Wednesday, August 29, 2007
தவிப்பு
Thursday, August 23, 2007
குரு பார்த்தால் கோடி நன்மையா?
நவகிரகங்கள்ல மஞ்சள் நிற வஸ்திரமும், சுண்டல் மாலையும் அணிந்தபடி யானை வாகனத்தோட நிக்கறவர் குருபகவான். அவருக்கு உகந்த மலர் முல்லை, உரியநிறம் பொன்னிறம்... குரு ஒரு சுபகிரகம்னும் 'குரு பார்த்தால் கோடி நன்மை'ன்னும் ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன... இப்டியெல்லாம் எழுத நானென்ன டிவில ராசிபலனா சொல்றேன்?
'குரு' ன்னு ஒரு படம்ங்க. கமல், ஸ்ரீதேவி நடிச்சது இல்ல. அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யாராய் நடிச்சு மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான்னு நமக்கு பிடிச்ச காம்பினேஷன்ல போன வருஷம் வந்த படம். அதை நான் பார்த்தது என் கலையுலக வரலாற்றுலயே மறக்க முடியாத சம்பவமா அமைஞ்சுது! (படம் பாக்கறதும் கலைச்சேவைதானே?) அதத்தான் சொல்லப் போறேன் இங்க!
அப்போ நான் சேலத்துல ஹாஸ்டல்ல தங்கி கலைச்சேவையோட சேர்த்து தமிழ்த்துறை விரிவுரையாளரா 'கல்விப்பணியும்' செஞ்சுட்டிருந்தேன். (ஹிஹி) ஹாஸ்டல்ல ஆனந்தி ஆனந்தின்னு (2 பேர் இல்ல) 'பட்டாணி' சைஸ்ல (அவ்ளோ தான் உயரம்) ஒரு ரூம் மேட். என்னை மாதிரி அமைதி எல்லாம் இல்ல (?!) ... வாயாடின்னா வாயாடி அப்படி ஒரு வாயாடி. வழக்கமா என்னை ஹாஸ்டல்ல சேர்த்தாங்கன்னா என்னை விட்டுட்டு அம்மாப்பா வீடு போறதுக்குள்ள பிரிவுத்துயர் தாங்காம பின்னாடியே அடுத்த பஸ்ல கிளம்பி நானும் வீட்டுக்கு போய்டுவேன்! அந்தளவுக்கு ஹோம் சிக் வரும் எனக்கு.
ஆனா இங்க சேர்ந்த அன்னிக்கு அவ பேச ஆரம்பிச்சதுல பிரிவாவது, துயராவது.. இந்த கொடுமைல இருந்து தப்பிச்சா போதும்னு பெட்ஷீட் போர்த்திட்டு தூங்கிட்டேன்! அப்படியாப்பட்ட நல்ல பொண்ணு அது. ஒரு நாள்ல 3 மணி நேரம் காலேஜ் போறதும் (அதுல ஒன்னரை மணி நேரம் ட்ராவல்!) 16 மணி நேரம் தூங்கறதும், மீதி 5 மணி நேரமும் என்னை கலாய்க்கறதும் அவளோட அன்றாட கடமைகளா இருந்துது. ஆனா அவகிட்ட ஒரு நல்ல கொள்கையும் இருந்துச்சு... எந்த படம் வந்தாலும் உடனே பாத்துடுவா. ''நமக்காக கோடி கோடியா செலவு பண்ணி படம் எடுக்கறாங்க.. அதை முதல் நாளே பாக்கறது தான் அவங்களுக்கு நாம பண்ற முதல் மரியாதை''ன்னு கண்கலங்க உணர்ச்சிபூர்வமா சொல்லுவா! அதை கேட்டு கேட்டு எனக்கும் அது சரிதானேன்னு தோண ஆரம்பிச்சிடுச்சு.
நானும் இந்த கொள்கை முடிவுக்கு மாறினப்போதான் அந்த 'குரு' படம் ரிலீஸ் ஆச்சு. நாங்களும் இன்னிக்கு வரும் நாளைக்கு வரும்ன்னு காத்து கிடந்ததால படம் வந்ததும் அன்னிக்கே பாத்துடறதுன்னு கிளம்பினோம். ஈவ்னிங் ஷோ.. படம் முடிஞ்சு வர்றதுக்கு 9 மணி ஆகும். ஹாஸ்டல் 8.30 வரை தான் திறந்திருக்கும்.. என்ன செய்றதுன்னு யோசிச்சி.. வெள்ளந்தியான எங்க வார்டன் அக்காகிட்ட போய்.. "எனக்கு காலேஜ்ல பிராக்டிகல் (தமிழுக்கு?!) ஒர்க் இருக்கு.. அது முடிஞ்சு மீட்டிங் இருக்கு.. 9 க்குள்ள வந்துடுவேன்" னு நானும்... "ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சார்த்தறேன்னு வேண்டியிருக்கேன்(!) நாமக்கல் போறேன்"னு அவளும் பர்மிஷன் வாங்கினோம்.
ஈவ்னிங் நான் வர்றதுக்குள்ள அந்த 'பட்டாணி' ஒரு தடவை தியேட்டருக்கே போய் என்னா நிலவரம்னு துப்பறிஞ்சிட்டு வேற வந்திருக்கு! ஒரு வழியா ஈவ்னிங் ஊருக்கு முன்னால கிளம்பிப் போய் மல்டி ப்ளக்ஸ் வாசல்ல நின்னுகிட்டோம். அவ போய் டிக்கட் வாங்கிட்டு வந்தா.. வாங்கிப் பாத்தா பயங்கர ஷாக்.. டிக்கெட் ஹிந்தில இருக்கு. மணிரத்னம் அந்த படத்தை தமிழ், ஹிந்தி ரெண்டு மொழிலயும் எடுத்து ஒரே நேரத்துல ரிலீஸ் பண்ணிருந்தார்.. எனக்கு வேற ஹிந்தில.. "ஏக் கவ் மே ஏக் கிஸான் ரகதாத்தா" மட்டும் தான் தெரியும். "என்னாடி இது" ன்னு நான் டென்ஷன் ஆனா.. அவ ரொம்ப கூலா "ஏய் நான் விசாரிச்சுட்டேன்.. மேட்னிஷோ மட்டும் தான் ஹிந்தி.. இது மத்யானம் மிஞ்சிப் போன டிக்கட்டா இருக்கும்"ன்றா. "அடி ஆத்தி.. அப்படி கூடவா பண்ணுவாங்க"ன்னு நானும் ஆச்சரியப்பட்டுகிட்டு நின்னேன். எங்க பாத்தாலும் ஒரே சேட்ஜிங்களா இருக்காங்களேன்னு டவுட்டு வேற.
ஒரு வழியா உள்ளார போயி செட்டிலானோம். அக்கம்பக்க சீட்காரங்ககிட்ட விசாரிச்சா எல்லாரும் ஹிந்திப்படம்ங்கிறாங்க, இவளா "தமிழ்தான்! நான் விசாரிச்சுட்டேன்"னு சாதிக்கிறா. சரி படம் போட்டா தெரிஞ்சிடப்போகுதுன்னு ஒரே த்ரில்லா பாத்திட்டிருந்தோம். படம் ஆரம்பிச்சதும் பாத்தா .. டைட்டில் கார்டெல்லாம் இங்கிலீஷ்ல வருது. :( அப்புறம் ஒரு பாட்டு வந்துச்சி... அது தமிழா, ஹிந்தியா, இங்கிலீஷான்னே புரியல. ரொம்ப நேரமா கஷ்டப்பட்டு கேட்ட பின்னாடி "நான் ச்ச்சீனியில் செய்த கடல்ல்ல்" னு என்னமோ ஒரு வரி புரிஞ்சிது. ஹை.. தமிழ்தான் போல! டயலாக்கும் இப்டி கொஞ்சம் கொஞ்சம் புரிஞ்சாகூட போதும்"னு நாங்க சைலண்ட் ஆய்ட்டோம். வந்திருந்த ஹிந்திக்காரங்களுக்கும் அது என்ன மொழிப்பாட்டுன்னு கன்ஃப்யூஸன் போல! அவங்களும் சமத்தா பேசாம உக்காந்திருந்தாங்க! (அதுக்கு மல்லிகா ஷெராவத்தும் காரணமா இருந்திருக்கலாம்!)
அடுத்த சீன்ல "திருநெல்வேலி ஜில்லா" ன்னு தமிழ்ல எதோ ஊர்ப் பேர் வந்துச்சு. அவ்ளோ தான்! எல்லாரும் 'டபார்'னு எந்திரிச்சி கச்சா முச்சான்னு என்னமோ கத்தறாங்க. "ஏய் மன்னாரு படத்த ஹிந்தில போடுடா"ன்னு கத்தினாங்க போலருக்கு. எதாச்சும் புரிஞ்சாத்தானே! உடனே படம் நின்னு போச்சி. உள்ளார இருந்து நாட்டாம கணக்கா ஒருத்தர் வந்து என்னமோ பஞ்சாயத்து பண்ணினார். அவர் போனதும் மறுபடி ஃபர்ஸ்ட்ல இருந்து படம் போட்டாங்க. மறுபடி இங்கிலீஷ் டைட்டில், அதே பாட்டு, பாட்டு முடிஞ்சதும் ... ஹிஹி! மறுபடி "திருநெல்வேலி ஜில்லா!" உடனே மறுபடி எல்லாரும் ஜனகன மண பாடறாப்பல எந்திரிச்சி நின்னுகிட்டு கத்தறாங்க. நாங்க நொந்து போய் படத்தை 'பார்ஸி' மொழில போட்டாலும் பாக்கற ஸ்டேஜுக்கு வந்துட்டோம்.
திடீர்னு மறுபடி படம் நின்னு போய் தியேட்டர் ஒரே சைலண்ட்டா ஆய்டுச்சி. நாட்டாமை வந்து எட்டிப்பாத்துட்டு போனார். அப்புறம் திரும்ப ஃபர்ஸ்ட்ல இருந்து படம் ஓடுது. இந்த முறை படத்துல சத்தமே இல்ல!! "தமிழா ஹிந்தியான்னு என்னாத்துக்கு பிரச்சினை? எல்லாரும் பாக்கட்டும்"னு நல்ல மனசோட ஆடியோவயே கட் பண்ணிட்டாங்க போல!! எல்லாருக்கும் செம டென்ஷனாய்டுச்சி. ஆனந்தியும் எந்திரிச்சு நின்னு கத்தினா. நின்னாலும் உக்காந்த மாதிரியே இருந்ததால சேர் மேலெல்லாம் ஏறிநின்னு கத்தினா பாவம்!
இந்த ரோதனை பத்தாதுன்னு ஒவ்வொரு முறை படம் நிறுத்தினப்பவும் பக்கத்து சீட்டு சேட்டம்மா என்கிட்ட "க்யா ஹுவா.. க்யா ஹூவா" ன்னு இம்சை பண்ணிட்டே இருக்குது. நானும்
"ஹாங் ஜி" ..
"ஜி ஹாங்"...
"அச்சா அச்சா" ...
"குச் குச் ஹோத்தா ஹை" ன்னு
தெரிஞ்ச எல்லா ஹிந்தி வார்த்தையும் சொல்லிப்பாத்தேன். அந்தம்மா அடங்கறாப்பலயே இல்ல. நானும் எவ்ளோ நேரம்தான் ஹிந்தி புரிஞ்ச மாதிரியே நடிக்கறது? அழுவாச்சியா வருது எனக்கு...
கடைசியா அந்த நாட்டாமை மறுபடி வந்து "தமிழ்ல பாக்கறவங்க மட்டும் இருங்க.. மத்தவங்க எல்லாம் பணத்தை திருப்பி வாங்கிக்குங்க.. படம் தமிழ்ல தான் ஓடும்" ன்னு தீர்ப்பு வழங்கினார்! கேஸ் முடியவே மணி 7.20 ஆய்டுச்சு... இருந்தாலும் "ஆஹா.. எப்பவும் நீதி தேவதை நம்ம பக்கம்தான் இருக்கா போல" ன்னு சந்தோஷமாய்டுச்சி எங்களுக்கு. ஹிந்திக்காரங்க எல்லாம் சோகமா திரும்பிப் போறத பாத்து எளக்காரமா "உங்கள எல்லாம் பாத்தா பாவமா இருக்கு" ன்னு டயலாக் விட்டுட்டே பாக்கறேன்.... பாவி மக்கா! தியேட்டர்ல இருந்த அத்தனை பேரும் போய்ட்டானுங்க. :( நானு, பட்டாணி, அப்புறம் நம்ம 'ராம்' மாதிரி பச்சப்புள்ளங்க ரெண்டு பேர், குசும்பன் மாதிரி பால் வடியற முகமா ஒருத்தர், தம்பி மாதிரி உயர்ந்த மனிதர் ஒருத்தர்னு மொத்தமே 6 பேர் தேமேன்னு உக்காந்திருக்கோம்.
நாட்டாம மறுபடி வந்து பாத்துட்டு "ஷோ கேன்சல்" ன்னு தீர்ப்ப மாத்தி சொல்லிட்டு போய்ட்டார். ஹ்ம்ம்! நாங்க நொந்து நூடுல்ஸ் ஆகி வெந்து வெர்மிஸிலி ஆகி.... 7.30 க்கு (நேரத்தை பாத்தீங்களா!) பணத்தை வாங்கிட்டு வெளில வந்து அண்ணா பார்க், கெவீஸ் ரெஸ்டாரண்ட்னு சுத்தி புண்பட்ட மனசை ஆத்திகிட்டு நல்ல புள்ளைங்களா 8.30 க்குள்ள ஹாஸ்டல் வந்து எங்க பேரை காப்பாத்திகிட்டோம்.
ஆனாலும் விடாப்பிடியா மறுநாள் "பாட்டி செத்துப்போச்சின்னு" காலேஜுக்கு லீவ் சொல்லிட்டு போய் படத்தை பாத்துட்டு அதுக்கடுத்த நாள் காலேஜ் போனதும் வழில எங்க ஹெச்.ஓ.டி "என்னாச்சி பாட்டிக்கு" ன்னு விசாரிக்க நான் "எந்தப் பாட்டி?" ன்னு மொதல்ல தடுமாறி அப்புறம் சுதாரிச்சி "ஆமாம் மேம்... பாட்டி செத்துப்போய்ட்டாங்க.. பாவம் ரொம்ப சின்ன வயசு வேற..." ன்னு சோகமா உளறிக்கொட்டினது தனிக்கதை! இதெல்லாம் கலைச் சேவைக்காக நான் பட்ட கஷ்டங்கள்... தெரிஞ்சுக்கோங்க!
பி.கு: இதுவரை எந்த படத்துக்கும் சொல்லாதத இப்ப சொல்றேன்.. படம் நல்லாருந்துச்சி!
பி.குக்கு.பி.கு: பின் குறிப்பு தொடர்பாக வரும் பின்னூட்டங்கள் எதுவும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது!!
Saturday, August 18, 2007
புரிதலின் அர்த்தங்கள்!
Thursday, August 16, 2007
முன்னாள் நண்பனுக்கு...
Sunday, August 12, 2007
ஆரியா - ஓர் அலசல்
மாதவன், பாவனா, பிரகாஷ்ராஜ், வடிவேலு மற்றும் பலர்.
Thursday, August 9, 2007
தூண்டில்
பார்வை வலையை விரித்து வைத்து
தூண்டில் உணவாய்
உன் புன்னகையை வைத்து
ஏதுமறியாதவன் போல்
காத்திருக்கிறாய்...
தப்பிக்க வழியேயின்றி
விரும்பி வந்து
அகப்பட்டுக் கொள்கிறேன்..
ஆனால்
மகிழ்ச்சியாகவே இறக்கிறேன்
ஒவ்வொருமுறையும்!






