Monday, February 25, 2008

பாவமன்னிப்பு



அலைகள் மீண்டும் மீண்டும் மோதி மோதிச் சிதறுண்டு கொண்டிருக்கும் இந்த கடற்கரை எத்தனை அழகானதோ அத்தனை வன்மமிக்கதுமாய் இருக்கிறதென நான் அடிக்கடி நினைத்துக் கொள்கிறேன். இப்படி நான் சொன்னதும் நீங்கள் இக்கூற்றை அவசரமாய் மறுக்கக் கூடும். கேளுங்கள்... உங்கள் ஏற்பைப் பற்றிய அக்கறையோ மறுப்பு குறித்த கவலையோ எப்போதுமில்லை எனக்கு. ஏனெனில் எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது. ஏனெனில் தனக்குத் தோன்றுவனவெல்லாம் சரியானவையே என்றெண்ணிக் கொண்டிருக்கும் கோடானுகோடி சராசரிகளுள் ஒன்றாய்த்தான் நானுமிருக்கிறேன்.. ஏனெனில் அப்படி இருப்பதே போதுமானதென்று எனக்குத் தோன்றுகிறது!


அதோ.. அந்த அலைகளைப் பாருங்கள்.. அத்தனை வலிமையாய், வீரியமிக்கதாய், அகண்டகரங்களோடு பெருங்குரலெடுத்தலறியபடி பாய்ந்து வரும் இவ்வலைகள் இந்தக் கரை தொட்டதும் உடல் சிதறி, உருக்குலைந்து இல்லாமலாகின்றன.

ஆர்ப்பரிக்கும் கடல் வலிமையானதா? அமைதியாயிருக்கும் கரை வலிமையானதா? கண்களுக்கும் கற்பனைக்கும் அடங்காது வானுக்கிணையாய் விரியத் திறந்திருக்கும் இந்தக் கடல், கதவுகளற்ற கரைக்குள் அடங்கியிருப்பது வியப்புதானில்லையா? என்றாலும்.. எல்லா நேரங்களிலும் கடல் கரை மீறத் தவித்தபடியே இருக்கிறது. கரையை வெற்றி கொள்ளும் ஒற்றைத் தருணத்தை எதிர்நோக்கி கணந்தோறும் தோற்றுக் கொண்டேயிருக்கிறது..

உங்களுக்குப் புரிகிறதா இந்த போராட்டம்? உலகின் அடிப்படை நியதியும் இதுவாகத்தானிருக்கிறது.. இத்தாவர சங்கமத்துள் சத்தும் அசத்துமான அனைத்தும் எல்லாக் கண நேரங்களிலும் எதனுடனோ போரிட்டு வென்றபடியோ தோற்றபடியோ தான் இருக்கின்றன. தகுதியுள்ளது தப்பிப் பிழைக்கிறது. தகுதியற்றவர்களும் தகுதியற்றவைகளும் சபிக்கப்பட்டவர்களாகின்றனர்.

தெரியுமா? ஒருவகையில் சபிக்கப்பட்டவனாய்.. சபிக்கப்பட்டவளாய்.. மற்றும் சபிக்கப்பட்டதுவாய் இருப்பது அவனுக்கும் அவளுக்கும் அதற்கும் நிச்சயம் நிம்மதியளிக்கக் கூடியது தான். இன்பங்கள், மகிழ்ச்சிகள், அதிர்ஷ்டங்கள், வசந்த காலங்கள், பூர்ணிமை தினங்கள், புதிய துவக்கங்கள், தவங்கள், வரங்கள், தேவதைகள் மற்றும் இன்ன பிற தெய்வங்களின் தரிசனங்கள் ஆகியவற்றிற்காய் காத்திருக்கும் அவஸ்தை அவர்களுக்கு எப்போதுமிருப்பதில்லை. இந்தக் கடலைப் பார்க்கையிலும் கூட இதுவும் சபிக்கப்பட்ட ஒன்றென்றே தோன்றிக் கொண்டிருக்கிறது எனக்கு.

உங்களுக்கு மயூரியைத் தெரியுமா? அவளும் இந்தக் கடலைப் போல சபிக்கப்பட்டவள் தான். என் இளம் பிராயத்தின் ஏதோவோர் நாளில் அவள் கதையை என் அத்தை எனக்குச் சொல்லியிருந்தாள். அவளும் இந்தக் கடலைச் சேர்ந்தவள் தானாம். இங்கிருந்து 22 லட்சம் கடல் மைல்களுக்கப்பால் அவளின் சிறிய தீவிருந்ததாக அத்தை சொன்னாள்.

மயூரியின் தீவில் அவளைத் தவிர வேறு மனிதர்கள் இல்லை. பெண்ணின் முகம் கொண்ட பொன்னிறப் பசுவொன்று அவளை வளர்த்து வந்தது. அந்தப் பசுவைத் தவிர்த்து பனிக்காலங்களில் பறந்து வரும் சாம்பல் நிறப் பறவைகளும், கடலில் வழி தவறி தீவிலொதுங்கும் மீன்களும், மஞ்சள் நிற வண்ணத்துப் பூச்சிகளும் மட்டுமே அவளறிந்த உயிர்களாயிருந்தன.

மயூரி தன் பதினோராம் வயதில் முதன்முதலாய் ஒரு கடற்கன்னியைச் சந்தித்தாள். வெகு தூரம் நீந்தி வந்ததால் களைப்புற்றிருந்த அக்கடற்கன்னி அத்தீவில் தங்கியிருந்து தன் துடுப்புகளை உலர்த்திக் கொள்ள விரும்பினாள். தன்னையும் தானறிந்த மீன்களையும் ஒத்திருந்த அக்கன்னியின் உருவம் மயூரியை குழப்பத்திலாழ்த்தியது. கடற்கன்னி அழகாயிருந்தாள்.. அதை விடவும் இனிமையுறப் பேசுபவளாயிருந்தாள். மயூரியின் தீவிலிருந்து தென்கிழக்கில் 3000 கடல் மைல்கள் கடந்து சென்றால், தான் வசிக்கும் தீவிருப்பதாய்ச் சொன்னாள். கண்கள் விரியக் கதை கேட்ட மயூரி, தான் அத்தீவைப் பார்க்க விருப்பம் தெரிவித்தாள். சிறுமியான அவளை கடற்கன்னி தன் கைகளில் அணைத்தெடுத்துக் கொண்டாள். நாளது வரை தனியளாய் இருந்த மயூரி புதியதோர் உலகைக் காண ஆயத்தமானாள்.

கடற்கன்னி இம்முறை நீந்திச் செல்லாமல் நீரின் மேல் லாவகமாய் நடந்து சென்றாள். கடல் நீர் கரும்பச்சை நிறப் பளிங்கு போலிருந்தது. சின்னஞ்சிறு மீன்கள் குறுக்கும் நெடுக்குமாய் ஓடியவண்ணமிருந்தன. கடல் எந்தச் சலனமுமின்றி உறங்கும் குழந்தை போலிருந்தது.

"பார் மயூரி! நுனிக்கடலின் ஆர்ப்பரிப்பெதுவும் இங்கில்லை பார். ஆழமுடையது எதுவும் அடக்கமுடையதாயிருக்கிறதில்லையா?" என்றாள் கடற்கன்னி.

ஆழ்ந்த யோசிப்புகளோடு கடலைப் பார்த்த மயூரி.. "ஆம்! ஆனால்.. இந்த ஆழத்திற்குப் பின்னால் நுனிக்கடலின்ஆர்ப்பரிப்பை விடவும் வலிமையான கொந்தளிப்பு நிச்சயமிருக்கும்" என்றாள்.

கடற்கன்னி அதனை ஏற்கவுமில்லை.. மறுக்கவுமில்லை. இரண்டு பகல்கள் மற்றும் மூன்று இரவுகளைக் கடந்து இருவரும் தீவையடைந்தபோது இருவருமே வெகுவாய் சோர்வுற்றிருந்தனர்.

அந்தத் தீவு மயூரியை வியப்பிலாழ்த்தியது. இதுவரை கண்டறியாத கேட்டறியாத விநோதங்களை அவள் அங்கு காண நேர்ந்தது. அங்கே விலங்குகளிருந்தன.. மனிதர்களும் பலர் இருந்தனர்.. ஆனால் ஒருவரும் அவளையொத்த முழு மனித உருவம் பெற்றவர்களாயில்லை. ஒரு மனிதனுக்கு பசுவின் தலையிருந்தது.. சமயங்களில் அது நரியைப் போலவும்.. வல்லூறைப் போலவும் மாறிக் கொண்டேயிருப்பதை கண்டு மயூரி அதிசயித்தாள். யானைத் துதிக்கையுடைய பெண்ணொருத்தியும், ஆந்தையின் கண்களைக்கொண்ட சிறுமியொருத்தியும் அவளை அன்போடு வரவேற்றனர். குரங்கின் சாயலைக் கொண்ட சிறுவனும், ஒட்டகம் போன்று இரட்டைத் திமில்களைக் கொண்ட இளைஞனும் மற்றும் மூக்கின் அருகே ஒற்றைக் கொம்புடைய சிலரும் அவளின் நண்பர்களாயினர். சின்னாட்களில் மயூரி தன் சொந்தத் தீவை முற்றிலும் மறந்தவளானாள்.

அடுக்கிவைக்கப்பட்ட காகிதத்தாள்கள் காற்றில் பறப்பது போல நாட்கள் சிறகுகளின்றிப் பறந்து கொண்டிருந்தன. வெகுநாட்களுக்குப் பின்னாய் தூரதேசமொன்றிலிருந்து பறந்து வந்த மனிதமுகம் கொண்ட பறவையொன்று அவளின் சாளரத்தின் வழிப்புகுந்து அறைநடுவே சோர்ந்து விழுந்தது. பதறியவள் அதைத் தூக்க முற்பட்டபோது வலி மிகுதியால்அது துடித்துக் கொண்டிருந்தது. வெகுநாட்கள்.. வெகுதூரம் பறந்து வந்ததன் காரணமாய் அதன் வெண்ணிறச் சிறகுகள் பலமிழந்திருந்தன. சோர்வுற்ற நிலையிலும் அப்பறவையின் சிறிய கண்கள் மிக வசீகரமாயிருப்பதாய் மயூரி நினைத்துக் கொண்டாள்.

இருநாட்கள் கழித்து அப்பறவை அவளிடம் பேசத் தொடங்கியது. அப்பறவையின் மொழி, பேச்சின் லாவகம், குரலின் இனிமை அனைத்தும் அவள் தன் வாழ்நாளில் கேட்டறியாததாயிருந்தது. அது நிச்சயம் தேவ லிபிகளுள் ஒன்றாய் இருக்க வேண்டுமெனத் தோன்றியதவளுக்கு.

அப்பறவை தன் பெயர் இஸ்தார் என அறிமுகப்படுத்திக் கொண்டது. மனித முகங்களற்ற அத்தீவில் தனக்குப் பொருத்தமானவளாய் மயூரி இருப்பது தனக்கு ஆறுதலளிப்பதாய்ச் சொன்னது. மேலும் மனிதர்களின் வாழ்க்கை, நம்பிக்கை, காதல், நட்பு, காமம், தியாகம், கோபம், துரோகம், வஞ்சகம், சுயநலம், அவநம்பிக்கை, சந்தேகித்தல், சார்ந்து வாழ்தல், முதலானவை பற்றி இடைவிடாது பேசிக் கொண்டிருந்தது.

மயூரி அதன் குரலுக்கு மயங்கினாள். விருப்பங்களுக்கு இசைந்தாள்.. கட்டளைகளுக்கு அடிபணிந்தாள்.. இஸ்தார் சொல்வதனைத்தும் உண்மையாகத்தான் இருக்க வேண்டுமென நம்பத் தொடங்கினாள். ஓர் நாள் இஸ்தார் இறப்பைப் பற்றியும் கொல்வதில் உள்ள இன்பம் பற்றியும்.. கொலை புரிவது மனித மனத்தின் மறக்கப்பட்ட ஆதி இச்சையென்றும் அவளிடம் உரையாற்றிக் கொண்டிருந்தது. அதுவரை மரணங்களையோ, உயிர் பிரியும் வாதனைகளையோ அறிந்திராத அச்சிறுமி தானும் கொலை புரியக் கற்றுக் கொள்ள விரும்புவதாகச் சொன்னாள். மறுநாள் இஸ்தார் அதிகூர்மையும் கண்கூசும் பளபளப்பும் மிகுந்த ஆயுதமொன்றை அவளுக்குக் கொடுத்தது. மேலும் கொலை புரிவதன் நுட்பங்களை ரகசியமாய் அவள் காதில் ஓதி... "கொல்..கொல்" என முழக்கமிட்டுப் பறந்து போனது.

ஆயுதம் கிடைக்கப் பெற்றதும் மயூரி உற்சாகமானாள். கொலை புரியும் ஆவல் கண்களில் மினுமினுங்க கொல்வதற்கு அவசரமாய் ஆள் தேடினாள். திடுமென.. எப்போதும் தன் காலுரசி நிற்பதும்.. அதுவரை தன்னால் புறக்கணிக்கப்பட்டு வந்ததுமான பூனைக்குட்டியைக் கையிலெடுத்து மெதுவாய் அதன் கழுத்தை அறுக்க ஆரம்பித்தாள்! கழுத்து அறுபட்டு குருதி கொப்பளித்து இளஞ்சூடாய் அவள் கைகளில் பரவத் தொடங்க கிறீச்சிட்டலறியது அப்பூனை. அதிர்ந்தவள்.. தலை தொங்கிய பூனைக்குட்டியைப் பதட்டமாய்த் தரையில் வீசினாள். பாதிக்கண்கள் திறந்த நிலையில் இறந்து போயிருந்தது அது. முதன் முதலாய் மரணம் பார்த்த அதிர்வில் தலை சுழன்றது அவளுக்கு. அசைவற்றுக்கிடந்த பூனையின் உடலருகே தானும் அசைவின்றி அமர்ந்து கொண்டாள். கண்கள் பெருக்கெடுத்தோடி பூனையின் இரத்தத்தோடு கலந்த வண்ணமிருந்தது. மரணத்தின் கருநிழல் அவள் மீது படிந்தபடியிருக்க யுகம் யுகமாய் தன்னைத் தானே சபித்துக்கொண்டேயிருந்த அவள், ஒரு பூர்ணிமை நாளில் தானும் இறந்து போனாள்.

அவள் இறந்ததும் தீவு ஸ்தம்பித்தது. மாலையில் கருநிற மழை பொழிய.. மரங்களிலும் செடிகளிலும் நிறமற்ற பூக்கள் பூத்தன. அடுத்த மூன்றாம் நாளில் அந்த அதிசயம் நிகழ்ந்தது. புத்தரும் கர்த்தரும் அத்தீவில் ஒன்றாய்த் தோன்றி அவளை மன்னிக்கத் தலைப்பட்டனர். மயூரி மீண்டும் உயிர்த்தெழுந்தாள். புத்தர் அவளுக்கு உயிரூட்ட பரிசுத்த ஆவியின் பெயரால் கர்த்தர் அவள் பாவங்களை மன்னித்தருளினார். மயூரி தன்னால் கொலையுண்ட பூனைக்குட்டியையும் உயிர்ப்பிக்க வேண்டினாள். அவள் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. மாறாய் அவள் முகத்தில் மெல்லிய மயிர்களும்.. நீண்ட முடிகளுடைய மீசையும் முளைத்தன. கண்கள் வட்ட வடிவம் பெற.. மெல்ல மெல்ல அவள் முகம் இறந்த பூனையின் முகச்சாயலைப் பெற்றது.

சலனமற்ற கடற்பரப்பில் தன் முகம் பார்த்த மயூரி திடீரென உடல் குலுங்க அழத் துவங்கினாள்..

ஆம்.. சில நேரங்களில் தண்டிக்கப்படுதலை விடவும் மன்னிக்கப்படுதல் குரூரமானதாயிருக்கிறது.

Wednesday, February 13, 2008

உதிர்தல்



சில பிரியங்கள்
ஏற்கப்படுவதில்லை
சில பிரியங்களை
ஏற்கமுடிவதில்லை...

அடிக்கடி நினைத்துக் கொள்கிறேன்
ஏற்கப்படாத பிரியங்களும்
எங்கோ கைவிடப்பட்டு
காற்றில் கிடந்தலையும் நேசங்களும்
பின் என்னாகுமென்று...

ஒவ்வொரு காலையிலும்
தன் வாசலில்
பூக்களைப் பரப்பிக் கொள்ளும்
இந்த மரங்களைப் பார்க்கையில்
தோன்றுகிறது

உடைந்து போன நேசங்கள்
உதிர்ந்த பூக்களாகின்றன..

சில நேரங்களில்
கவிதைகளாகவும்.