பாராத நொடியில்
திடீரென காயத்தில் முத்தமிட்டு "அவ்ளோ தான்.. சரியாப் போச்சி" என்று கை
தட்டிச் சிரிக்கிறாள். இன்னும் வரும் நாட்களில் என்னை என்னவெல்லாம் செய்யத்
தீர்மானித்திருக்கிறாளோ தெரியவில்லை.
என் நிலை இப்படியென்றால்..
சித்துவின் நிலமை சொல்லுந் தரமன்று. :) சும்மாவே மகள் நிகழ்த்திக்
காட்டும் அற்புதங்களில் சொக்கிக் கிடப்பவர்.. சென்ற வாரத்தில் யோகா
வகுப்பிலிருந்து களைத்துத் திரும்பி படுக்கையில் வீழ்ந்து "கொஞ்சம் தண்ணி
கொண்டு வாயேன்" என்றார். இவள் பின்னால் ஓடி ஓடி அவரை விடவும் நான்
களைத்திருந்த காரணத்தால் "நீங்களே போய் எடுத்துக்கோங்க" என்றேன். உடனே
அருகில் உட்கார்ந்திருந்தவள் துள்ளி எழுந்தாள். உலகளவு பரிவோடு தந்தையின்
முகவாயைப் பிடித்து "நைனா? தண்ணியா? தண்ணி வேணுமா?" என்று கேட்டவள்
அவசரமாய் படுக்கையை விட்டு கீழிறங்கி "தண்ணி எங்க? பாட்டில் எங்க?" என்று
கேட்டுக் கொண்டே ஓட ஆரம்பித்தாள். அவள் தந்தை பூரித்துப்
புளகாங்கிதமடைந்து, உள்ளம் விம்ம, மெய் தான் அரும்பி விதிர்விதிர்த்து,
கண்ணில் நீர் மல்க அவள் சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்தார்.
உண்மையில், தண்ணீர் எடுத்து வந்து கொடுத்ததென்னவோ நான் தான். ஆனால் அவர்
தன் மகளைப் பார்த்துத்தான் "இங்கிவளை யான் பெறவே என்ன தவம் செய்து
விட்டேன்" என்ற ரீதியில் உருகிக் கொண்டிருந்தார். :)
அமுதினியை
மரபணு ஆராய்ச்சித் துறையில் மகத்தான சாதனைகள் படைக்கவிருக்கும் மாபெரும்
விஞ்ஞானியாக உருவாக்க வேண்டுமென்பது அவள் தந்தையின் ஆசை.
அவளை
நல்லவளாக, வல்லவளாக, அச்சம் மடம் அறியாத துணிச்சல்காரியாக, எல்லா
உயிர்களிடத்தும் கருணை மிக்கவளாக, நேர்மையானவளாக, ஆரோக்கியமானவளாக,
திடமானவளாக, எக்கணத்திலும் உண்மையானவளாக, அவள் விரும்பும் கலைகள்
அனைத்திலும் சிறந்து விளங்குபவளாக, பிறர் துயர் கண்டு கலங்குபவளாக,
தன்னம்பிக்கை மிக்கவளாக, எடுத்த காரியம் திறம்பட முடிப்பவளாக, ஆழ்ந்து
சிந்திப்பவளாக, குழந்தைகளையும் இயற்கையையும் நேசிப்பவளாக, வயோதிகத்தைப்
புரிந்து கொள்பவளாக, என்றும் எப்போதும் நிலை குலையாதவளாக, பகைவனுக்கும்
அருள்பவளாக, எல்லாவற்றையும் தர்க்கத்தால் மட்டுமே அளக்காதவளாக, சினத்தால்
மதியிழக்காதவளாக, எச்சூழலிலும் நிதானமிழக்காதவளாக, பிரச்சினைகளை
பதட்டமின்றி அணுகுபவளாக, உழைக்கத் தயங்காதவளாக, பேராசையற்றவளாக, வாழ்நாள்
முழுவதும் நிபந்தனையற்ற அன்பினைப் பெறுபவளாக, தருபவளாக, நீள் ஆயுளும், உயர்
கல்வியும், குன்றாப் புகழும், செல்வமும் செல்வாக்கும், ஆல் போல் நட்பும்,
அருகு போல் உறவும், நல்ல துணையும், நன்மக்கட்பேறும், மகிழ்வான, நிறைவான
வாழ்வும் பெற்றவளாக அனைத்திலும் முக்கியமாக உலகை அதன் இயல்புடனே ரசிக்கக்
கற்ற ஆகப் பெரிய ரசிகையாக உருவாக்க வேண்டுமென்பது அவள் தாயின் ஆசை. :)
இவ்விருவரும் ஆசைகளும் அப்படியே நிறைவேற வேண்டுமென தெய்வங்களும்,
தேவதைகளும், தேவர்களும், ரிஷிகளும், எம் பிதுர்களும், சுற்றமும், நட்பும்,
எம்மை அறிந்தோரும், அறியாதோரும், படிக்காமலேயே 'லைக்' போடுவோரும் என
அனைவரும் 'ததாஸ்து' சொல்லி வாழ்த்துவீராக. :)