Wednesday, August 29, 2007

தவிப்பு




வெட்டவெளியில் தனியாய்
புலம்பியபடி நிற்கிறது
ஒற்றைப் பனைமரமொன்று..
எங்கோ வழிதவறி
மேசையின் பரப்பில்
பதறியலைகிறது
ஓர் சிற்றெறும்பு...
கோவிலில்
பிரகாரம் சுற்றும் பெண்
சிந்தும் கண்ணீரை
துடைத்துக் கொள்கிறாள்
எவருமறியாமல்...
யாரும் வாழ்ந்திராத
அவ்வீட்டில்
எப்போதும்
நிறைந்திருக்கிறது இருள்..
மெளனமாய்
கவிதைகள் எழுதிக் கொண்டிருக்கிறேன்
நான்!

Thursday, August 23, 2007

குரு பார்த்தால் கோடி நன்மையா?

நவகிரகங்கள்ல மஞ்சள் நிற வஸ்திரமும், சுண்டல் மாலையும் அணிந்தபடி யானை வாகனத்தோட நிக்கறவர் குருபகவான். அவருக்கு உகந்த மலர் முல்லை, உரியநிறம் பொன்னிறம்... குரு ஒரு சுபகிரகம்னும் 'குரு பார்த்தால் கோடி நன்மை'ன்னும் ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன... இப்டியெல்லாம் எழுத நானென்ன டிவில ராசிபலனா சொல்றேன்?

'குரு' ன்னு ஒரு படம்ங்க. கமல், ஸ்ரீதேவி நடிச்சது இல்ல. அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யாராய் நடிச்சு மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான்னு நமக்கு பிடிச்ச காம்பினேஷன்ல போன வருஷம் வந்த படம். அதை நான் பார்த்தது என் கலையுலக வரலாற்றுலயே மறக்க முடியாத சம்பவமா அமைஞ்சுது! (படம் பாக்கறதும் கலைச்சேவைதானே?) அதத்தான் சொல்லப் போறேன் இங்க!

அப்போ நான் சேலத்துல ஹாஸ்டல்ல தங்கி கலைச்சேவையோட சேர்த்து தமிழ்த்துறை விரிவுரையாளரா 'கல்விப்பணியும்' செஞ்சுட்டிருந்தேன். (ஹிஹி) ஹாஸ்டல்ல ஆனந்தி ஆனந்தின்னு (2 பேர் இல்ல) 'பட்டாணி' சைஸ்ல (அவ்ளோ தான் உயரம்) ஒரு ரூம் மேட். என்னை மாதிரி அமைதி எல்லாம் இல்ல (?!) ... வாயாடின்னா வாயாடி அப்படி ஒரு வாயாடி. வழக்கமா என்னை ஹாஸ்டல்ல சேர்த்தாங்கன்னா என்னை விட்டுட்டு அம்மாப்பா வீடு போறதுக்குள்ள பிரிவுத்துயர் தாங்காம பின்னாடியே அடுத்த பஸ்ல கிளம்பி நானும் வீட்டுக்கு போய்டுவேன்! அந்தளவுக்கு ஹோம் சிக் வரும் எனக்கு.

ஆனா இங்க சேர்ந்த அன்னிக்கு அவ பேச ஆரம்பிச்சதுல பிரிவாவது, துயராவது.. இந்த கொடுமைல இருந்து தப்பிச்சா போதும்னு பெட்ஷீட் போர்த்திட்டு தூங்கிட்டேன்! அப்படியாப்பட்ட நல்ல பொண்ணு அது. ஒரு நாள்ல 3 மணி நேரம் காலேஜ் போறதும் (அதுல ஒன்னரை மணி நேரம் ட்ராவல்!) 16 மணி நேரம் தூங்கறதும், மீதி 5 மணி நேரமும் என்னை கலாய்க்கறதும் அவளோட அன்றாட கடமைகளா இருந்துது. ஆனா அவகிட்ட ஒரு நல்ல கொள்கையும் இருந்துச்சு... எந்த படம் வந்தாலும் உடனே பாத்துடுவா. ''நமக்காக கோடி கோடியா செலவு பண்ணி படம் எடுக்கறாங்க.. அதை முதல் நாளே பாக்கறது தான் அவங்களுக்கு நாம பண்ற முதல் மரியாதை''ன்னு கண்கலங்க உணர்ச்சிபூர்வமா சொல்லுவா! அதை கேட்டு கேட்டு எனக்கும் அது சரிதானேன்னு தோண ஆரம்பிச்சிடுச்சு.

நானும் இந்த கொள்கை முடிவுக்கு மாறினப்போதான் அந்த 'குரு' படம் ரிலீஸ் ஆச்சு. நாங்களும் இன்னிக்கு வரும் நாளைக்கு வரும்ன்னு காத்து கிடந்ததால படம் வந்ததும் அன்னிக்கே பாத்துடறதுன்னு கிளம்பினோம். ஈவ்னிங் ஷோ.. படம் முடிஞ்சு வர்றதுக்கு 9 மணி ஆகும். ஹாஸ்டல் 8.30 வரை தான் திறந்திருக்கும்.. என்ன செய்றதுன்னு யோசிச்சி.. வெள்ளந்தியான எங்க வார்டன் அக்காகிட்ட போய்.. "எனக்கு காலேஜ்ல பிராக்டிகல் (தமிழுக்கு?!) ஒர்க் இருக்கு.. அது முடிஞ்சு மீட்டிங் இருக்கு.. 9 க்குள்ள வந்துடுவேன்" னு நானும்... "ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சார்த்தறேன்னு வேண்டியிருக்கேன்(!) நாமக்கல் போறேன்"னு அவளும் பர்மிஷன் வாங்கினோம்.

ஈவ்னிங் நான் வர்றதுக்குள்ள அந்த 'பட்டாணி' ஒரு தடவை தியேட்டருக்கே போய் என்னா நிலவரம்னு துப்பறிஞ்சிட்டு வேற வந்திருக்கு! ஒரு வழியா ஈவ்னிங் ஊருக்கு முன்னால கிளம்பிப் போய் மல்டி ப்ளக்ஸ் வாசல்ல நின்னுகிட்டோம். அவ போய் டிக்கட் வாங்கிட்டு வந்தா.. வாங்கிப் பாத்தா பயங்கர ஷாக்.. டிக்கெட் ஹிந்தில இருக்கு. மணிரத்னம் அந்த படத்தை தமிழ், ஹிந்தி ரெண்டு மொழிலயும் எடுத்து ஒரே நேரத்துல ரிலீஸ் பண்ணிருந்தார்.. எனக்கு வேற ஹிந்தில.. "ஏக் கவ் மே ஏக் கிஸான் ரகதாத்தா" மட்டும் தான் தெரியும். "என்னாடி இது" ன்னு நான் டென்ஷன் ஆனா.. அவ ரொம்ப கூலா "ஏய் நான் விசாரிச்சுட்டேன்.. மேட்னிஷோ மட்டும் தான் ஹிந்தி.. இது மத்யானம் மிஞ்சிப் போன டிக்கட்டா இருக்கும்"ன்றா. "அடி ஆத்தி.. அப்படி கூடவா பண்ணுவாங்க"ன்னு நானும் ஆச்சரியப்பட்டுகிட்டு நின்னேன். எங்க பாத்தாலும் ஒரே சேட்ஜிங்களா இருக்காங்களேன்னு டவுட்டு வேற.

ஒரு வழியா உள்ளார போயி செட்டிலானோம். அக்கம்பக்க சீட்காரங்ககிட்ட விசாரிச்சா எல்லாரும் ஹிந்திப்படம்ங்கிறாங்க, இவளா "தமிழ்தான்! நான் விசாரிச்சுட்டேன்"னு சாதிக்கிறா. சரி படம் போட்டா தெரிஞ்சிடப்போகுதுன்னு ஒரே த்ரில்லா பாத்திட்டிருந்தோம். படம் ஆரம்பிச்சதும் பாத்தா .. டைட்டில் கார்டெல்லாம் இங்கிலீஷ்ல வருது. :( அப்புறம் ஒரு பாட்டு வந்துச்சி... அது தமிழா, ஹிந்தியா, இங்கிலீஷான்னே புரியல. ரொம்ப நேரமா கஷ்டப்பட்டு கேட்ட பின்னாடி "நான் ச்ச்சீனியில் செய்த கடல்ல்ல்" னு என்னமோ ஒரு வரி புரிஞ்சிது. ஹை.. தமிழ்தான் போல! டயலாக்கும் இப்டி கொஞ்சம் கொஞ்சம் புரிஞ்சாகூட போதும்"னு நாங்க சைலண்ட் ஆய்ட்டோம். வந்திருந்த ஹிந்திக்காரங்களுக்கும் அது என்ன மொழிப்பாட்டுன்னு கன்ஃப்யூஸன் போல! அவங்களும் சமத்தா பேசாம உக்காந்திருந்தாங்க! (அதுக்கு மல்லிகா ஷெராவத்தும் காரணமா இருந்திருக்கலாம்!)

அடுத்த சீன்ல "திருநெல்வேலி ஜில்லா" ன்னு தமிழ்ல எதோ ஊர்ப் பேர் வந்துச்சு. அவ்ளோ தான்! எல்லாரும் 'டபார்'னு எந்திரிச்சி கச்சா முச்சான்னு என்னமோ கத்தறாங்க. "ஏய் மன்னாரு படத்த ஹிந்தில போடுடா"ன்னு கத்தினாங்க போலருக்கு. எதாச்சும் புரிஞ்சாத்தானே! உடனே படம் நின்னு போச்சி. உள்ளார இருந்து நாட்டாம கணக்கா ஒருத்தர் வந்து என்னமோ பஞ்சாயத்து பண்ணினார். அவர் போனதும் மறுபடி ஃபர்ஸ்ட்ல இருந்து படம் போட்டாங்க. மறுபடி இங்கிலீஷ் டைட்டில், அதே பாட்டு, பாட்டு முடிஞ்சதும் ... ஹிஹி! மறுபடி "திருநெல்வேலி ஜில்லா!" உடனே மறுபடி எல்லாரும் ஜனகன மண பாடறாப்பல எந்திரிச்சி நின்னுகிட்டு கத்தறாங்க. நாங்க நொந்து போய் படத்தை 'பார்ஸி' மொழில போட்டாலும் பாக்கற ஸ்டேஜுக்கு வந்துட்டோம்.

திடீர்னு மறுபடி படம் நின்னு போய் தியேட்டர் ஒரே சைலண்ட்டா ஆய்டுச்சி. நாட்டாமை வந்து எட்டிப்பாத்துட்டு போனார். அப்புறம் திரும்ப ஃபர்ஸ்ட்ல இருந்து படம் ஓடுது. இந்த முறை படத்துல சத்தமே இல்ல!! "தமிழா ஹிந்தியான்னு என்னாத்துக்கு பிரச்சினை? எல்லாரும் பாக்கட்டும்"னு நல்ல மனசோட ஆடியோவயே கட் பண்ணிட்டாங்க போல!! எல்லாருக்கும் செம டென்ஷனாய்டுச்சி. ஆனந்தியும் எந்திரிச்சு நின்னு கத்தினா. நின்னாலும் உக்காந்த மாதிரியே இருந்ததால சேர் மேலெல்லாம் ஏறிநின்னு கத்தினா பாவம்!

இந்த ரோதனை பத்தாதுன்னு ஒவ்வொரு முறை படம் நிறுத்தினப்பவும் பக்கத்து சீட்டு சேட்டம்மா என்கிட்ட "க்யா ஹுவா.. க்யா ஹூவா" ன்னு இம்சை பண்ணிட்டே இருக்குது. நானும்

"ஹாங் ஜி" ..

"ஜி ஹாங்"...

"அச்சா அச்சா" ...

"குச் குச் ஹோத்தா ஹை" ன்னு

தெரிஞ்ச எல்லா ஹிந்தி வார்த்தையும் சொல்லிப்பாத்தேன். அந்தம்மா அடங்கறாப்பலயே இல்ல. நானும் எவ்ளோ நேரம்தான் ஹிந்தி புரிஞ்ச மாதிரியே நடிக்கறது? அழுவாச்சியா வருது எனக்கு...

கடைசியா அந்த நாட்டாமை மறுபடி வந்து "தமிழ்ல பாக்கறவங்க மட்டும் இருங்க.. மத்தவங்க எல்லாம் பணத்தை திருப்பி வாங்கிக்குங்க.. படம் தமிழ்ல தான் ஓடும்" ன்னு தீர்ப்பு வழங்கினார்! கேஸ் முடியவே மணி 7.20 ஆய்டுச்சு... இருந்தாலும் "ஆஹா.. எப்பவும் நீதி தேவதை நம்ம பக்கம்தான் இருக்கா போல" ன்னு சந்தோஷமாய்டுச்சி எங்களுக்கு. ஹிந்திக்காரங்க எல்லாம் சோகமா திரும்பிப் போறத பாத்து எளக்காரமா "உங்கள எல்லாம் பாத்தா பாவமா இருக்கு" ன்னு டயலாக் விட்டுட்டே பாக்கறேன்.... பாவி மக்கா! தியேட்டர்ல இருந்த அத்தனை பேரும் போய்ட்டானுங்க. :( நானு, பட்டாணி, அப்புறம் நம்ம 'ராம்' மாதிரி பச்சப்புள்ளங்க ரெண்டு பேர், குசும்பன் மாதிரி பால் வடியற முகமா ஒருத்தர், தம்பி மாதிரி உயர்ந்த மனிதர் ஒருத்தர்னு மொத்தமே 6 பேர் தேமேன்னு உக்காந்திருக்கோம்.

நாட்டாம மறுபடி வந்து பாத்துட்டு "ஷோ கேன்சல்" ன்னு தீர்ப்ப மாத்தி சொல்லிட்டு போய்ட்டார். ஹ்ம்ம்! நாங்க நொந்து நூடுல்ஸ் ஆகி வெந்து வெர்மிஸிலி ஆகி.... 7.30 க்கு (நேரத்தை பாத்தீங்களா!) பணத்தை வாங்கிட்டு வெளில வந்து அண்ணா பார்க், கெவீஸ் ரெஸ்டாரண்ட்னு சுத்தி புண்பட்ட மனசை ஆத்திகிட்டு நல்ல புள்ளைங்களா 8.30 க்குள்ள ஹாஸ்டல் வந்து எங்க பேரை காப்பாத்திகிட்டோம்.

ஆனாலும் விடாப்பிடியா மறுநாள் "பாட்டி செத்துப்போச்சின்னு" காலேஜுக்கு லீவ் சொல்லிட்டு போய் படத்தை பாத்துட்டு அதுக்கடுத்த நாள் காலேஜ் போனதும் வழில எங்க ஹெச்.ஓ.டி "என்னாச்சி பாட்டிக்கு" ன்னு விசாரிக்க நான் "எந்தப் பாட்டி?" ன்னு மொதல்ல தடுமாறி அப்புறம் சுதாரிச்சி "ஆமாம் மேம்... பாட்டி செத்துப்போய்ட்டாங்க.. பாவம் ரொம்ப சின்ன வயசு வேற..." ன்னு சோகமா உளறிக்கொட்டினது தனிக்கதை! இதெல்லாம் கலைச் சேவைக்காக நான் பட்ட கஷ்டங்கள்... தெரிஞ்சுக்கோங்க!

பி.கு: இதுவரை எந்த படத்துக்கும் சொல்லாதத இப்ப சொல்றேன்.. படம் நல்லாருந்துச்சி!

பி.குக்கு.பி.கு: பின் குறிப்பு தொடர்பாக வரும் பின்னூட்டங்கள் எதுவும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது!!

Saturday, August 18, 2007

புரிதலின் அர்த்தங்கள்!


சண்டைகளின் முடிவில்
சரணடைதல்களோ அல்லது
சமாதானங்களோ என்றுமே
வழக்கமாயிருந்ததில்லை உனக்கு..
என்னைச் சந்தித்ததன் பின்னாய்
பசி மறந்ததாகவோ
தூக்கம் தொலைத்ததாகவோ
எப்போதும் பிதற்றியதில்லை நீ...
அபத்தங்களின் பிரதியாய்
உன் முன்னால் வைக்கப்படும்
என் கேள்விகள்
கடிதங்கள்
கவிதைகள்
எதற்குமே பதிலிருந்ததில்லை
உன்னிடம்....
ஓரிரு முறைகள் தவிர்த்து
என்னைக் காதலிப்பதாய்க் கூட
சொன்னதில்லை...
என்றாலும்
எனக்கு நிச்சயமாய்த் தெரியும்...
உரிமைகளின் நீட்சியாய்
நீ கொள்ளும்
கோபங்களின் ஆழத்தில்..
கடலெனத் தளும்புவது
காதலன்றி வேறெதுவும் இல்லையென!

Thursday, August 16, 2007

முன்னாள் நண்பனுக்கு...



நீயோ அல்லது நானோ
சில கணங்களேனும்
தாமதித்திருந்தால்
நிச்சயம் தவிர்த்திருக்கலாம்
எதிர்பாராமல் நிகழ்ந்துவிட்ட
நம் சந்திப்பை....
எனக்கான பார்வைகள் எதுவும்
உன்னிடமோ
உனக்கான வார்த்தைகள் ஏதும்
என்னிடமோ
மிச்சமிருக்கவில்லை அப்போது..
தப்பித்தல்களின் அவசரத்தோடு
நொடியொன்று இறக்கும்
அவகாசத்திற்குள்
விரைந்து கடந்தாய் என்னை..
உன் முதுகில் பட்டுத்தெறித்த
என் பார்வைகள்
முனை மழுங்கி
மண்ணில் விழ....
ஒப்பனைகள் கலைந்து
விகாரமாய்ப் பல்லிளிக்கிறது
என்றோ
வெகு புனிதமென
நான் கொண்டாடிய
உன் நட்பு...

Sunday, August 12, 2007

ஆரியா - ஓர் அலசல்

மாதவன், பாவனா, பிரகாஷ்ராஜ், வடிவேலு மற்றும் பலர்.

இயக்கம் : பாலசேகரன்

இசை : மணிசர்மா





"ஹேய் இன்னிக்கு நைட் ஆரியா பாக்கப் போறேன்" ன்னு நான் சந்தோஷமா சொன்ன உடனேயே "படம் மொக்கையா இருக்க வாழ்த்துக்கள்.. அப்ப தான் நீ நல்லா காமெடியா விமர்சனம் எழுதுவே" ன்னு ஆசிர்வாதம் பண்ணினவள தான் இப்ப நான் கொலை வெறியோட தேடிட்டிருக்கேன். யாராச்சும் பாத்திங்கன்னா உடனடியா தகவல் குடுங்கப்பா!

அதென்னமோ தெரியல... நான் பாக்கற படங்கள் மட்டும் தான் மொக்கையா இருக்கா.. இல்ல மொக்கைப் படங்கள மட்டும் நான் தேடிப் போய் பாக்கறனான்னு கொஞ்ச நாளா ஒரு சந்தேகம் இருந்திட்டே இருக்கு. விமர்சனம் எழுத ஆரம்பிச்சதுல இருந்து 'நல்லாருக்கு'னு எந்த படத்தையும் பாராட்ட முடியல இன்னும். சரி அது கிடக்குது.. ஆரியா என்னாச்சுன்றீங்களா? வழக்கம் போலத்தாங்க.. பழைய மொபைல்ல புது சிம் கார்டு!!

பணக்கார ஹீரோயின் காலேஜ்ல அடாவடி பண்றது, அதை தட்டிக் கேக்கற ஹீரோ " பொண்ணு மாதிரி இரு, புடவை கட்டுன்னு" அட்வைஸ் பண்றது, மோதல் அதைத் தொடர்ந்த காதல்...... ஐய்ய்ய்ய்யோ கடவுளே இந்த கான்செப்ட மாத்தவே மாட்டாங்களா? இல்ல.. நிஜமாவே தெரியாம தாங்க கேக்கறேன்.. இந்த ட்ரெண்ட் தமிழ் சினிமாவுல எந்த வருஷம் ஆரம்பிச்சது? இன்னும் எத்தினி முறை நாம இதயே பாக்கறது? இந்த அநியாயத்தக் கேக்க யாருமே இல்லியா? சரி சரி.. வந்துட்ட பாவத்துக்கு கதை கேட்டுட்டு போங்க.

சிட்டில கலெக்டர்ல இருந்து கவர்னர் வரை எல்லாரையும் ஆட்டிப்படைக்கிற சர்வ வல்லமை படைச்ச தாதா ஒருத்தர் இருக்கார். 'ஏய் பரட்டைலயும் நீ இதைத்தான் சொன்னே, கிரீடத்துலயும் இதத்தான் சொன்னே, இப்பவும் இதையே சொல்றியே' ன்னு நீங்க கேக்க மாட்டீங்கன்னு நம்புறேன். ஏன்னா நீங்களும் தமிழர்கள் தானே!!
சரி கேளுங்க, அவர் தான் பிரகாஷ்ராஜ். அவரோட ஒரே பாசமலர் தங்கச்சி நம்ம பாவனா. (தீண்டாமை, மதுவிலக்கு மாதிரி அண்ணன் தங்கச்சி செண்டிமெண்டை எதிர்த்தெல்லாம் போராட்டம் பண்ண மாட்டாங்களா யாரும்?) பாவனா எம்.பி.பி.எஸ் படிக்கனும்னு ஆசைப்படறாங்க.. ஆனா பாவம்.. எல்லாக் காலேஜ்லயும் அட்மிஷன் முடிஞ்சு சீட் இல்லன்னு சொல்லிடறாங்க. பிரகாஷ்ராஜ் தங்கச்சிக்காக.... கவர்ன்மெண்ட் மெடிக்கல் காலேஜ்ல ஃபர்ஸ்ட் இயர் சேர்ந்த பொண்ணு ஒன்ன ஃப்ர்ஸ்ட் சீன்லயே கழுத்தறுத்து கொன்னுட்டு (?!) அந்த சீட்டை தங்கச்சிக்கு குடுக்க சொல்றார்.
அண்ணனுக்கு கொஞ்சமும் குறையாம ரவுடித்தனம் பண்றதால காலேஜ்ல வாட்ச்மேன்ல இருந்து டீன் வரைக்கும் எல்லாரும் பாவனான்னா பயந்து நடுங்கறாங்க. ஆனா பாருங்க.. தேர்ட் இயர் படிக்கிற நம்ம ஹீரோ மட்டும் பயப்பட மாட்டேங்குறார். அவரோட வீரத்தை மெச்சின பாவனா.... நீலாம்பரி ரேஞ்சுல தன்னோட காதலை சொல்றாங்க. மாதவன் முடியாதுன்றார். (பார்றா!! பேசாம பாவனா நம்ம தம்பிகிட்ட கேட்டிருக்கலாம்!) உடனே டென்ஷனாகி 'உன்னை அடைஞ்சே தீருவே'ன்னு சபதம் போட்டு ஹீரோவுக்கு எக்கச்சக்கமா டார்ச்சர் குடுக்குது பொண்ணு. மாதவனை கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்க கலெக்டர், கமிஷ்னரை எல்லாம் தூதா அனுப்பறார் பிரகாஷ்ராஜ் (இதெல்லாம் ரொம்ம்ம்ப ஓவரு!) ஆனா நம்ம ஹீரோ மசிய மாட்டேன்றார்.

இதுக்கு நடுவால சம்பந்தா சம்பந்தமில்லாம விஸ்வான்னு ஒரு கேரக்டரை கொலைப்பழி சுமத்தி ஜெயில்ல போடறார் பிரகாஷ்ராஜ். அந்த பையன் மாதவனுக்கு தம்பி இல்ல ஆனா தம்பி மாதிரியாம்!! (என்ன கர்மமோ.. ஒன்னும் புரியல) கடைசியா கல்யாணத்துக்கு சம்மதிக்கிற மாதவன், தம்பிய ரிலீஸ் பண்ணிட்டு பிரகாஷ்ராஜ் ஜெயிலுக்கு போனாதான் தாலி கட்டுவேன்னு அடம்பிடிக்கிறார். சரின்னு இவரும் ஜெயிலர், வக்கீல், ஜட்ஜ், மினிஸ்டர் னு எல்லாருக்கும் 2 கோடி ரூபா லஞ்சம் குடுத்து அந்த பையனை ரிலீஸ் பண்ணி கல்யாணம் முடியற வரை தன் கஸ்டடில வெச்சிருக்கார். அந்த தம்பி தப்பிச்சி மாதவன்கிட்ட வந்துடறார்.... பாவனா காரணமே இல்லாம திடீர்னு திருந்தி குடும்ப குத்துவிளக்கா ஆய்டறாங்க. (ஹிஹி.. ரொம்ப குழப்பறேனில்ல? நானென்ன பண்ண? எனக்கும் இதே நிலைமை தான்!)
கடைசில.... பிரகாஷ்ராஜ் ஜெயிலுக்கு போனாரா? மாதவன் - பாவனா கல்யாணம் நடந்துச்சா? இதையெல்லாம் நீங்களே படம் பார்த்து தெரிஞ்சுக்கோங்க. (அப்டியே எனக்கும் சொல்லுங்க.. மொக்கை தாங்காம க்ளைமாக்ஸ்ல தூங்கிட்டேன் நான்!) :)

'கொஞ்சம் கில்லி' 'கொஞ்சம் போக்கிரி' கொஞ்சம் திருவிளையாடல்' சேர்ந்த மாதிரி பிரகாஷ்ராஜ் கேரக்டர். எப்பவும் போல தன்னோட வேலைய சரியா செஞ்சிருக்கார்.
பாவனா பாவம்.. அந்த குழந்தை முகத்துல வில்லித்தனம் கொஞ்சம் கூட பொருந்தல. (தம்பி கவனிக்க!)
மாதவன்.. வீணாப்போன ஒரு கதைக்காக கஷ்டப்பட்டிருக்கார் ரொம்ப.
வடிவேலு வழக்கம் போல அடிவாங்கறார். காமெடி சுமார் ரகம். சொல்லிக்கற
மாதிரி எதும் இல்ல. அடிவாங்கற விட்டுட்டு அவர் புதுசா எதாச்சும் ட்ரை பண்ணலாம்.
இசை மணிசர்மா.. பாட்டு எதுவும் மனசுல பதியல.
எனக்கு மாதவன் பிடிக்கும்.. பாவனா ரொம்ப பிடிக்கும்.. ஆனா படம் சுத்தமா பிடிக்கல. அம்புட்டுதான் என் கருத்து. நான் அலசி காயப்போட்டுட்டேன்! தமிழ் சினிமா மொக்கைகளுக்கு பழக்கப்பட்டு போன தைரியசாலிங்க யாராச்சும் இருந்தீங்கன்னா படத்துக்குப் போய்ட்டு வாங்க.. என்ன சொல்றாங்கன்னு புரிஞ்சுக்கவாச்சும் ஒரு முறை பாக்கலாம். :)

Thursday, August 9, 2007

தூண்டில்

பார்வை வலையை விரித்து வைத்து
தூண்டில் உணவாய்
உன் புன்னகையை வைத்து
ஏதுமறியாதவன் போல்
காத்திருக்கிறாய்...
தப்பிக்க வழியேயின்றி
விரும்பி வந்து
அகப்பட்டுக் கொள்கிறேன்..
ஆனால்
மகிழ்ச்சியாகவே இறக்கிறேன்
ஒவ்வொருமுறையும்!

நித்திய காதல்



இறுகச் சார்த்தப்பட்ட கதவுகள்
உன் சமீபத்திய முகபாவனைகளை
நினைவூட்டுகின்றன..

கற்களை நீரில் கரைப்பதையொத்து
அன்பைப்பெறும் முயற்சிகளில்
ஏமாற்றங்களே மிஞ்சுகின்றன..

என்றாலும்
என் அன்பை மறுதலித்தல்
அத்தனை எளிதாயிராது
உனக்கு..
எவருக்கென்றில்லாமல்
நிறமும் மணமுமாய்
பூத்துதிரும் பூக்களைப் போன்றே

தினமும் உன் வாசலில்
பூத்திருக்கின்றன
உனக்கான என் நேசங்கள்!

Monday, August 6, 2007




பிரிவு உன் நினைவுகளை
உருப்பெருக்கிக் காட்டுகையில்
சிறிதிலும் சிறிதாய்
சிறுத்துப் போகின்றன
உன் குற்றங்களும்
என் கோபங்களும்...

Thursday, August 2, 2007

மழை சாட்சியாய்.....



நேற்று மாலை பேருந்தின் ஜன்னலோரப் பயணத்தின்போது வழக்கம் போல உன் நினைவு வந்தது. தொலைதூரப் பயணங்கள் எப்போதுமே சுகமானவைதான் இல்லையா? அவசர அவசியங்கள், செய்துமுடிக்க வேண்டிய பொறுப்புகள் ஏதுமின்றி சாலையோர மரங்களையும் கடந்துபோகும் மனிதர்களையும் வெறுமனே வேடிக்கை பார்த்தபடியிருக்கலாம். சேருமிடம் வரும் வரையில் நாம் செய்யக்கூடியதென எதுவும் இருக்காது, விரும்பியதை சிந்தித்திருத்தலைத் தவிர.

அதிலும் பக்கத்து இருக்கைப் பெண்களின் முழங்கை உரசல்கள், அநாவசிய விசாரிப்புகள், எரிச்சலூட்டும் நெருக்கங்கள் ஏதுமின்றி தன்னந்தனியே ஒற்றை இருக்கையில் சாய்ந்து கொண்டு, கம்பீரமாய் நகர்வலம் போவதாய் கற்பித்துக் கொள்வதும், கூடுதலாய் உன் நினைவுகளைத் துணைக்கழைத்துக் கொள்வதும் வெகு செளகரியமானதும் கூட. நேற்றைய மாலைப்பொழுது இதுவரை சந்தித்திருந்த சாயந்திர வேளைகளை விடவும் மிக அழகாயிருந்தது. ஒவ்வொரு மாலையும் ஏற்படுத்தும் அதே பிரமிப்பு.. அதே கிளர்ச்சி.. அதே ஆனந்தம். ஆனால் ஒவ்வொரு நாளும் தனித்துவமாய்...

மேகங்கள் வெகு சோகமாய் ஒன்றுகூடி கருமையாய் திரண்டிருந்தன, அழப்போவதன் அறிகுறியாய் உதடு பிதுக்கும் குழந்தை போல. உப்பிய மேகங்களின் உள்ளே தளும்பிக் கொண்டிருந்தது வானத்தின் கண்ணீர்! லேசாய் புன்னகைத்துக் கொண்டேன். நானும் கூட இப்படித்தான்.. உன்னுடன் ஊடல் கொண்டாடும் பொழுதுகளில், சண்டைகள் தீர்ந்து சமாதானம் பேச விழைகையில், சிறிய பிரிவுகளுக்குப் பின்னான விரும்பத்தக்க சந்திப்புகளில் இதோ.. இந்த மேகங்களைப் போலத்தான்... உணர்வுகள் பொங்க... கண்கள் ததும்ப.. மெளனமாய் உதடுகடித்தபடி நின்றிருப்பேன்.... எந்த நேரமும் அனைத்தையும் கொட்டித் தீர்த்துவிடக் கூடிய அபாயங்களோடு! உன்னைச் சந்தித்த பின்னாய்... எத்தனை கணங்கள் அந்த தவிப்பை என்னால் காத்துநிற்க முடிந்ததென்பதை ஒருமுறை கூட அனுமானிக்க முடிந்ததில்லை.

சிறிது நேரத்தில் என்னைப் போலவே கட்டவிழ்ந்து கொட்டத் தொடங்கிவிட்டன மேகங்களும். மண்ணைத் தொட்டுத் தழுவும் வேட்கையோடு, இரண்டறக் கலந்துவிடும் ஆவேசத்தோடு, தீராக் காதலோடு, எதையோ முடிவிற்குக் கொண்டுவரும் தீர்மானத்தோடு சீராய்ப் பெய்து கொண்டிருந்தது மழை. மண்வாசனையும் மழைஸ்பரிசமும் உண்டாக்கிய கிளர்வில் அவசரமாய் கவிதையொன்று எழுதுவதற்கான பரபரப்பு எழுந்தது என்னுள். ஆனால்..மடை திறந்த வெள்ளத்தில் அலைபாயும் மீன்களென பிடிகொடுக்காமல் நழுவியபடியிருந்தன சொற்கள். மேகமாய் மிதக்கும் மனது, சாலையில் தேங்கிய மழைநீரில் சிந்தி வண்ணங்களாய்க் குழம்பும் எண்ணெய் போல, கலைவதும் சேர்வதுமாய் கண்களில் மின்னி மறையும் உன் பிம்பம்.. காற்றைக் கிழித்தபடி பேரிரைச்சலாய் விரையும் பேருந்து... இந்த நிமிடங்களே எப்போதும் சாஸ்வதமாயிருந்தால் எத்தனை சுகமாயிருக்கும் என்று அபத்தமாய் ஒருமுறை நினைத்துக் கொண்டேன்.

திடுமென, எப்போதும் என்னைப் பற்றித் தொடர்ந்தபடியும் என்னை நிரப்பியபடியும் இருக்கும் உன் சொற்கள் பற்றிய நினைவெழுந்தது.
உண்மை தான்.. எப்போதும் என்னைச் சுற்றி திரும்பிய பக்கமெல்லாம் உன் சொற்களே சூழ்ந்திருக்கின்றன. சொற்கள்.. ஏராள அர்த்தங்களை, துல்லியமான உணர்வுகளை, சில அதிர்ச்சிகளைச் சுமந்தபடி அலையும், சிந்திக்கும் போதெல்லாம் என்னை இல்லாமலாக்கும், அபாயமும் ஆதிக்கமும் மிகுந்த உன் சொற்கள்! சில நேரங்களில் எனக்கென்றே கூரிய வார்த்தைகளைப் பிரயோகிப்பாய் நீ. பழம் நறுக்குகையில் கை தவறுவது போல சரேலென மனதைக் கீறிப் போகும் வார்த்தைகள். என்றபோதும் அதையும் நான் விரும்புவதாகவே உணர்கிறேன். உன் பிம்பமே சொற்களால் ஆனது தானோ என உறக்கம் தொலைந்த பின்னிரவுகளில் நான் பலமுறை எண்ணிக் கொள்வதுண்டு. எப்படி இப்ப்ப்படி பேசுகிறாய் நீ? எவ்வளவு பேசுகிறாய்.. சந்தித்த நாள் முதலாய் என்னவெல்லாம் பேசியிருப்பாய் என்னிடம்? அல்லது எதைத்தான் பேசிக் கொள்ளவில்லை நாம்? நீ பேசிப் போனவற்றை மீண்டும் எடுத்துப் பார்க்கும்போதெல்லாம் பிரியத்தால் மனம் கசிய பிரமிப்பும் கர்வமுமே எஞ்சுகிறது என்னுள்.

மழை வேகமெடுத்தது. ஜன்னல் வழியாய் சாரல் வடிவில் நுழைந்து வேகமாய் நனைத்தது என்னை. யோசித்துத் தடுக்க முனைவதற்குள் முழுவதுமாய் நனைந்திருந்தேன். கோபம் வந்தது.. "அறிவுகெட்ட மழையே.. நான் என்னென்ன காரியங்கள் செய்ய வேண்டியிருக்கிறது, எங்கெல்லாம் போக வேண்டியிருக்கிறது.. எதுவும் தெரிந்து கொள்ளாமல், இப்படித்தான் காலநேரமின்றி நனைத்துத் தொலைப்பாயா முட்டாளே?" திட்டலாம் தான்! கடிந்துகொண்டால் மழை என்ன கண்டுகொள்ளவா போகிறது?
நீயும் இப்படியே தான்! என் லட்சியங்கள், தீர்மானங்கள், விருப்பங்கள், முடிவுகள்... எதுவும் என்றுமே உனக்கு ஒரு பொருட்டாய் இருந்ததில்லை. மழைதான் நீயும்! எதிர்கொண்டணைப்பதில், எதிர்பாராமல் நனைப்பதில், எதிர்பார்க்கும் போது ஏமாற்றம் தருவதில் மழையே தான் நீ! நிறைய்ய சந்தோஷங்களையும் அநேக தொல்லைகளையும் ஒரே நேரத்தில் ஒன்றாய்த் தர உங்களிருவரால் மட்டும்தான் முடிகிறது!!

நம் முதல் சந்திப்பு நினைவிருக்கிறதா உனக்கு? எப்படி மறந்துவிட முடியும்? அன்றைய தினமே.. அது மறந்துவிட முடியாத, மறந்துவிடக் கூடாத தினமென்று உறுதிப்படுத்திக் கொண்டோம் இல்லையா? முதன் முதலாய் உனக்கென்று கவிதை எழுதி உன்னிடம் காண்பித்த போது.. சொல்லும் முன்பாகவே அதிலிருந்த உன் அடையாளங்களைக் கண்டு கொண்டாய்! "கவிதையின் பின்புலம் யார்? நானா?" என்றபடி நெகிழ்ச்சியாய் என் விரல்களைப் பற்றிக் கொண்டாய். அந்த தொடுதல் அதிகாலை நேரப் பூக்களைப் போல மென்மையாய் தண்ணென்றிருந்ததாய் நினைவு எனக்கு.

உனக்கும் எனக்குமிடையே நிகழ்ந்து கொண்டிருப்பது என்னவென்பதை ஆராய்வதிலோ தெளிவுபடுத்திக் கொள்வதிலோ பெரிதாய் ஆர்வமில்லை என்னிடம். என்ன இப்போது? உலகின் கேள்விகளுக்கு பதிலிறுத்தல் அத்தனை அவசியமான ஒன்றா? அவரவர் பார்வை மற்றும் கற்று வைத்திருக்கும் ஒழுக்க விதிகளுக்கேற்ப பரிசுத்தமான அன்பு, தெய்வீகக் காதல், அப்பட்டமான காமம், கண்ணியமான நட்பு, சகோதர பாசம், வெற்று இனக்கவர்ச்சி.. இன்னும் என்னென்ன கர்மங்களாகவோ வார்த்தைகளால் நம்மை வகைப்படுத்திக் கொள்ளட்டும். நமக்கென்ன நஷ்டமாகிவிடப் போகிறது? இவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டு நமக்கென்று புதிதாய் ஒரு வார்த்தை கண்டுபிடிக்கப்படும்போது அதில் நம்மை வகைப்படுத்திக் கொள்ளலாம். அதுவரையில் இவர்கள் இப்படியே கத்திக் கொண்டிருக்கட்டும் விடு.


இப்போதெல்லாம் உன் மீதான பிரியங்கள் வளர்ந்து கொண்டேயிருக்கின்றன. அன்பினை சுமக்கவியலாமல் தள்ளாடுகையில் 'பிரிந்து விடலாமா' என்று கூட யோசிக்கத் தோன்றுகிறது. அளவிற்கு மிஞ்சினால் அன்பும் கூட நஞ்சுதானோ? என்ன? புன்னகைக்கிறாயா? தெரியும் எனக்கு. பிரிவென்றாலும் கூட உன்னால் புன்னகைக்க முடியும் என்று. தெரியுமா? இந்த சில நாட்களாய் உன்னிடம் பேசப்பிடிப்பதில்லை எனக்கு. உனக்கென்ன.. பேசி விட்டு போய்விடுகிறாய். நீ பேசிப்போன பின்பாய் நீ விட்டுச் சென்ற வார்த்தைகள் என் மிச்சங்களைக் கூட விட்டு வைப்பதில்லை. கூடு கலைந்த கோபத்தில் படையெடுத்துவரும் தேனீக்களைப் போல அவை என்னை துரத்தியபடியே இருக்கின்றன.. காதுகளில் ஓயாத ரீங்காரம். தாங்க முடியவில்லை என்னால். மயக்கத்திலாழ்த்துவதும் உலுக்கியெழுப்புவதுமாய் இருவேறு நிலைகளில் செயல்பட்டபடி உன் வார்த்தைகள் என்னைக் கலைத்துப் போடுகின்றன தினமும். போதுமெனப் படுகிறது. உலகம் முழுவதையும் நேசிப்பதற்கான மாபெரும் அன்பு சுமந்து வீடு துறந்த சித்தார்த்தனைப் போன்றே மனம் கொள்ளாப் பிரியங்களுடன் இப்போதே உன்னை பிரிந்துவிடத் தோன்றுகிறது.

என்னிடம் மிகைப்படுத்தல்கள் அதிகமென எப்போதும் குற்றம் சாட்டுவாய் என்னை. உண்மைதான். சில பூக்கள் மென்மையான தென்றலில் கூட உதிர்ந்து விடுவதுண்டு. இந்த கணம் உன்னைப் பிரிவதற்கென்று என்னிடம் காரணங்கள் ஏதுமில்லை.. பிரிந்து விடலாம் என்ற எண்ணம் தவிர. நீயும் இதைத் தான் சொல்வாயென நினைக்கிறேன். 'அய்யோ, பிரிவதா உன்னையா?' என்பது போன்ற ஆபாசக் கூச்சல்களோ, 'நீயில்லன்னா செத்துருவேன்' என்பதான அபத்தமான வசனங்களோ நம்மிடம் இல்லாதிருப்பதே பெரிய ஆறுதல்தான் இல்லையா? நிரூபித்தல்களுக்கான அவசியங்களின்றி மனதின் எல்லா ஊற்றுக்கண்களிலும் சுரந்தபடியிருக்கின்றன உன் மீதான பிரியங்கள்!! வா அருகே.. கன்னங்களில் முத்தமிட்டு, மென்மையாய் கைகுலுக்கி, புன்னகையோடு பிரிந்து போவோம். முடிந்தால் சந்திப்போம்..... எங்காவது, எப்போதாவது இந்த மழையைச் சந்திப்பது போலவே!