Friday, January 20, 2012

அமுதினியும் இராமாயணமும்

அமுதினியின் வளர்ச்சியில் யூ டியூப் காணொளிகளின் பங்கு மிக முக்கியமானது. அவள் பிறந்ததிலிருந்து முதல் 6 மாதங்கள் ஈரோட்டில் இருந்தோம். சுற்றிலும் மரங்கள் அடர்ந்த வீடு. பனை மரங்களில் குடியிருக்கும் கிளிகள், காகங்கள், பொன்னரளிப் பூக்களில் தேனெடுக்க வரும் தேன் சிட்டுகள், சிட்டுக்குருவிகள், மைனாக்கள், அபூர்வமாக குயில்கள் மற்றும் குருவியை ஒத்த தோற்றம் கொண்ட மஞ்சள் அலகு கொண்ட சற்று பெரிய பறவைகள் என வீடு எப்போதும் இசைக்குறிப்புகளால் நிரம்பியிருக்கும். வீட்டின் புறச்சுவரிலிருந்து சற்று தூரத்தில் மாடுகள், கன்றுக்குட்டிகள் கட்டப்பட்டிருக்கும் கட்டுத்தரை இருக்கும். காவலுக்கு ஒரு நாய். அவ்வப்போது வந்து போகும் பூனைகள் மற்றும் அணில்கள். தினமும் காலை அல்லது மாலையில் முற்றத்திலிருக்கும் ஊஞ்சலில் அமர்ந்து குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு ஒவ்வொரு ஜீவராசியையும் ஒலியால் அவளுக்கு அடையாளப்படுத்திக் கொண்டிருப்பேன். அவளுக்குப் புரிகிறதா.. கவனிக்கிறாளா என்றெல்லாம் கவலைப்பட்டதில்லை. 5 மாதக் குழந்தையாக இருக்கும் போது பசுவின் 'ம்ம்ம்மாஆஆ' என்ற குரலுக்கு திடீரென கண் மலர்த்தி மகிழ்ச்சியாக என் முகம் பார்த்தாள். 'யார் கத்தறா ந்னு எனக்குத் தெரியுமே' என்ற பாவனை இருந்தது முகத்தில். சந்தோஷமாக இருந்தது.

6 ம் மாதம் குவைத் வந்தாயிற்று. நாள் முழுவதும் அவள் பார்க்க என் முகமன்றி வேறில்லை என்ற நிலைமை வந்த போது அவளுக்கு யூ டியூபை அறிமுகப்படுத்தினேன். அந்த வயதிலேயே 'தப்போ தப்போ தப்பாணி' என்ற மலையாளப் பாடல் அவளுக்கு மிக விருப்பப் பாடலாக இருந்தது. அதைத் தொடர்ந்து இன்று வரை தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, கன்னடம், மராத்தி, ஹிந்தி, அரபி ஆகிய மொழிகளில் குழந்தைப்பாடல்களைப் பார்த்து வருகிறாள். அவள் பார்க்கும் பாடல்களின் எண்ணிக்கை இப்போது 160 ஐத் தொட்டிருக்கிறது. இவற்றுக்குள் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத பாடல்கள், ஒரு தடவை பார்க்கலாம், இந்தப் பாடல் சலித்துப் போய்விட்டது என்பது போன்ற பாகுபாடுகளையும் அவளே உருவாக்கி வைத்திருக்கிறாள். 11 ம் மாதத்தில் பேசத் துவங்கியதிலிருந்து எல்லாப் பொருட்களையும் அவளறிந்த பாடல்களின் வழியாகவே சொல்லப் பழகி வருகிறாள். அவளின் பேச்சில் "குவா குவா வாத்து, மாம்பழமாம் மாம்பழம், வண்ண பலூன், மியா மியா பூனைக்குட்டி, பச்சைக்கிளியே வா வா" என்று அடைமொழியோடு கூடிய வார்த்தைகளே மிகுதி.

சமீபமாக பாடல்களைக் குறைத்து கதைகளை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறேன். நேற்று முன் தினம் எதேச்சையாக கண்ணில் பட்டது இராமாயணம் காணொளி. ஒன்னரை மணி நேரம் அதை அவள் பொறுமையாகப் பார்த்தது எனக்கே தாள முடியாத ஆச்சரியத்தைக் கொடுத்தது. படம் முடிந்தபின் இராமாயணத்தை வெறும் பத்து வரிகளாகச் சுருக்கி அவளது மொழியில் சொல்லிக் கொடுத்தேன்.

"1.இராமன் மாமா வில்லை எடுத்து 'டமார்னு' உடைச்சாரு.

2. இராமன் மாமாவும் சீதா அத்தையும் கல்யாணம் பண்ணிகிட்டாங்க.

3.அப்றம் இராமன் மாமா, சீதா அத்தை, லட்சுமணன் மாமா 3 பேரும் காட்டுக்கு போனாங்க.

4. அங்க ஒரு மானை பார்த்துட்டு சீதா அத்தை 'எனக்கு மானு வேணும் மானு வேணும்' நு அழுதா.

5. உடனே 'நான் புடிச்சித் தர்றேன்'நு இராமன் மாமா மானைத் துரத்திகிட்டு ஓடிப் போனாரு.

6. அப்போ இராவணன் பூச்சாண்டி அங்க வந்து 'வாஆஆ' ந்னு சீதா அத்தையை தூக்கிட்டு போய்ட்டாரு.

7. ஹனுமான் சொய்ய்ய்ய்ங்னு வானத்துல பறந்து போய் சீதா அத்தைகிட்ட மோதிரம் குடுத்துட்டு வளையல் வாங்கிட்டு வந்தாரு.

8. இராமன் மாமாவும் இராவணன் பூச்சாண்டியும் டிஷ்யூம் டிஷ்யூம்னு சண்டை போட்டுகிட்டாங்க.

9. இராவணன் பூச்சாண்டி டமார்னு கீழ விழுந்துட்டாரு.

10. கடைசியா இராமன் கிரீடம் எடுத்து தலைல வெச்சிகிட்டாரு"


ஹையா.. இராமாயணம் முடிஞ்சி போச்சி. :)))) கோர்வையாக இல்லாவிட்டாலும் அவள் இதை மழலையில் சொல்வது கொள்ளை அழகாக இருக்கிறது. வில்லை உடைக்கும் போது இராமனாகவும், சீதையை இழுக்கும் போது இராவணனாகவும் முகத்தில் பிரயத்தனம் காட்டி அசர வைக்கிறாள். கடைசியில் அவள் தலையில் அவளே பாவனை கிரீடம் வைத்துக் கொண்டு கை தட்டிச் சிரிக்கையில் என்னை கெளசல்யையாக உணர வைக்கிறாள். :)



Saturday, January 14, 2012

'அதைச் சாப்பிடும் நோக்கமே அவளுக்கு கிடையாது'



என் செல்ல மகள் அமுதினிக்கு ஒன்னரை வயதாகிறது. அவள் என் வயிற்றில் 3 மாதக் குழந்தையாக இருந்த போதிலிருந்து இன்று வரையிலும் அவளுக்கென்று பிரத்யேகமாய் ஒரு கடிதத்தை எழுதிவிட முயன்று முயன்று தோற்றுக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் முதலில் ஓரிரு வரிகள் எழுதுவதும், அதையே திரும்பப் படித்து, திருப்தியில்லாமல் வார்த்தைகளை மாற்றுவதும், அடித்துத் திருத்தித் திருத்தி ஒருவழியாக அவ்வரிகளை அரை மனதோடு ஏற்றுக் கொள்ளும் போது "இதை அடுத்த பத்தியில் சேர்த்துக் கொள்ளலாம். மடலின் துவக்கம் இன்னும் அழகாக, இன்னும் வாஞ்சையாக, இன்னும் குழைவாக... அவள் மீதான என் உள்ளன்பு முழுவதையும் வெளிக்காட்டுவதாக அமைந்தால் நன்றாக இருக்குமே" என்றோர் ஏக்கம் தோன்றுவதும், பெருமூச்சோடு அம்முயற்சியை அப்படியே கிடப்பில் போடுவதும் இது வரை பல தடவைகள் நடந்து விட்டது. ஒவ்வொரு வரியிலும் ஒரு சொல் நிரப்ப வேண்டிய இடத்திற்கென அதே பொருள் கொண்ட ஒன்பது சொற்கள் முட்டி மோதிப் போட்டியிட்டு ஒன்றும் வெற்றி பெறாமல் போவதே இதற்குக் காரணம் என்று நினைக்கிறேன். இதே போன்றதொரு இடர்ப்பாட்டினை எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின் கதைகள் குறித்து எழுத முயல்கையிலும் நான் சந்திக்க நேர்கிறது.

வாத்சல்யம் என்றோர் சமஸ்கிருதச் சொல் உண்டு. மனதிற்குள் உச்சரித்தாலும் காதுகளுக்குள் இனிமையாக ஒலிக்கக் கூடிய பிரியமான சொல் அது. வாத்சல்யம் என்றால் அன்பு என்று நேரடியாகப் பொருள் கூற முடியாதபடி, அன்பு, அக்கறை, வாஞ்சை, மிகப்பிரியம், குற்றம் காணாத் தன்மை எனப் பல்வேறு அர்த்தங்களில் தொனிக்கும் அடர்த்தியான அதே சமயம் மிக மிருதுவான சொல்லாக விளங்குவது. என் அம்முவை எத்தனை வாத்சல்யத்தோடு அணுகுகிறேனோ அதே அளவு வாத்சல்யத்துடனே அ.மு வின் எழுத்துக்களையும் எதிர்கொள்கிறேன் என்று சொல்வது பொருத்தமாக இருக்கக் கூடும்.

''இலங்கை கொக்குவில் கிராமத்தை பிறப்பிடமாகக் கொண்ட அ. முத்துலிங்கம், அப்பாத்துரை ராசம்மா தம்பதிகளுக்கு பிறந்த ஏழு பிள்ளைகளில் ஐந்தாவது ஆவார். கொக்குவில் இந்துக் கல்லூரியிலும், யாழ்ப்பாணக் கல்லூரியிலும் பயின்ற இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்தபின் இலங்கையில் சாட்டர்ட் அக்கவுண்டனாகவும், இங்கிலாந்தின் மனேஜ்மெண்ட் அக்கவுண்டனாகவும் பட்டம் பெற்றவர். பணி நிமித்தமாக பல நாடுகளுக்கு பணித்திருக்கும் இவர் ஏறத்தாழ இருபது ஆண்டுகள் உலக வங்கியிலும், ஐக்கிய நாடுகள் சபையின் OPS பிரிவிலும் முக்கியமான பதவிகளில் கடமையாற்றி தற்சமயம் ஓய்வுபெற்று தன் மனைவி கமலரஞ்சினியுடன் வசிப்பது கனடாவில். இவரின் மகன் சஞ்சயனும், மகள் வைதேகியும் வசிப்பது அமெரிக்காவில்.''

என்று இவருக்கு அறிமுகம் தந்திருக்கிறது தமிழ் விக்கிபீடியா. இதை விடவும் 'உண்மை கலந்த நாட்குறிப்புகள்', 'அங்கே இப்ப என்ன நேரம்' முதலான தொகுப்புகளிலும் இன்ன பிற கதைகள் மற்றும் கட்டுரைகளிலும் இவர் தன்னைப் பற்றியும் தன் குடும்பத்தினர் பற்றியும் கொடுத்திருக்கும் தகவல்களே மனதிற்கு மிக நெருக்கமானவையாய் இருக்கின்றன. ' பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டு நள்ளிரவில் திரும்பி வரும் மகனிடம் பரிசு குறித்து ஒன்றுமே கேட்காமல் விழித்திருந்து உணவு பரிமாறும் அம்மா, கதவிற்கு வெளியே உருண்டு வரும் தேசிக்காய்களை வைத்து குழந்தைகள் பிறந்த நேரத்தைக் குறித்துக் கொண்டு, ஊருக்கு வரும் ஒவ்வொரு ஜோசியரிடமும் பிள்ளைகளின் ஜாதகக் கட்டைக் கொடுத்து பலன் கேட்கும் தந்தை, தம்பியைப் படம் எடுக்க வீட்டிற்கு புகைப்படக்காரர் வந்த போது அழுது அரற்றி தன்னையும் படம் பிடிக்கும்படி பிடிவாதம் செய்த அண்ணர், சங்கீதம் கற்றுக் கொள்ளும் அக்காள், தன் தலையைக் காட்டிலும் பெரிதான மாம்பழத்தை நெஞ்சோடணைத்து வீடெங்கும் தூக்க முடியாமல் தூக்கித் திரிந்த குட்டித்தங்கை, கனமான புத்தகங்களை அடியிலும் மெலிதானவற்றை மேலாகவுமாக அடுக்கி வைத்து ஒரே கதையின் அடுத்தடுத்த பாகங்களை கீழ்மேலாக தேடச் செய்யும் மனைவி, குதிரையிடம் கடி வாங்கிய மகள், சூட்டிகையான பேத்தி அப்சரா' என்று அவரது உறவினர்கள் அனைவருமே ஏற்கனவே நன்கு அறிமுகமான தூரத்து சொந்தங்களாகவே தோன்றுகின்றனர்.

"நாங்க 5 பேரும் தினம் 8 மணிக்கெல்லாம் தூங்கிடுவோம். தாத்தி மட்டும் தாத்தாவுக்காக முழிச்சிருப்பாங்க. நைட் 10, 11 மணிக்கு வருவார். வெளியூருக்கு போய்ட்டு வந்தார்னா அன்னேரத்துலயும் உசிரோட வாத்தோ, கோழியோ வாங்கிட்டு வந்து அப்பவே தோலுரிச்சி மஞ்சப் பூசிக் குடுத்து சமைக்கச் சொல்லுவார். தாத்தி நடுராத்திரில அம்மில வருக் வருக்னு மசாலா அரைச்சி குழம்பு வைப்பாங்க. புள்ளைங்க சூடா சாப்பிடட்டும்னு நைட் 1 மணிக்கு எங்களை எழுப்பி சாப்பிடச் சொல்லுவார் தாத்தா. தூங்கி விழுந்துகிட்டே சாப்பிடுவோம். காலைல கேட்டா உன் கடைசிச் சித்தி நான் நைட் சாப்பிடவே இல்லன்னு அழுவா" என்று நாங்கள் பார்த்தேயிராத தாத்தாவைப் பற்றியும் எங்கள் குழந்தைப் பருவத்துக் குறும்புகள் பற்றியும் அம்மா சொல்லும் கதைகளில் இருக்கும் சுவாரஸியத்தையும் நம்பகத் தன்மையையும் அச்சுப் பிசகாமல் கொண்டிருப்பவை அ.முவின் அனுபவக் கதைகள்.

இவரது கதைகளின் சிறப்பம்சமாக அதில் விரவியிருக்கும் நகைச்சுவையை பலரும் குறிப்பிடுவதைக் கேட்டிருக்கிறேன். "புன்னகைக்கும் கதை சொல்லி" என்பார் ஜெயமோகன். உடல்நலம் குன்றிய தன் குழந்தையை மருத்துவமனையில் சேர்த்து அருகில் துணைக்கிருந்த இரவில், சூழலுக்கு கொஞ்சமும் பொருந்தாமல் வாய் விட்டுச் சிரித்தபடியே 'அங்கே இப்ப என்ன நேரம்' தொகுப்பை வாசித்துக் கொண்டிருந்ததாக சொல்கிறார் பா.ராகவன். 'ஐவேசு' கதையை தன் பதிவில் குறிப்பிட்டு எழுதியதன் வாயிலாக எனக்கு முதன் முதலாக அ.மு வை அறிமுகப்படுத்திய ஆசிப் அண்ணாச்சியும் அதன் நகைச்சுவையே தன்னை வெகுவாகக் கவர்ந்த அம்சம் என்று கூறியிருக்கிறார். ஆனால் என்னளவில் நகைச்சுவையைக் காட்டிலும் அ.மு வின் கதை சொல்லும் நேர்த்தியும் சொக்க வைக்கும் விவரணைகளுமே அவரது அதி சிறந்த அம்சங்களாகத் தோன்றுகின்றன.

ஜெயமோகனின் தாயார் பாதம் சிறுகதையில் "சும்மா தேனீமேலே ஏறி ஒக்காந்து ரீ….ம்னு நந்தவனமெல்லாம் சுத்தி, நந்தியாவட்டை மல்லிகை ரோஜான்னு பூப்பூவா உக்காந்து மண்ட மண்ட தேன்குடிச்சுட்டு வந்து எறங்கின மாதிரி ஒரு அனுபவம்." என்றொரு வரி இடம்பெற்றிருக்கும். அ.முத்துலிங்கத்தின் எழுத்தை வாசிக்கும் போதெல்லாம் இப்படியானதொரு அனுபவம் வாய்க்கத் தவறியதில்லை. அவரின் இணையதளத்தில் இருக்கும் 'மாம்பழம்' என்ற கட்டுரை நான் மிக மிக ரசித்துக் கிறங்கிப் படித்த கட்டுரைகளுள் ஒன்று. தோட்டத்திலிருக்கும் மாமரத்திலிருந்து வீட்டுக் குழந்தைகள் ஒவ்வொருவரும் தங்களுக்கான பழத்தைத் தேர்வு செய்து அதில் தங்கள் பெயர் எழுதிய சீட்டுக்களை கட்டி வைக்கின்றனர். அவற்றின் வளர்ச்சியைத் தொடர்ந்து கண்காணித்து அவை முற்றிக் கனிந்ததும் அவரவர் கனியை பறித்து உண்டு மகிழ்கின்றனர். அவர்களுள் மிகச் சிறியவளான 3 வயது தங்கையின் மாம்பழம் குறித்து பின்வருமாறு விவரிக்கிறார் ஆசிரியர்.

"ஆக எஞ்சியது தங்கச்சியின் மாங்காய்தான். அது ஒவ்வொரு நாளும் பெருத்துக்கொண்டே வந்தது. அவளுடைய தலையளவுக்கு பெருத்த பிறகு நிறம் வைக்கத் தொடங்கியது. ஒருநாள் காலை பழுத்து கனிந்து சாப்பிடுவதற்கான பருவத்தை எட்டியது. அண்ணர் அதை ஆய்ந்து அவளிடம் கொடுத்தார். இரண்டு கைகளாலும் ஏந்திப் பிடிக்க கைகளில் அவளுக்கு போதிய பலம் கிடையாது. ஆனாலும் அவள் அதை கீழே இறக்கவில்லை. குழந்தையை அணைத்துப் பிடிப்பதுபோல நெஞ்சோடு சேர்த்து இறுக்கிக்கொண்டு வீடு முழுக்க அலைந்தாள். ஒரு புதுப் பொம்மை கிடைத்ததுபோல மகிழ்ச்சி. மதியம்வரை அதை நெஞ்சைவிட்டு கீழே இறக்கவில்லை. அதைச் சாப்பிடும் நோக்கமே அவளுக்கு கிடையாது."

இந்தப் பத்தியைப் படிக்கும் போதே மாம்பழத்தைத் தூக்க முடியாமல் தூக்கித் திரியும் குட்டிப் பெண்ணின் உருவம் மனக்கண்ணில் தோன்றியதோடு அவளின் மகிழ்ச்சி என் முகத்திலும் கசிந்து விரவிக் கொண்டிருந்தது. இறுதியாய் 'அதைச் சாப்பிடும் நோக்கமே அவளுக்குக் கிடையாது' என்ற வரியை வாசித்தபோது உண்டான மனக்கிளர்ச்சியை எப்படிச் சொல்வதெனத் தெரியவில்லை. ஏறத்தாழ அ.முவின் எழுத்துக்களை நானும் இப்படித்தான் தூக்கிக் கொண்டு திரிகிறேனோ என்று தோன்றுகிறது!

விவரணைகளைப் போன்றே அவர் கையாளும் உவமைகளும் மிக மிக அழகானவை. 'ஐயோ' எப்படித்தான் இப்படியெல்லாம் சொல்லத் தோன்றுகிறதோவென மாய்ந்து மாய்ந்து வியக்கச் செய்பவை.

"தாயின் கையை பறித்துக்கொண்டு ஓடும் குழந்தைபோல ஒரு முடிக்கற்றை நெற்றியிலே விழுந்தது"

"இப்பொழுதுதான் பிறந்த ஆட்டுக்குட்டி எழுந்து நிற்பதுபோல அவர் கால்கள் நடுங்கின"

"என்னுடைய முகம் சாத்தி வைத்த கதவு போல இருந்தது"

"ஒரு குளவியை அறைக்குள் விட்டு கதவைச் சாத்தியது போல அறையின் இந்த மூலைக்கும் அந்த மூலைக்குமாக கனகி சர்க் சர்க் என்று பறந்து கொண்டிருந்தாள்."

"குழந்தை அவசரமாக தாயைப் பின் தொடர்ந்தது. திடீரென நின்று, தானியத்தைக் கொத்துவதற்கு குருவி தயங்குவது போல யோசித்தது"

" கனடாவின் 143 வருட சரித்திரத்தில் முதன்முதலாக ஓர் ஈழத்தமிழர் உடலழகன் போட்டியில் பங்குபற்றியதுமல்லாமல் இரண்டாவது இடத்தையும் வென்றிருந்தார். அவர் பெயர் பகீரதன் விவேகானந். ஒரு மேப்பிள் இலை உதிர்ந்ததுபோல, ஒரு குறுக்கெழுத்துப் புதிர் பூர்த்தியானதுபோல, ஒரு வீதி விளக்கு சிவப்பிலிருந்து பச்சைக்கு மாறியதுபோல இந்தச் சம்பவம் மிகச் சாதாரணமாக மறக்கப்பட்டுவிடும் "

என்பவை சில எடுத்துக்காட்டுகள். எவருடைய நூலைப் பற்றியாவது சிலாகித்துப் பேசுகையில் அதில் வரும் மிகச் சிறந்த வசனத்தை சுட்டிக் காட்டி "இந்த ஒரு வசனத்திற்கே புத்தகத்திற்கு கொடுத்த மொத்த விலைப்பணமும் சரியாய்ப் போய்விட்டது" என்று குறிப்பிடுவது அ.முத்துலிங்கம் அவர்களின் வழக்கம். அவரது புத்தகத்தை வாசிக்கையில் குறைந்தது 50 முறைகளாவது இதே வரியை நினைவு கூர வேண்டியிருக்கிறது. உவமைகளைப் போன்றே ஒவ்வொரு கதையிலும் புதிதாக அறிந்து கொள்வதற்கென நிறைய சுவாரஸியமான செய்திகள் பொதிந்திருக்கும். அட! என புருவமுயர்த்தி ஆச்சரியப்பட வைக்கும்.

"ஆராய்ச்சி’ என்று ஒரு மாமரம். அதன் காய்கள் பனங்காய் அளவுக்கு பெரிசாக வளர்ந்து தன் பாரத்தை தானே தாங்க முடியாமல் வெடித்துவிடும். இன்னொரு வகை ’மத்தளம்தூக்கி’. நார்ச்சத்துள்ள இனிய பழம். இன்னொன்று ’வெங்காயம் காய்ச்சி’. இதை பழுக்க வைப்பதில்லை, இதில் வெங்காய வாசனை வரும் ஆகவே கறிக்கு பயன் படுத்துவார்கள்."


"தென் அமெரிக்காவில் 150 பேர் மட்டுமே கொண்ட ஓர் இனக்குழு உண்டு. அவர்களுடைய மொழியில் ’அரைகுறையாக அம்பு எய்தவன்’ என்பதற்கு ஒரு வார்த்தை உண்டு. அரைகுறையாக அம்பு எய்தால் மிருகம் வலியில் துடித்து உழன்றுதான் சாகும். அந்த மொழியில் ஆக மோசமாக ஒருவரை திட்டவேண்டும் என்றால் அந்த வார்த்தையை சொல்லி வைவார்கள். "

"ஆப்பிரிக்காவில் மணமுடிக்கும் முன்னரே பிள்ளை பெற்ற பெண்ணுக்கு மதிப்பு அதிகம். அவள் கர்ப்பம் தரிப்பது பிரச்னை இல்லாததால் அவளை மணக்க ஆடவர் போட்டியிடுவர். இந்தியப் படங்களில் ஒரு பெண் கற்பைக் காப்பாற்றப் போராடும் இடங்கள் அவர்களுக்குப் புரிவதேயில்லை."

"ஆப்பிரிக்காவில் வாழும் இந்தியர்கள் பிணத்தை எரிப்பதைப் பார்த்ததும் ஆப்பிரிக்கர்கள் கிலி பிடித்து ஓடிவிடுவார்கள். இது ஒரு காட்டுமிராண்டித்தனமான பழக்கம் என்று என்னிடமே சொல்லியிருக்கிறார்கள்".

இப்படி தனி நூலாய்த் தொகுக்குமளவிற்கு கதையெங்கும் பரவியிருக்கும் நுண்ணிய அவதானிப்புகள் மட்டுமல்லாது சாதாரணமாய் நகரும் கதையை ஒற்றை வரியால் சட்டென வேறு தளத்திற்கு உயர்த்திச் செல்லும் லாவகமும், மாலையா இரவா எனப் பிரித்தறிய முடியாதபடி மயங்கி வரும் பொழுதைப் போல உண்மையா புனைவா என்றுணர மாட்டாத மயக்கத்தோடு அனுபவங்களை விவரித்து செல்லும் பாங்கும், வெவ்வேறு தேசங்கள், பல்வேறு வாழ்க்கை முறைகள் என வாசிப்போருக்கு அந்நியமாயிருக்கும் அனைத்தையும் எளிய தமிழின் வழியாக மிக அணுக்கமானதானக் காட்டும் திறமையும், செறிவான சொற்களைத் தேடித் தேடிப் பயன்படுத்தும் வசீகரமும் அவரின் தனிச்சிறப்புக்களாக மிளிர்கின்றன.

அ.மு வின் கதைகளில் எதிரி, மட்டுப்படுத்தப்பட்ட வினைச் சொற்கள், மயான பராமரிப்பாளர், வேட்டை நாய், என் குதிரை நல்லது, முதலியவற்றோடு எனக்கு மிக மிகப் பிடித்தமான கதைகள் இரண்டு உண்டு. "அடுத்த புதன் கிழமை உன்னுடைய முறை" "உடனே திரும்ப வேண்டும்" ஆகிய 2 கதைகளையும் என்னால் மறக்க முடிந்ததே இல்லை.

இவை என் மனதில் ஆழப் பதிந்து அழியாமல் நின்று விட்டமைக்கு, இந்த இரண்டு கதைகளுமே உடல் நலமின்றித் துன்புறும் இளங்குழந்தையைப் பற்றியும் குழந்தையின் அவஸ்தையைக் காணச் சகியாத பெற்றோரைப் பற்றியுமான கதைகளாய் அமைந்தது காரணமாயிருக்கலாம். என் மகள் பிறக்கும் முன்பாகவே இவ்விரண்டு கதைகளையும் பதைபதைப்போடு மிகவூன்றிப் படித்திருந்தேன். அவள் பிறந்து வளர்ந்து முதன் முதலாகப் பின்னோக்கித் தவழத் தொடங்கிய நாட்களிலும், சமீபமாய் உடல்நலமின்றி இரவெல்லாம் கடுமையான சளித் தொந்தரவோடும் காய்ச்சலோடும் அவள் அவதிப்பட்ட நாட்களிலும் இக்கதைகளை மீண்டும் மீண்டும் நினைவு கூர்ந்த படியே இருந்தேன்.

'அடுத்த புதன் கிழமை உன்னுடைய முறை' என்ற கதையில் வரும், தவழும் பருவத்துக் குழந்தையான லவங்கி திடீரென கடுமையான நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்படுவாள். ஒரு சுவாசப் பை முற்றிலும் மடிந்து உயிருக்கு ஆபத்தான நிலையிலிருக்கும் குழந்தைக்கு ஊசி மருந்து செலுத்துவதும், சலைன் ஏற்றுவதும், உடலில் மெல்லிய குழாயைச் செலுத்தி சிறுநீர் எடுப்பதுமாக மருத்துவ சோதனை என்ற பெயரில் அலைக்கழிப்பார்கள். ஒவ்வொன்றிற்குமாக அழுது அழுது களைத்த குழந்தை, எக்ஸ்ரே எடுப்பதற்காக அந்நிய மனிதர்கள் இருவர் அவளை அழுத்திப் பிடித்ததும் அது வரை இல்லாத அளவுக்கு கதற ஆரம்பிப்பாள். இதற்கு அனுமதித்த தன் அப்பாவை நம்ப முடியாத கண்களால் பார்ப்பாள். முதல் மொட்டை அடிப்பதற்காக அமுதினியை எல்லாருமாக சேர்ந்து அழுத்திப் பிடித்து தலையில் தண்ணீர் தெளித்த போது இதே போன்ற பார்வையுடன் தான் கதறித் தீர்த்தாள். அம்மா.. அம்மா என்றே ஓயாமல் அழுதாள். சுற்றியிருந்த அத்தனை பேரையும் விடுத்து அவள் கருவிழிகள் என்னை மட்டுமே ஊடுருவித் துளைத்தன. அவ்விழிகளில் கண்ணீரோடு சேர்ந்து நீயுமா இதற்கு உடந்தை? என்ற கேள்வியும் கலந்து கன்னத்தில் இறங்கியபடியே இருந்தது.

மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மகளை மனைவியின் வசம் ஒப்படைத்து, இரண்டே நாட்களில் திரும்பி விடுவதாக வாக்களித்து விட்டு பணி நிமித்தமாய் தூர தேசம் செல்லும் தந்தை தொடர்ந்து 8 நாட்களாக ஊருக்குத் திரும்ப இயலாமல் அவதிப்படுவதைப் பற்றிய சிறுகதை 'உடனே திரும்ப வேண்டும்'. போதாக்குறைக்கு கைக்குழந்தையான அவர் மகளின் தோள் மூட்டில் பூச்சியொன்று முட்டையிட்டு கண்ணுக்குத் தெரியாத அந்த முட்டைப்புழு சருமத்திற்குள் வளர ஆரம்பித்து சருமம் வீங்கத் தொடங்கியிருக்கும். வலி தாளாமல் குழந்தை தொடர்ந்து அழுது கொண்டேயிருக்கும். விமானம் பழுதாகி விசா இல்லாமல் அல்லாடி மீண்டும் விமானம் ஏற முடியாமல் தவித்து முழுதாக 8 நாட்கள் கழித்து அவர் திரும்பி வரும் போது அப்புழு வளர்ந்து குழந்தையின் தசையைப் பிளந்து கொண்டு வெளியேறிப் போயிருக்கும். குழந்தை சுரம் குறைந்து களைப்போடு ஒரு குட்டித் தலையணையில் தன் குட்டித் தலையை வைத்துப் படுத்திருக்கும்.

இரு கதைகளிலுமே குழந்தை உடலால் அனுபவிக்கும் வேதனைக்கு சற்றும் குறையாத வேதனையைப் பெற்றோர் மனதால் அனுபவிக்கின்றனர். எப்போது நினைத்துக் கொண்டாலும் மையுறிஞ்சும் தாளைப் போல நெஞ்சில் துக்கம் பரவிப் பாய்வதைத் தடுக்க முடிந்ததில்லை. வாசிக்கும் போது கண்ணோடும் கையிலிருக்கும் நூலோடும் மட்டும் நின்று விடாமல் வாசிப்பவரின் நெஞ்சோடு கலந்து வாழ்க்கை முழுவதும் துணை வரும் படியாக இப்படி ஒரு சில கதைகளே வாய்க்கின்றன. என் கல்லூரிக்கால முதல் வகுப்பில் 'இலக்கியத்தின் பயன் என்ன?' என்று எங்கள் ஆசிரியர் கேட்ட கேள்விக்கான பதிலையும் இது போன்ற சந்தர்ப்பங்களில் மட்டுமே நான் கண்டு கொள்கிறேன்.

நான் தமிழ் இலக்கியம் பயின்றவள். எந்தவொரு பொருள் குறித்தும் காய்தல் உவத்தல் இன்றி ஆராய்ந்து நேர்மையான முறையில் அவற்றின் நிறை, குறைகளை முன்வைத்து கட்டுரை படைக்கப்பட வேண்டும் என்றே எனக்கு பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது. என்றாலும் எனக்குப் பிடித்தமானவை குறித்து நானெழுதும் கட்டுரைகள் அனைத்திலும் சிலாகிப்புகள் மட்டுமே நிரம்பியிருக்கின்றன. 'எழுதுங்கால் கோல் காணாக் கண்ணே போல்' என்பார் வள்ளுவர். ரோஜாக்களைப் பற்றி பேச முனைகையில் முட்களை முன்னிறுத்த வேண்டிய அவசியம் தான் என்ன?

Tuesday, January 3, 2012

குறுகத் தரித்த மனம்






சிகரங்களின் சீதளத்தையும்
பள்ளத்தாக்குகளின் விரிசல்களில்
நதியோடு கசியும் ரகசியங்களையும்
ஒருபோதும் அறிந்ததில்லை
தோட்டத்துப் பூக்கள்

தினமும் விரித்துச் சுருட்டும்
படுக்கைகளுக்குள்ளாக
இருதயம் போல்
கசங்கி விரிகின்றன
நாட்கள்

ஜன்னல்களின் விளிம்பில்
கிளைபரப்பிக் கனிவளர்த்து
செழித்து நிற்கின்றன
போன்சாய் மரங்கள்

ஆயினும்..

தொட்டி மீன்களின் கனவில்
ஓயாமல் அலைவீசிக் கொண்டிருக்கிறது
பேராழம் மிக்கப்
பெருங்கடல் ஒன்று.