Tuesday, March 25, 2008



யார் யாரிடமோ
உன் சாயல்களைப் பார்த்தபடி
வீடு வந்து சேர்ந்தேன்..
வீட்டிலிருந்த நீ
யாரோவாகியிருந்தாய்.
உள்ளங்கையின்
மெல்லிய ரேகையில்
தளர்வாய் ஊர்கிறதோர்
சிற்றெறும்பு...

எல்லையற்ற வெளியில்
வழிதவறியலைவதாய்
ஒருவேளை அது
பதறிக்கொண்டிருக்கலாம்.

இருக்கட்டும் அப்படியே...

எல்லோர்க்கும் கையளவே இருக்கிறது
வாழ்க்கையும்!


நேற்று நேற்றுடனும்
இன்று இன்றுடனும்
முடிவுற்றால் பரவாயில்லை...
நாளைகளின் விளிம்பில்
எனக்கும் முன்பாய்
காத்திருக்கின்றன
நேற்றும் இன்றும்.